உபாகமம் 28:38-48

உபாகமம் 28:38-48 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நீங்கள் அதிக விதைகளை விதைப்பீர்கள். ஆனால் சொற்ப அறுவடையே பெறுவீர்கள். ஏனெனில் வெட்டுக்கிளிகள் அவற்றைத் தின்றுவிடும். நீங்கள் திராட்சைத் தோட்டங்களை நாட்டி, அவற்றைப் பேணி வளர்ப்பீர்கள். ஆனால் அவற்றிலிருந்து பழங்களைச் சேர்க்கவோ, இரசத்தைக் குடிக்கவோமாட்டீர்கள். ஏனெனில் புழுக்கள் அவற்றைத் தின்றுவிடும். நாடெங்கும் ஒலிவமரங்கள் நிற்கும். ஆனால் உங்கள் தேவைக்கு எண்ணெய் இராது. ஏனெனில் ஒலிவக்காய்கள் உதிர்ந்துவிடும். உங்களுக்கு மகன்களும், மகள்களும் இருப்பார்கள். ஆனால் நீங்கள் அவர்களை வைத்திருக்கமாட்டீர்கள். ஏனெனில் அவர்கள் சிறைபிடிக்கப்படுவார்கள். உங்கள் மரங்களையும், நிலத்தின் பயிர்களையும் வெட்டுக்கிளிக்கூட்டங்கள் அரித்துவிடும். உங்கள் மத்தியில் வாழும் அந்நியன் உங்களைவிட மேலும் மேலும் உயர்நிலையடைவான். நீங்களோ மேலும் மேலும் கீழ்நிலையடைவீர்கள். அவன் உங்களுக்குக் கடன் கொடுப்பான், நீங்கள் அவனுக்குக் கடன் கொடுக்கமாட்டீர்கள். அவன் தலையாயிருப்பான், நீங்களோ வாலாயிருப்பீர்கள். இந்தச் சாபங்கள் எல்லாம் உங்கள்மேல் வரும். நீங்கள் அழிந்துபோகும்வரை அவை உங்களைப் பின்தொடர்ந்து பற்றிப்பிடிக்கும். நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமலும், அவர் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளையும் விதிமுறைகளையும் கைக்கொள்ளாமலும் போனபடியினால் இப்படி நடக்கும். இவை உங்களுக்கும், உங்கள் சந்ததிக்கும் என்றென்றைக்கும் ஒரு அடையாளமும், அதிசயமுமாய் இருக்கும். நீங்கள் செழிப்பாய் இருந்த காலத்தில், உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு நீங்கள் மகிழ்ச்சியுடனும், சந்தோஷத்துடனும் பணிசெய்யவில்லை. ஆகையால் நீங்கள் பசியோடும், தாகத்தோடும், நிர்வாணத்தோடும், கொடிய வறுமையோடும் யெகோவா உங்களுக்கு எதிராக அனுப்பும் பகைவருக்குப் பணிசெய்வீர்கள். அவர் உங்களை அழித்தொழிக்கும் வரைக்கும் உங்கள் கழுத்தில் இரும்பு நுகத்தை வைப்பார்.

உபாகமம் 28:38-48 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மிகுந்த விதையை வயலுக்குக் கொண்டுபோவாய், கொஞ்சம் அறுப்பாய்; வெட்டுக்கிளி அதை அழித்துப்போடும். திராட்சைத்தோட்டங்களை நாட்டிப் பயிரிடுவாய், ஆனாலும் நீ திராட்சைரசம் குடிப்பதும் இல்லை, திராட்சைப்பழங்களைச் சேர்ப்பதும் இல்லை; பூச்சி அதைத் தின்றுவிடும். ஒலிவமரங்கள் உன்னுடைய எல்லைகளிலெங்கும் இருக்கும், ஆனாலும் அதின் எண்ணெயை நீ பூசிக்கொள்வதில்லை; உன் ஒலிவமரத்தின் பிஞ்சுகள் உதிர்ந்துபோகும். நீ மகன்களையும் மகள்களையும் பெறுவாய், ஆனாலும் அவர்கள் உன்னோடுகூட இருக்கமாட்டார்கள்; அவர்கள் சிறைப்பட்டுப்போவார்கள். உன் மரங்களெல்லாவற்றையும் உன் நிலத்தின் பலன்களையும் வெட்டுக்கிளி அழித்துப்போடும். உன் நடுவிலிருக்கிற அந்நியன் உனக்கு மேலாக மேன்மேலும் உயர்ந்திருப்பான்; நீ மிகவும் தாழ்த்தப்பட்டுப்போவாய். அவன் உன்னிடத்தில் கடன்படமாட்டான், நீ அவனிடத்தில் கடன்படுவாய்; அவன் உனக்குத் தலைவனாயிருப்பான், நீ அவனுக்குக் கீழாயிருப்பாய். உன் தேவனாகிய யெகோவா உனக்கு கொடுத்த அவருடைய கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளும்படி, நீ அவர் சத்தத்தை கேட்காதால், இந்தச் சாபங்கள் எல்லாம் உன்மேல் வந்து, நீ அழியும்வரை உன்னைத் தொடர்ந்து பிடித்து, உன்னிலும் உன் சந்ததியிலும் என்றைக்கும் அடையாளமாகவும் அற்புதமாகவும் இருக்கும். “சகலமும் நிறைவாக இருக்கும்போது, நீ மனமகிழ்ச்சியோடும் ஆனந்தத்தோடும் உன் தேவனாகிய யெகோவாவை வணங்காததால், சகலமும் குறைவுபட்டு, பட்டினியோடும், தாகத்தோடும், நிர்வாணத்தோடும், யெகோவா உனக்கு விரோதமாக அனுப்பும் எதிரிகளுக்கு வேலைசெய்வாய்; அவர்கள் உன்னை முற்றிலும் அழிக்கும்வரை, இரும்பு நுகத்தை உன் கழுத்தின்மேல் போடுவார்கள்.

உபாகமம் 28:38-48 பரிசுத்த பைபிள் (TAERV)

“உங்கள் வயல்கள் ஏராளமாக தானியங்ளை விளைவித்தாலும், உங்களது அறுவடை சிறியதாக இருக்கும். ஏனென்றால், வெட்டுக்கிளிகள் உங்கள் அறுவடையைத் தின்றுவிடும். நீ திராட்சைச் செடிகளைப் பயிர்செய்வாய். அவற்றுக்காகக் கடினமாக வேலை செய்வாய். ஆனால், நீ திராட்சைப் பழங்களைப் பறிக்கமாட்டாய். திராட்சைரசத்தையும் குடிக்கமாட்டாய். ஏனென்றால், புழுக்கள் அவற்றைத் தின்றுவிடும். உனது நிலத்தில் ஒலிவ மரங்கள் எங்கெங்கும் வளர்ந்திருக்கும். ஆனால், நீ பயன்படுத்திட ஒலிவ எண்ணெயைப் பெறமாட்டாய். ஏனென்றால், ஒலிவ மரங்களில் பிஞ்சுகள் கீழே விழுந்து அழுகிப்போகும். உனக்கு குமாரர்களும், குமாரத்திகளும் இருப்பார்கள், ஆனால் நீ அவர்களைப் பாதுகாக்க முடியாது. ஏனென்றால், அவர்கள் சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டு செல்லப்படுவார்கள். வெட்டுக் கிளிகள் உனது வயலில் உள்ள விளைச்சலையும், மரங்களையும் அழித்துவிடும். உங்களிடையே வாழ்கிற பிற நாட்டு ஜனங்கள் மேலும், மேலும் அதிகாரத்தைப் பெறுவார்கள். நீயோ உனக்கிருந்த அதிகராத்தையும் இழப்பாய். பிற நாட்டுக்காரர்கள் உனக்குக் கடன்தர பணம் வைத்திருப்பார்கள். ஆனால் அவர்களுக்குக் கடன் கொடுக்க உன்னிடம் பணம் இருக்காது. (தலை உடலைக் கட்டுப்படுத்துவது போன்று) அவர்கள் உன்னைக் கட்டுப்படுத்துவார்கள். நீ வாலைப் போன்று இருப்பாய். “இந்த சாபங்கள் எல்லாம் உனக்கு வரும். நீ அழியும்வரை இவை உன்னைத் துரத்திப் பிடிக்கும். ஏனென்றால், நீ உனது தேவனாகிய கர்த்தர் சொன்னவற்றைக் கவனிக்கவில்லை. அவர் கொடுத்த சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் நீ அடிபணியவில்லை. உன்னையும் உனது சந்ததிகளையும் தேவன் நியாயந்தீர்த்திருக்கிறார் என்று ஜனங்களுக்கு இந்த சாபங்கள் காட்டும். உங்களுக்கு ஏற்படுகிற பயங்கரத்தைப்பற்றி ஜனங்கள் வியப்படைவார்கள். “உனது தேவனாகிய கர்த்தர் உனக்குப் பல ஆசீர்வாதங்களைக் கொடுத்தார். ஆனால் நீ அவருக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கொண்ட மனதோடு சேவை செய்யவில்லை. ஆகவே கர்த்தர் அனுப்பிவைத்த உனது பகைவர்களுக்கு நீ சேவை செய்வாய். நீ பசியும், தாகமும், நிர்வாணமும், ஏழ்மையும் அடைவாய். கர்த்தர் உன்மீது நீக்க முடியாத சுமையை வைப்பார். அவர் உன்னை அழிக்கும்வரை அந்தச் சுமையை நீ சுமப்பாய்.

உபாகமம் 28:38-48 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மிகுந்த விதையை வயலுக்குக் கொண்டுபோவாய், கொஞ்சம் அறுப்பாய்; வெட்டுக்கிளி அதைப் பட்சித்துப்போடும். திராட்சத்தோட்டங்களை நாட்டிப் பயிரிடுவாய், ஆனாலும் நீ திராட்சரசம் குடிப்பதும் இல்லை, திராட்சப்பழங்களைச் சேர்ப்பதும் இல்லை; பூச்சி அதைத் தின்று போடும். ஒலிவமரங்கள் உன் எல்லைகளிலெங்கும் இருக்கும், ஆனாலும் அதின் எண்ணெயை நீ பூசிக்கொள்வதில்லை; உன் ஒலிவமரத்தின் பிஞ்சுகள் உதிர்ந்துபோகும். நீ குமாரரையும் குமாரத்திகளையும் பெறுவாய், ஆனாலும் அவர்கள் உன்னோடேகூட இரார்கள்; அவர்கள் சிறைப்பட்டுப்போவார்கள். உன் மரங்களெல்லாவற்றையும் உன் நிலத்தின் கனிகளையும் விட்டில் பட்சித்துப்போடும். உன் நடுவிலிருக்கிற அந்நியன் உனக்கு மேற்பட்டு மேன்மேலும் உயர்ந்திருப்பான்; நீ மிகவும் தாழ்த்தப்பட்டுப்போவாய். அவன் உன்னிடத்தில் கடன்படான், நீ அவனிடத்தில் கடன்படுவாய்; அவன் தலையாயிருப்பான், நீ வாலாயிருப்பாய். உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு விதித்த அவருடைய கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளும்படி, நீ அவர் சத்தத்திற்குச் செவிகொடாதபடியினால், இந்தச் சாபங்கள் எல்லாம் உன்மேல் வந்து, நீ அழியுமட்டும் உன்னைத் தொடர்ந்து பிடித்து, உன்னிலும் உன் சந்ததியிலும் என்றைக்கும் அடையாளமாகவும் அற்புதமாகவும் இருக்கும். சகலமும் பரிபூரணமாயிருக்கையில், நீ மனமகிழ்ச்சியோடும் களிப்போடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவியாமற்போனதினிமித்தம், சகலமும் குறைவுபட்டு, பட்டினியோடும் தாகத்தோடும் நிர்வாணத்தோடும், கர்த்தர் உனக்கு விரோதமாய் அனுப்பும் சத்துருக்களைச் சேவிப்பாய்; அவர்கள் உன்னை அழித்துத் தீருமட்டும், இரும்பு நுகத்தடியை உன் கழுத்தின்மேல் போடுவார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்