சங்கீதம் 3:1-8

சங்கீதம் 3:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவே, என் பகைவர்கள் எத்தனை பேராய் இருக்கிறார்கள்! எத்தனைபேர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள். அநேகர் என்னைக்குறித்து, “இறைவன் அவனை விடுவிக்கமாட்டார்” என்று சொல்கிறார்கள். ஆனால் யெகோவாவே, நீர் என்னைச் சுற்றிலும் கேடயமும், என் மகிமையும் என் தலையை உயர்த்துகிறவருமாய் இருக்கிறீர். நான் சத்தமிட்டு யெகோவாவைக் கூப்பிடுகிறேன்; அவர் தமது பரிசுத்த மலையிலிருந்து எனக்குப் பதில் கொடுக்கிறார். நான் படுத்துக்கொண்டு உறங்குகிறேன்; யெகோவா என்னைத் தாங்குவதால், நான் திரும்பவும் விழித்தெழுகிறேன். எல்லாப் பக்கங்களிலும் பதினாயிரம்பேர் எனக்கு விரோதமாய் நின்றாலும், நான் பயப்படமாட்டேன். யெகோவாவே, எழுந்தருளும்; என் இறைவனே, என்னை விடுவியும். என் எதிரிகள் எல்லோரையும் கன்னத்தில் அடித்து, கொடியவர்களின் பற்களை உடைத்துப்போடும். யெகோவாவிடமிருந்தே விடுதலை வருகிறது. உம்முடைய ஆசீர்வாதம் உமது மக்களின்மேல் இருப்பதாக.

சங்கீதம் 3:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவே, என்னுடைய எதிரிகள் எவ்வளவாகப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் அநேகர். தேவனிடத்தில் அவனுக்கு சகாயம் இல்லை என்று, என்னுடைய ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராக இருக்கிறார்கள். (சேலா) ஆனாலும் யெகோவாவே, நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும், என்னுடைய மகிமையும், என்னுடைய தலையை உயர்த்துகிறவருமாக இருக்கிறீர். நான் யெகோவா வை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த மலையிலிருந்து எனக்கு பதில் கொடுத்தார். (சேலா) நான் படுத்து தூங்கினேன்; விழித்துக்கொண்டேன்; யெகோவா என்னைத் தாங்குகிறார். எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்துவருகிற பத்தாயிரம்பேருக்கும் நான் பயப்படமாட்டேன். யெகோவாவே, எழுந்தருளும்; என் தேவனே, என்னை காப்பாற்றும். நீர் என்னுடைய பகைவர்கள் எல்லோரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கர்களுடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர். ஜெயம் யெகோவாவுடையது; தேவனே உம்முடைய ஆசீர்வாதம் உம்முடைய மக்களின்மேல் இருப்பதாக (சேலா).

சங்கீதம் 3:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தாவே, எனக்குப் பகைவர்கள் அநேகர், பல ஜனங்கள் எனக்கெதிராக எழும்புகின்றனர். பலர் என்னைக் குறித்து, “தேவன் அவனைத் தொல்லையிலிருந்து மீட்கமாட்டார்!” என்று பேசுகின்றனர். ஆனால் கர்த்தாவே, நீரே எனக்குக் கேடகம். நீரே என் மகிமை. கர்த்தாவே, நீர் என்னை பிரதானமானவனாக்குகிறீர்! நான் கர்த்தரிடம் ஜெபிப்பேன். அவரது பரிசுத்த மலையிலிருந்து அவர் எனக்குப் பதில் தருவார். நான் படுத்து ஓய்வெடுக்க முடியும், நான் எழும்புவேன் என்பதும் எனக்குத் தெரியும். இதை நான் எப்படி அறிவேன்? கர்த்தர் என்னை மூடிப் பாதுகாக்கிறார்! ஆயிரம் வீரர்கள் என்னைச் சூழக்கூடும். ஆனால் நான் அப்பகைவர்களுக்கு அஞ்சேன்! கர்த்தாவே, எழும்பும்! எனது தேவனே, வந்து என்னைப் பாதுக்காப்பீராக! நீர் வல்லமையுள்ளவர்! என் தீய பகைவரைக் கன்னத்தில் நீர் அறைந்தால் அவர்கள் பற்களெல்லாம் நொறுங்கும். கர்த்தரே தம் ஜனங்களைப் பாதுக்காக்கிறார். கர்த்தாவே, உம்முடைய ஜனங்களுக்கு நல்லவராயிரும்.

சங்கீதம் 3:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர். தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். (சேலா). ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர். நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். (சேலா). நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார். எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம் பேருக்கும் நான் பயப்படேன். கர்த்தாவே, எழுந்தருளும்; என் தேவனே, என்னை இரட்சியும். நீர் என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர். இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா).