எசேக்கியேல் 36:24-30

எசேக்கியேல் 36:24-30 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“ ‘நான் உங்களை நாடுகளிலிருந்து வெளியே கொண்டுவருவேன். எல்லா நாடுகளிருந்தும் உங்களை நான் கூட்டிச்சேர்த்து, மீண்டும் உங்கள் சொந்த நாட்டுக்குக் கொண்டுவருவேன். சுத்தமான தண்ணீரை நான் உங்கள்மீது தெளிப்பேன். நீங்கள் சுத்தமடைவீர்கள். உங்கள் எல்லா அசுத்தங்களிலிருந்தும், உங்கள் சகல விக்கிரகங்களிலிருந்தும் நான் உங்களைச் சுத்தமாக்குவேன். நான் உங்களுக்குப் புதியதோர் இருதயத்தைக் கொடுப்பேன். ஒரு புதிய ஆவியையும் கொடுப்பேன். கல்லான உங்கள் இருதயத்தை நீக்கிவிட்டு, சதையான இருதயத்தைக் கொடுப்பேன். மேலும் நான் என் ஆவியானவரை உங்களுக்குள் இருக்கும்படி செய்து, நீங்கள் என் சட்டங்களைக் கைக்கொள்ளக் கவனமாயிருக்கவும், என் விதிமுறைகளைப் பின்பற்றவும் செய்வேன். உங்கள் முற்பிதாக்களுக்கு நான் கொடுத்த நாட்டில் நீங்கள் வசிப்பீர்கள். நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள், நான் உங்கள் இறைவனாயிருப்பேன். உங்களுடைய சகல அசுத்தங்களிலிருந்தும் உங்களை நான் விடுவிப்பேன். நான் தானியத்தை விளையச்செய்து, பெருகப்பண்ணி, உங்கள்மீது பஞ்சம் வராதிருக்கப்பண்ணுவேன். நீங்கள் நாடுகளின் மத்தியில் இனியொருபோதும் பஞ்சத்தினால் வாடும் அவமானத்திற்குள்ளாகாதபடி, மரங்களின் பழங்களையும், வயலின் விளைச்சல்களையும் பெருகப்பண்ணுவேன்.

எசேக்கியேல் 36:24-30 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நான் உங்களை அந்நிய மக்களிடத்திலிருந்து அழைத்து, உங்களைச் எல்லா தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்களுடைய சொந்த தேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன். அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான தண்ணீர் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா அசுத்தமான சிலைகளையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள். உங்களுக்கு புதிய இருதயத்தைக் கொடுத்து, உங்களுடைய உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் உடலிலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். உங்களுடைய உள்ளத்திலே என்னுடைய ஆவியை வைத்து, உங்களை என்னுடைய கட்டளைகளில் நடக்கவும் என்னுடைய நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்செய்வேன். உங்களுடைய முன்னோர்களுக்கு நான் கொடுத்த தேசத்திலே நீங்கள் குடியிருப்பீர்கள்; நீங்கள் என்னுடைய மக்களாக இருப்பீர்கள், நான் உங்களுடைய தேவனாக இருந்து, உங்களுடைய அசுத்தங்களையெல்லாம் நீக்கி, உங்களைக் காப்பாற்றி, உங்கள்மேல் பஞ்சத்தைக் கட்டளையிடாமல், கோதுமையை வரவழைத்து, அதைப் பெருகச்செய்து, நீங்கள் இனிமேல் தேசங்களுக்குள்ளே பஞ்சத்தினால் உண்டாகும் நிந்தையை அடையாதபடி, மரத்தின் பழங்களையும் வயலின் பலன்களையும் பெருகச்செய்வேன்.

எசேக்கியேல் 36:24-30 பரிசுத்த பைபிள் (TAERV)

தேவன் சொன்னார்: “நான் அந்நாடுகளிலிருந்து உங்களை வெளியே கொண்டுவந்து, ஒன்று சேர்த்து, உங்கள் சொந்த நாட்டிற்கு அழைத்து வருவேன். பின்னர் நான் உங்கள் மேல் சுத்தமான தண்ணீரைத் தெளிப்பேன். நான் உங்களை சுத்தமாக்குவேன். நான் உங்களது எல்லா அசுத்தங்களையும் கழுவுவேன். நான் உங்களது பாவங்களாலும், அருவருப்பான விக்கிரகங்களாலும் வந்த அசுத்த்தையும் கழுவுவேன். நான் உங்களில் புதிய ஆவியை வைத்து, உங்கள் சிந்தனை முறையையும் மாற்றுவேன். நான் உங்கள் உடலில் உள்ள கல் போன்ற இருதயத்தை எடுத்துவிட்டு மென்மையான மனித இருதயத்தைக் கொடுப்பேன். நான் உங்களுக்குள் எனது ஆவியை வைப்பேன். நான் உங்களை மாற்றுவேன். எனவே நீங்கள் என் சட்டங்களுக்கு அடிபணிவீர்கள். நீங்கள் கவனமாக என் கட்டளைகளுக்கு அடிபணிவீர்கள். பின்னர் நீங்கள் உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட நாட்டில் வாழ்வீர்கள். நீங்கள் என் ஜனங்களாயிருப்பீர்கள். நான் உங்களது தேவனாயிருப்பேன். நான் உங்களைப் பாதுகாப்பேன், அசுத்தமாகாமல் இரட்சிப்பேன். நான் தானியத்தை முளைக்கும்படி கட்டளையிடுவேன். உங்களுக்கு விரோதமாகப் பஞ்சம் ஏற்படும்படிச் செய்யமாட்டேன். நான் உங்கள் மரங்களிலிருந்து நிறைய பழங்கள் கிடைக்கும்படியும் உங்கள் வயல்களிலிருந்து நல்ல விளைச்சல் கிடைக்கும்படியும் செய்வேன். எனவே நீங்கள் பிற நாடுகளில் பசியால் அவமானப்பட்டதைப்போன்று இனிமேல் மீண்டும் படமாட்டீர்கள்.

எசேக்கியேல் 36:24-30 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நான் உங்களைப் புறஜாதிகளிடத்திலிருந்து அழைத்து, உங்களைச் சகல தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்கள் சுயதேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன். அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள். உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன். உங்கள் பிதாக்களுக்கு நான் கொடுத்த தேசத்திலே நீங்கள் குடியிருப்பீர்கள்; நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருந்து, உங்கள் அசுத்தங்களையெல்லாம் நீக்கி, உங்களை இரட்சித்து, உங்கள்மேல் பஞ்சத்தைக் கட்டளையிடாமல், கோதுமையை வரவழைத்து, அதைப் பெருகப்பண்ணி, நீங்கள் இனிமேல் ஜாதிகளுக்குள்ளே பஞ்சத்தினாலுண்டாகும் நிந்தையை அடையாதபடிக்கு, விருட்சத்தின் கனிகளையும் வயலின் பலன்களையும் பெருகப்பண்ணுவேன்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்