ஆதியாகமம் 45:4-7

ஆதியாகமம் 45:4-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: என் கிட்ட வாருங்கள் என்றான். அவர்கள் கிட்டப்போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான். என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார். தேசத்தில் இப்பொழுது இரண்டு வருஷமாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருஷம் உழவும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும். பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்.

ஆதியாகமம் 45:4-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யோசேப்பு தன் சகோதரரிடம், “என் அருகே வாருங்கள்” என்று கூப்பிட்டான். அவர்கள் வந்தவுடன் அவன் அவர்களிடம், “எகிப்திற்குப் போகிறவர்களிடத்தில் நீங்கள் விற்ற உங்கள் சகோதரன் யோசேப்பு நான்தான்! இப்பொழுது நீங்கள் என்னை விற்றதற்காக கலங்கவும், உங்கள்மேல் கோபங்கொள்ளவும் வேண்டாம். ஏனெனில், உயிர்களைக் காப்பதற்காகவே இறைவன் என்னை உங்களுக்கு முன்பாகவே இங்கு அனுப்பினார். இரு வருடங்களாக நாடெங்கும் பஞ்சம் உண்டாயிருக்கிறது, உழுதலும், அறுவடை செய்தலும் இன்னும் ஐந்து வருடங்களுக்கு இருக்காது. பூமியில் மிஞ்சியுள்ள உங்கள் சந்ததியைப் பாதுகாத்து வைக்கவும், உங்கள் உயிர்களைப் பெரும் மீட்பினால் காப்பாற்றவுமே, இறைவன் என்னை உங்களுக்கு முன்பாக இங்கு அனுப்பியுள்ளார்.

ஆதியாகமம் 45:4-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது யோசேப்பு தன் சகோதரர்களை நோக்கி: என்னருகில் வாருங்கள் என்றான். அவர்கள் அருகில்போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்திற்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான். என்னை இந்த இடத்திற்கு வருவதற்காக விற்றுப்போட்டதினால், நீங்கள் வருத்தப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; உயிர்களைப் பாதுகாக்க தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார். தேசத்தில் இப்பொழுது இரண்டு வருடங்களாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருடங்கள் விதைப்பும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும். பூமியிலே உங்கள் வம்சம் அழியாமலிருக்க உங்களை ஆதரிப்பதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடு காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.

ஆதியாகமம் 45:4-7 பரிசுத்த பைபிள் (TAERV)

யோசேப்பு மீண்டும், “என்னருகே வாருங்கள். கெஞ்சி கேட்கிறேன், வாருங்கள்” என்றான். சகோதரர்கள் அவனருகே வந்தனர். அவர்களிடம், “நான் உங்கள் சகோதரன் யோசேப்பு. எகிப்திய வியாபாரிகளிடம் உங்களால் விற்கப்பட்டவன். இப்போது அதற்காக வருத்தப்படாதீர்கள். நீங்கள் செய்தவற்றுக்காக உங்களையே கோபித்துக்கொள்ளாதீர்கள். இங்கே நான் வரவேண்டும் என்பது தேவனின் திட்டம். உங்கள் வாழ்க்கையைக் காப்பாற்றவே இங்கே இருக்கிறேன். இந்தப் பஞ்சம் இரண்டு ஆண்டுகளாக இருக்கின்றன. இன்னும் ஐந்து ஆண்டுகள் இருக்கும். ஆகவே தேவன் என்னை உங்களுக்கு முன்னதாக அனுப்பி இருக்கிறார். அதனால் உங்களை காப்பாற்றமுடியும்.