சங்கீதம் 41:1-13

சங்கீதம் 41:1-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஏழைகள்மீது கவனம் வைப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; துன்ப நாளில் யெகோவா அவர்களை விடுவிப்பார். யெகோவா அவர்களைக் காப்பாற்றி அவர்களுடைய உயிரைப் பாதுகாப்பார்; அவர்கள் பூமியில் ஆசீர்வாதமாக இருப்பார்கள்; யெகோவா அவர்களுடைய பகைவர்களின் கைக்கு அவர்களை அவனை ஒப்புவிக்கமாட்டார். அவர்களுடைய வியாதிப்படுக்கையில் யெகோவா அவர்களைத் தாங்குவார்; படுக்கையில் வியாதியாய் இருக்கும் அவர்களுக்குச் சுகத்தைக் கொடுப்பார். நான், “யெகோவாவே என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவம் செய்திருக்கிறேன், என்னைக் குணமாக்கும்” என்று சொன்னேன். என் பகைவர்கள் என்னைக்குறித்து தீமையானதைப் பேசி, “அவன் எப்பொழுது சாவான்? அவன் பெயர் எப்பொழுது அழியும்” என்று சொல்கிறார்கள். அவர்களில் ஒருவன் என்னைப் பார்க்க வருகையில், தன் உள்ளத்தில் அவதூறை சேகரித்து உதட்டில் வஞ்சனையாகப் பேசுகிறான்; பின்பு அவன் வெளியே போய் அதைப் பரப்புகிறான். என் பகைவர்கள் எல்லோரும் எனக்கு விரோதமாய் ஒன்றுகூடி, முணுமுணுத்து, அவர்கள் எனக்குப் பெருங்கேடு நினைத்து சொன்னதாவது: “ஒரு கொடியநோய் அவனைப் பிடித்துக்கொண்டது; அவன் படுத்திருக்கிற இடத்தைவிட்டு ஒருபோதும் எழுந்திருக்கமாட்டான்.” நான் நம்பியிருந்தவனும் அப்பத்தை என்னுடன் பகிர்ந்து சாப்பிட்டவனுமான, என் நெருங்கிய நண்பன் தன் குதிகாலை எனக்கெதிராகத் தூக்கினான். ஆனாலும் யெகோவாவே, நீர் என்மேல் இரக்கமாயிரும்; நான் அவர்களுக்குப் பதிற்செய்யும்படி என்னை எழுப்பும். என் பகைவன் என்னை மேற்கொள்ளாதபடியால், நீர் என்னில் பிரியமாய் இருக்கிறீரென்று நான் அறிகிறேன். நீர் என் உத்தமத்தில் என்னை ஆதரித்து, உமது சமுகத்தில் எப்போதும் என்னை வைத்துக்கொள்கிறீர். இஸ்ரயேலின் இறைவனான யெகோவாவுக்கு நித்திய நித்தியமாய் துதி உண்டாகட்டும். ஆமென், ஆமென்.

சங்கீதம் 41:1-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பெலவீனமானவன்மேல் கவலையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் யெகோவா அவனை விடுவிப்பார். யெகோவா அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடு வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாக இருப்பான்; அவனுடைய எதிரிகளின் விருப்பத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடுப்பதில்லை. படுக்கையின்மேல் வியாதியாகக் கிடக்கிற அவனைக் யெகோவா தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவனுடைய படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவார். யெகோவாவே, என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாகப் பாவம்செய்தேன், என்னுடைய ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன். அவன் எப்பொழுது சாவான், அவனுடைய பெயர் எப்பொழுது அழியும் என்று என்னுடைய எதிரிகள் எனக்கு விரோதமாகச் சொல்லுகிறார்கள். ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாகப் பேசுகிறான்; அவன் தன்னுடைய இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக்கொண்டு, தெருவிலே போய், அதைத் தூற்றுகிறான். என்னுடைய எதிரிகள் எல்லோரும் என்மேல் ஒன்றாக முணுமுணுத்து, எனக்கு விரோதமாக இருந்து, எனக்குத் தீங்கு நினைத்து, தீராத வியாதி அவனைப் பிடித்துக் கொண்டது; படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள். என்னுடைய உயிர்நண்பனும், நான் நம்பினவனும், என்னுடைய அப்பம் சாப்பிட்டவனுமாகிய மனிதனும், என்மேல் தன்னுடைய குதிகாலைத் தூக்கினான். யெகோவாவே, நீர் எனக்கு இரங்கி, நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கச்செய்யும். என்னுடைய எதிரி என்மேல் வெற்றி பெறாததினால், நீர் என்மேல் பிரியமாக இருக்கிறீரென்று அறிவேன். நீர் என்னுடைய உத்தமத்திலே என்னைத் தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர். இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா எப்பொழுதும் என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் நன்றிசெலுத்தப்படக்கூடியவர். ஆமென், ஆமென்.

சங்கீதம் 41:1-13 பரிசுத்த பைபிள் (TAERV)

ஏழைகள் வெற்றிபெற உதவி செய்யும் ஒருவன், பல ஆசீர்வாதங்களைப் பெறுவான். தொல்லைகள் வரும்போது கர்த்தர் அவனை மீட்பார். கர்த்தர் அவனைக் காத்து அவன் வாழ்வை மீட்பார். பூமியில் அவன் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பான். அவனை அழிக்க அவனுடைய பகைவர்களை தேவன் அனுமதிக்கமாட்டார். அவன் நோயுற்றுப் படுக்கையில் விழும்போது கர்த்தர் அவனுக்குப் பலமளிப்பார். அவன் நோயுற்றுப் படுக்கையில் இருக்கலாம், ஆனால் கர்த்தர் அவனைக் குணப்படுத்துவார். நான், “கர்த்தாவே, என்னிடம் இரக்கமாயிரும். நான் உமக்கெதிராகப் பாவம் செய்தேன். ஆனால் என்னை மன்னித்து என்னைக் குணப்படுத்தும்!” என்றேன். என் பகைவர்கள் என்னைக் குறித்துத் தீமையானவற்றைப் பேசினார்கள். அவர்கள், “அவன் எப்போது மரித்து, மறக்கப்படுவான்?” என்றார்கள். சிலர் என்னைச் சந்திக்க வந்தார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் நினைப்பதை என்னிடம் கூறவில்லை. அவர்கள் என்னைப்பற்றியச் செய்திகளை தெரிந்து கொள்ள வந்தார்கள். அதன் பிறகு அவர்கள் சென்று வதந்திகளை பரப்புகிறார்கள். என்னைப்பற்றிய தீயசொற்களை என் பகைவர்கள் இரகசியமாக முணுமுணுக்கிறார்கள். அவர்கள் எனக்கெதிராகத் திட்டமிடுகிறார்கள். அவர்கள், “அவன் ஏதோ தவுறு செய்தான், எனவே நோயுற்றான். அவன் குணப்படப் போவதில்லை” என்கிறார்கள். என் சிறந்த நண்பன் என்னோடு சாப்பிட்டான். நான் அவனை நம்பினேன். ஆனால் இப்போது அவனும் எனக்கெதிராகத் திரும்பிவிட்டான். எனவே கர்த்தாவே, என்னிடம் இரக்கமாயிரும். நான் குணமாகி எழுந்திருக்கட்டும், அவர்களுக்குப் பதில் அளிப்பேன். கர்த்தாவே, என் பகைவர்கள் என்னை காயப்படுத்தாதிருக்கட்டும். அப்போது நீர் என்னை ஏற்றுக்கொண்டீர் என்பதை அறிவேன். நான் களங்கமற்றிருந்தேன். நீர் எனக்கு ஆதரவளித்தீர். என்னை எழுந்திருக்கப் பண்ணி, என்றென்றும் உமக்குச் சேவை செய்யப்பண்ணும். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை வாழ்த்துங்கள். இவர் இருந்தவரும் இருக்கிறவருமானவர்.

சங்கீதம் 41:1-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார். கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான்; அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடீர். படுக்கையின்மேல் வியாதியாய்க் கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர். கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன். அவன் எப்பொழுது சாவான், அவன் பேர் எப்பொழுது அழியும்? என்று என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறார்கள். ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாய்ப் பேசுகிறான்; அவன் தன் இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக்கொண்டு, தெருவிலே போய், அதைத் தூற்றுகிறான். என் பகைஞரெல்லாரும் என்மேல் ஏகமாய் முணுமுணுத்து, எனக்கு விரோதமாயிருந்து, எனக்குப் பொல்லாங்கு நினைத்து, தீராவியாதி அவனைப் பிடித்துக் கொண்டது; படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள். என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான். கர்த்தாவே, நீர் எனக்கு இரங்கி, நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கப்பண்ணும். என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன். நீர் என் உத்தமத்திலே என்னைத் தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஆமென், ஆமென்.