சங்கீதம் 33:1-22
சங்கீதம் 33:1-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நீதிமான்களே, நீங்கள் மகிழ்ச்சியுடன் யெகோவாவுக்குத் துதி பாடுங்கள்; அவரைத் துதிப்பது நேர்மையுள்ளவர்களுக்குத் தகுதியானது. யாழ் இசைத்து யெகோவாவைத் துதியுங்கள்; பத்து நரம்பு வீணையினால் அவருக்கு இசை பாடுங்கள். அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; திறமையாக இசைத்து மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரியுங்கள். யெகோவாவினுடைய வார்த்தை சத்தியமும், அவருடைய செயல்களெல்லாம் உண்மையானதுமாய் இருக்கிறது. யெகோவா நீதியையும் நியாயத்தையும் விரும்புகிறார்; பூமி முழுவதுமே அவருடைய உடன்படிக்கையின் அன்பினால் நிறைந்திருக்கிறது. யெகோவாவினுடைய வார்த்தையினாலே வானங்கள் படைக்கப்பட்டன, அவருடைய வாயின் சுவாசத்தினால் வான்கோள்கள் யாவும் படைக்கப்பட்டன. அவர் கடல்நீரைச் ஜாடிகளில் சேர்த்துவைக்கிறார்; ஆழத்தை களஞ்சியங்களில் வைக்கிறார். பூமி அனைத்தும் யெகோவாவுக்குப் பயப்படுவதாக; உலகின் மக்கள் அனைவரும் அவரிடம் பயபக்தியாய் இருப்பார்களாக. ஏனெனில் அவர் சொல்ல, உலகம் உண்டாயிற்று; அவர் கட்டளையிட்டார், அது உறுதியாய் நின்றது. யெகோவா நாடுகளின் திட்டங்களை முறியடிக்கிறார்; அவர் மக்களின் நோக்கங்களைத் தடுக்கிறார். ஆனால் யெகோவாவின் ஆலோசனை என்றென்றும் உறுதியாகவும், அவருடைய இருதயத்தின் நோக்கங்கள் தலைமுறை தலைமுறையாகவும் நிலைநிற்கும். எந்த மக்கள் யெகோவாவைத் தங்கள் இறைவனாகக் கொண்டிருக்கிறார்களோ, எந்த மக்களை அவர் தமது உரிமைச்சொத்தாகத் தெரிந்துகொண்டாரோ அவர்கள் பாக்கியவான்கள். யெகோவா பரலோகத்திலிருந்து கீழே நோக்கிப்பார்த்து, எல்லா மனிதர்களையும் காண்கிறார்; தமது சிங்காசனத்திலிருந்து பூமியில் வாழும் அனைவரையும் கவனிக்கிறார். அனைவருடைய இருதயங்களையும் உருவாக்கும் யெகோவா, அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் கவனிக்கிறார். எந்த ஒரு அரசனும் தனது படைபலத்தால் காப்பாற்றப்படுவதில்லை; எந்த ஒரு போர்வீரனும் தனது மிகுந்த வலிமையினால் தப்புவதுமில்லை. விடுதலை பெறுவதற்கு குதிரையை நம்புவது வீண்; அதற்கு மிகுந்த வலிமை இருந்தபோதிலும், அதினால் காப்பாற்ற முடியாது. யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய உடன்படிக்கையின் அன்பில் நம்பிக்கையாய் இருக்கிறவர்கள்மேல் அவருடைய கண்கள் நோக்கமாயிருந்து, மரணத்திலிருந்து அவர்களை விடுவிக்கிறார், பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கிறார். நாங்கள் யெகோவாவுக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்; அவரே எங்களுக்கு உதவியும் எங்கள் கேடயமுமாய் இருக்கிறார். நாங்கள் அவருடைய பரிசுத்த பெயரில் நம்பிக்கையாய் இருப்பதால் எங்கள் இருதயங்கள் அவரில் மகிழ்கின்றன. யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே, உமது உடன்படிக்கையின் அன்பு எங்கள்மேல் இருப்பதாக.
சங்கீதம் 33:1-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நீதிமான்களே, யெகோவாவுக்குள் சந்தோஷமாக இருங்கள்; துதிசெய்வது நேர்மையானவர்களுக்குத் தகும். சுரமண்டலத்தினால் யெகோவாவை துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரை புகழ்ந்து பாடுங்கள். அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்த சத்தத்தோடு வாத்தியங்களை நேர்த்தியாக வாசியுங்கள். யெகோவாவுடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது. அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி யெகோவாவுடைய கருணையினால் நிறைந்திருக்கிறது. யெகோவாவுடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் அனைத்தும் உண்டாக்கப்பட்டது. அவர் கடலின் தண்ணீர்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான தண்ணீர்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார். பூமியெல்லாம் யெகோவாவுக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிமக்களெல்லாம் அவருக்கு பயந்திருப்பதாக. அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். யெகோவா தேசங்களின் ஆலோசனையை வீணடித்து, மக்களுடைய நினைவுகளை பயனற்றதாக ஆக்குகிறார். யெகோவாவுடைய ஆலோசனை நிரந்தரகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும். யெகோவாவை தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட தேசமும், அவர் தமக்குச் சொந்தமாகத் தெரிந்துகொண்ட மக்களும் பாக்கியமுள்ளது. யெகோவா வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனிதர்களையும் காண்கிறார். தாம் தங்கியிருக்கிற இடத்திலிருந்து பூமியின் குடிமக்கள் எல்லோர்மேலும் கண்ணோக்கமாக இருக்கிறார். அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார். எந்த ராஜாவும் தன்னுடைய ராணுவத்தின் மிகுதியால் காப்பாற்றப்படமாட்டான்; போர்வீரனும் தன்னுடைய பலத்தின் மிகுதியால் தப்பமாட்டான். காப்பாற்றுவதற்கு குதிரை வீண்; அது தன்னுடைய மிகுந்த பலத்தால் காப்பாற்றாது. தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்; பஞ்சத்தில் அவர்களை உயிரோடு காக்கவும், யெகோவாவுடைய கண் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கிறது. நம்முடைய ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர். அவருடைய பரிசுத்த பெயரை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் சந்தோசமாக இருக்கும். யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக.
சங்கீதம் 33:1-22 பரிசுத்த பைபிள் (TAERV)
நல்லோரே, கர்த்தருக்குள் களிப்படையுங்கள்! நல்ல நேர்மையான ஜனங்களே, அவரைத் துதியுங்கள்! சுரமண்டலத்தை இசைத்து கர்த்தரைத் துதியுங்கள்! பத்து நரம்பு வீணையை இசைத்து கர்த்தரைப் பாடுங்கள். புதுப்பாட்டை அவருக்குப் பாடுங்கள்! மகிழ்ச்சியான இராகத்தை இனிமையாய் மீட்டுங்கள். தேவனுடைய வாக்கு உண்மையானது! அவர் செய்பவற்றை உறுதியாக நம்புங்கள்! நன்மையையும் நேர்மையையும் தேவன் நேசிக்கிறார். கர்த்தர் பூமியை அவரது அன்பினால் நிரப்பியுள்ளார். கர்த்தர் கட்டளையிட, உலகம் உருவாயிற்று. தேவனுடைய வாயின் மூச்சு பூமியிலுள்ள அனைத்தையும் உருவாக்கிற்று. கடலின் தண்ணீரை ஒரே இடத்தில் தேவன் ஒன்று திரட்டினார். அவர் சமுத்திரத்தை அதற்குரிய இடத்தில் வைக்கிறார். பூமியிலுள்ளோர் யாவரும் கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கவேண்டும். உலகில் வாழும் ஜனங்கள் எல்லோரும் அவருக்கு அஞ்ச வேண்டும். ஏனெனில் தேவன் கட்டளையிட, அக்காரியம் நிறைவேறுகிறது. அவர் “நில்!” எனக்கூற அக்காரியம் நின்றுவிடும். எல்லோருடைய அறிவுரையையும் பயனற்றுப்போகச் செய்ய கர்த்தராலாகும். அவர்கள் திட்டங்களை கர்த்தர் அழிக்கக் கூடும். கர்த்தருடைய அறிவுரை என்றென்றும் நல்லது. தலைமுறை தலைமுறைக்கும் அவர் திட்டங்கள் நன்மை தரும். கர்த்தரை தேவனாக ஏற்றுக்கொண்ட ஜனங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவன் தனது சொந்த ஜனங்களாக அவர்களைத் தேர்ந்தெடுத்தார். பரலோகத்திலிருந்து கர்த்தர் கீழே பார்த்து, எல்லா ஜனங்களையும் கண்டார். அவரது உயர்ந்த சிங்காசனத்திலிருந்து பூமியில் வாழும் மனிதர்களையெல்லாம் பார்த்தார். ஒவ்வொருவனின் மனதையும் தேவன் படைத்தார். ஒவ்வொருவனின் எண்ணத்தையும் தேவன் அறிகிறார். ராஜா தனது சொந்த வல்லமையால் காப்பாற்றப்படுவதில்லை. ஒரு வீரன் தனது மிகுந்த பெலத்தால் காப்பாற்றப்படுவதில்லை. போரில் குதிரைகள் உண்மையான வெற்றியைத் தருவதில்லை. அவற்றின் ஆற்றல் நம்மை தப்புவிக்க வகை செய்வதேயில்லை. கர்த்தர் அவரைப் பின்பற்றுவோரை கவனித்துக் காப்பாற்றுகிறார். அவரது பேரன்பு அவரை தொழுதுகொள்வோரைக் காக்கும். தேவன் அந்த ஜனங்களை மரணத்தினின்று காக்கிறார். அவர்கள் பசித்திருக்கையில் அவர் பெலனளிக்கிறார். எனவே நாம் கர்த்தருக்காகக் காத்திருப்போம். அவரே நமக்கு உதவியும் கேடகமுமாயிருக்கிறார். தேவன் என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறார். அவரது பரிசுத்த நாமத்தை நான் உண்மையாக நம்புகிறேன். கர்த்தாவே, நாங்கள் உம்மை உண்மையாக தொழுதுகொள்கிறோம்! உமது பேரன்பை எங்களுக்குக் காண்பியும்.
சங்கீதம் 33:1-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும். சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள். அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்தசத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள். கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது. அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது. கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது. அவர் சமுத்திர ஜலங்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான ஜலங்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார். பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிகளெல்லாம் அவருக்கு அஞ்சியிருப்பதாக. அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். கர்த்தர் ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்கி, ஜனங்களுடைய நினைவுகளை அவமாக்குகிறார். கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலை முறையாகவும் நிற்கும். கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்து கொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது. கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப் பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார். தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்து பூமியின் குடிகள் எல்லார்மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார். அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார். எந்த ராஜாவும் தன் சேனையின் மிகுதியால் இரட்சிக்கப்படான்; சவுரியவானும் தன் பலத்தின் மிகுதியால் தப்பான். இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது. தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்; பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது. நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர். அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் களிகூரும். கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக.