மீகா 1:1-16

மீகா 1:1-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரானாகிய மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவுக்கும் எருசலேமுக்­கும் விரோதமாய்த் தரிசித்ததுமான கர்த்தருடைய வார்த்தை. சகல ஜனங்களே, கேளுங்கள்; பூமியே, அதிலுள்ளவைகளே, செவிகொடுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர், தம்முடைய பரிசுத்த ஆலயத்திலிருக்கிற ஆண்டவரே, உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருப்பார். இதோ, கர்த்தர் தமது ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறார்; அவர் இறங்கி பூமியின் உயர்ந்த இடங்களை மிதிப்பார். மெழுகு அக்கினிக்கு முன்பாக உருகுகிறதுபோலவும், மலைகளிலிருந்து பாயுந்தண்ணீர் தரையைப் பிளக்கிறதுபோலவும், பர்வதங்கள் அவர் கீழே உருகி, பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும். இது எல்லாம் யாக்கோபுடைய மீறுதலினிமித்தமும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய பாவங்களினிமித்தமும் சம்பவிக்கும்; யாக்கோபின் மீறுதலுக்குக் காரணமென்ன? சமாரியா அல்லவோ? யூதாவின் மேடைகளுக்குக் காரணமென்ன? எருசலேம் அல்லவோ? ஆகையால் நான் சமாரியாவை வெளியான மண்மேடும், திராட்சச்செடி நடுகிற நிலமுமாக்கி, அதின் கற்களைப் பள்ளத்தாக்கிலே புரண்டுவிழப்பண்ணி, அதின் அஸ்திபாரங்களைத் திறந்துவைப்பேன். அதின் சுரூபங்கள் எல்லாம் நொறுக்கப்படும்; அதின் பணையங்கள் எல்லாம் அக்கினியால் எரித்துப்போடப்படும்; அதின் விக்கிரகங்களை எல்லாம் பாழாக்குவேன்; வேசிப்பணையத்தினால் சேர்க்கப்பட்டது, திரும்ப வேசிப்பணையமாய்ப்போகும். இதினிமித்தம் நான் புலம்பி அலறுவேன்; பறிகொடுத்தவனாகவும் அம்மணமாகவும் நடப்பேன்; நான் ஓரிகளைப்போல ஊளையிட்டு, ஆந்தைகளைப்போல அலறுவேன். அதின் காயம் ஆறாதது; அது யூதா மட்டும் வந்தது: என் ஜனத்தின் வாசலாகிய எருசலேம்மட்டும் வந்தெட்டினது. அதைக் காத்பட்டணத்திலே அறிவியாதேயுங்கள்; அழவே வேண்டாம்; பெத் அப்ராவிலே புழுதியில் புரளு. சாப்பீரில் குடியிருக்கிறவளே, வெட்கத்துடன் அம்மணமாய் அப்பாலே போ; சாயனானில் குடியிருக்கிறவள் வெளியே வருவதில்லை; பெத் ஏசேலின் புலம்பல் உங்களுக்கு அடைக்கலமாயிராது. மாரோத்தில் குடியிருக்கிறவள் நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள்; ஆனாலும் தீமை கர்த்தரிடத்திலிருந்து எருசலேமின் வாசல்வரைக்கும் வந்தது. லாகீசில் குடியிருக்கிறவளே, வேகமான குதிரைகளை இரதத்திலே பூட்டு; நீயே சீயோன் குமாரத்தியின் பாவத்துக்குக் காரணி; உன்னிடத்தில் இஸ்ரவேலின் பாதகங்கள் காணப்பட்டது. ஆகையால் மோர்ஷேக்காத்தினிடத்தில் உனக்கு இருக்கிறதைக் கொடுத்துவிடுவாய்; அக்சீபின் வீடுகள் இஸ்ரவேலின் ராஜாக்களுக்கு அபத்தமாய்ப்போகும். மரேஷாவில் குடியிருக்கிறவளே, உனக்கு இன்னும் ஒரு சுதந்தரவாளியை வரப்பண்ணுவேன்; அவன் இஸ்ரவேலின் மகிமையாகிய அதுல்லாம்மட்டும் வருவான். உனக்கு அருமையான உன் பிள்ளைகளினிமித்தம் நீ உன் தலையைச் சிரைத்து மொட்டையிட்டுக்கொள்; கழுகைப்போல முழுமொட்டையாயிரு, அவர்கள் உன்னைவிட்டுச் சிறைப்பட்டுப் போகிறார்கள்.

மீகா 1:1-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யூதாவின் அரசர்களான யோதாம், ஆகாஸ், எசேக்கியா ஆகியோர்களின் ஆட்சிக்காலத்தில், மோரேசேத் ஊரைச்சேர்ந்த மீகா என்பவனுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை இதுவே. சமாரியாவையும், எருசலேமையும் குறித்து அவன் கண்ட தரிசனம்: மக்கள் கூட்டங்களே, நீங்கள் எல்லோரும் கேளுங்கள், பூமியே, அதில் உள்ளவர்களே, செவிகொடுங்கள், ஆண்டவராகிய யெகோவா உங்களுக்கு எதிராய் சாட்சி கூறப்போகிறார், யெகோவா பரலோகத்திலுள்ள தமது பரிசுத்த ஆலயத்திலிருந்து பேசப்போகிறார். நோக்கிப்பாருங்கள்; யெகோவா தமது உறைவிடத்திலிருந்து வருகிறார். அவர் இறங்கி பூமியின் உயர்ந்த இடங்களில் உலாவுகிறார். நெருப்பின் முன் மெழுகு போலவும், மலைச்சரிவில் பாய்ந்தோடும் தண்ணீர் போலவும் மலைகள் அவருக்குக் கீழ் உருகுகின்றன. பள்ளத்தாக்குகள் பிளக்கின்றன. யாக்கோபின் மீறுதல்களினாலும், இஸ்ரயேல் வீட்டாரின் பாவங்களினாலுமே இவை எல்லாம் நடக்கின்றன. யாக்கோபின் மீறுதல் என்ன? சமாரியா அல்லவா? யூதாவின் வழிபாட்டு மேடை எது? எருசலேம் அல்லவா? “எனவே யெகோவா சொல்கிறதாவது: நான் சமாரியாவை ஒரு இடிபாட்டுக் குவியலாக்குவேன். திராட்சைத் தோட்ட நிலமாக அதை மாற்றுவேன். அவற்றின் கற்களை பள்ளத்தாக்கில் கொட்டி, அஸ்திபாரங்களை வெறுமையாக்குவேன். சமாரியாவின் விக்கிரகங்கள் யாவும் துண்டுகளாய் நொறுக்கப்படும்; அவள் ஆலயத்திற்குக் கொடுத்த அன்பளிப்புகள் எல்லாம் நெருப்பில் சுட்டெரிக்கப்படும்; அவளுடைய உருவச்சிலைகள் அனைத்தையும் அழிப்பேன். அவள் தன் அன்பளிப்புகளை கோயில் வேசிகளின் கூலியிலிருந்து பெற்றபடியால், பகைவர்கள் அவற்றைத் திரும்பவும் வேசிகளின் கூலியாகவே பயன்படுத்துவார்கள்.” சமாரியாவின் அழிவின் நிமித்தம் நான் அழுது புலம்புவேன்; வெறுங்காலோடும் நிர்வாணத்துடனும் நடந்து திரிவேன். நரியைப்போல் ஊளையிட்டு, ஆந்தையைப்போல் அலறுவேன். ஏனெனில் சமாரியாவின் புண் குணமாக்க முடியாதது; அது யூதாவரை வந்துள்ளது. என் மக்கள் வாழும் எருசலேம் வரையுங்கூட அது வந்துள்ளது. அதை காத் பட்டணத்தில் சொல்லவேண்டாம்; கொஞ்சமும் அழவே வேண்டாம். பெத் அப்பிராவிலே புழுதியில் புரளுங்கள். சாப்பீரில் வாழ்கிறவர்களே, நிர்வாணத்துடனும் வெட்கத்துடனும் கடந்துபோங்கள். சாயனானில் வாழ்கிறவர்கள் வெளியே வரமாட்டார்கள். பெத் ஏசேல் துக்கங்கொண்டாடுகிறது. அதற்குரிய பாதுகாப்பு உன்னிடமிருந்து எடுபட்டுப் போயிற்று. மாரோத்தில் வாழ்கிறவர்கள் வேதனையில் துடித்து, விடுதலைக்காகக் காத்திருக்கின்றனர். ஏனெனில், யெகோவாவிடமிருந்து பேராபத்து வந்திருக்கிறது. அது எருசலேமின் வாசலுக்கும் வந்திருக்கிறது. லாகீசில் வாழ்கிறவர்களே, குதிரைகளை தேரில் பூட்டுங்கள்! நீங்களே சீயோன் மகளுடைய பாவத்தின் ஆரம்பம். ஏனெனில் இஸ்ரயேலின் மீறுதல்கள் உங்களிடத்திலேயும் காணப்பட்டன. ஆதலால் யூதாவின் மக்களே, நீங்கள் மோர்ஷேத் காத்துக்கு பிரியாவிடை சொல்லி அனுப்பிவிடுவீர்கள். அக்சீப் பட்டணம் இஸ்ரயேலின் அரசர்களுக்கு ஏமாற்றமாகும். மரேஷாவில் வாழ்கிறவர்களே, உங்களுக்கெதிராக வெற்றி வீரனொருவனை யெகோவா கொண்டுவருவார். இஸ்ரயேலின் மேன்மையான தலைவர்கள் அதுல்லாம் குகையில் ஒளிந்துகொள்வார்கள். நீங்கள் மகிழ்ச்சிகொள்கிற பிள்ளைகளுக்காகத் துக்கங்கொண்டாடி, உங்கள் தலையை மொட்டையடியுங்கள்; அவர்கள் உங்களைவிட்டு நாடு கடத்தப்படப் போவதால், கழுகின் தலையைப்போல் உங்கள் தலைகளை மொட்டையடித்துக் கொள்ளுங்கள்.

மீகா 1:1-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரைச்சேர்ந்த மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவிற்கும் எருசலேமிற்கும் விரோதமாகப் பெற்றுக்கொண்டதுமான யெகோவாவுடைய வார்த்தை. அனைத்து மக்களே, கேளுங்கள்; பூமியே, அதிலுள்ளவைகளே, செவிகொடுங்கள்; யெகோவாகிய ஆண்டவர், தம்முடைய பரிசுத்த ஆலயத்திலிருக்கிற ஆண்டவரே உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாக இருப்பார். இதோ, யெகோவா தம்முடைய இடத்திலிருந்து புறப்பட்டு வருகிறார்; அவர் இறங்கி பூமியின் உயர்ந்த இடங்களை மிதிப்பார். மெழுகு நெருப்பிற்கு முன்பாக உருகுகிறதுபோலவும், மலைகளிலிருந்து பாயும்தண்ணீர் தரையைப் பிளக்கிறதுபோலவும், மலைகள் அவர் கீழே உருகி, பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும். இவை அனைத்தும் யாக்கோபுடைய மீறுதலின் காரணமாகவும், இஸ்ரவேல் வம்சத்தார்களுடைய பாவங்களின் காரணமாகவும் சம்பவிக்கும்; யாக்கோபின் மீறுதலுக்குக் காரணமென்ன? சமாரியா அல்லவோ? யூதாவின் மேடைகளுக்குக் காரணமென்ன? எருசலேம் அல்லவோ? ஆகையால் நான் சமாரியாவை வெளியான மண்மேடும், திராட்சைச்செடி நடுகிற நிலமுமாக்கி, அதின் கற்களைப் பள்ளத்தாக்கிலே புரண்டுவிழச்செய்து, அதின் அஸ்திபாரங்களைத் திறந்துவைப்பேன். அதின் வார்ப்பிக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் நொறுக்கப்படும்; அதின் பொருட்கள் அனைத்தும் நெருப்பினால் எரித்துப்போடப்படும்; அதின் சிலைகளை எல்லாம் பாழாக்குவேன்; வேசிப்பணையத்தினால் சேர்க்கப்பட்டது, திரும்ப வேசிப்பணையமாகச் செலுத்தப்படும். இதனால் நான் புலம்பி அலறுவேன்; பறிகொடுத்தவனாகவும் நிர்வாணமாகவும் நடப்பேன்; நான் நரிகளைப்போல ஊளையிட்டு, ஆந்தைகளைப்போல அலறுவேன். அதின் காயம் ஆறாதது; அது யூதாவரை வந்தது: என் மக்களின் வாசலாகிய எருசலேம்வரை வந்து சேர்ந்தது. அதைக் காத்பட்டணத்திலே அறிவிக்காதீர்கள்; அழவே வேண்டாம்; பெத் அப்ராவிலே புழுதியில் புரளு. சாப்பீரில் குடியிருக்கிறவளே, வெட்கத்துடன் நிர்வாணமாக அப்பாலே போ; சாயனானில் குடியிருக்கிறவன் வெளியே வருவதில்லை; பெத் ஏசேலின் புலம்பல் உங்களுக்கு அடைக்கலமாக இருக்காது. மாரோத்தில் குடியிருக்கிறவள் நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள்; ஆனாலும் தீமை யெகோவாவிடத்திலிருந்து எருசலேமின் வாசல்வரைக்கும் வந்தது. லாகீசில் குடியிருக்கிறவளே, வேகமான குதிரைகளை இரதத்திலே பூட்டு; நீயே மகளாகிய சீயோனின் பாவத்திற்குக் காரணம்; உன்னிடத்தில் இஸ்ரவேலின் கீழ்ப்படியாமைகள் காணப்பட்டது. ஆகையால் மோர்ஷேத்காத்தினிடத்தில் உனக்கு இருக்கிறதைக் கொடுத்துவிடுவாய்; அக்சீபின் வீடுகள் இஸ்ரவேலின் ராஜாக்களுக்கு ஏமாற்றமாகப்போகும். மரேஷாவில் குடியிருக்கிறவளே, உனக்கு இன்னும் ஒரு உரிமையாளனை வரச்செய்வேன்; இஸ்ரவேலின் தலைவர்கள் அதுல்லாம் வரை வருவார்கள். உனக்கு அருமையான உன் பிள்ளைகளுக்காக நீ உன் தலையைச் சிரைத்து மொட்டையிட்டுக்கொள்; கழுகைப்போல முழுமொட்டையாயிரு, அவர்கள் உன்னைவிட்டுச் சிறைப்பட்டுப் போகிறார்கள்.

மீகா 1:1-16 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தருடைய வார்த்தை மீகாவிடம் வந்தது. இது யோதாம், ஆகாஸ், எசேக்கியா எனும் ராஜாக்களின் காலங்களில் நிகழ்ந்தது. இவர்கள் யூதாவின் ராஜாக்கள். மீகா, மொரேசா என்னும் ஊரைச் சேர்ந்தவன். மீகா இந்தத் தரிசனத்தைச் சமாரியாவையும் எருசலேமையும் குறித்துப் பார்த்தான். அனைத்து ஜனங்களே, கவனியுங்கள்! பூமியே அதிலுள்ள உயிர்களே, கவனியுங்கள், எனது கர்த்தராகிய ஆண்டவர் அவரது பரிசுத்த ஆலயத்திலிருந்து வருவார். எனது ஆண்டவர் உங்களுக்கு எதிரான சாட்சியாக வருவார். பாருங்கள், கர்த்தர் அவரது இடத்திலிருந்து வந்துகொண்டிருக்கிறார். அவர் இறங்கி வந்து பூமியிலுள்ள உயர்ந்த மேடைகளை மிதிப்பார். அவருக்குக் கீழே மலைகள் உருகும். அவை நெருப்புக்கு முன்னாலுள்ள மெழுகைப் போன்று உருகும். பள்ளத்தாக்குகள் பிளந்து மலைகளிலிருந்து தண்ணீர் பாயும். ஏனென்றால், இதற்கு காரணம் யாக்கோபின் பாவம். இதற்கு இஸ்ரவேல் நாடு செய்த பாவங்களும் காரணமாகும். யாக்கோபு செய்த பாவத்திற்கு காரணம் என்ன? அது சமாரியா, யூதாவிலுள்ள, வழிபாட்டிற்குரிய இடம் எங்கே? அது எருசலேம். எனவே, நான் சமாரியாவை வயலிலுள்ள குன்றுகளின் குவியலாக்குவேன். அது திராட்சைக் கொடி நடுவதற்கான இடம்போல் ஆகும். நான் சமாரியவின் கற்களைப் பள்ளத்தாக்கில் புரண்டு விழப் பண்ணுவேன். நான் அவளது அஸ்திபாரங்களைத் தவிர எல்லாவற்றையும் அழிப்பேன். அவளது அனைத்து விக்கிரகங்களும் துண்டுகளாக உடைக்கப்படும். அவள் வேசித்தனத்தின் சம்பளம் (விக்கிரகங்கள்) நெருப்பில் எரிக்கப்படும். நான் அவளது அந்நிய தெய்வங்களின் விக்கிரகங்கள் அனைத்தையும் அழிப்பேன். ஏனென்றால் சமாரியா எனக்கு விசுவாசமற்ற முறையில் அச்செல்வத்தைப் பெற்றாள். எனவே அவை எனக்கு விசுவாசம் அற்றவர்களாலேயே எடுத்துக்கொள்ளப்படும். என்ன நிகழும் என்பதைப்பற்றி நான் மிகவும் துக்கப்படுவேன். நான் பாதரட்சையும் ஆடையும் இல்லாமல் போவேன். நான் ஒரு நாயைப்போன்று அழுவேன். நான் ஒரு பறவையைப்போன்று துக்கங்கொள்வேன். சமாரியாவின் காயங்கள் குணப்படுத்தப்பட இயலாது. அவளது (பாவம்) நோய் யூதா முழுவதும் பரவியிருக்கிறது. இது எனது ஜனங்களின் நகரவாசலை அடைந்திருக்கிறது. எருசலேமின் எல்லா வழிகளிலும் பரவியிருக்கிறது, இதனைக் காத்திடம் சொல்லவேண்டாம். அக்கோ என்னுமிடத்தில் கதறவேண்டாம். பெத்அப்ராவிலே புழுதியில் நீ புரளு. சாப்பீரில் குடியிருக்கிறவர்களே வெட்கத்துடன் நிர்வாணமாய் உங்கள் வழியிலே போங்கள். சாயனானில் குடியிருக்கிறவர்கள் வெளியே வரமாட்டார்கள். பெத்ஏசேலில் வாழ்கிறவர்கள் கதறுவார்கள். உங்களின் உதவியை எடுத்துக்கொள்வார்கள். மாரோத்தில் குடியிருக்கிறவளே பலவீனமாகி நல்ல செய்தி வருமென்று எதிர்ப்பார்த்திருந்தார்கள். ஏனென்றால், துன்பமானது கர்த்தரிடமிருந்து எருசலேமின் நகர வாசலுக்கு வந்திருக்கிறது. லாகீசில் குடியிருக்கிறவளே, உங்கள் இரதத்தில் விரைவாகச் செல்லும் குதிரையைப் பூட்டு. சீயோனின் பாவம் லாகீசில் தொடங்கியது. ஏனென்றால் நீ இஸ்ரவேலின் பாவங்களைப் பின்பற்றுகிறாய். எனவே, நீ மோர்ஷேக் காத்தினிடத்திற்கு கட்டாயமாக பிரிவு உபச்சார வெகுமதிகளைக் கொடுக்கவேண்டும். அக்சீபின் வீடுகள் இஸ்ரவேல் ராஜாக்களிடம் வஞ்சனை செய்யும். மரேஷாவில் குடியிருக்கிறவளே, நான் உனக்கு எதிராக ஒருவனைக் கொண்டு வருவேன். அவன் உனக்கு உரிய பொருட்களை எடுத்துக்கொள்வான். அதுல்லாமிற்குள் இஸ்ரவேலின் மகிமை (தேவன்) வரும். எனவே உனது முடியை வெட்டு, உன்னை மொட்டையாக்கிக்கொள். ஏனென்றால், நீ அன்பு செலுத்துகிற உன் குழந்தைகளுக்காக நீ கதறுவாய். நீ கழுகைப்போன்று முழுமொட்டையாக இருந்து உனது துக்கத்தைக் காட்டு. ஏனென்றால் உனது பிள்ளைகள் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.