யோபு 23:8-12

யோபு 23:8-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“ஆனால் நான் கிழக்கேபோனால் அங்கே அவர் இல்லை; மேற்கே போனாலும் நான் அவரைக் காணவில்லை. அவர் வடக்கிலே வேலையாயிருக்கும்போதும் நான் அவரைக் காணவில்லை; அவர் தெற்கே திரும்பும்போதும் ஒரு நொடிப்பொழுதுகூட நான் அவரைக் காணவில்லை. ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின், நான் தங்கமாய் விளங்குவேன். என் பாதங்கள் அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றின; நான் விலகாமல் அவருடைய வழியையே கடைப்பிடித்திருக்கிறேன். அவருடைய உதடுகளின் கட்டளைகளிலிருந்து நான் விலகவில்லை; என் அன்றாட உணவைவிட, அவருடைய வாயின் வார்த்தைகளை ஒரு பொக்கிஷமாக நான் நினைத்தேன்.

யோபு 23:8-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இதோ, நான் முன்னேபோனாலும் அவர் இல்லை; பின்னேபோனாலும் அவரைக் காணவில்லை. இடதுபுறத்தில் அவர் செயல்பட்டும் அவரைப் பார்க்கவில்லை; வலது புறத்திலும் நான் அவரைக் பார்க்காமலிருக்க மறைந்திருக்கிறார். ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன். என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது; அவருடைய கட்டளையை விட்டு நான் விலகாமல் அதைக் கைக்கொண்டேன். அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாகக் காத்துக்கொண்டேன்.

யோபு 23:8-12 பரிசுத்த பைபிள் (TAERV)

“ஆனால் நான் கிழக்கே போனால், அங்கே தேவன் இல்லை. நான் மேற்கே போனால், அங்கும் நான் தேவனைக் காணேன். தேவன் வடக்கே பணி செய்யும்போது, நான் அவரைப் பார்க்க முடியவில்லை. தேவன் தெற்கே திரும்பும்போதும், நான் அவரைக் காணவில்லை. ஆனால் தேவன் என்னை அறிவார். அவர் என்னைப் பரிசோதித்துக்கொண்டிருக்கிறார், நான் பொன்னைப்போன்று தூயவனெனக் காண்பார். தேவன் விரும்புகிறபடியே நான் எப்போதும் வாழ்ந்திருக்கிறேன். நான் தேவனைப் பின்பற்றுவதை நிறுத்தியதேயில்லை. நான் தேவனுடைய கட்டளைகளுக்கு எப்போதும் கீழ்ப்படிகிறேன். என் உணவைக் காட்டிலும் அதிகமாக தேவனுடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகளை நான் நேசிக்கிறேன்.

யோபு 23:8-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இதோ, நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை; பின்னாகப்போனாலும் அவரைக் காணேன். இடதுபுறத்தில் அவர் கிரியை செய்தும் அவரைக் காணேன்; வலது புறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார். ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன். என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது; அவருடைய நெறியைவிட்டு நான் சாயாமல் அதைக் கைக்கொண்டேன். அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்.