ஆதியாகமம் 27:1-46

ஆதியாகமம் 27:1-46 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஈசாக்கு முதிர்வயதானதால், அவனுடைய கண்பார்வை மங்கிப்போயிருந்தன. அவன் தன் மூத்த மகன் ஏசாவைக் கூப்பிட்டு, “என் மகனே” என்றான். அதற்கு அவன், “இதோ நான் இருக்கிறேன்” என்றான். ஈசாக்கு அவனிடம், “இப்பொழுது நான் கிழவனாகிவிட்டேன். எந்த நாளில் மரணம் வருமோ? எனக்குத் தெரியாது. ஆகையால், நீ உன் ஆயுதங்களான வில்லையும், அம்புக் கூட்டையும் எடுத்துக்கொண்டு, உடனே காட்டு வெளிக்குப்போய் வேட்டையாடி, எனக்கு இறைச்சி கொண்டுவா. நான் விரும்பும் சுவையுள்ள உணவை நீ சமைத்து, நான் அதைச் சாப்பிடுவதற்கு என்னிடம் கொண்டுவா. நான் இறப்பதற்குமுன் என்னுடைய ஆசீர்வாதத்தை உனக்குக் கொடுப்பேன்” என்றான். ஈசாக்கு தன் மகன் ஏசாவுடன் பேசியதை, ரெபெக்காள் கேட்டுக்கொண்டிருந்தாள். ஏசா மிருகங்களை வேட்டையாடிக் கொண்டுவருவதற்காகக் காட்டு பகுதிக்குப் போனான். அப்பொழுது ரெபெக்காள் தன் மகன் யாக்கோபிடம், “பார், உன் தகப்பன் உன் சகோதரன் ஏசாவிடம் பேசுவதை நான் கேட்டேன். அவர், ‘நீ வேட்டையாடி, இறைச்சியைக் கொண்டுவந்து, நான் சாப்பிடுவதற்கு சுவையுள்ள உணவைத் தயாரித்து கொண்டுவா; நான் இறப்பதற்குமுன், யெகோவாவின் முன்னிலையில் என்னுடைய ஆசீர்வாதத்தை உனக்குக் கொடுக்கவேண்டும்’ என்றார், என்று சொன்னாள். இப்பொழுதும் என் மகனே, நான் சொல்வதைக் கவனமாய்க் கேட்டு நான் உனக்குச் சொல்வதைச் செய்: நீ உடனே ஆட்டு மந்தைக்குப் போய் நல்ல வெள்ளாட்டுக் குட்டிகள் இரண்டை என்னிடம் கொண்டுவா; உன் தகப்பன் விரும்புகிற விதமாகவே சுவையுள்ள உணவை நான் சமைத்துத் தருவேன். அதைக் கொண்டுபோய் அவர் சாப்பிடுவதற்குக் கொடு. அவர் இறப்பதற்குமுன் தன் ஆசீர்வாதத்தை உனக்குத் தரட்டும்” என்றாள். அதற்கு யாக்கோபு, தன் தாய் ரெபெக்காளிடம், “என் சகோதரன் ஏசா உடலில் உரோமம் நிறைந்தவன்; என் உடலோ மிருதுவானது. என் தகப்பன் என்னைத் தொட்டால் என்ன செய்வது? அவரை ஏமாற்றுகிறவனாகக் காணப்பட்டு, ஆசீர்வதிப்பதற்குப் பதிலாக சாபத்தையே என்மேல் கொண்டுவருவேன்” என்றான். அவன் தாய் அவனிடம், “என் மகனே, அந்தச் சாபம் என்மேல் வரட்டும்; நான் சொல்லுகிறபடி நீ போய், ஆட்டுக்குட்டிகளைக் கொண்டுவா” என்றாள். அப்படியே யாக்கோபு போய் அவற்றைப் பிடித்துத் தன் தாயிடம் கொண்டுவந்தான். அவள் அவற்றை அவனுடைய தகப்பனுக்கு விருப்பமான சுவையுள்ள உணவாகச் சமைத்தாள். பின்பு ரெபெக்காள், வீட்டிலிருந்த தன் மூத்த மகன் ஏசாவின் மிகச்சிறந்த உடைகளை எடுத்து, அவற்றைத் தன் இளையமகன் யாக்கோபுக்கு உடுத்தினாள். அவனுடைய கைகளையும், கழுத்தின் மிருதுவான பகுதியையும் வெள்ளாட்டுத் தோல்களினால் மறைத்தாள். பின்பு அவள் தயாரித்த சுவையுள்ள உணவையும் அப்பங்களையும் தன் மகன் யாக்கோபிடம் கொடுத்தாள். அவன் தன் தகப்பனிடம் போய், “அப்பா” என்று அழைத்தான். அதற்கு அவன், “என் மகனே, நீ யார்?” என்றான். அதற்கு யாக்கோபு தன் தகப்பனிடம், “நான் உங்கள் மூத்த மகன் ஏசா; நீங்கள் சொன்னபடியே நான் செய்திருக்கிறேன். எழுந்திருந்து நான் வேட்டையாடிக் கொண்டுவந்த இறைச்சியைச் சாப்பிட்டு, உங்கள் ஆசீர்வாதத்தை எனக்குத் தாருங்கள்” என்றான். ஈசாக்கு தன் மகனிடம், “மகனே, இது உனக்கு இவ்வளவு சீக்கிரத்தில் எப்படிக் கிடைத்தது?” என்று கேட்டான். அதற்கு அவன், “உங்கள் இறைவனாகிய யெகோவாவே எனக்கு வெற்றியைத் தந்தார்” என்றான். அப்பொழுது ஈசாக்கு யாக்கோபிடம், “என் மகனே, உண்மையாகவே நீ என் மகன் ஏசாதானோ அல்லவோ என தொட்டுப் பார்க்கும்படி, என் அருகில் வா” என்றான். யாக்கோபு தன் தகப்பன் ஈசாக்கின் அருகில் வந்தபோது, ஈசாக்கு அவனைத் தடவிப்பார்த்து, “குரலோ யாக்கோபின் குரல்; கைகளோ ஏசாவின் கைகள்” என்றான். அவனுடைய கைகள் மூத்தவன் ஏசாவின் கைகளைப்போல் உரோமம் அடர்ந்ததாய் இருந்தபடியால், அவனுடைய தகப்பன் அவனை இன்னாரென்று அறியவில்லை; எனவே அவன் யாக்கோபை ஆசீர்வதித்தான். ஈசாக்கு யாக்கோபிடம், “உண்மையாகவே நீ என் மகன் ஏசாதானா?” என்று கேட்டான். அவனும், “ஆம், நான்தான்” என்றான். அப்பொழுது ஈசாக்கு அவனிடம், “மகனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்த இறைச்சியில் கொஞ்சத்தை நான் சாப்பிடும்படி என்னிடம் கொண்டுவா; நான் உன்னை ஆசீர்வதிப்பேன்” என்றான். யாக்கோபு அதைக் கொண்டுவந்தான். அவன் அதைச் சாப்பிட்டான்; அத்துடன் அவன் திராட்சை இரசத்தையும் கொண்டுவந்தான், ஈசாக்கு அதைக் குடித்தான். அதன்பின் அவன் தகப்பன் ஈசாக்கு அவனிடம், “மகனே, நீ எனக்கு அருகில் வந்து என்னை முத்தமிடு” என்றான். யாக்கோபு தன் தகப்பனருகில் போய் அவனை முத்தமிட்டான். ஈசாக்கு யாக்கோபினுடைய உடையின் மணத்தை முகர்ந்து பார்த்து, அவனை ஆசீர்வதித்து சொன்னது: “ஆஹா, என் மகனின் மணம் யெகோவா ஆசீர்வதித்த வயலின் மணத்தைப்போல் இருக்கிறது. இறைவன் உனக்கு வானத்தின் பனியையும், மண்ணின் வளத்தையும் கொடுப்பாராக. தானியத்தையும், திராட்சை இரசத்தையும் நிறைவாய் தருவாராக. நாடுகள் உனக்குப் பணி செய்வார்களாக. மக்கள் கூட்டங்கள் உன்னைத் தலைதாழ்த்தி வணங்குவார்களாக. உன் சகோதரரின்மேல் நீ முதன்மையானவனாய் இருப்பாய், உன் தாயின் மகன்கள் உன்னைத் தலைதாழ்த்தி வணங்குவார்கள். உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்படுவார்களாக. உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்களாக.” ஈசாக்கு அவனை ஆசீர்வதித்து முடிந்தபோது, யாக்கோபு தன் தகப்பன் முன்னிருந்து போன மாத்திரத்தில், வேட்டையாடப் போன ஏசா திரும்பிவந்தான். அவனும் இறைச்சியைச் சுவையுள்ள உணவாகச் சமைத்து தன் தகப்பனிடம் கொண்டுவந்தான். அவன், “அப்பா எழுந்திருந்து நான் வேட்டையாடிக் கொண்டுவந்த உணவைச் சாப்பிட்டு, உங்கள் ஆசீர்வாதத்தை எனக்குக் கொடுங்கள்” என்றான். அப்பொழுது ஈசாக்கு, “நீ யார்?” என்று அவனிடம் கேட்டான். அதற்கு அவன், “நான் உம்முடைய மகன்; மூத்த மகனான ஏசா” என்றான். ஈசாக்கு வெகுவாய் நடுங்கி, “அப்படியானால் வேட்டையாடிச் சமைத்த உணவை என்னிடம் கொண்டுவந்தவன் யார்? நீ வருவதற்குச் சிறிது நேரத்திற்குமுன் நான் சாப்பிட்டு அவனை ஆசீர்வதித்தேனே! நிச்சயமாய் அவனே ஆசீர்வதிக்கப்பட்டவனாய் இருப்பான்” என்றான். தன் தகப்பனின் வார்த்தைகளைக் கேட்டவுடனே ஏசா மனங்கசந்து, சத்தமிட்டுக் கதறி அழுது தன் தகப்பனிடம், “அப்பா என்னையும் ஆசீர்வதியுங்கள்” என்றான். அப்பொழுது ஈசாக்கு, “உன் சகோதரன் யாக்கோபு தந்திரமாய் வந்து, உன்னுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான்” என்றான். அதைக்கேட்ட ஏசா தகப்பனிடம், “அவன் யாக்கோபு என சரியாகவல்லவோ பெயரிடப்பட்டிருக்கிறான்? அவன் என்னை இரண்டுமுறை ஏமாற்றிவிட்டான்: அன்று என் பிறப்புரிமையை எடுத்துக்கொண்டான், இன்று என் ஆசீர்வாதத்தையும் எடுத்துக்கொண்டான்!” என்றான். பின்பு அவன், “நீங்கள் எனக்காக எந்த ஆசீர்வாதத்தையும் ஒதுக்கி வைக்கவில்லையா?” என்று கேட்டான். அதற்கு ஈசாக்கு ஏசாவிடம், “நான் யாக்கோபை உனக்குத் தலைவனாகவும், அவனுடைய எல்லா உறவினரையும் அவனுக்கு வேலைக்காரராகவும் கொடுத்து, தானியத்தினாலும், புதிய திராட்சை இரசத்தினாலும் அவனை நிறைவாக்கியிருக்கிறேன். அவ்வாறிருக்க, என் மகனே, உனக்காக நான் என்ன செய்வேன்?” என்றான். அப்பொழுது ஏசா தகப்பனிடம், “அப்பா, ஒரேயொரு ஆசீர்வாதம் மட்டும்தானா உங்களிடம் உண்டு? என்னையும் ஆசீர்வதியுங்கள்!” என்று கூறி சத்தமிட்டு அழுதான். அவனுடைய தகப்பனாகிய ஈசாக்கு அவனிடம் சொன்னது: “பூமியின் செழிப்புக்கும் வானத்தின் பனிக்கும் தூரமாகவே உன் குடியிருப்பு இருக்கும். நீ உன் வாளினால் வாழ்ந்து, உன் சகோதரனுக்குப் பணிசெய்வாய். நீ கட்டுக்கடங்காது போகும்போது, அவன் உன் கழுத்தின்மேல் வைத்த நுகத்தை நீ எடுத்து எறிந்துபோடுவாய்.” தன் தகப்பன், யாக்கோபுக்குக் கொடுத்த ஆசீர்வாதத்தின் நிமித்தம், ஏசா யாக்கோபின்மேல் வன்மம் கொண்டிருந்தான். “என் தகப்பனுக்காக துக்கங்கொண்டாடும் நாட்கள் சமீபமாய் இருக்கின்றன. அப்பொழுது நான் என் சகோதரன் யாக்கோபைக் கொன்றுவிடுவேன்” என்று அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான். மூத்த மகன் ஏசாவின் திட்டம் ரெபெக்காளுக்குச் சொல்லப்பட்டபோது, அவள் தன் இளையமகன் யாக்கோபைக் கூப்பிட்டு, அவனிடம், “உன் சகோதரன் ஏசா உன்னைக் கொல்லும் நினைப்பில் தன்னைத் தேற்றிக்கொண்டிருக்கிறான். ஆகையால் மகனே, இப்பொழுது நான் சொல்வதுபோல் செய்: உடனடியாக ஆரானிலிருக்கும் என் சகோதரன் லாபானிடம் ஓடிப்போ. உன் சகோதரனின் மூர்க்கம் தணியுமட்டும் நீ அங்கே தங்கியிரு. உன் சகோதரன் கோபம் தணிந்து, நீ அவனுக்குச் செய்ததை மறக்கும்போது, நீ அங்கிருந்து திரும்பிவரும்படி நான் உனக்குச் சொல்லி அனுப்புவேன். ஒரே நாளில் உங்கள் இருவரையும் நான் ஏன் இழந்துபோக வேண்டும்?” என்றாள். பின்பு ரெபெக்காள் ஈசாக்கிடம் போய், “இந்த ஏத்தியப் பெண்களால் எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. யாக்கோபும் இந்த நாட்டுப் பெண்களிலிருந்து ஒரு ஏத்தியப் பெண்ணை மனைவியாகக் கொண்டால், நான் உயிர்வாழ்ந்தும் பயனில்லை” என்றாள்.

ஆதியாகமம் 27:1-46 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஈசாக்கு முதிர்வயதானதால் அவனுடைய கண்கள் பார்வையிழந்தபோது, அவன் தன் மூத்த மகனாகிய ஏசாவை அழைத்து, “என் மகனே” என்றான்; அவன், “இதோ இருக்கிறேன்” என்றான். அப்பொழுது அவன்: “நான் முதிர்வயதானேன், எப்போது இறப்பேனென்று எனக்குத் தெரியாது. ஆகையால், நீ உன் ஆயுதங்களாகிய உன் அம்புகளை வைக்கும் பையையும் உன் வில்லையும் எடுத்துக்கொண்டு காட்டுக்குப்போய், எனக்காக வேட்டையாடி, அதை எனக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள உணவுகளாகச் சமைத்து, நான் சாப்பிடவும், நான் இறப்பதற்குமுன்னே என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கவும், என்னிடத்தில் கொண்டுவா” என்றான். ஈசாக்கு தன் மகனாகிய ஏசாவோடு பேசும்போது, ரெபெக்காள் கேட்டுக்கொண்டிருந்தாள். ஏசா வேட்டையாடிக்கொண்டுவர காட்டுக்குப் போனான். அப்பொழுது ரெபெக்காள் தன் மகனாகிய யாக்கோபை நோக்கி: “உன் தகப்பன் உன் சகோதரனாகிய ஏசாவை அழைத்து: நான் சாப்பிட்டு, எனக்கு மரணம் வருமுன்னே, யெகோவா முன்னிலையில் உன்னை ஆசீர்வதிக்க, நீ எனக்காக வேட்டையாடி, அதை எனக்கு ருசியுள்ள உணவுகளாகச் சமைத்துக்கொண்டுவா” என்று சொல்வதைக்கேட்டேன். ஆகையால், என் மகனே, என் சொல்லைக் கேட்டு, நான் உனக்குச் சொல்கிறபடி செய். நீ ஆட்டுமந்தைக்குப் போய், இரண்டு நல்ல வெள்ளாட்டுக்குட்டிகளைக் கொண்டுவா; நான் அவைகளை உன் தகப்பனுக்குப் பிரியமானபடி ருசியுள்ள உணவுகளாகச் சமைப்பேன். உன் தகப்பன் தாம் இறப்பதற்குமுன்னே உன்னை ஆசீர்வதிப்பதற்கு, அவர் சாப்பிடுவதற்கு நீ அதை அவரிடத்தில் கொண்டுபோகவேண்டும் என்றாள். அதற்கு யாக்கோபு தன் தாயாகிய ரெபெக்காளை நோக்கி: “என் சகோதரனாகிய ஏசா அதிக ரோமமுள்ளவன், நான் ரோமமில்லாதவன். ஒருவேளை என் தகப்பன் என்னைத் தடவிப்பார்ப்பார்; அப்பொழுது நான் அவருக்கு ஏமாற்றுகிறவனாகக் காணப்பட்டு, என்மேல் ஆசீர்வாதத்தை அல்ல, சாபத்தையே வரவழைத்துக்கொள்வேன்” என்றான். அதற்கு அவனுடைய தாய்: “என் மகனே, உன்மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும்; என் சொல்லை மாத்திரம் கேட்டு, நீ போய், அவைகளை என்னிடத்தில் கொண்டுவா” என்றாள். அவன் போய் அவைகளைப் பிடித்து, தன் தாயினிடத்தில் கொண்டுவந்தான்; அவனுடைய தாய் அவனுடைய தகப்பனுக்குப் பிரியமான ருசியுள்ள உணவுகளைச் சமைத்தாள். பின்பு ரெபெக்காள், வீட்டிலே தன்னிடத்தில் இருந்த தன் மூத்த மகனாகிய ஏசாவின் நல்ல ஆடைகளை எடுத்து, தன் இளைய மகனாகிய யாக்கோபுக்கு உடுத்தி, வெள்ளாட்டுக்குட்டிகளின் தோலை அவனுடைய கைகளிலேயும் ரோமமில்லாத அவனுடைய கழுத்திலேயும் போட்டு; தான் சமைத்த ருசியுள்ள உணவுகளையும் அப்பங்களையும் தன் மகனாகிய யாக்கோபின் கையில் கொடுத்தாள். அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, “என் தகப்பனே” என்றான்; அதற்கு அவன்: “இதோ இருக்கிறேன்; நீ யார், என் மகனே” என்றான். அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனை நோக்கி: “நான் உமது மூத்த மகனாகிய ஏசா; நீர் எனக்குச் சொன்னபடியே செய்தேன்; உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்க, நீர் எழுந்து உட்கார்ந்து, நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைச் சாப்பிடும்” என்றான். அப்பொழுது ஈசாக்கு தன் மகனை நோக்கி: “என் மகனே, இது உனக்கு இத்தனை சீக்கிரமாக எப்படி கிடைத்தது என்றான். அவன்: உம்முடைய தேவனாகிய யெகோவா எனக்குக் கிடைக்கச்செய்தார்” என்றான். அப்பொழுது ஈசாக்கு யாக்கோபை நோக்கி: “என் மகனே, நீ என் மகனாகிய ஏசாதானோ அல்லவோ என்று நான் உன்னைத் தடவிப்பார்க்க அருகில் வா” என்றான். யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கினருகில் போனான்; அவன் இவனைத் தடவிப்பார்த்து: “சத்தம் யாக்கோபின் சத்தம், கைகளோ ஏசாவின் கைகள்” என்று சொல்லி, அவனுடைய கைகள் அவனுடைய சகோதரனாகிய ஏசாவின் கைகளைப்போல ரோமமுள்ளவைகளாக இருந்ததால், யாரென்று தெரியாமல், அவனை ஆசீர்வதித்து, “நீ என் மகனாகிய ஏசாதானோ” என்றான்; அவன்: “நான்தான்” என்றான். அப்பொழுது அவன்: “என் மகனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்ததை நான் சாப்பிட்டு, என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிப்பதற்கு அதை என்னருகில் கொண்டுவா” என்றான்; அவன் அதை அருகில் கொண்டுபோனான்; அப்பொழுது அவன் சாப்பிட்டான்; பிறகு, திராட்சைரசத்தை அவனுக்குக் கொண்டுவந்து கொடுத்தான், அவன் குடித்தான். அப்பொழுது அவனுடைய தகப்பனாகிய ஈசாக்கு அவனை நோக்கி: “என் மகனே, நீ அருகில் வந்து என்னை முத்தம்செய்” என்றான். அவன் அருகில் போய், அவனை முத்தம்செய்தான்; அப்பொழுது அவனுடைய ஆடைகளின் வாசனையை முகர்ந்து: “இதோ, என் மகனுடைய வாசனை யெகோவா ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல் இருக்கிறது. தேவன் உனக்கு வானத்துப் பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும் திராட்சைரசத்தையும் தந்தருளுவாராக. மக்கள் உன்னைச் சேவித்து தேசங்கள் உன்னை வணங்குவார்களாக; உன் சகோதரர்களுக்கு எஜமானாயிருப்பாய்; உன் தாயின் மகன்கள் உன்னை வணங்குவார்கள்; உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாக இருப்பார்கள்” என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தான். ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடிந்தபோது, யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கைவிட்டுப் புறப்பட்டவுடனே, அவனுடைய சகோதரனாகிய ஏசா வேட்டையாடி வந்து சேர்ந்தான். அவனும் ருசியுள்ள உணவுகளைச் சமைத்து, தன் தகப்பனிடம் கொண்டுவந்து, தகப்பனை நோக்கி: “உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்க, என் தகப்பனார் எழுந்திருந்து, உம்முடைய மகனாகிய நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைச் சாப்பிடும்” என்றான். அப்பொழுது அவனுடைய தகப்பனாகிய ஈசாக்கு: “நீ யார்” என்றான்; அதற்கு அவன்: “நான் உமது மூத்த மகனாகிய ஏசா” என்றான். அப்பொழுது ஈசாக்கு மிகவும் அதிர்ச்சியடைந்து நடுங்கி: “வேட்டையாடி எனக்குக் கொண்டுவந்தானே, அவன் யார்? நீ வருவதற்குமுன்னே அவைகளையெல்லாம் நான் சாப்பிட்டு அவனை ஆசீர்வதித்தேனே, அவனே ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான்” என்றான். ஏசா தன் தகப்பனுடைய வார்த்தைகளைக் கேட்டவுடனே, மிகவும் மனமுடைந்து அதிக சத்தமிட்டு அலறி, தன் தகப்பனை நோக்கி: “என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும்” என்றான். அதற்கு அவன்: “உன் சகோதரன் தந்திரமாக வந்து, உன்னுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான்” என்றான். அப்பொழுது அவன்: “அவனுடைய பெயர் யாக்கோபு என்பது சரியல்லவா? இதோடு இரண்டுமுறை என்னை ஏமாற்றினான்; என் பிறப்புரிமையை எடுத்துக்கொண்டான்; இதோ, இப்பொழுது என் ஆசீர்வாதத்தையும் வாங்கிக்கொண்டான்” என்று சொல்லி, “நீர் எனக்கு ஒரு ஆசீர்வாதத்தையாவது வைத்திருக்கவில்லையா” என்றான். ஈசாக்கு ஏசாவுக்கு மறுமொழியாக: “இதோ, நான் அவனை உனக்கு எஜமானாக வைத்தேன்; அவனுடைய சகோதரர்கள் எல்லோரையும் அவனுக்கு வேலைக்காரராகக் கொடுத்து, அவனைத் தானியத்தினாலும் திராட்சைரசத்தினாலும் ஆதரித்தேன்; இப்பொழுதும் என் மகனே, நான் உனக்கு என்னசெய்வேன் என்றான். ஏசா தன் தகப்பனை நோக்கி: “என் தகப்பனே, இந்த ஒரே ஆசீர்வாதம் மாத்திரமா உம்மிடத்தில் உண்டு? என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்று சொல்லி”, ஏசா சத்தமிட்டு அழுதான். அப்பொழுது அவனுடைய தகப்பனாகிய ஈசாக்கு அவனுக்கு மறுமொழியாக: “உன் குடியிருப்பு பூமியின் சாரத்தோடும் உயர வானத்திலிருந்து இறங்கும் பனியோடும் இருக்கும். உன் ஆயுதத்தால் நீ பிழைத்து, உன் சகோதரனுக்குப் பணிவிடை செய்வாய்; நீ மேற்கொள்ளும் காலம் வரும்போதோ, உன் மேலிருக்கிற அவனுடைய ஆளுகையை உடைத்துப்போடுவாய்” என்றான். யாக்கோபைத் தன் தகப்பன் ஆசீர்வதித்ததால் ஏசா யாக்கோபைப் பகைத்து: “என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் சீக்கிரமாக வரும், அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேன்” என்று ஏசா தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டான். மூத்த மகனாகிய ஏசாவின் வார்த்தைகள் ரெபெக்காளுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது அவள் தன் இளைய மகனாகிய யாக்கோபை அழைத்து: “உன் சகோதரனாகிய ஏசா உன்னைக் கொன்றுபோட நினைத்து, தன்னைத் தேற்றிக்கொள்ளுகிறான். ஆகையால், என் மகனே, நான் சொல்வதைக் கேட்டு, எழுந்து புறப்பட்டு, ஆரானில் இருக்கிற என் சகோதரனாகிய லாபானிடத்திற்கு ஓடிப்போய், உன் சகோதரன் உன்மேல் கொண்ட கோபம் தணியும்வரை சிலநாட்கள் அவனிடத்தில் இரு. உன் சகோதரன் உன்மேல் கொண்ட கோபம் தணிந்து, நீ அவனுக்குச் செய்ததை அவன் மறந்தபின்பு, நான் ஆள் அனுப்பி, அந்த இடத்திலிருந்து உன்னை வரவழைப்பேன்; நான் ஒரே நாளில் உங்கள் இருவரையும் ஏன் இழந்துபோகவேண்டும்” என்றாள். பின்பு, ரெபெக்காள் ஈசாக்கை நோக்கி: “ஏத்தின் பெண்களால் என் வாழ்க்கை எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் பெண்களில் யாக்கோபு ஒரு பெண்ணைத் திருமணம் செய்தால் என் உயிர் இருந்து என்ன பயன்” என்றாள்.

ஆதியாகமம் 27:1-46 பரிசுத்த பைபிள் (TAERV)

ஈசாக்கு வயோதிபன் ஆனான். அவனது கண்கள் பலவீனமாகி அவனால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. ஒரு நாள் தன் மூத்த குமாரன் ஏசாவை அழைத்து “மகனே” என்றான். ஏசா “இங்கே இருக்கிறேன்” என்றான். ஈசாக்கு அவனை நோக்கி, “எனக்கு வயதாகிவிட்டது. விரைவில் நான் செத்துப் போகலாம். எனவே, உன் வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு வேட்டைக்குப் போ. நான் உண்பதற்காக ஒரு மிருகத்தைக் கொன்று வா. நான் விரும்புகிற அந்த உணவைத் தயாரித்து வா. அதை நான் உண்ண வேண்டும். மரிப்பதற்கு முன் உன்னை ஆசீர்வதிப்பேன்” என்றான். எனவே ஏசா வேட்டைக்குப் போனான். ஈசாக்கு ஏசாவிடம் கூறுவதை ரெபெக்காள் கேட்டுக்கொண்டிருந்தாள். இதனை அவள் யாக்கோபிடம் கூறினாள். “கவனி! உன் தந்தை உன் சகோதரனிடம் கூறுவதைக் கேட்டேன். அவர் ‘நான் உண்பதற்கு ஒரு மிருகத்தைக் கொன்று, எனக்கு உணவை சமைத்து வா, நான் உண்பேன். பிறகு நான் மரிப்பதற்கு முன் உன்னை ஆசீர்வதிப்பேன்’ என்றார். எனவே மகனே நான் சொல்வதைக் கவனித்து அதன்படி செய். நீ நமது ஆட்டு மந்தைக்குப் போ இரண்டு இளம் ஆட்டுக் குட்டிகளைக் கொண்டு வா. உன் தந்தை விரும்புவதுபோல நான் சமைத்து தருவேன். பிறகு அதனை உன் தந்தைக்குக் கொடு. அவர் உன்னைத் தான் மரிப்பதற்கு முன்னர் ஆசீர்வதிப்பார்” என்றாள். ஆனால் அவன் தாயிடம், “என் சகோதரனோ உடல் முழுவதும் முடி உள்ளவன். நான் அவ்வாறில்லை. என் தந்தை என்னைத் தொட்டுப் பார்த்தால் நான் ஏசா இல்லை என்பதைத் தெரிந்துகொள்வார். பின் அவர் என்னை ஆசீர்வதிக்கமாட்டார்; சபித்துவிடுவார். நான் ஏமாற்றியதை அறிந்துகொள்வாரே” என்றான். அதனால் ரெபெக்காள் அவனிடம், “ஏதாவது தவறு ஏற்பட்டால் அதற்கான சாபம் என்மேல் விழட்டும், நீ போய் எனக்காக இரண்டு ஆட்டுக் குட்டிகளைக் கொண்டு வா” என்றாள். அதனால் யாக்கோபு வெளியே போய் இரண்டு ஆட்டுக் குட்டிகளைக் கொண்டு வந்தான். அவள் அதனை ஈசாக்கு விரும்பும் வகையில் சிறப்பான முறையில் சமைத்தாள். பின்னர் ரெபெக்காள் ஏசா விரும்பி அணியும் ஆடைகளை தேர்ந்தெடுத்து யாக்கோபுக்கு அணிவித்தாள். ஆட்டுத் தோலை யாக்கோபின் கைகளிலும் கழுத்திலும் கட்டினாள். பிறகு அவள் குமாரன் யாக்கோபிடம் அவள் செய்த ரொட்டியையும் சுவையான உணவையும் கொடுத்து அனுப்பி வைத்தாள். யாக்கோபு தன் தந்தையிடம் போய், “அப்பா” என்று அழைத்தான். அவன் தந்தையோ, “மகனே, நீ யார்?” என்று கேட்டான். யாக்கோபு தன் தந்தையிடம், “நான் ஏசா, உங்கள் மூத்த குமாரன். நீங்கள் சொன்னபடி செய்துள்ளேன். இப்போது உட்கார்ந்து நான் வேட்டையாடிக் கொண்டு வந்த இறைச்சியை உண்ணுங்கள். பிறகு என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள்” என்றான். ஆனால் ஈசாக்கு தன் மகனிடம், “இவ்வளவு வேகமாக நீ எவ்வாறு வேட்டையாடி மிருகத்தைக் கொன்றாய்?” என்று கேட்டான். இதற்கு யாக்கோபு, “உங்கள் தேவனாகிய கர்த்தர் விரைவாக வேட்டையாடி மிருகத்தைக் கொல்ல எனக்கு உதவினார்” என்று சொன்னான். பிறகு ஈசாக்கு யாக்கோபிடம், “என் அருகிலே வா. உன்னைத் தொட்டுப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நீ என் குமாரன் ஏசாவா இல்லையா என்று தெரிந்துகொள்ள முடியும்” என்றான். யாக்கோபு அவனது அருகிலே போனான். ஈசாக்கு அவனைத் தொட்டுப் பார்த்துவிட்டு, “உனது சத்தம் யாக்கோபினுடையதுபோல் உள்ளது. ஆனால் உனது கைகள் ஏசாவின் கைகள் போல் முடி நிறைந்ததாய் இருக்கிறது” என்றான். ஈசாக்கினால் அவனை யாக்கோபு என்று கண்டுகொள்ள முடியவில்லை. எனவே, அவனை ஆசீர்வதித்தான். எனினும் ஈசாக்கு, “உண்மையில் நீ என்னுடைய குமாரன் ஏசாதானா?” என்று கேட்டான். யாக்கோபு, “ஆமாம்” என்று பதில் சொன்னான். பிறகு ஈசாக்கு, “அந்த உணவைக் கொண்டு வா. அதனை உண்டு விட்டு உன்னை ஆசீர்வதிக்கிறேன்” என்றான். எனவே யாக்கோபு உணவைக் கொடுத்தான். அவனும் அதை உண்டான். பின் யாக்கோபு கொஞ்சம் திராட்சை ரசத்தைக் கொடுத்தான். அதையும் அவன் குடித்தான். பிறகு ஈசாக்கு அவனிடம், “மகனே அருகில் வந்து என்னை முத்தமிடு” என்றான். எனவே யாக்கோபு அருகிலே போய் தந்தையை முத்தமிட்டான். ஈசாக்கு அவனது ஆடையை நுகர்ந்து பார்த்து அவனை ஏசா என்றே நம்பி ஆசீர்வதித்தான். “என் குமாரன் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட வயலைப் போன்று மணக்கிறான். கர்த்தர் உனக்கு மிகுதியாக மழையைத் தரட்டும். அதனால் நீ பூமியின் செல்வத்தைப் பெறுவாய். எல்லா ஜனங்களும் உனக்குச் சேவை செய்யட்டும். நாடுகள் உனக்கு அடிபணியட்டும். உன் சகோதரர்களையும் நீ ஆள்வாய். உன் தாயின் குமாரர்கள் உனக்கு அடிபணிந்து கீழ்ப்படிவார்கள். “உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்படுவார்கள். உன்னை ஆசீர்வதிப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்” என்று கூறினான். ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடித்தான். யாக்கோபு தந்தையிடமிருந்து போன உடனேயே ஏசா வேட்டையை முடித்துவிட்டு உள்ளே வந்தான். தந்தைக்கென வேட்டையாடிய மிருகத்தைச் சிறப்பாக சமைத்தான். அதனை எடுத்துக்கொண்டு தந்தையிடம் போனான். “தந்தையே நான் உங்களின் குமாரன் எழுந்திருங்கள். உங்களுக்காக வேட்டையாடி சமைத்துக்கொண்டு வந்த உணவை உண்ணுங்கள். பிறகு என்னை ஆசீர்வதியுங்கள்” என்றான். ஆனால் ஈசாக்கோ “நீ யார்” என்று கேட்டான். “நான்தான் உங்கள் மூத்தகுமாரன் ஏசா” என்றான். அதனால் ஈசாக்கு அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தான். “நீ வருவதற்கு முன்னால் இறைச்சி உணவு சமைத்துக் கொடுத்துவிட்டுப் போனானே அவன் யார்? நான் அதனை உண்டு அவனை ஆசீர்வாதம் செய்தேனே. அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான்” என்றான். ஏசா தந்தையின் வார்த்தைகளைக் கேட்டான். பிறகு கோபமும் ஆத்திரமும் அடைந்து அழுதான். தந்தையிடம் “என்னையும் ஆசீர்வாதம் செய்யுங்கள்” என்றான். ஈசாக்கு அவனிடம், “உன் தம்பி என்னை ஏமாற்றிவிட்டான். அவன் வந்து உனது ஆசீர்வாதத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டான்” என்றான். “அவன் பெயரே யாக்கோபு, (தந்திரசாலி என்றும் பொருள்.) அவனுக்குப் பொருத்தமான பெயர்தான். அவன் இருமுறை என்னை ஏமாற்றி இருக்கிறான். முன்பு முதல் குமாரன் என்ற உரிமைப் பங்கையும் அவன் பெற்றுக்கொண்டான். இப்போதோ எனது ஆசீர்வாதங்களையும் எடுத்துக்கொண்டானே” என்று புலம்பினான். பிறகு, “எனக்கென்று ஏதாவது ஆசீர்வாதம் மீதி இருக்கிறதா” என்று கேட்டான். அதற்கு ஈசாக்கு, “இல்லை. இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது. நான் அவனுக்கு உன்மீது ஆளுகை செலுத்தும்படி ஆசீர்வதித்துவிட்டேன். அவனது சகோதரர்கள் அனைவரும் அவனுக்கு வேலை செய்வார்கள் என்றும் கூறிவிட்டேன். ஏராளமான உணவும் திராட்சைரசமும் பெறுவான் என்றும் ஆசீர்வதித்து விட்டேன். உனக்கென்று தர எதுவும் இல்லையே” என்றான். ஆனால் தொடர்ந்து ஏசா தந்தையை கெஞ்சிக்கொண்டிருந்தான். “அப்பா உங்களிடம் ஒரு ஆசீர்வாதம்தான் உள்ளதா, என்னையும் ஆசீர்வதியுங்கள்” என்று அழுதான். பிறகு ஈசாக்கு “நல்ல நிலத்தில் நீ வாழமாட்டாய். அதிக மழை இருக்காது. நீ உன் பட்டயத்தால்தான் வாழ்வாய். உன் தம்பிக்கு நீ அடிமையாகவும் இருக்க வேண்டும். ஆனால் விடுதலைக்காகச் சண்டையிட்டு அவனது கட்டுகளை உடைத்துவிடுவாய்” என்றார். அதற்குப் பின் ஏசா யாக்கோபுக்கு எதிராக வஞ்கசம் கொண்டான். ஏனென்றால் தந்தையின் ஆசீர்வாதத்தை அவன் பெற்றுள்ளான். “என் தந்தை விரைவில் மரித்துபோவார். அதனால் நான் சோகமடைவேன். அதற்குப் பின் நான் யாக்கோபை கொன்றுவிடுவேன்” என்று தனக்குள் ஏசா கூறிக்கொண்டான். யாக்கோபை கொல்ல வேண்டும் என்ற ஏசாவின் திட்டத்தை ரெபெக்காள் அறிந்துகொண்டாள். அவள் யாக்கோபை அழைத்து அவனிடம், “உன் சகோதரன் ஏசா உன்னைக் கொல்லத் திட்டமிடுகிறான். எனவே நான் சொல்கிறபடி நீ செய். ஆரானில் இருக்கிற என் சகோதரன் லாபானிடம் ஓடிச் சென்று அவனோடு இரு. உன் சகோதரனின் கோபம் தீரும்வரை அங்கேயே இரு. கொஞ்சக் காலம் ஆனதும் உன் சகோதரன் நீ செய்ததை மறந்துவிடுவான். பிறகு உன்னை இங்கு அழைக்க ஒரு வேலைக்காரனிடம் செய்தியைச் சொல்லி அனுப்புவேன். ஒரே நாளில் எனது இரண்டு குமாரர்களையும் நான் இழக்க விரும்பவில்லை” என்றாள். பிறகு ரெபெக்காள் ஈசாக்கிடம், “உமது குமாரன் ஏசா ஏத்தியர் பெண்களை மணந்துகொண்டான். நான் அந்தப் பெண்களால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஏனெனில் அவர்கள் நம் இனத்தவர்களல்ல. யாக்கோபும் இதுபோல் மணம் செய்தால் நான் மரித்துப்போவேன்” என்றாள்.

ஆதியாகமம் 27:1-46 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஈசாக்கு முதிர்வயதானதினால் அவன் கண்கள் இருளடைந்து பார்வையற்றுப் போனபோது, அவன் தன் மூத்த குமாரனாகிய ஏசாவை அழைத்து, என் மகனே என்றான்; அவன், இதோ, இருக்கிறேன் என்றான். அப்பொழுது அவன்: நான் முதிர்வயதானேன், என் மரணம் இன்ன நாளில் என்று அறியேன். ஆகையால், நீ உன் ஆயுதங்களாகிய உன் அம்பறாத்தூணியையும் உன் வில்லையும் எடுத்துக்கொண்டு வனத்துக்குப்போய், எனக்காக வேட்டையாடி, அதை எனக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்து, நான் புசிக்கவும், நான் மரணமடையுமுன்னே என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கவும், என்னிடத்தில் கொண்டுவா என்றான். ஈசாக்கு தன் குமாரனாகிய ஏசாவோடே பேசுகையில், ரெபெக்காள் கேட்டுக்கொண்டிருந்தாள். ஏசா வேட்டையாடிக்கொண்டுவரும்படி வனத்துக்குப் போனான். அப்பொழுது ரெபெக்காள் தன் குமாரனாகிய யாக்கோபை நோக்கி: உன் தகப்பன் உன் சகோதரனாகிய ஏசாவை அழைத்து: நான் புசித்து, எனக்கு மரணம் வருமுன்னே, கர்த்தரை முன்னிட்டு உன்னை ஆசீர்வதிக்கும்படி, நீ எனக்காக வேட்டையாடி, அதை எனக்கு ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்துக்கொண்டுவா என்று சொல்லக்கேட்டேன். ஆகையால், என் மகனே, என் சொல்லைக் கேட்டு, நான் உனக்குக் கற்பிக்கிறபடி செய். நீ ஆட்டுமந்தைக்குப் போய், இரண்டு நல்ல வெள்ளாட்டுக்குட்டிகளைக் கொண்டுவா; நான் அவைகளை உன் தகப்பனுக்குப் பிரியமானபடி ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைப்பேன். உன் தகப்பன் தாம் மரணமடையுமுன்னே உன்னை ஆசீர்வதிக்குபடி அவர் புசிப்பதற்கு நீ அதை அவரிடத்தில் கொண்டுபோகவேண்டும் என்றாள். அதற்கு யாக்கோபு தன் தாயாகிய ரெபெக்காளை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா ரோமம் மிகுந்தவன், நான் ரோமமில்லாதவன். ஒருவேளை என் தகப்பன் என்னைத்தடவிப்பார்ப்பார்; அப்பொழுது நான் அவருக்கு எத்தனாய்க் காணப்பட்டு, என்மேல் ஆசீர்வாதத்தை அல்ல, சாபத்தை வரப்பண்ணிக்கொள்வேனே என்றான். அதற்கு அவன் தாய்: என் மகனே, உன்மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும்; என் சொல்லைமாத்திரம் கேட்டு, நீ போய், அவைகளை என்னிடத்தில் கொண்டுவா என்றாள். அவன் போய் அவைகளைப் பிடித்து, தன் தாயினிடத்தில் கொண்டுவந்தான்; அவனுடைய தாய் அவன் தகப்பனுக்குப்பிரியமானபடி ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்தாள். பின்பு, ரெபெக்காள் வீட்டிலே தன்னிடத்தில் இருந்த தன் மூத்த மகனாகிய ஏசாவின் நல்ல வஸ்திரங்களை எடுத்து, தன் இளைய மகனாகிய யாக்கோபுக்கு உடுத்தி, வெள்ளாட்டுக்குட்டிகளின் தோலை அவன் கைகளிலேயும் ரோமமில்லாத அவன் கழுத்திலேயும் போட்டு; தான் சமைத்த ருசியுள்ள பதார்த்தங்களையும் அப்பங்களையும் தன் குமாரனாகிய யாக்கோபின் கையிலே கொடுத்தாள். அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன்; நீ யார், என் மகனே என்றான். அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனை நோக்கி: நான் உமது மூத்த மகனாகிய ஏசா; நீர் எனக்குச் சொன்னபடியே செய்தேன்; உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, நீர் எழுந்து உட்கார்ந்து, நான் வேட்டையாடிக்கொண்டு வந்ததைப் புசியும் என்றான். அப்பொழுது ஈசாக்குத் தன் குமாரனை நோக்கி: என் மகனே, இது உனக்கு இத்தனை சீக்கிரமாய் எப்படி அகப்பட்டது என்றான். அவன்: உம்முடைய தேவனாகிய கர்த்தர் எனக்கு நேரிடப்பண்ணினார் என்றான். அப்பொழுது ஈசாக்கு யாக்கோபை நோக்கி: என் மகனே, நீ என் குமாரனாகிய ஏசாதானோ அல்லவோ என்று நான் உன்னைத் தடவிப்பார்க்கும்படி கிட்ட வா என்றான். யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கண்டையில் கிட்டப் போனான்; அவன் இவனைத் தடவிப்பார்த்து: சத்தம் யாக்கோபின் சத்தம், கைகளோ ஏசாவின் கைகள் என்று சொல்லி, அவனுடைய கைகள் அவன் சகோதரனாகிய ஏசாவின் கைகளைப்போல ரோமமுள்ளவைகளாயிருந்தபடியினாலே, இன்னான் என்று அறியாமல், அவனை ஆசீர்வதித்து, நீ என் குமாரனாகிய ஏசாதானோ என்றான்; அவன்: நான்தான் என்றான். அப்பொழுது அவன்: என் குமாரனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்ததை நான் புசித்து, என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கும்படி அதை என்கிட்டக் கொண்டுவா என்றான்; அவன் அதைக் கிட்டக் கொண்டுபோனான்; அப்பொழுது அவன் புசித்தான்; பிற்பாடு, திராட்சரசம் அவனுக்குக் கொண்டுவந்து கொடுத்தான், அவன் குடித்தான். அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனை நோக்கி: என் மகனே, நீ கிட்ட வந்து என்னை முத்தஞ்செய் என்றான். அவன் கிட்டப் போய், அவனை முத்தஞ்செய்தான்; அப்பொழுது அவனுடைய வஸ்திரங்களின் வாசனையை மோந்து: இதோ, என் குமாரனுடைய வாசனை கர்த்தர் ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல் இருக்கிறது. தேவன் உனக்கு வானத்துப் பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும் திராட்சரசத்தையும் தந்தருளுவாராக. ஜனங்கள் உன்னைச் சேவிக்கவும் ஜாதிகள் உன்னை வணங்கவும்கடவர்கள்; உன் சகோதரருக்கு எஜமானாயிருப்பாய்; உன் தாயின் பிள்ளைகள் உன்னை வணங்குவார்கள்; உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாய் இருப்பார்கள் என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தான். ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடிந்தபோது, யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டவுடனே, அவன் சகோதரனாகிய ஏசா வேட்டையாடி வந்து சேர்ந்தான். அவனும் ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்து, தன் தகப்பனண்டைக்குக் கொண்டுவந்து, தகப்பனை நோக்கி: உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, என் தகப்பனார் எழுந்திருந்து, உம்முடைய குமாரனாகிய நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைப் புசிப்பாராக என்றான். அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு: நீ யார் என்றான்; அதற்கு அவன்: நான் உமது மூத்த மகனாகிய ஏசா என்றான். அப்பொழுது ஈசாக்கு மிகவும் பிரமித்து நடுங்கி: வேட்டையாடி எனக்குக் கொண்டுவந்தானே, அவன் யார்? நீ வருமுன்னே அவையெல்லாவற்றிலும் நான் புசித்து அவனை ஆசீர்வதித்தேனே, அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான் என்றான். ஏசா தன் தகப்பனுடைய வார்த்தைகளைக் கேட்டவுடனே, மிகவும் மனங்கசந்து உரத்த சத்தமிட்டு அலறி, தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்றான். அதற்கு அவன்: உன் சகோதரன் தந்திரமாய் வந்து, உன்னுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான் என்றான். அப்பொழுது அவன்: அவன் பெயர் யாக்கோபு என்னப்படுவது சரியல்லவா? இதோடே இரண்டுதரம் என்னை மோசம் போக்கினான்; என் சேஷ்ட புத்திரபாகத்தை எடுத்துக்கொண்டான்; இதோ, இப்பொழுது என் ஆசீர்வாதத்தையும் வாங்கிக்கொண்டான் என்று சொல்லி, நீர் எனக்கு ஒரு ஆசீர்வாதத்தையாகிலும் வைத்துவைக்கவில்லையா என்றான். ஈசாக்கு ஏசாவுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, நான் அவனை உனக்கு எஜமானாக வைத்தேன்; அவன் சகோதரர் எல்லாரையும் அவனுக்கு ஊழியக்காரராகக் கொடுத்து, அவனைத் தானியத்தினாலும் திராட்சரசத்தினாலும் ஆதரித்தேன்; இப்பொழுதும் என் மகனே, நான் உனக்கு என்னசெய்வேன் என்றான். ஏசா தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, இந்த ஒரே ஆசீர்வாதம் மாத்திரமா உம்மிடத்தில் உண்டு? என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்று சொல்லி, ஏசா சத்தமிட்டு அழுதான். அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனுக்குப் பிரதியுத்தரமாக: உன் வாசஸ்தலம் பூமியின் சாரத்தோடும் உயர வானத்திலிருந்து இறங்கும் பனியோடும் இருக்கும். உன் பட்டயத்தினாலே நீ பிழைத்து, உன் சகோதரனைச் சேவிப்பாய்; நீ மேற்கொள்ளும் காலம் வரும்போதோ, உன் கழுத்தில் இருக்கிற அவனுடைய நுகத்தடியை முறித்துப்போடுவாய் என்றான். யாக்கோபைத் தன் தகப்பன் ஆசீர்வதித்ததினிமித்தம் ஏசா யாக்கோபைப் பகைத்து: என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் சீக்கிரமாய் வரும், அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேன் என்று ஏசா தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டான். மூத்த மகனாகிய ஏசாவின் வார்த்தைகள் ரெபெக்காளுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது அவள் தன் இளைய மகனாகிய யாக்கோபை அழைத்து: உன் சகோதரனாகிய ஏசா உன்னைக் கொன்றுபோட நினைத்து, தன்னைத் தேற்றிக்கொள்ளுகிறான். ஆகையால், என் மகனே, நான் சொல்வதைக் கேட்டு, எழுந்து புறப்பட்டு, ஆரானில் இருக்கிற என் சகோதரனாகிய லாபானிடத்துக்கு ஓடிப்போய், உன் சகோதரன் உன்மேல் வைத்த கோபம் தணியுமட்டும் சிலநாள் அவனிடத்திலே இரு. உன் சகோதரன் உன்மேல் வைத்த கோபம் தணிந்து, நீ அவனுக்குச் செய்ததை அவன் மறந்தபின், நான் ஆள் அனுப்பி, அவ்விடத்திலிருந்து உன்னை அழைப்பிப்பேன்; நான் ஒரே நாளில் உங்கள் இருவரையும் ஏன் இழந்துபோகவேண்டும் என்றாள். பின்பு, ரெபெக்காள் ஈசாக்கை நோக்கி: ஏத்தின் குமாரத்திகளினிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் குமாரத்திகளில் யாக்கோபு ஒரு பெண்ணைக் கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன என்றாள்.