சங்கீதம் 25:1-22

சங்கீதம் 25:1-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். என் இறைவனே, உம்மில் நான் நம்பிக்கை வைக்கிறேன்; என்னை வெட்கப்பட விடாதேயும்; என் பகைவர் என்மேல் வெற்றிகொள்ள விடாதேயும். உம்மில் எதிர்பார்ப்பாய் இருப்பவர்கள் யாரும், ஒருபோதும் வெட்கப்படமாட்டார்கள்; ஆனால் காரணமின்றி துரோகம் செய்பவர்கள் வெட்கமடைவார்கள். யெகோவாவே, உமது வழிகளை எனக்குக் காண்பியும்; உமது பாதைகளை எனக்குப் போதியும். உமது சத்தியத்தில் என்னை நடத்தி எனக்குப் போதியும். நீரே என் இரட்சகராகிய இறைவன், நாள்முழுதும் நான் உம்மையே எதிர்பார்க்கிறேன். யெகோவாவே, உமது பெரிதான இரக்கத்தையும் அன்பையும் நினைவில்கொள்ளும், ஏனெனில் அவை பூர்வகாலமுதல் இருக்கிறதே. என் வாலிப காலத்தின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினைக்கவேண்டாம்; உமது உடன்படிக்கையின் அன்பின்படி என்னை நினைத்துக்கொள்ளும், யெகோவாவே, நீர் நல்லவர். யெகோவா நல்லவரும் நேர்மையானவருமாய் இருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்குத் தமது வழிகளை அறிவுறுத்துகிறார். அவர் தாழ்மையுள்ளோரை நியாயத்தில் வழிநடத்துகிறார், தமது வழியை அவர்களுக்குப் போதிக்கிறார். யெகோவாவினுடைய உடன்படிக்கையின் கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவருடைய பாதைகளெல்லாம் உடன்படிக்கையின் அன்பும் நம்பகமுமானவைகள். யெகோவாவே, எனது அநியாயம் பெரிதாயிருப்பினும், உமது பெயரின் நிமித்தம் அதை மன்னியும். யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற மனிதர் யார்? அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வழியை யெகோவா அவர்களுக்கு அறிவுறுத்துவார். அவர்கள் தமது வாழ்நாளெல்லாம் நன்மையைப் பெறுவார்கள், அவர்களுடைய சந்ததி பூமியை தமக்கு சொந்தமாக்கிக்கொள்வார்கள். யெகோவாவின் இரகசியம் அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குரியது; அவர் தமது உடன்படிக்கையையும் அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறார். என் கண்கள் எப்பொழுதும் யெகோவாவையே நோக்கியிருக்கின்றன; ஏனென்றால் என் கால்களை அவரே கண்ணியிலிருந்து விடுவிப்பார். யெகோவாவே, என் பக்கமாய்த் திரும்பி, எனக்குக் கிருபையாயிரும்; நான் தனிமையிலும் துன்பத்திலும் இருக்கிறேன். என் இருதயத்தின் துயரத்திலிருந்து நீங்கலாக்கும்; என் நெருக்கத்திலிருந்து என்னை விடுவியும். என் துன்பத்தையும் என் துயரத்தையும் பார்த்து, என் பாவங்களையெல்லாம் மன்னித்தருளும். என் பகைவர்கள் எப்படி பெருகியிருக்கிறார்கள் என்று பாரும்; அவர்கள் எவ்வளவு கொடூரமாக என்னை வெறுக்கிறார்கள். என் உயிரைப் பாதுகாத்து, என்னைத் தப்புவியும்; உம்மிடத்தில் தஞ்சமடைந்திருக்கும் என்னை வெட்கப்பட விடாதேயும். உத்தமமும் நேர்மையும் என்னைப் பாதுகாக்கட்டும்; ஏனெனில் என் எதிர்பார்ப்பு உம்மிலே இருக்கிறது. இறைவனே, இஸ்ரயேலை அவர்களுடைய துன்பங்கள் எல்லாவற்றிலுமிருந்து மீட்டுக்கொள்ளும்.

சங்கீதம் 25:1-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவே, உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன். என் தேவனே, உம்மை நம்பி இருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; என்னுடைய எதிரிகள் என்னை மேற்கொண்டு மகிழவிடாமலிரும். உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; காரணமில்லாமல் துரோகம்செய்கிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக. யெகோவாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என்னுடைய இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன். யெகோவாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய கருணையையும் நினைத்தருளும், அவை தொடக்கமில்லா காலம் முதல் இருக்கின்றது. என்னுடைய இளவயதின் பாவங்களையும் என்னுடைய மீறுதல்களையும் நினைக்காமலிரும்; யெகோவாவே, உம்முடைய தயவிற்காக என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும். யெகோவா நல்லவரும் உத்தமருமாக இருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார். சாந்த குணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்த குணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார். யெகோவாவுடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவை. யெகோவாவே, என்னுடைய அக்கிரமம் பெரிது; உம்முடைய பெயரினால் அதை மன்னித்தருளும். யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார். அவனுடைய ஆத்துமா நன்மையில் தங்கும்; அவன் சந்ததி பூமியைச் சொந்தமாக்கிக்கொள்ளும். யெகோவாவுடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார். என்னுடைய கண்கள் எப்போதும் யெகோவாவை நோக்கிக்கொண்டிருக்கின்றன; அவரே என்னுடைய கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார். என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும், பாதிக்கப்பட்டவனுமாக இருக்கிறேன். என்னுடைய இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கின்றன; என்னுடைய பிரச்சனைகளிலிருந்து என்னை நீங்கலாக்கிவிடும். என்னுடைய பாதிப்பையையும் என்னுடைய துன்பத்தையும் பார்த்து, என்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தருளும். என்னுடைய எதிரிகளைப் பாரும்; அவர்கள் பெருகியிருந்து, கொடூர வெறுப்பாய் என்னை வெறுக்கிறார்கள். என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மிடம் அடைக்கலம் வந்துள்ளேன். உத்தமமும், நேர்மையும் என்னைக் காக்கட்டும்; நான் உமக்குக் காத்திருக்கிறேன். தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடுவித்து மீட்டுவிடும்.

சங்கீதம் 25:1-22 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தாவே, நான் என்னை உமக்கு அளிக்கிறேன். என் தேவனே, நான் உம்மை நம்புகிறேன். நான் வெட்கப்பட்டுப் போகமாட்டேன். என் பகைவர்கள் என்னைக் கண்டு நகைப்பதில்லை. ஒருவன் உம்மை நம்பினால் அவன் வெட்கப்பட்டுப் போகமாட்டான். ஆனால் வஞ்சகர் ஏமாந்து போவார்கள். அவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. கர்த்தாவே, உமது வழிகளைக் கற்றுக் கொள்ள உதவும். உமது வழிகளை எனக்குப் போதியும். எனக்கு வழிகாட்டி உமது உண்மைகளைப் போதியும். நீரே என் தேவன், என் மீட்பர். அனுதினமும் நான் உம்மை நம்புகிறேன். கர்த்தாவே, என்னிடம் தயவாயிருக்க நினைவு கூரும். எப்போதுமுள்ள உமது மென்மையான அன்பை எனக்குக் காட்டும். எனது பாவங்களையும் என் சிறுவயதின் தீய செயல்களையும் நினைவில் கொள்ளாதேயும். கர்த்தாவே, உமது நல்ல நாமத்திற்கேற்ப, என்னை அன்பிலே நினைத்தருளும். கர்த்தர் உண்மையாகவே நல்லவர். பாவிகளுக்கு வாழ்வதற்குரிய வழியை அவர் போதிக்கிறார். தாழ்மைப்பட்டவர்களுக்கு அவர் தம் வழியைப் போதிக்கிறார். அவர் அந்த ஜனங்களை நியாயமாக நடத்துகிறார். அவரது உடன்படிக்கையையும், வாக்குறுதிகளையும் பின்பற்றும் ஜனங்களுக்குக் கர்த்தர் தயவுள்ளவரும், உண்மையுமானவர். கர்த்தாவே, நான் பிழையான காரியங்கள் பலவற்றைச் செய்தேன். ஆனால் உம் நன்மை வெளிப்படும் பொருட்டு நான் செய்தவற்றையெல்லாம் மன்னித்தீர். கர்த்தரைப் பின்பற்றுவதை ஒருவன் தெரிந்துகொண்டால் அவன் வாழ்வதற்குரிய நல் வழியை தேவன் காட்டுவார். அம்மனிதன் நல்லவற்றை அனுபவிப்பான். தேவன் வாக்களித்த தேசத்தை அவன் பிள்ளைகள் பெறுவார்கள். தன்னைப் பின்பற்றுவோருக்கு கர்த்தர் தன் இரகசியங்களைச் சொல்வார். அவரைப் பின்பற்றுவோருக்குத் தமது உடன்படிக்கையைக் கற்பிக்கிறார். உதவிக்காக நான் எப்போதும் கர்த்தரை நோக்கியிருக்கிறேன். தொல்லைகளிலிருந்து அவர் எப்போதும் முடிவு உண்டாக்குகிறார். கர்த்தாவே, நான் காயமுற்றுத் தனித்திருக்கிறேன். என்னிடம் திரும்பி எனக்கு இரக்கத்தைக் காட்டும். என் தொல்லைகளிலிருந்து என்னை விடுவியும். என் சிக்கல்களைத் தீர்க்க எனக்கு உதவும். கர்த்தாவே, என் தொல்லைகளையும், துன்பத்தையும் பாரும். நான் செய்த பாவங்களையெல்லாம் மன்னியும். என் பகைவர்களையெல்லாம் பாரும். அவர்கள் என்னைப் பகைத்துத் தாக்க விரும்புகிறார்கள். தேவனே, என்னைப் பாதுகாத்து மீட்டருளும். நான் உம்மை நம்புகிறேன், என்னை ஏமாற்றமடையச் செய்யாதேயும். தேவனே, நீர் உண்மையாகவே நல்லவர். நான் உம்மை நம்புவதால் என்னைப் பாதுகாத்தருளும். தேவனே, இஸ்ரவேல் ஜனங்களை அவர்களது பகைவர்கள் எல்லோரிடமிருந்தும் மீட்டுக்கொள்ளும்.

சங்கீதம் 25:1-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடிச் செய்யும்; என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவிடாதேயும். உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடிச் செய்யும்; முகாந்தரமில்லாமல் துரோகம் பண்ணுகிறவர்களே வெட்கப்பட்டுப்போவார்களாக. கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன். கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய காருணியங்களையும் நினைத்தருளும், அவைகள் அநாதி காலமுதல் இருக்கிறதே. என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்; கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும். கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார். சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார். கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகள். கர்த்தாவே, என் அக்கிரமம் பெரிது; உம்முடைய நாமத்தினிமித்தம் அதை மன்னித்தருளும். கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார். அவன் ஆத்துமா நன்மையில் தங்கும்; அவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும். கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார். என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கிறது; அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார். என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும் சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன். என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கிறது; என் இடுக்கண்களுக்கு என்னை நீங்கலாக்கிவிடும். என் துன்பத்தையும் என் வருத்தத்தையும் பார்த்து, என் பாவங்களையெல்லாம் மன்னித்தருளும். என் சத்துருக்களைப் பாரும்; அவர்கள் பெருகியிருந்து, உக்கிரபகையாய் என்னைப் பகைக்கிறார்கள். என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடிச் செய்யும்; உம்மை நம்பியிருக்கிறேன். உத்தமமும் நேர்மையும் என்னைக் காக்கக்கடவது; நான் உமக்குக் காத்திருக்கிறேன். தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடும்.