மாற்கு 8:11-26

மாற்கு 8:11-26 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது பரிசேயர் வந்து அவரோடே தர்க்கிக்கத்தொடங்கி, அவரைச் சோதிக்கும்படி, வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள். அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு: இந்தச் சந்ததியார் அடையாளம் தேடுகிறதென்ன? இந்தச் சந்ததியாருக்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்படுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை விட்டு மறுபடியும் படவில் ஏறி, அக்கரைக்குப் போனார். சீஷர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்; படவிலே அவர்களிடத்தில் ஒரு அப்பம் மாத்திரம் இருந்தது. அவர் அவர்களை நோக்கி: நீங்கள் பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்தும் ஏரோதின் புளித்தமாவைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள் என்று கற்பித்தார். அதற்கு அவர்கள்: நம்மிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள். இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனைபண்ணுகிறதென்ன? இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா? உங்களுக்குக் கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேளாதிருக்கிறீர்களா? நினைவுகூராமலுமிருக்கிறீர்களா? நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார், பன்னிரண்டு என்றார்கள். நான் ஏழு அப்பங்களை நாலாயிரம்பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். ஏழு என்றார்கள். அப்படியானால், நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார். பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடத்தில் கொண்டுவந்து, அவனைத் தொடும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கைகளை வைத்து: எதையாகிலும் காண்கிறாயா என்று கேட்டார். அவன் ஏறிட்டுப் பார்த்து: நடக்கிற மனுஷரை மரங்களைப்போலக் காண்கிறேன் என்றான். பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கைகளை வைத்து, அவனை ஏறிட்டுப் பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் சொஸ்தமடைந்து, யாவரையும் தெளிவாய்க் கண்டான். பின்பு அவர் அவனை நோக்கி: நீ கிராமத்தில் பிரவேசியாமலும், கிராமத்தில் இதை ஒருவருக்கும் சொல்லாமலும் இரு என்று சொல்லி, அவனை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

மாற்கு 8:11-26 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அங்கு பரிசேயர்கள் வந்து இயேசுவிடம் வாதாடத் தொடங்கினார்கள். அவர்கள் அவரைச் சோதிக்கும்படியாக, வானத்திலிருந்து தங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காட்டும்படி கேட்டார்கள். இயேசு ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு, “இந்தத் தலைமுறையினர் ஏன் அடையாளத்தைத் தேடுகிறார்கள்? நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இவர்களுக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்படுவதில்லை” என்றார். பின்பு இயேசு அவர்களைவிட்டுத் திரும்பவும் படகில் ஏறி, கடலைக் கடந்து மறுகரைக்குச் சென்றார். சீடர்கள் அவ்வேளையில், தங்களுக்கு உணவைக் கொண்டுவர மறந்துபோனார்கள். படகிலே அவர்களிடம் ஒரு அப்பம் மட்டுமே இருந்தது. இயேசு அவர்களிடம், “கவனமாய் இருங்கள். புளிப்பூட்டும் பொருளாகிய பரிசேயர், ஏரோதியரைக் குறித்து விழிப்பாயிருங்கள்” என்று அவர்களை எச்சரித்தார். அதற்கு சீடர்கள், “தங்களிடம் அப்பம் இல்லாததைக் குறித்தே இப்படிச் சொல்லுகிறார்” என்று சீடர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். அவர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொள்வதை அறிந்த இயேசு அவர்களிடம்: “உங்களிடம் அப்பம் இல்லாததைக் குறித்து ஏன் பேசிக்கொள்கிறீர்கள்? நீங்கள் இன்னும் காணாமலும், விளங்கிக்கொள்ளாமலும் இருக்கிறீர்களா? உங்களுடைய இருதயங்கள் கடினமாய் இருக்கின்றனவோ? உங்களுக்குக் கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேட்காதிருக்கிறீர்களா? ஏன், உங்களுக்கு ஞாபகம் இல்லையா? நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குக் கொடுத்தபோது, மீதியான அப்பத்துண்டுகளை, எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள்?” என்றார். அவர்கள், “பன்னிரண்டு” என்றார்கள். “நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பங்கிட்டுக் கொடுத்தபோது, மீதியான அப்பத்துண்டுகளை, எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள்?” என்றார். அதற்கு அவர்கள், “ஏழு” என்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “இன்னும் நீங்கள் விளங்கிக்கொள்ளவில்லையா?” என்றார். அவர்கள் பெத்சாயிதாவுக்கு வந்தபோது, சில மனிதர்கள் ஒரு குருடனைக் கொண்டுவந்து, இயேசு அவனைத் தொடவேண்டும் என்று கெஞ்சிக் கேட்டார்கள். அவர் அந்தக் குருடனுடைய கையைப் பிடித்து, கிராமத்துக்கு வெளியே கொண்டுபோனார். இயேசு அவனுடைய கண்களின்மேல் துப்பி, தமது கைகளை அவன்மேல் வைத்து, “நீ எதையாவது காண்கிறாயா?” என்று கேட்டார். அவன் நிமிர்ந்து பார்த்து, “நான் மனிதரைக் காண்கிறேன்; ஆனால் அவர்களோ நடந்து திரிகிற மரங்களைப்போல் காணப்படுகிறார்கள்” என்றான். இயேசு மீண்டும் ஒருமுறை தமது கைகளை அவனுடைய கண்களின்மேல் வைத்தார். அப்பொழுது அவனுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவன் திரும்பவும் தன்னுடைய பார்வையைப் பெற்று, எல்லாவற்றையும் தெளிவாய் கண்டான். இயேசு அவனிடம், கிராமத்துக்குப் போய் இதைப்பற்றிச் சொல்லவேண்டாம் என்று சொல்லி, அவனை அவனுடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

மாற்கு 8:11-26 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது பரிசேயர்கள் வந்து அவரோடு வாக்குவாதம் பண்ணத்தொடங்கி, அவரைச் சோதிப்பதற்காக, வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள். அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு: இந்தச் சந்ததியார்கள் அடையாளம் தேடுகிறது ஏன்? இந்தச் சந்ததியார்களுக்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்படுவது இல்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களைவிட்டு மறுபடியும் படகில் ஏறி, அக்கரைக்குப் போனார். சீடர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்; படகிலே அவர்களிடம் ஒரு அப்பம்மட்டுமே இருந்தது. அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் பரிசேயர்களுடைய புளித்த மாவைக்குறித்தும் ஏரோதின் புளித்த மாவைக்குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள் என்று கற்பித்தார். அதற்கு அவர்கள்: நம்மிடம் அப்பங்கள் இல்லாததினால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள். இயேசு அதை அறிந்து, அவர்களைப் பார்த்து: உங்களிடம் அப்பங்கள் இல்லாததினால் நீங்கள் யோசனைபண்ணுகிறது ஏன்? இன்னும் சிந்திக்காமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்களுடைய இருதயம் கடினமாக இருக்கிறதா? உங்களுக்குக் கண்கள் இருந்தும் பார்க்காமல் இருக்கிறீர்களா? காதுகள் இருந்தும் கேட்காமல் இருக்கிறீர்களா? நினைத்துப்பார்க்காமல் இருக்கிறீர்களா? நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பங்கிட்டுக்கொடுத்தபோது, மீதியான அப்பங்களை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார், பன்னிரண்டு என்றார்கள். நான் ஏழு அப்பங்களை நான்காயிரம்பேருக்குப் பங்கிட்டுக்கொடுத்தபோது, மீதியான அப்பங்களை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். ஏழு என்றார்கள். அப்படியானால், நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பது எப்படி? என்றார். பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடம் கொண்டுவந்து, அவனைத் தொடவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள். அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனைக் கிராமத்திற்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கரங்களை வைத்து: எதையாவது பார்க்கிறாயா? என்று கேட்டார். அவன் பார்த்து: மனிதர்களை நடக்கிற மரங்களைப்போலப் பார்க்கிறேன் என்றான். பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கரங்களை வைத்து, அவனைப் பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் பார்வைப்பெற்று, எல்லோரையும் தெளிவாகப் பார்த்தான். பின்பு அவர் அவனைப் பார்த்து: நீ கிராமத்திற்குள் செல்லாமலும், கிராமத்தில் இதை ஒருவருக்கும் சொல்லாமலும் இரு என்று சொல்லி, அவனை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

மாற்கு 8:11-26 பரிசுத்த பைபிள் (TAERV)

பரிசேயர்கள் இயேசுவிடம் வந்து சில கேள்விகள் கேட்டனர். அவர்கள் அவரைச் சோதிக்க விரும்பினர். அவர் தேவனிடம் இருந்து வந்தவர் என்பதை நிரூபிக்க ஒரு அற்புதத்தைச் செய்யுமாறு அவர்கள் கேட்டனர். இயேசு வருத்தத்தோடு பெருமூச்சு விட்டார். அவர், “எதற்காக மக்கள் அற்புதங்களை ஒரு ஆதாரமாகப் பார்க்க விரும்புகிறார்கள்? நான் உண்மையைக் கூறுகிறேன். அத்தகைய எந்த ஆதாரமும் உங்களுக்குக் கொடுக்கப்படமாட்டாது” என்று கூறினார். பிறகு இயேசு பரிசேயர்களை விட்டு விலகி, படகில் ஏறி அக்கரைக்குப் போனார். அவர்கள் படகில் போகும்போது, சீஷர்களிடம் ஒரே ஒரு அப்பம் மட்டுமே இருந்தது, அவர்கள் போதுமான அப்பங்களைக் கொண்டுவர மறந்துவிட்டார்கள். அவர்களை இயேசு எச்சரித்தார். “கவனமாக இருங்கள். நீங்கள் பரிசேயருடைய புளித்த மாவைக் குறித்தும் ஏரோதின் புளித்த மாவைக் குறித்தும் எச்சரிக்கையாய் இருங்கள்” என்றார். இயேசுவின் சீஷர்கள் இதன் பொருளைப்பற்றித் தங்களுக்குள் விவாதம் செய்தார்கள். அவர்கள், “நம்மிடம் அப்பம் இல்லாததால்தான் இயேசு இவ்வாறு கூறுகிறார்” என்று முடிவு செய்தனர். இதுபற்றி இயேசுவும் அறிந்து கொண்டார். எனவே, “அப்பம் இல்லாததைப்பற்றி ஏன் விவாதித்துக் கொள்கிறீர்கள்? உங்களால் இன்னும் உண்மையைப் பார்க்கவோ, புரிந்துகொள்ளவோ முடியவில்லையே! உங்களுக்குக் கண்கள் இருந்தும் காணமுடியாமல் இருக்கிறீர்களா? காதுகள் இருந்தும் கேட்கமுடியாமல் இருக்கிறீர்களா? நான் இதற்கு முன்னால் செய்தவற்றை நினைத்துப் பாருங்கள். நம்மிடம் போதுமான அப்பங்கள் இல்லாதபோது என்ன செய்தேன்? ஐந்து அப்பங்களை ஐயாயிரம் மக்களுக்கு நான் பங்கிட்டுக் கொடுக்கவில்லையா? உண்டு மீதியான அப்பங்களை எத்தனைக் கூடைகளில் நிறைத்தீர்கள் என்று நினைத்துப் பாருங்கள்” என்றார். அதற்குச் சீஷர்கள், “நாங்கள் மீதியான உணவுப்பொருள்களை பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினோம்” என்றார்கள். மேலும் இயேசு, “நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்ததை நினைத்துப் பாருங்கள். அப்போது எஞ்சிய உணவுப்பொருளை எத்தனைக் கூடைகளில் நிறைத்து வைத்தீர்கள்?” என்று கேட்டார். அதற்குச் சீஷர்கள், “அவற்றை ஏழு கூடைகளில் நிறைத்து வைத்தோம்” என்றனர். இயேசு அவர்களிடம், “நான் செய்தவற்றையெல்லாம் நினைவில் வைத்துள்ளீர்கள். ஆனால் இன்னமும் உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா?” என்றார். இயேசுவும் அவரது சீஷர்களும் பெத்சாயிதாவுக்கு வந்தனர். சிலர் இயேசுவிடம் ஒரு குருடனை அழைத்துக்கொண்டு வந்தனர். அவர்கள் குருடனைத் தொட்டுக் குணப்படுத்துமாறு கெஞ்சிக் கேட்டனர். ஆகையால் இயேசு குருடனின் கையைப் பிடித்துக்கொண்டு ஊருக்கு வெளியே அழைத்து வந்தார். பிறகு இயேசு அவனது கண்ணில் எச்சிலைத் துப்பினார். அவன் மீது தன் கையை வைத்து, “இப்போது உன்னால் கொஞ்சமாவது பார்க்க முடிகிறதா?” என்று கேட்டார். அக்குருடனால் பார்க்க முடிந்தது. எனவே அவன், “ஆமாம், நான் மக்களைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப்போல் நடமாடுவதைப் பார்க்கமுடிகிறது” என்றான். மேலும் இயேசு அவன் கண்மீது கையை வைத்தார். அவன் தன் கண்களை அகலமாகத் திறந்தான். அவனது கண்கள் குணம் பெற்றன. அவனால் எல்லாவற்றையும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. இயேசு அவனை வீட்டுக்குப்போகச் சொன்னார். “நகரத்திற்குள் போகாதே” என்று இயேசு சொன்னார்.