ஏசாயா 14:12-15

ஏசாயா 14:12-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஒருகாலத்தில் நாடுகளை வீழ்த்திய நீ, பூமிக்குத் தள்ளப்பட்டு விட்டாயே! நீ உன் இருதயத்தில், “நான் வானத்திற்கு ஏறுவேன்; இறைவனின் நட்சத்திரங்களுக்கு மேலாக என் அரியணையை உயர்த்துவேன். பரிசுத்த மலையின் மிக உயரத்தில், சபைக்கூடும் மலையில் நான் அரியணையில் அமர்ந்திருப்பேன். மேகங்களின் மேலாக உயரத்தில் ஏறுவேன்; மகா உன்னதமானவருக்கு ஒப்பாவேன்” என்று சொன்னாயே. ஆனாலும் நீ பாதாளமட்டும் தாழ்த்தப்பட்டு, படுகுழிக்குள் தள்ளப்பட்டாய்.

ஏசாயா 14:12-15 பரிசுத்த பைபிள் (TAERV)

நீ விடிவெள்ளியைப்போல் இருந்தாய். ஆனால், நீ வானத்திலிருந்து விழுந்துவிட்டாய். கடந்த காலத்தில், பூமியில் உள்ள எல்லா நாடுகளும், உனக்குமுன் பணிந்திருந்தது. ஆனால், இப்போது நீ வெட்டித் தள்ளப்பட்டிருக்கிறாய். நீ எப்பொழுதும் உனக்குள்ளேயே, “நான் மிக உன்னதமான தேவனைப்போலாவேன். நான் வானங்களுக்கு மேலே போவேன். நான் எனது சிங்காசனத்தை தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேல் வைப்பேன். நான் பரிசுத்தமான மலையான சாபோன் மீது அமர்வேன். நான், அந்த மலைமேலே தெய்வங்களைச் சந்திப்பேன். நான், மேகங்களிலுள்ள பலிபீடத்திற்கு ஏறிப்போவேன். நான் மிக உன்னதமான தேவனைப்போல் ஆவேன்” என்று சொன்னாய். ஆனால் அது நடைபெறவில்லை. நீ தேவனோடு வானத்துக்குப்போகவில்லை. நீ மரணத்தின் இடமான பாதாளத்தின் பள்ளத்துக்குத் தள்ளப்பட்டாய்.