மத்தேயு 12:46-50

மத்தேயு 12:46-50 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இப்படி அவர் ஜனங்களோடே பேசுகையில், அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள். அப்பொழுது, ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான். தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி; இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறான் என்றார்.

மத்தேயு 12:46-50 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு மக்கள் கூட்டத்தோடு இன்னும் பேசிக்கொண்டிருக்கையில், அவருடைய தாயும், சகோதரர்களும் அவருடன் பேச விரும்பி, வெளியே காத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒருவன் இயேசுவிடம் வந்து, “உமது தாயும், உமது சகோதரர்களும் உம்முடன் பேச விரும்பி வெளியே நிற்கிறார்கள்” என்றான். இயேசு அவனிடம், “யார் எனது தாய்? யார் எனது சகோதரர்கள்?” என்று கேட்டார். பின்பு அவர் தமது சீடரைச் சுட்டிக்காட்டி, “இவர்களே என் தாயும், என் சகோதரர்களுமாய் இருக்கிறார்கள். எனது பரலோக பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவர்களே எனது சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறார்கள்” என்றார்.

மத்தேயு 12:46-50 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இப்படி அவர் மக்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, அவருடைய தாயாரும் சகோதரர்களும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள். அப்பொழுது, ஒருவன் அவரைப் பார்த்து: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் உம்மோடு பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான். தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் மறுமொழியாக: என் தாயார் யார்? என் சகோதரர்கள் யார்? என்று சொல்லி, தம்முடைய கையைத் தமது சீடர்களுக்கு நேராக நீட்டி; இதோ, என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே! பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்கு சகோதரனும், சகோதரியும், தாயுமாகவும் இருக்கிறான் என்றார்.

மத்தேயு 12:46-50 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு மக்களிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது அவரது தாயும் சகோதரர்களும் வெளியில் நின்றிருந்தனர். அவர்கள் இயேசுவிடம் பேச விரும்பினர். ஒருவன் இயேசுவிடம், “உம் தாயும் சகோதரர்களும் வெளியில் காத்திருக்கின்றனர். அவர்கள் உம்மிடம் பேச விரும்புகிறார்கள்” என்றான். இயேசு, “யார் என் தாய்? யார் என் சகோதரர்கள்?” என்று கேட்டார். தன் சீஷர்களைச் சுட்டிக் காட்டி, “பாருங்கள்! இவர்களே என் தாயும் சகோதரர்களும். பரலோகிலிருக்கும் என் பிதா விரும்பும் செயல்களைச் செய்கிறவர்களே என் உண்மையான சகோதர சகோதரிகளும் தாயும் ஆவார்கள்” என்று அவனுக்கு பதிலளித்தார்.