ஏசாயா 53:1-12

ஏசாயா 53:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எங்களுடைய செய்தியை விசுவாசித்தவன் யார்? யெகோவாவின் கரம் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது? யெகோவாவுக்கு முன்பாக அவர் ஒரு இளந்தளிரைப் போலவும், வறண்ட நிலத்தில் வளரும் வேரைப் போலவும் வளர்ந்தார். நம்மைக் கவரக்கூடிய அழகோ, மாட்சிமையோ அவரிடம் இருக்கவில்லை; அவருடைய தோற்றத்தில் நாம் விரும்பத்தக்க எதுவும் அவரில் காணப்படவில்லை. அவர் மனிதரால் இகழப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் இருந்தார்; அவர் துன்பத்தின் மனிதனாய் வேதனையில் பங்குகொண்டவராய் இருந்தார். அருவருப்புள்ள ஒருவனைக் கண்டு மனிதர் தம் முகத்தை மறைத்துக்கொள்வதுபோல், அவர் இகழப்பட்டார், நாமும் அவரை மதிக்கவில்லை. உண்மையாகவே அவர் நமது வேதனைகளை ஏற்றுக்கொண்டு, நமது நோய்களையும் குறைகளையும் சுமந்தார். அப்படியிருக்க, நாமோ அவர் தமக்காகவே இறைவனால் அடிக்கப்பட்டு, அவரால் தாக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டார் என எண்ணினோம். ஆனால், அவரோ எங்கள் மீறுதல்களினிமித்தம் ஊடுருவக் குத்தப்பட்டார், எங்கள் அக்கிரமங்களுக்காகவே அவர் நொறுக்கப்பட்டார்; நமக்கு சமாதானத்தைக் கொண்டுவந்த தண்டனை அவர்மேல் வந்தது, அவருடைய காயங்களினால் நாம் குணமாகிறோம். நாமெல்லோரும் ஆடுகளைப்போல, வழிதவறி அலைந்தோம்; நம்முடைய சொந்த வழிக்கே திரும்பினோம். யெகோவாவோ நம் எல்லோருடைய அநியாயத்தையும் அவர்மேல் சுமத்தினார். அவர் ஒடுக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டார், அப்படியிருந்தும் அவர் தனது வாயைத் திறக்கவில்லை; அவர் கொல்லப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் ஆட்டுக்குட்டியைப் போலவும், மயிர்க்கத்தரிப்பவனுக்கு முன்பாக மவுனமாயிருக்கும் ஆட்டைப்போலவும் அவர் தமது வாயைத் திறவாதிருந்தார். ஒடுக்கப்பட்டு நியாயமான தீர்ப்பின்றி அவர் கொண்டுசெல்லப்பட்டார். அவரது தலைமுறையினரைக் குறித்து யாரால் என்ன சொல்லமுடியும்? ஏனெனில் ஜீவனுள்ளோரின் நாட்டிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்; எனது மக்களின் மீறுதல்களுக்காக அவர் வாதிக்கப்பட்டார். அவரிடம் வன்முறை எதுவும் இருந்ததில்லை, அவருடைய வாயில் வஞ்சனை எதுவும் காணப்பட்டதுமில்லை. ஆனாலும் கொடியவர்களோடு அவருக்கு ஒரு கல்லறை நியமிக்கப்பட்டது; தம் மரணத்தில் செல்வந்தரோடு அவர் இருந்தார். ஆயினும் அவரை நொறுக்கி, வேதனைக்கு உள்ளாக்குவதே யெகோவாவின் திட்டமாய் இருந்தது, அவர் தமது உயிரைக் குற்றநிவாரண பலியாக ஆக்கியிருக்கிற போதிலும், அவர் நீடித்த நாட்களாய் இருந்து, தம் சந்ததியைக் காண்பார். யெகோவாவினுடைய திட்டம் அவரது கரத்தால் நிறைவேறும். அவரின் ஆத்துமா வேதனையடைந்தபின் அவர் வாழ்வின் ஒளியைக் கண்டு திருப்தியடைவார்; நீதியுள்ள எனது ஊழியன் தமது அறிவினால் அநேகரை நீதியானவர்களாக்குவார், அவர்களுடைய அநியாயச் செயல்களை அவரே சுமப்பார். ஆகையால், நான் உயர்ந்தோர் மத்தியில் அவருக்கு ஒரு பங்கைக் கொடுப்பேன்; அவர் பலவான்களுடன் கொள்ளைப்பொருளைப் பங்கிடுவார். ஏனெனில், அவர் தம் வாழ்வை மரணம்வரை ஊற்றி, குற்றவாளிகளில் ஒருவராக எண்ணப்பட்டார். ஏனெனில் அவர் அநேகருடைய பாவங்களைச் சுமந்து, மீறுதல் உள்ளோருக்காக பரிந்துவேண்டுதல் செய்தார்.

ஏசாயா 53:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? யெகோவாவுடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது? இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. அவர் அசட்டைசெய்யப்பட்டவரும், மனிதரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைசெய்யப்பட்டிருந்தார்; அவரை ஒருபொருட்டாக எண்ணாமற்போனோம். உண்மையாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று கருதினோம். நம்முடைய மீறுதல்களின்காரணமாக அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களின்காரணமாக அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாம் எல்லோரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; யெகோவாவோ நம் அனைவருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழச்செய்தார். அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறக்காமல் இருந்தார். துன்பத்திலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லிமுடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து பிரிக்கப்பட்டார்; என் மக்களின் மீறுதலின்காரணமாக அவர் வாதிக்கப்பட்டார். துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் இறந்தபோது ஐசுவரியவானுடன் இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை. யெகோவாவோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்கு உட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், யெகோவாவுக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும். அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார். அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக கருதப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதின்காரணமாக அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.

ஏசாயா 53:1-12 பரிசுத்த பைபிள் (TAERV)

நாங்கள் சொல்வதை யார் உண்மையில் நம்பினார்கள்? கர்த்தருடைய தண்டனையை உண்மையில் யார் ஏற்றுக்கொண்டார்கள்? கர்த்தருக்கு முன்னால் அவர் சிறு செடியைப்போன்று வளர்ந்தார். வறண்ட பூமியில் அவர் வேர் விட்டு வளருவது போன்றிருந்தார். அவர் சிறப்பாகக் காணப்படவில்லை. அவருக்குத் தனியான விசேஷ மகிமை காணப்படவில்லை. அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க சிறப்பான உருவம் அவருக்கு இல்லை. ஜனங்கள் அவரைக் கேலி செய்தனர். அவரது நண்பர்கள் விலகினார்கள். அவர் மிகுதியான வலிகொண்ட மனிதராக இருந்தார். அவர் நோயை நன்றாக அறிந்திருந்தார். ஜனங்கள் அவரைப் பார்க்காமல் அசட்டை செய்தனர். நாம் அவரைக் கவனிக்கவில்லை. ஆனால், அவர் நமது நோய்களை எடுத்து தனதாக்கிக்கொண்டார். அவர் நமது வலியை எடுத்துக்கொண்டார். தேவன் அவரைக் தண்டித்துவிட்டார் என்று நாம் நினைத்தோம். அவர் செய்தவற்றுக்காக தேவன் அவரை அடித்தார் என்று நாம் நினைத்தோம். ஆனால், நாம் செய்த தவறுகளுக்குத் துன்பப்படவே அவர் வேதனையைப் பெற்றார். நமது குற்றங்களுக்காக அவர் நசுக்கப்பட்டார். நாம் கொண்ட கடனுக்காக நமது தண்டனை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவரது காயங்களால் நாம் சுகமடைந்திருக்கிறோம். (மன்னிக்கப்பட்டோம்). ஆனால், இதனைச் செய்தபிறகு நாம் ஆடுகளைப்போல அலைந்துகொண்டிருந்தோம். நம்மில் ஒவ்வொருவரும் நமது சொந்த வழியில் சென்றோம். கர்த்தர் நம் குற்றத்திலிருந்து நம்மை விடுதலை செய்து நமது குற்றங்களை அவர்மீது போட்ட பிறகும் நாம் இதனைச் செய்தோம். அவர் பாதிக்கப்பட்டார், தண்டிக்கப்பட்டார். ஆனால் அவர் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கொல்லப்படுவதற்காக கொண்டுப்போகப்படும் ஆட்டுக்குட்டியைப்போன்று, அவர் எதுவும் சொல்லவில்லை! தனது மயிரைக் கத்தரிக்கும்போது சத்தமிடாமல் இருக்கும் ஆட்டைப்போல் அவர் அமைதியாக இருந்தார்! அவர் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காகத் தன் வாயைத் திறக்கவில்லை. மனிதர்கள் அவரைப் பலவந்தமாகப் பிடித்தனர், அவரை அவர்கள் நேர்மையாக நியாயந்தீர்க்கவில்லை. எவரும் அவரது எதிர்காலக் குடும்பத்தைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. ஏனென்றால், அவர் உயிரோடு வாழ்கிறவர்களின் நாட்டிலிருந்து பிரிக்கப்பட்டார். எனது ஜனங்களின் பாவங்களுக்காக அவர் தண்டிக்கப்பட்டார். அவர் மரித்தார், செல்வந்தர்களோடு புதைக்கப்பட்டார். அவர் தீயவர்களோடு புதைக்கப்பட்டார். அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர் எப்பொழுதும் பொய் சொன்னதில்லை, இருந்தாலும் இவை அவருக்கு ஏற்பட்டன. அவரை நசுக்கிவிட கர்த்தர் முடிவுசெய்தார். அவர் துன்பப்படவேண்டும் என்று கர்த்தர் முடிவு செய்தார். எனவே அந்தத் தாசன் தன்னைத்தானே மரிக்க அனுமதித்தார். ஆனால், மிக நீண்ட காலத்திற்குப் புதிய வாழ்க்கை வாழ்வார். அவரது ஜனங்களை அவர் பார்ப்பார். அவர் என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தர் விரும்பினாரோ அதனை அவர் முழுமையாகச் செய்துமுடிப்பார். அவர் தனது ஆத்துமாவில் பல்வேறு வகையில் துன்புறுவார். ஆனால் அவர் நடக்கும் நல்லவற்றைப் பார்ப்பார். அவர் தான் கற்றுக்கொண்டவற்றின் மூலம் திருப்தி அடைவார். எனவே, “எனது நல்ல தாசன் பல ஜனங்களைக் குற்றத்திலிருந்து விடுவிப்பார். அவர்களது பாவங்களை அவர் எடுத்துக்கொள்வார். இந்தக் காரணத்திற்காக, என் ஜனங்களிடையே அவரை நான் பெரிய மனிதராக்குவேன். அவர் பலமுள்ள ஜனங்களோடு அனைத்து பொருள்களின் பங்கையும் பெறுவார். நான் இதனை அவருக்காகச் செய்வேன். ஏனென்றால், அவர் ஜனங்களுக்காக தன் உயிரைக் கொடுத்து மரித்தார். ஜனங்கள் அவரை ஒரு பயங்கரக் குற்றவாளி எனக் கூறினார்கள். ஆனால் உண்மையென்னவெனில் அவர் பல்வேறு ஜனங்களின் பாவங்களை தம்மேல் சுமந்துகொண்டார். இப்போது அவர் பாவம் செய்த ஜனங்களுக்காகப் பேசுகிறார்.”

ஏசாயா 53:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது? இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம். மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லிமுடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டுபோனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார். துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை. கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும். அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார். அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்