நீதிமொழிகள் 23:1-35

நீதிமொழிகள் 23:1-35 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நீ ஒரு அதிபதியோடே போஜனம்பண்ண உட்கார்ந்தால், உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாய்க் கவனித்துப்பார். நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியை வை. அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே; அவைகள் கள்ளப்போஜனமாமே. ஐசுவரியவானாகவேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே. இல்லாமற்போகும் பொருள்மேல் உன் கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோகும். வன்கண்ணனுடைய ஆகாரத்தைப் புசியாதே; அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே. அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்; புசியும், பானம்பண்ணும் என்று அவன் உன்னோடே சொன்னாலும், அவன் இருதயம் உன்னோடே இராது. நீ புசித்த துணிக்கையை வாந்திபண்ணி, உன் இனிய சொற்களை இழந்துபோவாய். மூடனுடைய செவிகள் கேட்கப்பேசாதே; அவன் உன் வார்த்தைகளின் ஞானத்தை அசட்டை பண்ணுவான். பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே. அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார். உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக. பிள்ளையைத் தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான். நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே. என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும். உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால், என் உள்ளிந்திரியங்கள் மகிழும். உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமை கொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு. நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது. என் மகனே, நீ செவிகொடுத்து ஞானமடைந்து, உன் இருதயத்தை நல்வழியிலே நடத்து. மதுபானப்பிரியரையும் மாம்சப்பெருந்தீனிக்காரரையும் சேராதே. குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும். உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே. சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு. நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான். உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப் பெற்றவள் மகிழுவாள், என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக. வேசி ஆழமான படுகுழி; பரஸ்திரீ இடுக்கமான கிணறு. அவள் கொள்ளைக்காரனைப்போல் பதிவிருந்து, மனுஷருக்குள்ளே பாதகரைப் பெருகப்பண்ணுகிறாள், ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்? மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே. மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும். முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும். உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும். நீ நடுக்கடலிலே சயனித்திருக்கிறவனைப்போலும், பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலும் இருப்பாய். என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; என்னை அறைந்தார்கள், எனக்குச் சுரணையில்லை; நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய்.

நீதிமொழிகள் 23:1-35 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஒரு ஆளுநருடன் உணவு சாப்பிட உட்காரும்போது, உனக்குமுன் இருப்பவற்றை நன்றாகக் கவனித்துப்பார். நீ உணவுப் பிரியனாயிருந்தால், உன் தொண்டையில் கத்தி இருப்பதாக நினைத்துக்கொள். அவனுடைய சுவைமிக்க உணவுகளில் ஆசைப்படாதே; அது உன்னை ஏமாற்றக்கூடும். நீ செல்வந்தனாகும்படி உன்னை வருத்தாதே; உன் புத்திசாலித்தனத்தை நம்பாதே. கண் இமைக்கும் நேரத்தில் செல்வம் மறைந்துவிடும், அவை இறக்கைகள் முளைத்து, கழுகுபோல் ஆகாயத்தில் பறந்துவிடும். கஞ்சத்தனமுள்ளவர்களுடைய உணவைச் சாப்பிடாதே, அவர்களுடைய சுவைமிக்க உணவுகளில் ஆசைப்படாதே; ஏனெனில் அவர்கள் எப்பொழுதும் எவ்வளவு செலவு செய்கிறார்களென்று சிந்திக்கிறார்கள். “சாப்பிடுங்கள், குடியுங்கள்” என்று அவர்கள் உனக்குச் சொல்வார்கள்; ஆனால் அவர்கள் அதை மனதாரச் சொல்லவில்லை. நீ சாப்பிட்ட கொஞ்சத்தையும் வாந்தியெடுக்க நேரிடும், நீ அவர்களைப் பாராட்டிய வார்த்தைகளும் வீணாய்ப் போகும். நீ மூடர்களுடன் பேசாதே, ஏனெனில் அவர்கள் உன் ஞானமான வார்த்தைகளை ஏளனம் செய்வார்கள். பூர்வகால எல்லைக் கல்லை நகர்த்தாதே; தந்தையற்றவர்களின் நிலங்களை கொஞ்சம் கொஞ்சமாக அபகரித்துக்கொள்ளாதே. ஏனெனில் அவர்களை பாதுகாக்கிறவர் வல்லவர்; அவர் உனக்கெதிராக அவர்கள் சார்பாக வழக்காடுவார். நீ அறிவுறுத்தலுக்கு உன் இருதயத்தைச் சாய்; அறிவுள்ள வார்த்தைகளுக்கு செவிகொடு. பிள்ளையைத் தண்டித்துத் திருத்தாமல் விடாதே; அவர்களைப் பிரம்பினால் தண்டித்தால், அவர்கள் சாகமாட்டார்கள். நீ அவர்களைப் பிரம்பினால் தண்டித்து, அவர்களை மரணத்தினின்று காப்பாற்று. என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், உண்மையில் என் இருதயம் மகிழ்ச்சியடையும்; உனது உதடுகள் நீதியானவற்றைப் பேசும்போது, என் உள்ளம் மகிழும். நீ உன் இருதயத்தைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே, எப்பொழுதும் யெகோவாவுக்குப் பயந்து நடக்க வைராக்கியமாயிரு. அப்பொழுது உனக்கு எதிர்கால நம்பிக்கை நிச்சயமாகவே உண்டு, உனது எதிர்பார்ப்பும் வீண்போகாது. என் மகனே, சொல்வதைக் கவனமாய்க் கேட்டு ஞானமுள்ளவனாயிரு, உன் இருதயத்தைச் சரியான பாதையில் பதித்துக்கொள்: திராட்சை மதுவைக் குடிப்பவர்களோடும், மாம்சப் பெருந்தீனிக்காரரோடும் நீ சேராதே. ஏனெனில் குடிகாரர்களும், உணவுப்பிரியர்களும் ஏழைகள் ஆவார்கள்; போதை மயக்கம் அவர்களுக்குக் கந்தைத் துணிகளையே உடுத்துவிக்கும். உனக்கு வாழ்வு கொடுத்த உன் தந்தைக்குச் செவிகொடு; உன் தாய் வயது சென்றவளாயிருக்கும்போது அவளை இழிவாகக் கருதாதே. சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; ஞானத்தையும், அறிவுரையையும், மெய்யறிவையும் பெற்றுக்கொள். நீதிமானாகிய பிள்ளையின் தந்தை பெருமகிழ்ச்சியடைகிறான்; ஞானமுள்ள பிள்ளையை உடையவன் அதில் சந்தோஷப்படுகிறான். உன் தந்தையும் தாயும் மகிழ்ந்திருப்பார்களாக; உன்னைப் பெற்றவள் பெருமகிழ்ச்சியடைவாளாக! என் மகனே, உன் இருதயத்தை எனக்குக் கொடு; உன் கண்கள் என் வழிகளைப் பின்பற்றுவதில் மகிழட்டும். ஏனெனில் விபசாரி ஒரு ஆழமான படுகுழி; ஒழுக்கங்கெட்ட மனைவி மிக ஒடுக்கமான கிணறு. அவள் ஒரு கொள்ளைக்காரனைப்போல் பதுங்கிக் காத்திருக்கிறாள்; மனிதர்களுக்குள் உண்மையற்றவர்களைப் பெருகப்பண்ணுகிறாள். யாருக்கு வேதனை? யாருக்குத் துயரம்? யாருக்கு சண்டை? யாருக்கு பிதற்றுதல்? யாருக்குத் தேவையற்ற காயங்கள்? யாருக்கு இரத்தச் சிவப்பான கண்கள்? திராட்சைமது குடிப்பதிலேயே நேரத்தைக் கழிப்பவர்களுக்கும், எப்பொழுதும் கலப்பு மதுவைத் தேடித் திரிபவர்களுக்குமே. மது சிவப்பாய் இருக்கும்போதும், கிண்ணத்தில் பளபளக்கும் போதும் அதைப் பார்த்து மகிழாதே; அது மிருதுவாய் இறங்கும்போதும் மகிழ்ச்சி கொள்ளாதே! முடிவில் அது பாம்பைப்போல் கடிக்கும்; விரியன் பாம்பைப்போல் நஞ்சைக் கக்கும். அப்பொழுது உனது கண்கள் விசித்திரமான காட்சிகளைக் காணும், உனது மனம் குழப்பமானவற்றைக் கற்பனை செய்யும். நீ நடுக்கடலின்மேல் படுத்திருப்பவனைப் போலவும், கப்பலின் பாய்மரத்தில் படுத்து நித்திரை செய்பவனைப்போலவும் உணருவாய். “அவர்கள் என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை! அவர்கள் என்னைத் தாக்கினார்கள், நான் அதை உணரவில்லை! இன்னும் ஒருமுறை குடிப்பதற்கு நான் எப்பொழுது எழும்புவேன்?” என்று நீ சொல்வாய்.

நீதிமொழிகள் 23:1-35 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நீ ஒரு அதிபதியோடு சாப்பிடுவதற்கு உட்கார்ந்தால், உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாகக் கவனித்துப்பார். நீ சாப்பாட்டு பிரியனாக இருந்தால், உன்னுடைய தொண்டையிலே கத்தியை வை. அவனுடைய ருசியுள்ள உணவுகள்மீது ஆசைப்படாதே; அவைகள் வஞ்சக உணவாக இருக்கலாம். செல்வந்தனாகவேண்டுமென்று முயற்சிக்காதே; சுயபுத்தியைச் சாராதே. இல்லாமற்போகும் பொருள்மேல் உன்னுடைய கண்களை ஏன் பறக்கவிடவேண்டும்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டாக்கிக்கொண்டு, வானில் பறந்துபோகும். பொறாமைக்காரனுடைய உணவை சாப்பிடாதே; அவனுடைய ருசியுள்ள உணவுகளில் ஆசைப்படாதே. அவனுடைய இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவனும் இருக்கிறான்; சாப்பிடும், குடியும் என்று அவன் உன்னோடு சொன்னாலும், அவனுடைய இருதயம் உன்னோடு இருக்காது. நீ சாப்பிட்ட உணவை வாந்தியெடுத்து, உன்னுடைய இனிய சொற்களை இழந்துபோவாய். மூடனுடைய காதுகள் கேட்கப் பேசாதே; அவன் உன்னுடைய வார்த்தைகளின் ஞானத்தை அசட்டை செய்வான். பழைய எல்லைக்கல்லை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே. அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார். உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் காதுகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக. பிள்ளையை தண்டிக்காமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகமாட்டான். நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்திற்கு அவனுடைய ஆத்துமாவைத் தப்புவிப்பாயே. என் மகனே, உன்னுடைய இருதயம் ஞானமுள்ளதாக இருந்தால், என்னிலே என்னுடைய இருதயம் மகிழும். உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால், என்னுடைய உள்மனம் மகிழும். உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாள்தோறும் யெகோவாவைப் பற்றும் பயத்தோடு இரு. நிச்சயமாகவே முடிவு உண்டு; உன்னுடைய நம்பிக்கை வீண்போகாது. என் மகனே, நீ கேட்டு ஞானமடைந்து, உன்னுடைய இருதயத்தை நல்வழியிலே நடத்து. மதுபானப்பிரியர்களோடும், இறைச்சி அதிகமாக சாப்பிடுகிறவர்களோடும் சேராதே. குடியனும், சாப்பாட்டுப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கிழிந்த துணிகளை அணிவிக்கும். உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன்னுடைய தாய் வயதானவளாகும்போது அவளை புறக்கணிக்காதே. சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு. நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான். உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப் பெற்றவள் மகிழுவாள். என் மகனே, உன்னுடைய இருதயத்தை எனக்குக் கொடு; உன் கண்கள் என்னுடைய வழிகளைப் பார்ப்பதாக. ஒழுங்கீனமானவள் ஆழமான படுகுழி; அந்நியனுடைய மனைவி இடுக்கமான கிணறு. அவள் கொள்ளைக்காரனைப்போல் ஒளிந்திருந்து, மனிதர்களுக்குள்ளே பாவிகளைப் பெருகச்செய்கிறாள். ஐயோ, யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தம்கலங்கின கண்கள்? மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கி வாழ்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்கும்தானே. மதுபானம் இரத்த நிறமாக இருந்து, பாத்திரத்தில் பளபளப்பாகத் தோன்றும்போது, நீ அதைப் பார்க்காதே; அது மெதுவாக இறங்கும். முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும். உன் கண்கள் ஒழுங்கீனமான பெண்களை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும். நீ நடுக்கடலிலே தூங்குகிறவனைப்போலவும், பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலவும் இருப்பாய். என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; என்னை அறைந்தார்கள், எனக்குச் சுரணையில்லை; நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய்.

நீதிமொழிகள் 23:1-35 பரிசுத்த பைபிள் (TAERV)

ஒரு முக்கியமான மனிதனோடு அமர்ந்து உண்ணும்போது நீ யாருடன் இருக்கிறாய் என்பதை எண்ணிப்பார். எவ்வளவுதான் பசியோடு இருந்தாலும் அளவுக்கு மீறி உண்ணாதே. அவன் கொடுக்கும் உயர்ந்த உணவை அதிகமாக உண்ணாதே. இது ஒரு தந்திரமாக இருக்கலாம். செல்வந்தனாக முயன்று உனது உடல் நலத்தைக் கெடுத்துக்கொள்ளாதே. நீ அறிவுள்ளவனாக இருந்தால் பொறுமையாக இரு. ஒரு பறவை சிறகு முளைத்துப் பறந்துசென்றுவிடுவதைப்போல செல்வம் மிக வேகமாகக் கரைந்துவிடும். கருமியோடு அமர்ந்து உணவு உண்ணாதே. அவன் விரும்பும் சிறப்பு உணவிலிருந்து தூர விலகியிரு. எப்பொழுதும் அவன் அதன் விலையையே நினைத்துக்கொண்டிருக்கும் தன்மையுடையவன். அவன் உன்னிடம், “உண்ணு, பருகு” என்று கூறலாம். ஆனால் அவனது விருப்பம் உண்மையானது அல்ல. அவனது உணவை உண்டால், நீ நோயாளி ஆவாய். உனது வார்த்தைகளின் புகழுரையும், நன்றிகளும் வீணாகப் போய்விடும். முட்டாளுக்குக் கற்றுக்கொடுக்க முயலாதே. அவன் உனது புத்திமதி வார்த்தைகளைக் கேலிச் செய்வான். பழைய சொத்துக்களின் எல்லையை மாற்றாதே. அநாதைகளுக்குரிய நிலத்தை அபகரிக்காதே. கர்த்தர் உனக்கு எதிராக இருப்பார். கர்த்தர் சர்வ வல்லமையுள்ளவர். அந்த அநாதைகளை அவரே பாதுகாக்கிறார். உனது போதகரைக் கவனி, உன்னால் முடிந்தவரை கற்றுக்கொள். தேவைப்படும்பொழுது குழந்தைக்குத் தண்டனை கொடு. அவனைப் பிரம்பால் அடித்தால் அது அவனை அழிக்காது. அவனைப் பிரம்பால் அடிப்பதன் மூலம் அவனது வாழ்க்கையைக் காப்பாற்றிவிடுகிறாய். என் மகனே! நீ அறிவாளியானால், நான் மிகவும் மகிழ்வேன். நீ சரியானவற்றைப் பேசுவதை நான் கேட்டால் என் மனதில் மிகவும் மகிழ்வேன். தீயவர்களைப் பார்த்து பொறாமைப்படாதே. ஆனால் எப்பொழுதும் உறுதியாக கர்த்தருக்கு மரியாதை செலுத்து. எப்பொழுதும் நம்பிக்கைக்கு இடம் உண்டு. உனது நம்பிக்கை வீண்போகாது. என் மகனே கவனி. அறிவுள்ளவனாக இரு. சரியான வழியில் வாழ்வதில் எச்சரிக்கையாக இரு. மிகுதியான இறைச்சியை உண்பவர்களோடும் மிகுதியான மதுவைக் குடிப்பவர்களோடும் நட்பாக இருக்காதே! மிகுதியாக உண்பவனும் குடிப்பவனும் ஏழையாகிவிடுகிறான். அவர்கள் செய்பவையெல்லாம் உண்பது, குடிப்பது மற்றும் தூங்குவது மட்டுமே. விரைவில் அவர்கள் ஒன்றும் இல்லாமல் போகிறார்கள். உன் தந்தை சொல்வதைக் கவனமாகக் கேள். உன் தந்தை இல்லாவிட்டால் நீ பிறந்திருக்க முடியாது. எவ்வளவுதான் முதியவளாக இருந்தாலும் உன் தாய்க்கு மரியாதை கொடு. உண்மை, ஞானம், கல்வி, புரிந்துகொள்ளுதல் ஆகியவை விலை மதிப்புள்ளவை. இவைகளை விற்கமுடியாது. ஏனெனில் இவை மிகவும் விலையுயர்ந்தவை. நல்லவனின் தந்தை மகிழ்ச்சியாக இருக்கிறார். ஒருவன் அறிவுள்ள பிள்ளையைப் பெற்றால் அப்பிள்ளை மகிழ்ச்சியைத் தருகிறான். எனவே உன் தந்தையையும் தாயையும் உன்னோடு மகிழ்ச்சியாக இருக்கும்படிசெய். உன் தாயை ஆனந்தமாக வைத்திரு. என் மகனே, நான் சொல்வதைக் கவனமாகக் கேள். என் வாழ்க்கை உனக்கு எடுத்துக்காட்டாக இருக்கட்டும். வேசிகளும் மோசமான பெண்களும் வலைகளைப் போன்றவர்கள். அவர்கள் உன்னால் வெளியேற முடியாத அளவுக்கு ஆழமான கிணற்றைப் போன்றவர்கள். மோசமான பெண் திருடனைப்போன்று உனக்காகக் காத்திருப்பாள். பலரை அவள் பாவிகளாக்குகிறாள். நிறைய மது குடிப்பவர்களுக்கு அநேகத் தீங்கு உண்டாகிறது. தங்களுக்குள் அடித்துக்கொண்டு சண்டைகளும் விவாதங்களும் செய்வார்கள். அவர்களின் கண்கள் சிவக்கின்றன. தங்களுக்குள் சண்டையிட்டுப் புலம்பி தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்கின்றனர். அவர்களால் இத்துன்பங்களைத் தவிர்த்திருக்க முடியும். மதுவைப்பற்றி எச்சரிக்கையாக இரு. அது அழகாகவும் சிவப்பாகவும் இருக்கிறது. அது கிண்ணத்திற்குள் பளபளப்பாக உள்ளது. குடிக்கும்போது அது மென்மையாகவும் மெதுவாகவும் வயிற்றில் இறங்குகிறது. முடிவில் அது ஒரு பாம்பைப்போன்று கடித்துவிடுகிறது. மதுவானது உன்னை விநோதமானவற்றைப் பார்க்க வைக்கும். உன் மனம் குழப்பமடையும். நீ படுத்திருக்கும்போது, நீ கடலுக்குமேல் படுத்திருப்பதுபோல தோன்றும். நீ கப்பலில் படுத்திருப்பதுபோல் தோன்றும். “அவர்கள் என்னை அடித்தார்கள். ஆனால் அதை நான் உணரவில்லை. அவர்கள் என்னைத் தாக்கினார்கள். அது எனக்கு நினைவில்லை. இப்போது என்னால் எழ முடியவில்லை. எனக்கு மேலும் குடிக்க வேண்டும்போல உள்ளது” என்று நீ சொல்வாய்.