லூக்கா 9:18-20
லூக்கா 9:18-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஒருமுறை இயேசு தனிமையாக மன்றாடிக்கொண்டிருந்தார். அவருடைய சீடர்களும், அவருடனே இருந்தார்கள். அப்பொழுது அவர் அவர்களிடம், “மக்கள் என்னை யார் என்று சொல்கிறார்கள்?” என்று கேட்டார். அவர்கள் அதற்கு பதிலாக, “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்றும், வேறுசிலர் எலியா என்றும், இன்னும் சிலர் உம்மைக் குறித்து, வெகுகாலத்திற்கு முன்வாழ்ந்த இறைவாக்கினரில் ஒருவர் உயிர்பெற்று வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்” என்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “நீங்கள் என்னை யார் என்று சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். பேதுரு அதற்கு, “நீர் இறைவனின் கிறிஸ்து!” என்றான்.
லூக்கா 9:18-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்பு அவர் தமது சீடர்களோடு தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போது, அவர்களை நோக்கி: மக்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறுசிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு மறுமொழியாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான்.
லூக்கா 9:18-20 பரிசுத்த பைபிள் (TAERV)
ஒருமுறை இயேசு தனிமையாகப் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார். அவரது சீஷர்கள் அனைவரும் அங்கே வந்தனர். இயேசு அவர்களிடம், “மக்கள் என்னை யார் என்று பேசிக்கொள்கிறார்கள்” எனக் கேட்டார். சீஷர்கள், “சிலர் யோவான் ஸ்நானகன் எனக் கூறுகின்றனர். பிறர் எலியா என்கிறார்கள். மற்றும் சிலர் நீங்கள் பல்லாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்து உயிரோடு எழுந்துள்ள ஒரு தீர்க்கதரிசி என்று சொல்கின்றனர்.” எனப் பதில் கூறினர். அப்போது இயேசு அவரது சீஷர்களை நோக்கி “நீங்கள் என்னை யார் என நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். பேதுரு, “நீர் தேவனிடமிருந்து வந்த கிறிஸ்து” என்று பதிலளித்தான்.
லூக்கா 9:18-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்பு அவர் தமது சீஷரோடேகூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், அவர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான்.