எபிரெயர் 7:1-22

எபிரெயர் 7:1-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இந்த மெல்கிசேதேக்கு, சாலேமின் அரசனும், மகா உன்னதமான இறைவனின் ஆசாரியனுமாயிருந்தான். ஆபிரகாம் அரசர்களைத் தோற்கடித்து திரும்பிவந்து கொண்டிருந்தபோது, இவன் ஆபிரகாமைச் சந்தித்து ஆசீர்வதித்தான். ஆபிரகாம் எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கை மெல்கிசேதேக்குக்குக் கொடுத்தான். மெல்கிசேதேக்கினுடைய முதற்பெயரின் பொருள், “நீதியின் அரசன்” எனப்படுகிறது. அத்துடன், “சாலேமின் அரசன்” என்றால், “சமாதானத்தின் அரசன்” என்ற அர்த்தமும் இருக்கிறது. தந்தையோ, தாயோ, வம்சவரலாறோ மெல்கிசேதேக்கிற்கு இல்லை. வாழ்நாட்களின் தொடக்கமோ, முடிவோ இல்லாத இவன், இறைவனுடைய மகனைப்போல், என்றென்றும் ஒரு ஆசாரியனாய் நிலைத்திருக்கிறான். மெல்கிசேதேக்கு எவ்வளவு பெரியவனாயிருந்தான் என்று யோசித்துப் பாருங்கள்: நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம்கூட தான் போர்க்களத்தில் கைப்பற்றிய எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கை இவனுக்குக் கொடுத்தானே. லேவியின் தலைமுறையினர்களில் ஆசாரியர்களாகிறவர்கள், மக்களிடமிருந்து பத்தில் ஒரு பங்கைப் பெற்றுக்கொள்ளும்படி, மோசேயின் சட்டம் வலியுறுத்துகிறது. அவர்கள் ஆபிரகாமின் சந்ததிகளும், லேவியர்களின் சகோதரர்களாயிருந்தும், இப்படிக் கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த மெல்கிசேதேக்கோ லேவியின் சந்ததிகள் அல்ல. அப்படியிருந்தும், ஆபிரகாமிடமிருந்து பத்தில் ஒரு பங்கைப் பெற்றுக்கொண்டு, இறைவனிடமிருந்து வாக்குத்தத்தங்களைப் பெற்றிருந்த ஆபிரகாமை இவன் ஆசீர்வதித்தான். உயர்ந்த நிலையில் உள்ளவனே தாழ்ந்த நிலையில் உள்ளவனை ஆசீர்வதிக்க வேண்டும். அதில் சந்தேகமேயில்லை. ஆசாரியர்களைப் பொறுத்தவரையில், இவர்கள் இறந்துபோகிறவர்களாக இருந்தும், பத்தில் ஒரு பங்கைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் மெல்கிசேதேக்கைப் பொறுத்தவரையிலோ, இவன் என்றும் வாழ்கிறவன் என அறிவிக்கப்பட்டு, பத்தில் ஒரு பங்கைப் பெற்றுக்கொண்டான். ஒரு வகையில் பத்தில் ஒரு பங்கைப் பெற்றுக்கொள்கிற லேவியும்கூட ஆபிரகாமின் மூலமாய், பத்தில் ஒரு பங்கை மெல்கிசேதேக்குக்கு கொடுத்தான் என்று சொல்லலாம். ஏனெனில் மெல்கிசேதேக்கு ஆபிரகாமைச் சந்தித்தபோது, லேவி தன்னுடைய முற்பிதாவான ஆபிரகாமின் உடலுக்குள் இருந்தார் என்று எடுத்துக்கொள்ளலாம். லேவியரின் ஆசாரிய முறையின் அடிப்படையிலேயே, மோசேயின் சட்டம் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. லேவிய ஆசாரியன் முறையின் மூலமாகவே பூரண நிலையை அடையக்கூடியதாக இருந்திருந்தால், வேறொரு ஆசாரியன் வரவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? ஆரோனுடைய முறையில் இல்லாது, மெல்கிசேதேக்கின் முறையின்படி, ஒரு ஆசாரியமுறை ஏன் ஏற்படுத்தப்பட்டது? ஆசாரிய முறையே மாற்றப்படுகிறபோது, மோசேயின் சட்டத்திலும் மாற்றம் ஏற்படவேண்டியதாயிருக்கிறது. இவையெல்லாம் கிறிஸ்துவைக்குறித்தே சொல்லப்படுகின்றன. அவரோ வேறு ஒரு கோத்திரத்தைச் சேர்ந்தவர், அந்த கோத்திரத்தைச் சேர்ந்த யாருமே பலிபீடத்தில் பணியாற்றவில்லை. நம்முடைய கர்த்தர் யூதாவின் கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிந்ததே. மோசே ஆசாரியர்களைக் குறித்துப் பேசியபொழுது, இந்தக் கோத்திரத்தைக் குறித்து எதுவுமே சொல்லவில்லை. மெல்கிசேதேக்குக்கு ஒப்பான வேறொரு ஆசாரியர் தோன்றியபடியால், இந்தக் காரியத்தில் இன்னும் அதிக தெளிவாகின்றது. அப்படியே சந்ததியைப் பொறுத்தமட்டில், மனிதருடைய விதிமுறைகளுக்கு இணங்க ஆசாரியர் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் முடிவில்லாத வாழ்வின் வல்லமையின்படியே கிறிஸ்து ஆசாரியனாய் ஏற்படுத்தப்பட்டார். ஏனெனில், “மெல்கிசேதேக்கின் முறையின்படி, நீர் என்றென்றைக்கும் ஆசாரியனாய் இருக்கிறீர்” என்று அவரைக்குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முந்திய கட்டளை பலவீனமானதாயும் பயனற்றதாயும் இருந்ததால் அது மாற்றப்பட்டது. மோசேயின் சட்டமோ எதையும் முழுநிறைவுள்ளதாய் செய்வதில்லை. ஆனால் நாம் இப்பொழுது இறைவனை அணுகும்படி ஒரு மேன்மையான எதிர்பார்ப்பு நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அன்றியும், மற்றவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியர்களாகிறார்கள். ஆனால் இயேசுவோ, ஆசாரியராய் ஏற்படுத்தப்பட்டபோது, இறைவனுடைய ஆணையின் மூலமாய் ஏற்படுத்தப்பட்டார். இறைவன் அவரைக்குறித்துச் சொன்னதாவது: “கர்த்தர் ஆணையிட்டிருக்கிறார். அவர் தனது மனதை மாற்றமாட்டார்: ‘நீர் என்றென்றைக்கும் ஆசாரியராய் இருக்கிறீர்.’ ” இந்த ஆணையின்படி இயேசு ஒரு மேன்மையான உடன்படிக்கையின் உத்திரவாதம் அளிப்பவராயிருக்கிறார்.

எபிரெயர் 7:1-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாக இருந்தான்; ராஜாக்களை முறியடித்து திரும்பிவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான். இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதல் பெயராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்கு சமாதானத்தின் ராஜா என்றும் அர்த்தமாகும். இவன் தகப்பனும், தாயும், வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் வாழ்நாட்களின் துவக்கமும், முடிவும் இல்லாதவனாக, தேவனுடைய குமாரனைப்போல என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான். இவன் எவ்வளவு பெரியவனாக இருக்கிறான் பாருங்கள்; கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம்கூட கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்குத் தசமபாகம் கொடுத்தான். லேவியின் குமாரர்களில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் வம்சத்திலிருந்து வந்த தங்களுடைய சகோதரர்களான மக்களிடம் நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைப் பெற்றிருக்கிறார்கள். ஆனாலும், அவர்களுடைய வம்சவரிசையில் வராதவனாகிய மெல்கிசேதேக்கு ஆபிரகாமிடம் தசமபாகம் வாங்கி, வாக்குத்தத்தங்களைப் பெற்றிருந்த அவனை ஆசீர்வதித்தான். சிறியவன் பெரியவனாலே ஆசீர்வதிக்கப்படுவான், அதில் சந்தேகம் இல்லை. அன்றியும், இங்கே, தசமபாகம் வாங்குகிற மனிதர்கள் ஒருநாளில் மரித்துப்போவார்கள்; அங்கேயோ, ஆபிரகாமிடம் தசமபாகத்தைப் பெற்றுக்கொண்டவன், உயிரோடு இருப்பவன் என்று சாட்சிபெற்றவன். அன்றியும், மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு எதிர்கொண்டுபோனபோது, லேவியானவன் தன் முற்பிதாவாகிய ஆபிரகாமின் சரீரத்தில் இருந்ததினால், தசமபாகம் வாங்குகிற அவனும் ஆபிரகாமின் மூலமாகத் தசமபாகம் கொடுத்தான் என்று சொல்லலாம். அல்லாமலும், இஸ்ரவேல் மக்கள் லேவி கோத்திர ஆசாரிய முறைமைக்கு உட்பட்டிருந்துதான் நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்; அந்த ஆசாரியமுறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், மெல்கிசேதேக்குடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டியது என்ன? ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருந்தால், நியாயப்பிரமாணமும் மாற்றப்படவேண்டும். இவைகள் யாரைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறதோ, அவர் வேறு கோத்திரத்தைச் சேர்ந்தவராக இருக்கிறாரே; அந்தக் கோத்திரத்தில் ஒருவனும் பலிபீடத்து ஊழியம் செய்தது இல்லையே. நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினார் என்பது தெளிவாக இருக்கிறது; அந்தக் கோத்திரத்தாரின் ஆசாரியத்துவத்தைப்பற்றி மோசே ஒன்றும் சொல்லவில்லையே. அல்லாமலும், மெல்கிசேதேக்கைப்போல வேறொரு ஆசாரியர் எழும்புகிறார் என்று சொல்லியிருப்பது மிகவும் தெளிவாக விளங்குகிறது. அவர் சரீர சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தினால் ஆசாரியர் ஆகாமல், நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத் தகுந்தபடி அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியர் ஆனார். முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயன் இல்லாததுமாக இருந்ததினால் மாற்றப்பட்டது. நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, ஆனால், சிறந்த நம்பிக்கை நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது; அந்த நம்பிக்கையினாலே தேவனுக்கு அருகில் சேருகிறோம். அன்றியும், அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியர்களாக்கப்படுகிறார்கள்; இவரோ; நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்மோடு சொன்னவராலே ஆணையோடு ஆசாரியர் ஆனார். எனவே, இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு சிறந்த காரியமோ, அவ்வளவு சிறந்த உடன்படிக்கைக்கு உத்திரவாதமானார்.

எபிரெயர் 7:1-22 பரிசுத்த பைபிள் (TAERV)

மெல்கிசேதேக் சாலேமின் ராஜா. அவன் மிக உயர்ந்த தேவனுடைய ஆசாரியனுமாகவும் இருந்தான். ராஜாக்களை வென்றுவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்த ஆபிரகாமை மெல்கிசேதேக் சந்தித்து ஆசிவழங்கினான். அதன் பிறகு, பத்தில் ஒரு பங்கை ஆபிரகாம் அவனுக்குக் கொடுத்தான். (சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக் என்ற பெயருக்கு இரு பொருள் உண்டு. மெல்கிசேதேக் என்பதற்கு “நன்மையின் ராஜா” என்ற பொருளும் “சலேமின் ராஜா” என்பதற்கு “சமாதானத்தின் ராஜா” என்ற பொருளும் உண்டு.) இவனது தாய் தந்தையரைப் பற்றி எவருக்கும் தெரியாது. எங்கிருந்து வந்தான் என்றும் தெரியாது. எங்கே பிறந்தான், எப்போது இறந்தான் என்றும் ஒருவருக்கும் தெரியாது. இவன் தேவனுடைய குமாரனைப் போன்றவன். அவன் என்றென்றைக்கும் ஆசாரியனாகவே இருக்கிறான். போரில் கைப்பற்றிய பொருள்களில் பத்தில் ஒரு பங்கை ஆபிரகாம் இவனுக்குக் கொடுத்ததின் மூலம் இவன் எவ்வளவு முக்கியமானவன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியும். இப்போது லேவியின் வாரிசுதாரர்களாக உள்ள ஆசாரியர்கள் இஸ்ரவேலைச் சேர்ந்த மக்களிடமிருந்து பத்தில் ஒருபாகத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென சட்டம் கூறுகிறது. அதாவது ஆபிரகாமின் குடும்பத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும் கூட மக்களிடமிருந்து இந்த பத்தில் ஒரு பங்கை அவர்கள் வசூலிக்கிறார்கள். இப்பொழுது மெல்கிசேதேக் ஆபிரகாமிடமிருந்து பத்தில் ஒன்றைப் பெற்றுக்கொண்டு தேவனுடைய விசேஷ வாக்குறுதிகளை பெற்ற ஆபிரகாமை ஆசீர்வதித்தான். மிகப் பெரிய மனிதர்களே சிறியவர்களை ஆசீர்வாதம் செய்வார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு புறத்தில் வாழ்ந்து மடிகிற ஆசாரியர்களால் பத்தில் ஒரு பாகம் வசூலிக்கப்படுகிறது. இன்னொரு புறத்தில் இன்னும் உயிருடன் இருப்பதாகச் சொல்லப்படுகிற மெல்கிசேதேக்கால் பத்தில் ஒரு பாகம் வசூலிக்கப்படுகிறது. உண்மையில், ஆபிரகாமின் மூலமாக லேவியே பத்தில் ஒரு பாகத்தை மெல்கிசேதேக்குக்கு கொடுத்தான் என்று கூட நீங்கள் சொல்லக் கூடும். ஏன்? ஏனெனில் மெல்கிசேதேக் ஆபிரகாமைச் சந்தித்தபோது லேவி இன்னும் பிறந்திருக்கவில்லை. தன் முன்னோரான ஆபிரகாமின் சரீரத்திலேயே இன்னும் அவன் இருந்தான். லேவி பரம்பரை ஆசாரிய முறைமைகளை அடிப்படையாய்க் கொண்ட சட்டத்தை இஸ்ரவேல் மக்கள் பெற்றார்கள். ஆனால் இம்முறைமையினால் மக்கள் ஆன்மீக முதிர்ச்சியை அடைய முடியவில்லை, ஆரோனைப் போல அல்லாமல் மெல்கிசேதேக் போன்ற வேறொரு ஆசாரியன் அவசியமானார். ஆசாரியத்துவம் மாற்றப்பட்டால் நியாயப்பிரமாணமும் மாற்றப்பட்டிருக்க வேண்டும். எப்போதும் ஒரு ஆசாரியனாக சேவை செய்திராத ஒரு குடும்பக் குழுவினைச் சேர்ந்த ஒரு மனிதரைப் பற்றி இப்பகுதிகள் பேசுகின்றன. நமது கர்த்தர் யூதாவின் குடும்பக் குழுவிலிருந்து வந்தவர் என்பது தெளிவு. மோசேயும் இந்தக் குடும்பக் குழுவிலிருந்து வரும் ஆசாரியர்களைப் பற்றி எதுவும் கூறவில்லை. மெல்கிசேதேக் போன்ற ஒரு வித்தியாசமான ஆசாரியர் வருவார் என்பதால் இது மேலும் தெளிவாகிறது. மாம்சீகமான பரம்பரை பற்றிய சில சட்டங்களினால் ஆசாரியனாகாமல் அழிக்க முடியாத ஜீவனுக்குரிய வல்லமையால் அவர் ஆசாரியனாகிறார். “நீர் மெல்கிசேதேக்கைப் போன்று என்றென்றைக்கும் உரிய ஆசாரியராக இருக்கிறீர்” என்று வேதவாக்கியங்களில் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே அந்தப் பழைய சட்டம் இப்போது மாற்றப்பட்டிருக்கிறது. ஏனெனில் பழைய சட்டம் பலவீனமானதும், பயனற்றதுமாய் இருந்தது. மோசேயின் நியாயப்பிரமாணமானது எதையும் முழுமை ஆக்கவில்லை. எனவே சிறிதளவேனும் நல்ல நம்பிக்கை நமக்கு கொடுக்கப்பட்டது. மேலும் அதன் மூலமாகத்தான் தேவனுக்கு அருகில் வருகிறோம். இது மிக முக்கியமானது. மற்றவர்களை ஆசாரியர்களாக்கியபோது ஆணை எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆனால் இயேசுவைப் பிரதான ஆசாரியனாக்கியபோது தேவன் பிரமாணம் கொடுத்தார். “‘நீரே என்றென்றைக்கும் ஆசாரியனாக இருக்கிறீர்’ என்று கர்த்தர் ஆணையிட்டுரைத்தார். மேலும் அவர் தன் மனதை மாற்றிக்கொள்ளமாட்டார்” என்றும் அவர் சொன்னார். மிகச் சிறந்த உடன்படிக்கைக்கு இயேசுவே ஒரு நிரூபணமாக இருக்கிறார் என்பதே இதன் பொருள் ஆகும்.

எபிரெயர் 7:1-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான்; ராஜாக்களை முறியடித்துவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான். இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அர்த்தமாம். இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான். இவன் எவ்வளவு பெரியவனாயிருக்கிறான் பாருங்கள்; கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம் முதலாய் கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்குத் தசமபாகம் கொடுத்தான். லேவியின் புத்திரரில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் அரையிலிருந்துவந்த தங்கள் சகோதரரான ஜனங்களின் கையிலே நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைபெற்றிருக்கிறார்கள். ஆகிலும், அவர்களுடைய வம்சவரிசையில் வராதவனாகிய இவன் ஆபிரகாமின் கையில் தசமபாகம் வாங்கி, வாக்குத்தத்தங்களைப் பெற்றவனை ஆசீர்வதித்தான். சிறியவன் பெரியவனாலே ஆசீர்வதிக்கப்படுவான், அதற்குச் சந்தேகமில்லை. அன்றியும், இங்கே, மரிக்கிற மனுஷர்கள் தசமபாகம் வாங்குகிறார்கள்; அங்கேயோ, பிழைத்திருக்கிறான் என்று சாட்சிபெற்றவன் வாங்கினான். அன்றியும், மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு எதிர்கொண்டுபோனபோது, லேவியானவன் தன் தகப்பனுடைய அரையிலிருந்தபடியால், தசமபாகம் வாங்குகிற அவனும் ஆபிரகாமின் மூலமாய்த் தசமபாகம் கொடுத்தான் என்று சொல்லலாம். அல்லாமலும், இஸ்ரவேல் ஜனங்கள் லேவிகோத்திர ஆசாரிய முறைமைக்குட்பட்டிருந்தல்லவோ நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்; அந்த ஆசாரியமுறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், மெல்கிசேதேக்கினுடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டுவதென்ன? ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருக்குமேயானால், நியாயப்பிரமாணமும் மாற்றப்படவேண்டியதாகும். இவைகள் எவரைக்குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறதோ. அவர் வேறொரு கோத்திரத்துக்குள்ளானவராயிருக்கிறாரே; அந்தக் கோத்திரத்தில் ஒருவனாகிலும் பலிபீடத்து ஊழியம் செய்ததில்லையே. நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினாரென்பது பிரசித்தமாயிருக்கிறது; அந்தக் கோத்திரத்தாரைக்குறித்து மோசே ஆசாரியத்துவத்தைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. அல்லாமலும், மெல்கிசேதேக்குக்கு ஒப்பாய் வேறொரு ஆசாரியர் எழும்புகிறார் என்று சொல்லியிருப்பதினால், மேற்சொல்லியது மிகவும் பிரசித்தமாய் விளங்குகிறது. அவர் மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகாமல், நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார். முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது. நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது; அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம். அன்றியும், அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியராக்கப்படுகிறார்கள்; இவரோ; நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்முடனே சொன்னவராலே ஆணையோடே ஆசாரியரானார். ஆனதால், இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு விசேஷித்த காரியமோ, அவ்வளவு விசேஷித்த உடன்படிக்கைக்குப் பிணையாளியானார்.