உபாகமம் 11:18-23

உபாகமம் 11:18-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆகையால் நீங்கள், என்னுடைய இந்த வார்த்தைகளை உங்கள் இருதயங்களிலும், உங்கள் மனங்களிலும் பதித்துக்கொள்ளுங்கள். அவற்றை உங்கள் கைகளிலும், நெற்றிகளிலும் அடையாளச் சின்னங்களாகக் கட்டிக்கொள்ளுங்கள். அவற்றை உங்கள் பிள்ளைகளுக்கும் போதியுங்கள். நீங்கள் வீட்டில் இருக்கும்போதும், தெருவில் நடக்கும்போதும், படுத்திருக்கும்போதும், எழுந்திருக்கும்போதும் அவற்றைக்குறித்துப் பேசுங்கள். அவைகளை உங்கள் வீட்டுக் கதவு நிலைகளிலும், முற்றத்தின் வாசல்களிலும் எழுதிவையுங்கள். ஆகையால் பூமிக்குமேல் வானம் அநேக நாட்கள் நீடித்திருக்கிறதுபோல, யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று வாக்களித்த அந்த நாட்டில் உங்கள் நாட்களும், உங்கள் பிள்ளைகளின் நாட்களும் அநேகமாய் நீடித்திருக்கும். நீங்கள் பின்பற்றும்படி நான் கொடுக்கும் கட்டளைகளை நீங்கள் கவனமாகக் கைக்கொண்டால், அதாவது உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் அன்புகூர்ந்து, அவருடைய வழிகளில் நடந்து, அவரை உறுதியாய்ப் பற்றிக்கொண்டால், யெகோவா உங்களுக்கு முன்பாக அந்த நாட்டினர் அனைவரையும் துரத்திவிடுவார்; நீங்கள் உங்களைவிடப் பெரியதும், வலியதுமான நாடுகளை அவர்களுக்குரிய இடத்திலிருந்து துரத்துவீர்கள்.

உபாகமம் 11:18-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆகையால் யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுக்கு வாக்களித்த தேசத்தில் உங்களுடைய நாட்களும், உங்களுடைய பிள்ளைகளின் நாட்களும், பூமியின்மேல் வானம் இருக்கும்வரை நீடித்திருப்பதற்கு, நீங்கள் என் வார்த்தைகளை உங்களுடைய இருதயத்திலும் உங்களுடைய ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து, அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசுவீர்களாக. அவைகளை உங்களுடைய வீட்டு நிலைகளிலும் உங்களுடைய வாசல்களிலும் எழுதுவீர்களாக. நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவிடத்தில் அன்புசெலுத்தி, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவரைப் பற்றிக்கொண்டிருக்கும்படி, நான் உங்களுக்குச் செய்யக் கற்பிக்கிற இந்தக் கற்பனைகளையெல்லாம் கவனமாகக் கைக்கொள்வீர்களானால், யெகோவா உங்களுக்கு முன்பாக அந்த மக்களையெல்லாம் துரத்திவிடுவார்; உங்களைப்பார்க்கிலும் எண்ணிக்கையில் அதிகமும், பலத்ததுமான மக்களை நீங்கள் துரத்துவீர்கள்.

உபாகமம் 11:18-23 பரிசுத்த பைபிள் (TAERV)

“நான் இன்று உங்களுக்குத் தருகிற இந்தக் கட்டளைகளை எப்போதும் உங்கள் உள்ளங்களில் வையுங்கள். அவற்றை எழுதுங்கள், கட்டுங்கள், அணிந்துகொண்டு, அல்லது உங்கள் கண்களில் படும்படி எப்போதும் உங்களின் ஞாபகத்தில் இருக்கும்படி வைத்துக்கொள்ள வேண்டும். இந்தச் சட்டங்களை உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். உங்கள் வீடுகளில் இருக்கும்போதும், வீதிகளில் நடக்கும்போது, தூங்குவதற்கு முன்பும், எழுந்தப் பின்பும், எப்போதும் இவற்றைப் பற்றியேப் பேச வேண்டும். உங்கள் வீட்டுக் கதவுகள் மீதும், வாசல்களிலும் இந்தக் கட்டளைகளை எழுதி வையுங்கள். அப்போது உங்கள் முற்பிதாக்களிடம் கர்த்தர் கொடுத்த வாக்கின்படி உங்களுக்குச் சுதந்திரமாக வாழக் கொடுத்த நிலத்தில் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நீண்ட காலம் வாழலாம். இந்த பூமியின்மேல் வானம் உள்ளளவும் நீங்கள் நீண்டகாலம் வாழலாம். “நான் உங்களிடம் கூறியவற்றைப் பின்பற்றுவதிலும், ஒவ்வொரு கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவதிலும் எச்சரிக்கையுடன் இருங்கள்! உங்கள் தேவனாகிய கர்த்தர் மீது அன்பு செலுத்துங்கள். அவரது எல்லா வழிகளையும் பின்பற்றுங்கள். அவருக்கு உண்மையானவர்களாய் இருங்கள். பின் உங்கள் தேசத்திற்குள் செல்லும்போது கர்த்தர் உங்களுக்கு எதிரான மற்ற இனத்தவர்களை வெளியே துரத்திவிடுவார். உங்களைவிடப் பெரிய பலம் வாய்ந்தவர்களிடமிருந்து அந்த நிலத்தை நீங்கள் கைப்பற்றிவிடலாம்.

உபாகமம் 11:18-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆகையால் கர்த்தர் உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் உங்கள் நாட்களும், உங்கள் பிள்ளைகளின் நாட்களும், பூமியின்மேல் வானம் இருக்கும் நாட்களைப்போல அநேகமாயிருக்கும்படிக்கு, நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து, அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசுவீர்களாக. அவைகளை உங்கள் வீட்டு நிலைகளிலும் உங்கள் வாசல்களிலும் எழுதுவீர்களாக. நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரைப் பற்றிக்கொண்டிருக்கும்படி, நான் உங்களுக்குச் செய்யக் கற்பிக்கிற இந்தக் கற்பனைகளையெல்லாம் ஜாக்கிரதையாய்க் கைக்கொள்வீர்களானால், கர்த்தர் உங்களுக்கு முன்பாக அந்த ஜாதிகளையெல்லாம் துரத்திவிடுவார்; உங்களைப்பார்க்கிலும் ஜனம் பெருத்த பலத்த ஜாதிகளை நீங்கள் துரத்துவீர்கள்.