யோசுவா 7:11-26

யோசுவா 7:11-26 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இஸ்ரயேலர் பாவம் செய்திருக்கிறார்கள்; அவர்கள் கைக்கொள்வதற்காக நான் கட்டளையிட்ட என் உடன்படிக்கையை அவர்கள் மீறிவிட்டார்கள். எனக்கென்று ஒதுக்கப்பட்ட பொருட்களில் சிலவற்றையும் அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் களவுசெய்தும், பொய்சொல்லியும் இருக்கிறார்கள். அவற்றைத் தங்கள் சொந்த உடைமைகளோடு சேர்த்துக்கொண்டார்கள். அதனால்தான் இஸ்ரயேலர்கள் தங்களுடைய பகைவர்கள் முன்னால் எதிர்த்துநிற்க முடியாமல், அவர்கள் எதிரிகளுக்குப் புறமுதுகு காட்டி ஓடினார்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் அழிவுக்குத் தாங்களே இடங்கொடுத்திருக்கிறார்கள். உங்கள் மத்தியில் இருக்கும் அழிவுக்கு நியமிக்கப்பட்ட எல்லாவற்றையும் அழித்தாலொழிய நான் இனிமேல் உங்களோடு இருக்கமாட்டேன். “போ, எல்லா மக்களையும் பரிசுத்தப்படுத்தி. நீ அவர்களிடம், ‘நாளைய தினத்திற்கு உங்களை ஆயத்தப்படுத்துவதற்காக உங்களைப் பரிசுத்தப்படுத்துங்கள். ஏனெனில், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வதாவது: இஸ்ரயேலின் யெகோவாவுக்கென்று ஒதுக்கப்பட்டவை இன்னும் உங்கள் மத்தியில் இருக்கின்றன. அதை நீங்கள் அகற்றும்வரை உங்கள் பகைவரை எதிர்த்துநிற்க உங்களால் முடியாது. “ ‘நாளைக்கு காலையில், நீங்கள் ஒவ்வொருவரும் கோத்திரம் கோத்திரமாக யெகோவாவுக்கு முன்பாக வாருங்கள். அப்பொழுது யெகோவா குறிப்பிடும் கோத்திரத்தார் வம்சம் வம்சமாக முன்னே வரட்டும். அதில் யெகோவா குறிப்பிடும் வம்சம் குடும்பம் குடும்பமாக முன்னே வரவேண்டும். பின்னர் யெகோவா குறிப்பிடும் குடும்பத்திலிருந்து ஒவ்வொரு மனிதனும் தனித்தனியாக அவர் முன்னே வரவேண்டும். அவர்களில் யெகோவாவுக்கு ஒதுக்கப்பட்ட பொருட்களுடன் பிடிக்கப்படுபவன் அவனுக்குரிய எல்லாவற்றுடனும் நெருப்பினால் எரிக்கப்படுவான். ஏனெனில் அவன் யெகோவாவின் உடன்படிக்கையை மீறி, இஸ்ரயேலில் மிக அவமானத்திற்குரிய செயலைச் செய்துள்ளான்’ என்று சொல்” என்றார். அவ்வாறே அதிகாலையில் யோசுவா இஸ்ரயேல் மக்களைக் கோத்திரம் கோத்திரமாக யெகோவா முன்பாக வரச்செய்தான். அப்பொழுது யூதாவின் கோத்திரம் குறிக்கப்பட்டது. பின் யூதாவின் கோத்திரம் வம்சம் வம்சமாக முன்னே வந்தபோது, யெகோவா சேராகியரின் வம்சத்தைத் தெரிந்தெடுத்தார். யோசுவா சேராகியரின் வம்சத்தைக் குடும்பமாக முன்னே வரச்செய்தபோது, சிம்ரியின் குடும்பம் குறிக்கப்பட்டது. யோசுவா சிம்ரியின் குடும்பத்தில் ஒவ்வொரு மனிதனையும் தனித்தனியே முன் வரச்செய்தபோது, கர்மீயின் மகன் ஆகான் குறிக்கப்பட்டான். கர்மீ சிம்ரியின் மகன். சிம்ரி யூதா கோத்திரத்தைச் சேர்ந்த சேராகின் மகன். அப்பொழுது யோசுவா ஆகானிடம், “என் மகனே, இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு மகிமைசெலுத்தி அவரைத் துதி, நீ செய்த காரியத்தை ஒளிக்காமல் எனக்கு சொல்” என்றான். ஆகான் யோசுவாவிற்கு மறுமொழியாக, “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு விரோதமாக நான் பாவம் செய்தது உண்மையே. நான் செய்தது இதுவே: கொள்ளையிடப்பட்ட பொருட்களில் ஒரு அழகான பாபிலோனிய அங்கியையும், இருநூறு சேக்கல் வெள்ளியையும், ஐம்பது சேக்கல் நிறையுள்ள ஒரு தங்கப்பாளத்தையும் கண்டேன். அவற்றின்மேல் நான் பேராசைகொண்டு அவற்றை எடுத்துக்கொண்டேன். அவை என்னுடைய கூடார நிலத்திற்குள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றன. வெள்ளி அடியில் இருக்கிறது” என்றான். யோசுவா ஏவலாளர்களை அங்கு அனுப்பினான். அவர்கள் கூடாரத்துக்கு ஓடி அங்கு பார்த்தபோது, அவை அங்கே கூடாரத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. வெள்ளி அடியில் இருந்தது. அவர்கள் கூடாரத்திற்குள் இருந்து அந்த பொருட்களை எடுத்து யோசுவாவிடத்திலும், எல்லா இஸ்ரயேலர்களிடத்திலும் கொண்டுவந்து, அவைகளை யெகோவாவின் முன்பாகப் பரப்பிவைத்தார்கள். அப்பொழுது யோசுவாவும், இஸ்ரயேல் மக்கள் அனைவரும் சேராகின் மகனாகிய ஆகானை ஆகோர் பள்ளத்தாக்குக்குக் கொண்டுபோனார்கள். அவன் எடுத்திருந்த வெள்ளியும், மேலங்கியும், தங்கப்பாளமும் அவனுடன் எடுத்துச்செல்லப்பட்டன. அவனுடைய மகன்களையும், மகள்களையும், ஆடுமாடுகளையும், கழுதைகளையும், செம்மறியாடுகளையும், அவன் கூடாரத்தையும், அவனுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் கொண்டுபோனார்கள். யோசுவா ஆகானிடம், “நீ எங்கள்மேல் ஏன் இத்தகைய துன்பத்தைக் கொண்டுவந்தாய்? யெகோவா இன்று உன்மேல் துன்பத்தைக் கொண்டுவருவார்” என்றான். இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் ஆகானையும் அவன் குடும்பத்தாரையும் கல்லால் எறிந்து கொன்றார்கள். அதன்பின் அவர்களை உடமைகள் எல்லாவற்றுடனும் சேர்த்து எரித்தார்கள். அவர்கள் ஆகான்மேல் ஒரு கற்குவியலை எழுப்பினார்கள். அது இன்றும் அங்கு இருக்கின்றது. அதன்பின் யெகோவா தன் கோபத்தை தணித்துக்கொண்டார். அன்றிலிருந்து இன்றுவரை அது ஆகோர் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.

யோசுவா 7:11-26 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இஸ்ரவேலர்கள் பாவம் செய்தார்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையை மீறினார்கள்; சபிக்கப்பட்டவைகளில் சிலவற்றை எடுத்துக்கொண்டதும், திருடியதும், ஏமாற்றியதும், தங்களுடைய பொருட்களுக்குள்ளே வைத்ததும் உண்டே. ஆகவே, இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய எதிரிகளுக்கு முன்பாக நிற்க முடியாமல், தங்களுடைய எதிரிகளுக்கு முதுகைக் காட்டினார்கள்; அவர்கள் சபிக்கப்பட்டவர்களானார்கள்; நீங்கள் சபிக்கப்பட்டவைகளை உங்கள் நடுவிலிருந்து அழிக்காவிட்டால், இனி உங்களோடு இருக்கமாட்டேன். எழுந்திரு, நீ மக்களைப் பரிசுத்தம்செய்யச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நாளையதினத்திற்கு உங்களைப் பரிசுத்தம் செய்துகொள்ளுங்கள்; இஸ்ரவேலர்களே, சபிக்கப்பட்டவைகள் உங்கள் நடுவே இருக்கிறது; நீங்கள் சபிக்கப்பட்டவைகளை உங்கள் நடுவிலிருந்து அகற்றாமலிருக்கும்வரை, நீங்கள் உங்களுடைய எதிரிகளுக்கு முன்பாக நிற்கமுடியாது என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார். காலையிலே நீங்கள் கோத்திரம் கோத்திரமாக வரவேண்டும்; அப்பொழுது யெகோவா குறிக்கிற கோத்திரம் வம்சம் வம்சமாக வரவேண்டும்; யெகோவா குறிக்கிற வம்சம் குடும்பம் குடும்பமாக வரவேண்டும்; யெகோவா குறிக்கிற குடும்பம் பேர்பேராக வரவேண்டும் என்று சொல். அப்பொழுது சபிக்கப்பட்டவைகளை எடுத்தவனாகக் கண்டுபிடிக்கப்படுகிறவன், யெகோவாவின் உடன்படிக்கையை மீறி, இஸ்ரவேலிலே மதிகேடான காரியத்தைச் செய்தபடியினால், அவனும் அவனுக்குண்டான அனைத்தும் அக்கினியில் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றார். யோசுவா அதிகாலையில் எழுந்திருந்து, இஸ்ரவேலர்களைக் கோத்திரம் கோத்திரமாக வரச்செய்தான்; அப்பொழுது, யூதாவின் கோத்திரம் குறிக்கப்பட்டது. அவன் யூதாவின் வம்சங்களை வரச்செய்தபோது, சேராகியர்களின் வம்சம் குறிக்கப்பட்டது; அவன் சேராகியர்களின் வம்சத்தைப் பேர்பேராக வரச்செய்தபோது, சப்தி குறிக்கப்பட்டான். அவனுடைய வீட்டாரை அவன் பேர்பேராக வரச்செய்தபோது, யூதா கோத்திரத்தின் சேராகின் மகனாகிய சப்திக்குப் பிறந்த கர்மீயின் மகன் ஆகான் குறிக்கப்பட்டான். அப்பொழுது யோசுவா ஆகானை நோக்கி: மகனே, நீ இப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை மகிமைப்படுத்து, அவருக்கு முன்பாக அறிக்கைசெய்து, நீ செய்ததை எனக்குச் சொல்லு; அதை எனக்கு மறைக்காதே என்றான். அப்பொழுது ஆகான் யோசுவாவுக்கு மறுமொழியாக: உண்மையாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்தேன்; இன்னின்ன விதமாகச் செய்தேன். கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், 200 வெள்ளிச் சேக்கலையும், 550 கிராம் நிறையுள்ள ஒரு தங்கக் கட்டியையும் நான் கண்டு, அவைகளை ஆசைப்பட்டு எடுத்துக்கொண்டேன்; இதோ, அவைகள் என் கூடாரத்தின் நடுவில் நிலத்திற்குள் புதைக்கப்பட்டிருக்கிறது, வெள்ளி அதற்கு அடியில் இருக்கிறது என்றான். உடனே யோசுவா ஆட்களை அனுப்பினான்; அவர்கள் கூடாரத்திற்கு ஓடினார்கள்; அவனுடைய கூடாரத்தில் அது புதைக்கப்பட்டிருந்தது, வெள்ளியும் அதின் கீழ் இருந்தது. அவைகளைக் கூடாரத்தின் நடுவிலிருந்து எடுத்து, யோசுவாவிடமும் இஸ்ரவேல் மக்கள் எல்லோரிடமும் கொண்டுவந்து, யெகோவாவுடைய சமூகத்தில் வைத்தார்கள். அப்பொழுது யோசுவாவும் இஸ்ரவேலர்கள் எல்லோரும் சேராகின் மகனாகிய ஆகானையும், அந்த வெள்ளியையும், சால்வையையும், பொன் கட்டியையும், அவனுடைய மகன்களையும், மகள்களையும், அவனுடைய மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும், அவனுடைய கூடாரத்தையும், அவனுக்குண்டான அனைத்தையும் எடுத்து, ஆகோர் பள்ளத்தாக்கிற்குக் கொண்டுபோனார்கள். அங்கே யோசுவா: நீ எங்களைக் கலங்கச்செய்தது என்ன? இன்று யெகோவா உன்னைக் கலங்கச்செய்வார் என்றான்; அப்பொழுது இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவன்மேல் கல்லெறிந்து, அவைகளை அக்கினியில் சுட்டெரித்து, கற்களினால் மூடி; அவன்மேல் இந்தநாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே யெகோவா தமது கடுங்கோபத்தைவிட்டு மாறினார்; ஆகவே அந்த இடம் இந்தநாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும்.

யோசுவா 7:11-26 பரிசுத்த பைபிள் (TAERV)

இஸ்ரவேல் ஜனங்கள் எனக்கு எதிராகப் பாவம் செய்தார்கள். அவர்கள் கீழ்ப்படியுமாறு கட்டளையிட்ட உடன்படிக்கையை மீறினார்கள். அழித்துவிடும்படி நான் கட்டளையிட்ட பொருட்களை எடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் அதை திருடிவிட்டனர். அவர்கள் பொய் கூறிவிட்டனர். அப்பொருட்களை அவர்களுக்காக எடுத்துள்ளனர். அதனால்தான் இஸ்ரவேல் படை போரிலிருந்து புறமுதுகு காட்டித் திரும்பிவிட்டது. அவர்கள் தவறு செய்ததாலேயே அவ்விதம் நடந்தது. நான் உங்களுக்கு உதவமாட்டேன். நீங்கள் அழிக்கவேண்டுமென நான் கட்டளையிட்டவற்றை அழிக்காவிட்டால் நான் உங்களோடு இருக்கமாட்டேன். “இப்போதும் போய், ஜனங்களை பரிசுத்தப்படுத்து. ஜனங்களிடம், ‘உங்களை பரிசுத்தப்படுத்திக்கொள்ளுங்கள், நாளைக்குத் தயாராகுங்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இங்கு சிலர், கர்த்தர் அழிக்குமாறு கட்டளையிட்ட பொருட்களை வைத்துக்கொண்டிருப்பதாகக் கூறுகிறார். நீங்கள் அவற்றை அப்புறப்படுத்தாவிட்டால் உங்கள் பகைவர்களை ஒருபோதும் வெல்ல முடியாமல் போகலாம். “‘நானை காலையில் கர்த்தரின் முன்பாக எல்லோரும் வரவேண்டும். எல்லாக் கோத்திரத்தினரும் கர்த்தருக்கு முன்பு நிற்கும்போது, கர்த்தர் ஒரு கோத்திரத்தாரைத் தேர்ந்தெடுப்பார். அப்போது அந்தக் கோத்திரத்தினர் கர்த்தரின் முன் நிற்கவேண்டும். கர்த்தர் அந்தக் கோத்திரத்திலிருந்து ஒரு வம்சத்தை தேர்ந்தெடுப்பார். பின் அவ்வம்சத்திலிருந்து கர்த்தர் ஒரு குடும்பத்தைத் தேர்ந்தெடுப்பார். பின் கர்த்தர் அக்குடும்பத்தின் அங்கத்தினர்கள் ஒவ்வொருவரையும் பார்ப்பார். அழிக்க வேண்டிய பொருளை வைத்திருக்கிறவன் அப்போது அகப்படுவான். அம்மனிதனும், அவனுக்குச் சொந்தமானவையெல்லாம் அவனோடு நெருப்பினால் அழிக்கப்படவேண்டும். அம்மனிதன் கர்த்தரோடு செய்த உடன்படிக்கையை மீறினான். அவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு மிகுந்த தீமையான காரியத்தைச் செய்தான்!’ என்று சொல்” என்றார். மறுநாள் அதிகாலையில், யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தரின் முன்னால் நிற்கும்படி செய்தான். எல்லாக் கோத்திரத்தினரும் கர்த்தருக்கு முன் நின்றனர். கர்த்தர் யூதா கோத்திரத்தைத் தேர்ந்தெடுத்தார் எனவே அந்தக் கோத்திரத்தைச் சேர்ந்த எல்லாக் குழுக்களும் கர்த்தருக்கு முன்னே நின்றனர். கர்த்தர் சேரா குழுவினரைத் தேர்ந்தெடுத்தார். பின் சேரா குழுவினரின் எல்லாக் குடும்பத்தாரும் கர்த்தருக்கு முன்னே நின்றார்கள். சிம்ரியின் குடும்பம் தேர்ந்தெடுக்கப்பட்டது. யோசுவா அக்குடும்பத்தின் ஆண்களையெல்லாம் கர்த்தருக்கு முன் வருமாறு கூறினான். கர்த்தர் கர்மீயின் குமாரன் ஆகானைத் தேர்ந்தெடுத்தார். (கர்மீ சிம்ரியின் குமாரன், சிம்ரி சேராவின் குமாரன்.) யோசுவா ஆகானை நோக்கி, “மகனே, உனது விண்ணப்பங்களைச் சொல். நீ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்தி, உனது பாவங்களை அவரிடம் கூறு. நீ செய்ததை எனக்குக் கூறு. என்னிடமிருந்து எதையும் மறைக்காதே!” என்றான். ஆகான், “நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தது உண்மை. நான் செய்தது இதுவே: நாம் எரிகோவையும் அந்நகரத்தின் பொருட்களையும் கைப்பற்றிக்கொண்டபோது பாபிலோனிலிருந்து கொண்டுவந்த அழகிய மேலாடையையும், சுமார் ஐந்து பவுண்டு வெள்ளியையும், ஒரு பவுண்டு பொன்னையும் கண்டேன். அவற்றை எடுத்துக் கொண்டேன். அப்பொருள்கள் எனது கூடாரத்திற்கடியிலுள்ள நிலத்தில் புதைக்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். மேலாடையின் கீழே வெள்ளி இருக்கிறது” என்றான். எனவே யோசுவா சிலரைக் கூடாரத்திற்கு அனுப்பினான். அவர்கள் கூடாரத்திற்கு ஓடிச் சென்று, அப்பொருட்கள் கூடாரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். மேலாடையின் கீழே வெள்ளி இருந்தது. அவர்கள் அப்பொருட்களைக் கூடாரத்திற்கு வெளியே எடுத்து வந்து, அவற்றை யோசுவாவிடமும் இஸ்ரவேல் ஜனங்களிடமும் கொண்டு சென்று, கர்த்தருக்கு முன் அவற்றைத் தரையில் போட்டனர். சேராவின் குமாரனாகிய ஆகானை யோசுவாவும், ஜனங்களும் ஆகோர் பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் சென்றனர். அந்த வெள்ளி, மேலாடை, பொன், ஆகானின் குமாரர்கள், குமாரத்திகள், அவனது ஆடு மாடுகள், கழுதைகள் கூடாரம், பிற பொருட்களையும் ஆகோர் பள்ளத்தாக்கில் சேர்ப்பித்தனர். அப்போது யோசுவா, “எங்களுக்கு நேர்ந்த தொந்தரவுகளுக்கு நீ காரணமாக இருந்தாய்! இப்போது கர்த்தர் உனக்குத் தொல்லையளிப்பார்!” என்றான். அப்போது ஜனங்கள் ஆகானின் மீதும் அவன் குடும்பத்தினர் மீதும் அவர்கள் மரிக்கும்படி கற்களை வீசினார்கள். பிறகு ஜனங்கள் அவர்களின் உடல்களையும் அவர்களின் பொருட்களையும் எரித்தனர். ஆகானை எரித்த பின், அவன் உடம்பின் மீது கற்களைக் குவித்தனர். அவை இன்னும் அங்கு உள்ளன. தேவன் ஆகானின் குடும்பத்திற்குத் தொல்லை கொடுத்தார். அதனால் அவ்விடம் ஆகோர் (தொல்லை) பள்ளத்தாக்கு எனப்படுகிறது. அதன் பின் கர்த்தர் ஜனங்களிடம் கோபமாயிருக்கவில்லை.

யோசுவா 7:11-26 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இஸ்ரவேலர் பாவஞ்செய்தார்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையை மீறினார்கள்; சாபத்தீடானதில் எடுத்துக்கொண்டதும், களவுசெய்ததும், வஞ்சித்ததும், தங்கள் பண்டம்பாடிகளுக்குள்ளே வைத்ததும் உண்டே. ஆதலால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாமல், தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள்; அவர்கள் சாபத்தீடானார்கள்; நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து நிக்கிரகம்பண்ணாவிட்டால், இனி உங்களோடு இரேன். எழுந்திரு, நீ ஜனங்களைப் பரிசுத்தம்பண்ணிச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நாளையதினத்துக்கு உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேலரே, சாபத்தீடானது உங்கள் நடுவே இருக்கிறது; நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து விலக்காதிருக்குமட்டும், நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக்கூடாது என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். காலையிலே நீங்கள் கோத்திரம் கோத்திரமாக வரவேண்டும்; அப்பொழுது கர்த்தர் குறிக்கிற கோத்திரம் வம்சம் வம்சமாக வரவேண்டும்; கர்த்தர் குறிக்கிற வம்சம் குடும்பம் குடும்பமாக வரவேண்டும்; கர்த்தர் குறிக்கிற குடும்பம் பேர்பேராக வரவேண்டும் என்று சொல். அப்பொழுது சாபத்தீடானதை எடுத்தவனாய்க் கண்டுபிடிக்கப்படுகிறவன், கர்த்தரின் உடன்படிக்கையை மீறி, இஸ்ரவேலிலே மதிகேடான காரியத்தைச் செய்தபடியினால், அவனும் அவனுக்குள்ள யாவும் அக்கினியில் சுட்டெரிக்கப்படக்கடவது என்றார். யோசுவா அதிகாலமே எழுந்திருந்து, இஸ்ரவேலரைக் கோத்திரம் கோத்திரமாக வரப்பண்ணினான்; அப்பொழுது, யூதாவின் கோத்திரம் குறிக்கப்பட்டது. அவன் யூதாவின் வம்சங்களை வரப்பண்ணினபோது, சேராகியரின் வம்சம் குறிக்கப்பட்டது; அவன் சேராகியரின் வம்சத்தைப் பேர்பேராக வரப்பண்ணினபோது, சப்தி குறிக்கப்பட்டான். அவன் வீட்டாரை அவன் பேர்பேராக வரப்பண்ணினபோது, யூதா கோத்திரத்துச் சேராகின் குமாரனாகிய சப்திக்குப் பிறந்த கர்மீயின் மகன் ஆகான் குறிக்கப்பட்டான். அப்பொழுது யோசுவா ஆகானை நோக்கி: மகனே, நீ இப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்து, அவருக்கு முன்பாக அறிக்கைபண்ணி, நீ செய்ததை எனக்குச் சொல்லு; அதை எனக்கு ஒளிக்காதே என்றான். அப்பொழுது ஆகான் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; இன்னின்ன பிரகாரமாகச் செய்தேன். கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் நான் கண்டு, அவைகளை இச்சித்து எடுத்துக்கொண்டேன்; இதோ, அவைகள் என்கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைத்திருக்கிறது, வெள்ளி அதின் அடியிலிருக்கிறது என்றான். உடனே யோசுவா ஆட்களை அனுப்பினான்; அவர்கள் கூடாரத்துக்கு ஓடினார்கள்; அவனுடைய கூடாரத்தில் அது புதைத்திருந்தது, வெள்ளியும் அதின்கீழ் இருந்தது. அவைகளைக் கூடாரத்தின் மத்தியிலிருந்து எடுத்து, யோசுவாவினிடத்திலும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிடத்திலும் கொண்டுவந்து, கர்த்தருடைய சமுகத்தில் வைத்தார்கள். அப்பொழுது யோசுவாவும் இஸ்ரவேலரெல்லாருங்கூட சேராகின் புத்திரனாகிய ஆகானையும், அந்த வெள்ளியையும், சால்வையையும், பொன்பாளத்தையும், அவன் குமாரரையும், குமாரத்திகளையும், அவன் மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும், அவன் கூடாரத்தையும், அவனுக்குள்ள யாவையும் எடுத்து, ஆகோர் பள்ளத்தாக்குக்குக் கொண்டுபோனார்கள். அங்கே யோசுவா: நீ எங்களைக் கலங்கப்பண்ணினதென்ன? இன்று கர்த்தர் உன்னைக் கலங்கப்பண்ணுவார் என்றான்; அப்பொழுது இஸ்ரவேலரெல்லாரும் அவன்மேல் கல்லெறிந்து, அவைகளை அக்கினியில் சுட்டெரித்து, கற்களினால் மூடி; அவன்மேல் இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தை விட்டு மாறினார்; ஆகையால் அவ்விடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும்.