சங்கீதம் 27:1-14

சங்கீதம் 27:1-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவா என் வெளிச்சமும் இரட்சிப்புமாயிருக்கிறார், நான் யாருக்குப் பயப்படுவேன்? யெகோவா என் வாழ்க்கையின் அரணாய் இருக்கிறார், நான் யாருக்குப் பயப்படுவேன்? தீய மனிதர் என்னை விழுங்கும்படி எனக்கு விரோதமாக முன்னேறி வரும்போது, எனது பகைவரும் விரோதிகளுமான அவர்களே தடுமாறி விழுவார்கள். ஒரு இராணுவம் என்னை முற்றுகையிட்டாலும், என் இருதயம் பயப்படாது; எனக்கு விரோதமாக யுத்தம் மூண்டாலும், அப்பொழுதுங்கூட நான் நம்பிக்கையோடே இருப்பேன். நான் யெகோவாவிடத்தில் ஒன்றைக் கேட்கிறேன், அதையே நான் தேடுகிறேன்: நான் யெகோவாவின் அழகைக் காண்பதற்கும், அவருடைய ஆலயத்தில் அவரை தேடுவதற்கும் நான் என் வாழ்நாள் முழுவதும் யெகோவாவினுடைய வீட்டில் குடியிருப்பதையே வாஞ்சிக்கிறேன். ஏனெனில் துன்ப நாளில், அவர் என்னைத் தமது அடைக்கலத்தில் வைத்து காத்துக்கொள்ளுவார்; அவர் என்னைத் தமது பரிசுத்த கூடார மறைவில் ஒளித்துவைத்து, கற்பாறையின்மேல் என்னை உயர்த்துவார். அப்பொழுது என் தலை என்னைச் சுற்றியுள்ள பகைவர்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; அவருடைய பரிசுத்த கூடாரத்திலே நான் ஆனந்த சத்தத்தோடு பலிகளையிட்டு, யெகோவாவைப் புகழ்ந்து பாடுவேன். யெகோவாவே, நான் உம்மைக் கூப்பிடும்போது என் குரலைக் கேளும்; என்னில் இரக்கமாயிருந்து, எனக்குப் பதில் தாரும். என் இருதயம் உம்மிடத்தில், “அவர் முகத்தையே தேடு!” என்றதால், யெகோவாவே, உமது முகத்தையே நான் தேடுவேன். உமது முகத்தை என்னிடமிருந்து மறைத்துக் கொள்ளாதேயும்; கோபங்கொண்டு உமது அடியேனைத் துரத்தி விடாதேயும்; நீரே எனக்கு உதவியாய் இருந்திருக்கிறீர். என் இரட்சிப்பின் இறைவனே, என்னைப் புறக்கணிக்கவோ, கைவிடவோ வேண்டாம். என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும், யெகோவா என்னை ஏற்றுக்கொள்வார். யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்; என்னைத் தீயநோக்கத்தோடு பார்த்துக் கொண்டிருப்பவர்களின் நிமித்தம் என்னை நேரான பாதையில் நடத்தும். என் பகைவரின் ஆசைகளுக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்; ஏனெனில் பொய்ச்சாட்சி கூறுபவர்களும் என்னை குற்றஞ்சாட்டுபவர்களும் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள். நானோ வாழ்வோரின் நாட்டில் யெகோவாவின் நன்மையைக் காண்பேன் என்று இதில் நான் நம்பிக்கையாயிருக்கிறேன். யெகோவாவுக்குக் காத்திரு; பெலன்கொண்டு தைரியமாயிரு, யெகோவாவுக்கே காத்திரு.

சங்கீதம் 27:1-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவா என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? யெகோவா என் வாழ்வின் அடைக்கலமானவர், யாருக்கு பயப்படுவேன்? என்னுடைய எதிரிகளும் என்னுடைய பகைவர்களுமாகிய பொல்லாதவர்கள் என் சரீரத்தை விழுங்க, என்னை நெருங்கும்போது அவர்களே இடறிவிழுந்தார்கள். எனக்கு விரோதமாக ஒரு இராணுவம் முகாமிட்டாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் போர் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாக இருப்பேன். கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் யெகோவாவுடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என்னுடைய உயிருள்ள நாட்களெல்லாம் யெகோவாவுடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன். தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார். இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் எதிரிகளுக்கு மேலாக உயர்த்தப்படும்; அதற்காக அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்தபலிகளையிட்டு, யெகோவாவைப் பாடுவேன், அவரைப் புகழ்ந்துபாடுவேன். யெகோவாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு, எனக்கு இரங்கி, எனக்கு பதில் தாரும். என்னுடைய முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் யெகோவாவே என்று என்னுடைய இருதயம் உம்மிடத்தில் சொன்னது. உமது முகத்தை எனக்கு மறைக்கவேண்டாம்; நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடவேண்டாம்; நீரே எனக்கு உதவி செய்பவர்; என்னுடைய இரட்சிப்பின் தேவனே, என்னைத் தள்ளிவிடாமலிரும் என்னைக் கைவிடாமலிரும். என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், யெகோவா என்னைச் சேர்த்துக்கொள்ளுவார். யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும், என்னுடைய எதிராளிகளினிமித்தம் சரியான பாதையில் என்னை நடத்தும். என் எதிரிகளின் விருப்பத்திற்கு என்னை ஒப்புக் கொடுக்கவேண்டாம்; பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் எனக்கு விரோதமாக எழும்பியிருக்கிறார்கள். நானோ, உயிருள்ளவர்களின் தேசத்திலே யெகோவாவுடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசித்தேன். யெகோவாவுக்குக் காத்திரு, தைரியமாக இரு, அவர் உன்னுடைய இருதயத்தை நிலையாக நிறுத்துவார், கர்த்தருக்கே காத்திரு.

சங்கீதம் 27:1-14 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தாவே, நீரே என் ஒளியும் இரட்சகருமானவர். யாருக்கும் நான் பயப்படமாட்டேன்! கர்த்தர் என் வாழ்க்கையின் பாதுகாப்பானவர். எந்த மனிதனுக்கும் நான் அஞ்சேன். தீய ஜனங்கள் என்னைத் தாக்கக்கூடும். என்னைத் தாக்கி என் சரீரத்தை அழிக்க என் பகைவர்கள் முயலக்கூடும். ஒரு படையே என்னைச் சூழ்ந்தாலும் நான் அஞ்சமாட்டேன். போரில் ஜனங்கள் என்னைத் தாக்கினாலும் நான் பயப்படேன். ஏனெனில் நான் கர்த்தரை நம்புகிறேன். எனக்குத் தருமாறு ஒன்றையே நான் கர்த்தரிடம் கேட்பேன். இதுவே என் கோரிக்கை: “என் வாழ்க்கை முழுவதும் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கி கர்த்தருடைய அழகைக்கண்டு அவர் அரண்மனையை தரிசிக்க அனுமதியும்.” ஆபத்தில் நான் இருக்கையில் கர்த்தர் என்னைக் காப்பார். அவரது கூடாரத்தில் என்னை ஒளித்து வைப்பார். அவரது பாதுகாப்பிடம் வரைக்கும் என்னை அழைத்துச் செல்வார். என் பகைவர்கள் என்னைச் சூழ்ந்துள்ளனர். அவர்களைத் தோற்கடிக்க கர்த்தர் எனக்கு உதவுவார். அப்போது அவரது கூடாரத்தில் பலிகளைச் செலுத்துவேன். மகிழ்ச்சி ஆரவாரத்தோடு என் பலிகளை அளிப்பேன். கர்த்தரை, மகிமைப்படுத்தும் பாடல்களை இசைத்துப் பாடுவேன். கர்த்தாவே, என் குரலைக் கேட்டு எனக்குப் பதில் தாரும், என்னிடம் தயவாயிரும். கர்த்தாவே, உம்மோடு பேசவிரும்புகிறேன். என் இருதயத்திலிருந்து உம்மிடம் பேசவாஞ்சிக்கிறேன். கர்த்தாவே, உம்மிடம் பேசுவதற்காக உமக்கு முன்பாக வருகிறேன். கர்த்தாவே, என்னிடமிருந்து விலகாதேயும்! உமது ஊழியனாகிய என்னிடம் கோபங்கொண்டு, என்னைவிட்டு விலகாதேயும்! எனக்கு உதவும்! என்னைத் தூரத்தள்ளாதிரும். என்னை விட்டு விடாதிரும்! என் தேவனே, நீரே என் இரட்சகர்! என் தந்தையும் தாயும் என்னை கைவிட்டனர். ஆனால் கர்த்தர் என்னை எடுத்து தமக்குரியவன் ஆக்கினார். கர்த்தாவே, எனக்குப் பகைவருண்டு. எனவே உமது வழிகளை எனக்குப் போதியும். சரியான காரியங்களைச் செய்வதற்கு எனக்குப் போதியும். எனது சத்தருக்கள் என்னைத் தாக்கினார்கள். என்னைப்பற்றி பொய்யுரைத்தனர். என்னைத் துன்புறுத்த பொய் கூறினர். நான் மரிக்கும் முன்னர் கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என நான் உண்மையாகவே நம்புகிறேன். கர்த்தருடைய உதவிக்குக் காத்திரு. பெலத்தோடும் தைரியத்தோடும் இருந்து, கர்த்தருக்குக் காத்திரு.

சங்கீதம் 27:1-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்? என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க, என்னை நெருக்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள். எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன். கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன். தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்து வைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார். இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; அதினிமித்தம் அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்த பலிகளையிட்டு, கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன். கர்த்தாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு, எனக்கு இரங்கி, எனக்கு உத்தரவு அருளிச் செய்யும். என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று. உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடாதேயும்; நீரே எனக்குச் சகாயர்; என் இரட்சிப்பின் தேவனே, என்னை நெகிழவிடாமலும் என்னைக் கைவிடாமலும் இரும். என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக் கொள்ளுவார். கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதித்து, என் எதிராளிகளினிமித்தம் செவ்வையான பாதையில் என்னை நடத்தும். என் சத்துருக்களின் இஷ்டத்துக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்; பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் எனக்கு விரோதமாய் எழும்பியிருக்கிறார்கள். நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன். கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.

சங்கீதம் 27:1-14

சங்கீதம் 27:1-14 TAOVBSIசங்கீதம் 27:1-14 TAOVBSI