ஏசாயா 42:1-17

ஏசாயா 42:1-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார். அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார். அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார். அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும். வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற ஜனத்துக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்லுகிறதாவது: நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைச் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும், கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப்பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும் ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைக்கிறேன். நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன். பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன். சமுத்திரத்தில் யாத்திரைபண்ணுகிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே, அவைகளின் குடிகளே, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள். வனாந்தரமும், அதின் ஊர்களும், கேதாரியர் குடியிருக்கிற கிராமங்களும் உரத்த சத்தமிடக்கடவது; கன்மலைகளிலே குடியிருக்கிறவர்கள் கெம்பீரித்து, பர்வதங்களின் கொடுமுடியிலிருந்து ஆர்ப்பரிப்பார்களாக. கர்த்தருக்கு மகிமையைச் செலுத்தி, அவர் துதியைத் தீவுகளில் அறிவிப்பார்களாக. கர்த்தர் பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார். நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு, அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன். நான் மலைகளையும் குன்றுகளையும் பாழாக்கி, அவைகளிலுள்ள பூண்டுகளையெல்லாம் வாடப்பண்ணி, ஆறுகளைத் திட்டுகளாக்கி, ஏரிகளை வற்றிப்போகப்பண்ணுவேன். குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன். சித்திரவேலையான விக்கிரகங்களை நம்பி, வார்ப்பிக்கப்பட்ட சுரூபங்களை நோக்கி: நீங்கள் எங்கள் தேவர்கள் என்று சொல்லுகிறவர்கள் பின்னடைந்து மிகவும் வெட்கப்படுவார்கள்.

ஏசாயா 42:1-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“இதோ, நான் ஆதரிக்கிற என் ஊழியர், என்னால் தெரிந்துகொள்ளப்பட்ட இவரில் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன்; இவர்மேல் என் ஆவியானவரை அமரப்பண்ணுவேன், அவர் நாடுகளுக்கு நீதியை வழங்குவார். அவர் சத்தமிடவோ, சத்தமிட்டுக் கூப்பிடவோமாட்டார். அவர் வீதிகளில் உரத்த குரலில் பேசவுமாட்டார். அவர் நெரிந்த நாணலை முறிக்கமாட்டார், மங்கி எரிகின்ற திரியை அணைத்துவிடவுமாட்டார்; அவர் உண்மையில் நீதியை வெளிப்படுத்தி, அதை நிலைநாட்டுவார். பூமியிலே அவர் நீதியை நிலைநாட்டும்வரை தயங்கவுமாட்டார் தளரவுமாட்டார். தீவுகள் அவரது வேதத்தில் தங்கள் நம்பிக்கையை வைக்கும்.” யெகோவாவாகிய இறைவன் சொல்வதாவது: அவரே வானங்களைப் படைத்து அவைகளை விரித்து வைத்தார், அவரே பூமியையும், அதிலிருந்து வரும் அனைத்தையும் பரப்பினார். அவரே அதில் உள்ள மக்களுக்கு சுவாசத்தைக் கொடுத்தார். அதில் நடமாடுபவர்களுக்கு உயிரைக் கொடுத்தார். அவர் சொல்வது இதுவே: “யெகோவாவாகிய நான் நீதியிலேயே உன்னை அழைத்து, நான் உனது கையைப் பிடித்து, நான் உன்னைக் காத்து, நீர் மக்களுக்கு ஒரு உடன்படிக்கையாகவும், பிற நாட்டவர்களுக்கு ஒரு ஒளியாகவும் இருக்கும்படி உம்மை ஏற்படுத்துவேன். குருடரின் கண்களைத் திறக்கவும், சிறையிலுள்ளவர்களை விடுதலையாக்கவும், இருட்டறையிலிருந்து விடுவிக்கவுமே இவ்வாறு செய்வேன். “நான் யெகோவா; இதுவே எனது பெயர்! எனது மகிமையை வேறொருவருக்கும் கொடுக்கமாட்டேன்; எனக்குரிய துதியை விக்கிரகங்களுக்குக் கொடுக்கமாட்டேன். இதோ, முற்காலத்தில் சொல்லப்பட்டவை நடந்தேறிவிட்டன, இப்பொழுது நான் புதியவற்றை அறிவிக்கின்றேன். அவை தோன்றி உருவாகுமுன்பே அவைகளை நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.” கடலில் பயணம் செய்கிறவர்களே, கடலில் வாழ்பவைகளே, தீவுகளே, அங்கு வாழும் குடிகளே, யெகோவாவுக்கு புதுப்பாட்டைப் பாடுங்கள், பூமியின் கடைசிகளில் இருந்து அவருக்குத் துதி பாடுங்கள். பாலைவனமும் அதன் பட்டணங்களும் தங்கள் குரல்களை எழுப்பட்டும்; கேதாரியர் வாழும் குடியிருப்புகள் மகிழட்டும். சேலாவின் மக்கள் மகிழ்ந்து பாடட்டும்; அவர்கள் மலை உச்சிகளில் இருந்து ஆர்ப்பரிக்கட்டும். அவர்கள் யெகோவாவுக்கு மகிமையைக் கொடுக்கட்டும், அவரின் துதியைத் தீவுகளில் பிரசித்தப்படுத்தட்டும். யெகோவா வலிய மனிதனைப்போல் முன்சென்று, போர்வீரனைப்போல் தன் வைராக்கியங்கொண்டு எழும்புவார். அவர் உரத்த சத்தமாய் போர்க்குரல் எழுப்பி, பகைவரை வெற்றிகொள்வார். “நான் வெகுகாலம் மவுனமாய் இருந்தேன், நான் அமைதியாய் இருந்து என்னையே அடக்கிக்கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுது, பிரசவிக்கும் பெண்ணைப்போல் கதறி அழுது, மூச்சுத் திணறுகிறேன். நான் மலைகளையும், குன்றுகளையும் பாழாக்குவேன், அவைகளிலுள்ள தாவரங்களையும் வாடிப்போகப் பண்ணுவேன். ஆறுகளைத் தீவுகளாக மாற்றி, குளங்களையும் வற்றப்பண்ணுவேன். நான் குருடரை அவர்கள் அறிந்திராத வழிகளில் வழிநடத்தி, அவர்களுக்குப் பழக்கமில்லாத பாதைகளில் அழைத்துச்செல்வேன்; நான் இருளை அவர்களுக்கு முன்பாக வெளிச்சமாக்கி, கரடுமுரடான இடங்களைச் செப்பனிடுவேன். நான் செய்யப்போகும் காரியங்கள் இவையே; நான் அவர்களை நான் கைவிடமாட்டேன். ஆனால் விக்கிரகங்களில் நம்பிக்கை வைத்து, உருவச் சிலைகளைப் பார்த்து, ‘நீங்களே எங்கள் தெய்வங்கள்’ என்று சொல்பவர்கள் பின்னடைந்து முற்றுமாய் வெட்கப்படுவார்கள்.

ஏசாயா 42:1-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இதோ, நான் ஆதரிக்கிற என் ஊழியக்காரன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரச்செய்தேன்; அவர் அந்நியமக்களுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார். அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கச்செய்யவுமாட்டார். அவர் நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார். அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்தும்வரை தடுமாறுவதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்திற்குத் தீவுகள் காத்திருக்கும். வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற மக்களுக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்கிறதாவது: நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைச் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும், கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப் பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை மக்களுக்கு உடன்படிக்கையாகவும் தேசங்களுக்கு ஒளியாகவும் வைக்கிறேன். நான் யெகோவா, இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை சிலைகளுக்கும் கொடுக்கமாட்டேன். ஆரம்பகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்கிறேன். கடலில் பயணம்செய்கிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே, அவைகளின் குடிகளே, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள். வனாந்திரமும், அதின் ஊர்களும், கேதாரியர்கள் குடியிருக்கிற கிராமங்களும் உரத்த சத்தமிடுவதாக; கன்மலைகளிலே குடியிருக்கிறவர்கள் கெம்பீரித்து, மலைகளின் கொடுமுடியிலிருந்து ஆர்ப்பரிப்பார்களாக. யெகோவாவுக்கு மகிமையைச் செலுத்தி, அவர் துதியைத் தீவுகளில் அறிவிப்பார்களாக. யெகோவா பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, போர்வீரனைப்போல் வைராக்கியமடைந்து, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய எதிரிகளை மேற்கொள்ளுவார். நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு, அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன். நான் மலைகளையும் குன்றுகளையும் பாழாக்கி, அவைகளிலுள்ள தாவரங்களையெல்லாம் வாடச்செய்து, ஆறுகளைத் திட்டுகளாக்கி, ஏரிகளை வற்றிப்போகச்செய்வேன். குருடர்களை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச்செய்து, அவர்களைக் கைவிடாமலிருப்பேன். சித்திரவேலையான சிலைகளை நம்பி, வார்ப்பிக்கப்பட்ட உருவங்களை நோக்கி: நீங்கள் எங்கள் தெய்வங்கள் என்று சொல்கிறவர்கள் பின்னடைந்து மிகவும் வெட்கப்படுவார்கள்.

ஏசாயா 42:1-17 பரிசுத்த பைபிள் (TAERV)

“என் தாசனைப் பாருங்கள்! அவரை நான் ஆதரிக்கிறேன். நான் தேர்ந்தெடுத்த ஒருவர் அவரே. நான் அவரை மிகவும் விரும்புகிறேன். அவரில் எனது ஆவியை வைக்கிறேன். அவர் நாடுகளுக்கு நியாயமாக நீதி வழங்குவார். அவர் தெருக்களில் உரக்க பேசமாட்டார். அவர் கூக்குரலிடவும்மாட்டார். அவர் சாந்த குணமுள்ளவர். அவர் நெரிந்த நாணலைக்கூட முறிக்கமாட்டார். அவர் மங்கி எரிகிற திரியைக்கூட அணைக்கமாட்டார். அவர் நியாயத்தைத் தீர்த்து உண்மையைக் கண்டுகொள்வார். உலகத்தில் நியாயத்தைக் கொண்டுவரும்வரை அவர் பலவீனராகவோ அல்லது நொறுக்கப்படுபவராகவோ ஆவதில்லை. ஜனங்கள் தொலைதூர இடங்களிலிருந்து அவரது போதனைகளை நம்புவார்கள்.” உண்மையான தேவனாகிய கர்த்தர் இவற்றைச் சொன்னார். (கர்த்தர் வானங்களை உருவாக்கினார். கர்த்தர் பூமியின்மேல் வானத்தை விரித்தார். அவர் பூமியின்மேல் எல்லாவற்றையும் செய்தார். கர்த்தர் பூமியிலுள்ள அனைத்து ஜனங்களுக்கும் சுவாசத்தைக் கொடுக்கிறார். கர்த்தர் பூமியில் நடமாடுகிற ஒவ்வொரு மனிதருக்கும் ஆவியைக் கொடுக்கிறார்). “கர்த்தராகிய நான், சரியானதைச் செய்ய உன்னை அழைத்தேன். நான் உன் கையைப் பற்றிக்கொள்வேன். நான் உன்னைப் பாதுகாப்பேன். நான் ஜனங்களோடு ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையை பிறருக்குக் காட்டுவதற்கு வெளிப்புற அடையாளமாக நீ இருப்பாய். அனைத்து ஜனங்களுக்கும் ஒளி வீசும் விளக்காக நீ இருப்பாய். குருடர்களின் கண்களை நீ திறப்பாய், அவர்களால் பார்வையைப் பெறமுடியும். சிறையில் இருக்கிறவர்களை நீ விடுவிப்பாய். பலர் இருளில் இருக்கிறார்கள். அவர்களை அந்தச் சிறையில் இருந்து வெளியே அழைத்து வருவாய். “நானே கர்த்தர்! எனது நாமம் யேகோவா! நான் எனது மகிமையை வேறு ஒருவனுக்கும் கொடேன். நான் எனக்குரிய பாராட்டை சிலைகளுக்கு (பொய்த் தெய்வங்களுக்கு) கொடேன். தொடக்கத்தில் சில காரியம் நடைபெறும் என்று சொன்னேன். அவை நடந்தன. இப்போது, இது நடக்கும் முன்னால்! நான் சிலவற்றைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.” இவை எதிர்காலத்தில் நடைபெறும். ஒரு புதிய பாடலை கர்த்தருக்குப் பாடுங்கள். தொலைதூர நாடுகளில் உள்ள ஜனங்களே, கடலில் பயணம் செய்கிற ஜனங்களே, கடலில் உள்ள மிருகங்களே, தொலைதூர இடங்களில் உள்ள ஜனங்களே, கர்த்தரைத் துதியுங்கள். வனாந்திரங்களே, நகரங்களே, கேதாரியரின் வயல்களே, கர்த்தரைத் துதியுங்கள். சீலோவில் வாழுகின்ற ஜனங்களே! மகிழ்ச்சியோடு பாடுங்கள். உங்கள் மலை உச்சியில் இருந்து பாடுங்கள். கர்த்தருக்கு மகிமையைக் கொடுங்கள். தொலை தூர நாடுகளில் உள்ள ஜனங்களே, அவரைத் துதியுங்கள். கர்த்தர் ஒரு பலம் பொருந்திய வீரனைப்போல வெளியே போவார். அவர் போர் செய்யத் தயாராக உள்ள வீரனைப்போன்றிருப்பார். அவர் மிகுந்த கிளர்ச்சியுள்ளவராக இருப்பார். அவர் உரத்த குரலில் சத்தமிடுவார். அவரது பகைவரைத் தோற்கடிப்பார். “நீண்ட காலமாக நான் எதையும் சொல்லவில்லை. என்னை நான் கட்டுப்படுத்திக் கொண்டேன். நான் எதுவும் சொல்லவில்லை. ஆனால், இப்போது நான் அலறுகிறேன், ஒரு பெண் பிள்ளை பெறும்போது கதறுவதுபோல, நான் கடினமாகவும் உரக்கவும் மூச்சுவிடுகிறேன். நான் மலைகளையும் குன்றுகளையும் அழிப்பேன். நான் அங்கே வளருகின்ற தாவரங்களை வாடச் செய்வேன். நான் ஆறுகளை வறண்ட நிலமாக்குவேன். நான் தண்ணீருள்ள குளங்களையும் வறளச் செய்வேன். பிறகு, நான் குருடர்களை அவர்கள் அதுவரை அறியாத வழிகளில் நடத்திச் செல்வேன். நான் குருடர்களை அவர்கள் அதுவரை சென்றிராத இடங்களுக்கு அழைத்துச் செல்வேன். நான் அவர்களுக்காக இருளை வெளிச்சமாக்குவேன். நான் கரடு முரடான பாதையை மென்மையாக்குவேன். நான் வாக்களித்ததைச் செய்வேன்! நான் எனது ஜனங்களை விட்டுவிடமாட்டேன். ஆனால், சிலர் என்னைப் பின்பற்றுவதை நிறுத்திவிட்டார்கள். அவர்களிடம் பொன்னால் மூடப்பட்ட சிலைகள், இருக்கின்றன. ‘நீங்களே எங்கள் தெய்வங்கள்’ என்று அவர்கள் அந்தச் சிலைகளிடம் கூறுகின்றனர். அந்த ஜனங்கள் அவர்களது பொய்த் தெய்வங்களை நம்புகின்றனர். ஆனால் அந்த ஜனங்கள் ஏமாற்றப்படுவார்கள்.