ஏசாயா 26:1-8

ஏசாயா 26:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அந்த நாளிலே யூதா நாட்டில் இந்தப் பாடல் பாடப்படும்: நமக்கொரு பலமுள்ள பட்டணம் உண்டு; இறைவன் இரட்சிப்பை, அதன் மதில்களாகவும் பாதுகாப்பாகவும் ஆக்குகிறார். வாசல்களைத் திறவுங்கள், நீதியுள்ள நாடு உள்ளே வரட்டும், நேர்மையான நாடு உள்ளே வரட்டும். மனவுறுதியுடன் இருப்பவனை நீர் முழுநிறைவான சமாதானத்துடன் வைத்திருப்பீர்; ஏனெனில் அவன் உம்மிலேயே நம்பிக்கை வைத்திருக்கிறான். யெகோவாவிடம் என்றென்றும் நம்பிக்கையை வையுங்கள்; ஏனெனில், யெகோவா, யெகோவாவே நித்திய கற்பாறை. உயர்வாக வாழ்வோரை அவர் தாழ்த்துகிறார்; உயர்த்தப்பட்ட பட்டணத்தை கீழே தள்ளி வீழ்த்துகிறார், அதைத் தரைமட்டமாக்கிப் புழுதியாக்குகிறார். கால்கள் அதை மிதிக்கின்றன. ஒடுக்கப்பட்டவர்களின் பாதங்களும், ஏழைகளின் காலடிகளுமே அதை மிதிக்கின்றன. நீதியானவர்களின் பாதை நேர்சீரானது; நீதியாளரே, நீரே நீதியானவர்களின் வழியைச் சீர்படுத்துகிறீர். ஆம், யெகோவாவே, உமது சட்டங்களின் வழியில் நடந்து, உமக்குக் காத்திருக்கிறோம்; உமது பெயரும் உமது புகழுமே எங்கள் இருதயங்களின் வாஞ்சையாய் இருக்கின்றன.

ஏசாயா 26:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அக்காலத்திலே யூதாதேசத்தில் பாடப்படும் பாட்டாவது: பெலனான நகரம் நமக்கு உண்டு; காப்பாற்றுதலையே அதற்கு மதிலும் பாதுகாப்புமாக ஏற்படுத்துவார். சத்தியத்தைக் கைக்கொண்டுவருகிற நீதியுள்ள தேசம் உள்ளே நுழைவதற்காக வாசல்களைத் திறவுங்கள். உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறதினால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர். யெகோவாவை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நிலையான கன்மலையாயிருக்கிறார். அவர் உயரத்திலே வாசமாயிருக்கிறவர்களையும் கீழே தள்ளுகிறார்; உயர்ந்த நகரத்தையும் தாழ்த்துகிறார்; அவர் தரைவரை தாழ்த்தி அது மண்ணாகும்வரை இடியச்செய்வார். கால் அதை மிதிக்கும், சிறுமையானவர்களின் காலும் எளிமையானவர்களின் அடிகளுமே அதை மிதிக்கும். நீதிமானுடைய பாதை செம்மையாயிருக்கிறது; மகா நீதிபரராகிய நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர். யெகோவாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளின் வழியிலே உமக்குக் காத்திருக்கிறோம்; உமது பெயரும், உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது.

ஏசாயா 26:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)

அந்த நேரத்தில் யூதாவில் இந்தப் பாடலை ஜனங்கள் பாடுவார்கள்: கர்த்தரே நமக்கு இரட்சிப்பைத் தருகிறார். நமக்குப் பலமான நகரம் உள்ளது. நமது நகரத்திற்குப் பலமான சுவர்களும், தற்காப்புகளும் உள்ளன. கதவுகளைத் திறவுங்கள். நல்ல ஜனங்கள் நுழைவார்கள். தேவனுடைய நல்ல போதனைகளுக்கு அந்த ஜனங்கள் கீழ்ப்படிவார்கள். கர்த்தாவே, உம்மை அண்டியுள்ள ஜனங்களுக்கும், உம்மை நம்புகிற ஜனங்களுக்கும், நீர் உண்மையான சமாதானத்தைக் கொடுக்கிறீர். எனவே, எப்பொழுதும் கர்த்தரை நம்புங்கள். ஏனென்றால், கர்த்தராகிய யேகோவாவில் உங்களுக்கு என்றென்றைக்கும் பாதுகாப்பான இடமுண்டு. ஆனால், கர்த்தர் தற்பெருமை கொண்ட நகரத்தை அழிப்பார். அங்கே வாழுகின்ற ஜனங்களை அவர் தண்டிப்பார். கர்த்தர் அந்த உயர்வான நகரத்தை தரையில் போடுவார். அது புழுதிக்குள் விழும். பிறகு, ஏழ்மையும் பணிவும் உள்ள ஜனங்களின் கால்கள் அதனை மிதித்துச் செல்லும். நல்ல ஜனங்களுக்கு நேர்மையே சிறந்த பாதை. நல்ல ஜனங்கள் நேர்மையாகவும், உண்மையாகவும் உள்ள பாதையில் செல்வார்கள். தேவனே நீர் அந்தப் பாதையை மென்மையாக்கி எளிதாக செல்லும்படிச் செய்கிறீர். ஆனால் கர்த்தாவே, நாங்கள் உமது நீதியின் பாதைக்காகக் காத்திருக்கிறோம். எங்கள் ஆத்துமா, உம்மையும் உமது நாமத்தையும் நினைவு கொள்ள விரும்புகின்றது.

ஏசாயா 26:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அக்காலத்திலே யூதாதேசத்தில் பாடப்படும் பாட்டாவது: பெலனான நகரம் நமக்கு உண்டு; இரட்சிப்பையே அதற்கு மதிலும் அரணுமாக ஏற்படுத்துவார். சத்தியத்தைக் கைக்கொண்டுவருகிற நீதியுள்ள ஜாதி உள்ளே பிரவேசிப்பதற்காக வாசல்களைத் திறவுங்கள். உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர். கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார். அவர் உயரத்திலே வாசமாயிருக்கிறவர்களையும் கீழே தள்ளுகிறார்; உயர்ந்த நகரத்தையும் தாழ்த்துகிறார்; அவர் தரைமட்டும் தாழ்த்தி அது மண்ணாகுமட்டும் இடியப்பண்ணுவார். கால் அதை மிதிக்கும், சிறுமையானவர்களின் காலும் எளிமையானவர்களின் அடிகளுமே அதை மிதிக்கும். நீதிமானுடைய பாதை செம்மையாயிருக்கிறது; மகா நீதிபரராகிய நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர். கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளின் வழியிலே உமக்குக் காத்திருக்கிறோம்; உமது நாமமும், உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்துமவாஞ்சையாயிருக்கிறது.