மாற்கு 8:27-33

மாற்கு 8:27-33 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசுவும் அவருடைய சீடர்களும் செசரியா, பிலிப்பி பட்டணத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்றார்கள். வழியிலே அவர் அவர்களிடம், “மக்கள் என்னை யார் என்று சொல்கிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்றும், வேறுசிலர் எலியா என்றும், இன்னும் சிலர் இறைவாக்கினரில் ஒருவர் என்றும் சொல்கிறார்கள்” என்றார்கள். ஆனால், “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார். அதற்கு பேதுரு, “நீர் கிறிஸ்து” என்றான். அப்பொழுது இயேசு, “தம்மைக் குறித்து வேறுயாருக்கும் சொல்லவேண்டாம்” என எச்சரித்தார். மானிடமகனாகிய நான் அநேக பாடுகள் படவேண்டும் என்றும், யூதரின் தலைவர்களாலும், தலைமை ஆசாரியர்களாலும், மோசேயின் சட்ட ஆசிரியர்களாலும் புறக்கணிக்கப்படுவேன் என்றும், அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்; அத்துடன் தாம் கொல்லப்படவேண்டும் என்றும், மூன்று நாட்களுக்குபின் உயிரோடு எழுந்திருக்க வேண்டும் என்றும் சொன்னார். இயேசு இவற்றை ஒளிவுமறைவின்றி சொன்னபோது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கொண்டுபோய், அவரைக் கண்டிக்கத் தொடங்கினான். இயேசு திரும்பி தமது சீடர்களை நோக்கிப்பார்த்து, பேதுருவைக் கண்டித்து, “சாத்தானே எனக்குப் பின்னாகப் போ! நீ இறைவனுடைய காரியங்களைச் சிந்திக்காமல் மனிதனுக்கேற்ற காரியங்களையே சிந்திக்கிறாய்” என்றார்.

மாற்கு 8:27-33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் புறப்பட்டு, பிலிப்பு செசரியா நாட்டைச்சேர்ந்த கிராமங்களுக்குப் போனார்கள். வழியிலே அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: மக்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறுசிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். அப்பொழுது, அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு மறுமொழியாக: நீர் கிறிஸ்து என்றான். அப்பொழுது தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டார். அவைகள் அல்லாமல், மனிதகுமாரன் பல பாடுகள்பட்டு, மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும் வேதபண்டிதர்களாலும் ஆகாதவன் என்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்று நாட்களுக்குப்பின்பு உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்று அவர்களுக்குப் போதிக்கத்தொடங்கினார். இந்த வார்த்தையை அவர் தெளிவாகச் சொன்னார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய், அவரைக் கடிந்துபேசத் தொடங்கினான். அவர் திரும்பித் தம்முடைய சீடர்களைப் பார்த்து, பின்பு பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ தேவனுக்குரிவைகளைச் சிந்திக்காமல் மனிதனுக்குரியவைகளைச் சிந்திக்கிறாய் என்று சொல்லி, அவனைக் கடிந்துபேசினார்.

மாற்கு 8:27-33 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசுவும், அவரது சீஷர்களும் பிலிப்பு செசரியா நகரத்தைச் சார்ந்த ஊர்களுக்குச் சென்றனர். அவர்களின் பயணத்தின்போது “மக்கள் என்னை யார் என்று சொல்கிறர்கள்?” என்று இயேசு கேட்டார். அதற்குச் சீஷர்கள், “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்கின்றனர். சிலர் உம்மைத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்கின்றனர்” என்று சொன்னார்கள். பிறகு இயேசு அவர்களிடம், “நீங்கள் என்னை யார் என்று சொல்கின்றீர்கள்?” என்று கேட்டார் அதற்கு பேதுரு, “நீர்தான் கிறிஸ்து” என்று பதில் கூறினான். இயேசு சீஷர்களிடம், “நான் யார் என்று எவரிடமும் சொல்லவேண்டாம்” என்றார். பிறகு இயேசு தன் சீஷர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார். மனிதகுமாரன் பல வகையில் கஷ்டப்படவேண்டும். அவர் யூதத் தலைவர்களால் ஒப்புக்கொள்ளப்படமாட்டார். தலைமை ஆசாரியர்களும், வேதபாரகர்களும் அவரை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மனித குமாரன் அவர்களால் கொல்லப்பட வேண்டும். இறந்த மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார். இவ்வாறு இயேசு நடக்கப்போவதையெல்லாம் எடுத்துக் கூறினார். எதையும் அவர் இரகசியமாய் வைக்கவில்லை. பேதுரு இயேசுவிடம் தனியே பேசினான். அவர் இவ்வாறு கூறுவது குறித்து பேதுரு கண்டித்துக் கூறினான். ஆனால் இயேசு மறுபக்கம் திரும்பி தன் சீஷர்களைப் பார்த்தார். பிறகு அவர் பேதுருவைக் கண்டித்தார். “சாத்தானே என்னை விட்டு விலகிப்போ! நீ தேவனுடைய காரியங்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறாய். நீ மனிதர் முக்கியமாகக் கருதும் காரியங்களைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டிருக்கிறாய்” என்றார்.

மாற்கு 8:27-33 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் புறப்பட்டு, பிலிப்பு செசரியா பட்டணத்தைச் சேர்ந்த கிராமங்களுக்குப் போனார்கள். வழியிலே அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். அப்பொழுது, அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் கிறிஸ்து என்றான். அப்பொழுது தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு அவர்களுக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார். அல்லாமலும், மனுஷகுமாரன் பலபாடுகள்பட்டு, மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்றுநாளைக்குப்பின்பு உயிர்த்தெழுந்திருக்கவேண்டியதென்று அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். இந்த வார்த்தையை அவர் தாராளமாகச் சொன்னார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய், அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான். அவர் திரும்பித் தம்முடைய சீஷரைப் பார்த்து, பேதுருவை நோக்கி: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்று சொல்லி, அவனைக் கடிந்து கொண்டார்.