தானியேல் 5:6-28

தானியேல் 5:6-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

முகம் பயத்தினால் வேறுபட்டது. அவன் மிகவும் பயந்ததினால், முழங்கால்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. கால்களும் வலுவிழந்து போயின. பின்பு அரசன் மாந்திரீகர்கள், சோதிடர்கள், குறிசொல்வோர் ஆகியோரைக் கொண்டுவரும்படி கூப்பிட்டான். அவன் அந்த பாபிலோனின் ஞானிகளிடம், “இதில் இருக்கும் எழுத்தை வாசித்து, அதன் விளக்கத்தை எனக்குச் சொல்லுகிறவன் சிவப்பு பட்டு உடை உடுத்தப்பட்டு, கழுத்திற்கு தங்க மாலையும் அணிவிக்கப்பட்டு, இந்த அரசாட்சியில் மூன்றாவது பெரிய ஆளுநனாக ஏற்படுத்தப்படுவான் என்றான்.” அரசனுடைய எல்லா ஞானிகளும் உள்ளே வந்தார்கள். ஆனால் சுவரில் எழுதியிருந்த எழுத்தை வாசிக்கவோ, அதன் விளக்கத்தை அரசனுக்குச் சொல்லவோ அவர்களால் முடியவில்லை. அப்பொழுது பெல்ஷாத்சார் அரசன் இன்னும் அதிகமாய்ப் பயந்து, அவனுடைய முகமும் அதிகமாய் வேறுபட்டது. அவனுடைய பெருங்குடி மக்களும் கலக்கமடைந்தனர். அவ்வேளையில் அங்கு நடந்தவற்றினால் ஏற்பட்ட கூச்சலைக்கேட்ட அரசனின் தாய், விருந்து மண்டபத்திற்குள் விரைந்து வந்தாள். அவள், “அரசே, நீர் நீடூழி வாழ்க. நீர் இதனால் கலங்கவோ, உமது முகம் வேறுபவோ வேண்டியதில்லை. உமது அரசில் பரிசுத்த தெய்வங்களின் ஆவியைப்பெற்ற ஒரு மனிதன் இருக்கிறான். அவன் உமது தந்தையின் காலத்தில் தெய்வங்களுக்குரிய நுண்ணறிவும், புத்திக்கூர்மையும், ஞானமும் உள்ளவனாய் காணப்பட்டான். அதனால் உமது தந்தை நேபுகாத்நேச்சார் அவனை மந்திரவாதிகளுக்கும், மாந்திரீகர்களுக்கும், சோதிடருக்கும், குறிசொல்பவர்களுக்கும் தலைவனாக நியமித்தார். பெல்தெஷாத்சார் என அரசனால் பெயரிடப்பட்ட இந்த மனிதனான தானியேல் மதிநுட்பமும், அறிவும், விளங்கிக்கொள்ளும் தன்மையும் உடையவனாய் காணப்பட்டான். அத்துடன் கனவுகளுக்கு விளக்கம் கூறுவதற்கும், விடுகதைகளை விடுவிப்பதற்கும், பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் ஆற்றல் உடையவனாயிருந்தான். தானியேலைக் கூப்பிடும். அவன் அந்த எழுத்துகளுக்கு அர்த்தத்தைச் சொல்வான் என்றாள்.” எனவே தானியேல் அரசனின் முன் கொண்டுவரப்பட்டான். அரசன் அவனிடம், “அரசனாகிய எனது தந்தை யூதாவிலிருந்து சிறைப்பிடித்து வந்தவர்களில் ஒருவனாகிய தானியேல் நீ தானா? உன்னிடத்தில் பரிசுத்த தெய்வங்களின் ஆவி இருப்பதாகவும், நுண்ணறிவும், புத்திக்கூர்மையும், சிறந்த ஞானமும் உண்டெனவும் கேள்விப்பட்டேன். அந்த எழுத்தை வாசிக்கவும், அதன் அர்த்தத்தைச் சொல்லவும் ஞானிகளும், சாஸ்திரிகளும் எனக்கு முன்பாகக் கொண்டுவரப்பட்டார்கள். ஆனால் அதற்கு விளக்கம்கூற அவர்களால் முடியவில்லை. இப்பொழுது உனக்கு விளக்கம் கூறவும், கடினமான பிரச்சனைகளைத் தீர்க்கவும் ஆற்றல் உண்டு எனக் கேள்விப்பட்டேன். அந்த எழுத்தை வாசித்து, அதன் விளக்கத்தை எனக்கு உன்னால் கூறமுடியுமானால், உனக்கு சிவப்பு பட்டு உடை உடுத்தப்பட்டு, உனது கழுத்திற்கு தங்க மாலையும் அணிவிக்கப்பட்டு, அதோடு எனது அரசில் மூன்றாம் பெரிய ஆளுநனாக நியமிக்கப்படுவாய் என்றான்.” அதற்குத் தானியேல் அரசனிடம், “உமது அன்பளிப்புகளை நீரே வைத்துக்கொள்ளும். உமது வெகுமதிகளை வேறு யாருக்காவது கொடும். ஆயினும் அரசருக்கான அந்த எழுத்தை வாசித்து, அதன் விளக்கத்தை நான் சொல்வேன். “அரசே, மகா உன்னதமான இறைவன் உமது தகப்பன் நேபுகாத்நேச்சாருக்கு ஆளுமையையும், மேன்மையையும், மகிமையையும், மகத்துவத்தையும் கொடுத்திருந்தார். அவர் உமது தந்தைக்குக் கொடுத்த அந்த உயர்ந்த நிலைமையினால் மக்களும், நாடுகளும், பல்வேறு மொழி பேசும் மனிதரும் அரசனுக்குப் பயமும் அச்சமும் உடையவர்களாயிருந்தார்கள். அரசர் யாரைக் கொல்ல நினைத்தாரோ அவர்களைக் கொலைசெய்தார். தான் விடுவிக்க விரும்பியவர்களை விடுவித்தார். தான் பதவி உயர்த்த விரும்பியவர்களை பதவி உயர்த்தினார். தான் தாழ்த்த விரும்பியவர்களைத் தாழ்த்தினார். ஆனால் அவரது இருதயம் கர்வங்கொண்டு அகந்தையினால் கடினப்பட்டபோது, அவர் தனது அரியணையிலிருந்து தள்ளப்பட்டார். அவருக்குக் கொடுக்கப்பட்ட மகிமையும் எடுக்கப்பட்டது. அவர் மக்களிடமிருந்து துரத்தப்பட்டார். மிருகத்தின் மனம் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் காட்டுக்கழுதைகளுடன் வாழ்ந்து, ஆடு மாடுகளைப்போல் புல்லைத் தின்றார். மகா உன்னதமான இறைவனே மனிதரின் அரசாட்சிக்கு மேலாக ஆளுமை உடையவர் என்றும், தாம் விரும்பியவர்களையே அதில் அமர்த்துவார் என்றும் உமது தந்தை உணர்ந்துகொள்ளும்வரை அவருடைய உடல் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது. “ஆனால் அவருடைய மகனாகிய பெல்ஷாத்சாராகிய நீரோ இவைகளையெல்லாம் அறிந்திருந்தும் உம்மைத் தாழ்த்தவில்லை. மாறாக, பரலோகத்தின் இறைவனுக்கு எதிராக நீர் உம்மை உயர்த்தினீர். அவருடைய ஆலயத்தின் கிண்ணங்களைக் கொண்டுவரச்செய்து, நீரும், உமது பெருங்குடி மக்களும், உமது மனைவிகளும், வைப்பாட்டிகளும் அதில் திராட்சை இரசம் குடித்தீர்கள். நீரோ தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றால் செய்யப்பட்டவையும் பார்க்கவோ, கேட்கவோ, விளங்கிக்கொள்ளவோ முடியாதவையுமான தெய்வங்களைப் புகழ்ந்தீர். ஆனால் உமது உயிரையும், வழிகளையும் தமது கையில் வைத்திருக்கும் இறைவனை நீர் மேன்மைப்படுத்தவில்லை. எனவே இறைவன் அந்த கையை அனுப்பினார். அது அந்த எழுத்துக்களை எழுதிற்று. “எழுதப்பட்ட எழுத்துக்கள் மெனெ, மெனெ, தெக்கேல் உபார்சின் என்பதே. “இந்த எழுத்துக்களின் அர்த்தமாவது: “மெனெ : என்பதன் விளக்கம் இறைவன் உனது ஆட்சிக்காலத்தைக் கணக்கிட்டு, அதை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்து விட்டார்” என்பதாகும். “தெக்கேல் : என்பதன் விளக்கம், ‘நீ தராசில் நிறுக்கப்பட்டு குறைவுடையவனாய் காணப்பட்டிருக்கிறாய்’ என்பதாகும். “உபார்சின் : என்பதன் விளக்கம், ‘உனது அரசு பிரிக்கப்பட்டு மேதியருக்கும், பெரிசியருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது’ என்பதாகும்” என்றான்.

தானியேல் 5:6-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது ராஜாவின் முகம் வேறுபட்டது; அவனுடைய நினைவுகள் அவனைக் கலங்கச்செய்தது; அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. ராஜா உரத்த சத்தமிட்டு; சோதிடர்களையும், கல்தேயர்களையும், குறிசொல்லுகிறவர்களையும் உள்ளே அழைத்துவரும்படி சொன்னான். ராஜா பாபிலோன் ஞானிகளை நோக்கி: இந்த எழுத்தை வாசித்து, இதின் அர்த்தத்தை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ, அவன் இரத்தாம்பரமும் கழுத்திலே தங்கச்சங்கிலியும் அணிவிக்கப்பட்டு, ராஜ்ஜியத்திலே மூன்றாம் அதிபதியாக இருப்பான் என்று சொன்னான். அப்பொழுது ராஜாவின் ஞானிகள் அனைவரும் வந்துசேர்ந்தார்கள்; ஆனாலும் அவர்கள் அந்த எழுத்தை வாசிக்கவும், அதின் அர்த்தத்தை ராஜாவிற்குத் தெரிவிக்கவும் முடியாமலிருந்தது. அப்பொழுது ராஜாவாகிய பெல்ஷாத்சார் மிகவும் கலங்கினான்; அவனுடைய முகம் வேறுபட்டது; அவனுடைய பிரபுக்கள் திகைத்தார்கள். ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் சொன்னவைகளை ராஜாவின் தாய் கேள்விப்பட்டு விருந்துசாலைக்குள் நுழைந்தாள். அப்பொழுது ராஜாவின் தாய்: ராஜாவே, நீர் என்றும் வாழ்க; உமது நினைவுகள் உம்மைக் கலங்கச்செய்யவும், உமது முகம் வேறுபடவும் வேண்டியதில்லை. உம்முடைய ராஜ்ஜியத்திலே ஒரு மனிதன் இருக்கிறான், அவனுக்குள் பரிசுத்த தேவர்களுடைய ஆவி இருக்கிறது; உம்முடைய முற்பிதாவின் நாட்களில் தெளிவும் விவேகமும் தெய்வங்களின் ஞானத்திற்கு இணையான ஞானமும் அவனிடத்தில் காணப்பட்டது; ஆகையால் உம்முடைய தகப்பனாகிய நேபுகாத்நேச்சாரென்னும் ராஜாவானவர் அவனை ஞானிகளுக்கும் சோதிடர்களுக்கும் கல்தேயர்களுக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் தலைவனாக வைத்தார். ராஜாவினால் பெல்தெஷாத்சாரென்னும் பெயரிடப்பட்ட அந்த தானியேலுக்குள் கனவுகளை விளக்கிச்சொல்கிறதும், புதை பொருள்களை வெளிப்படுத்துகிறதும், கடினமானவைகளைத் தெளிவிக்கிறதுமான அறிவும், புத்தியும், விசேஷித்த ஆவியும் உண்டென்று காணப்பட்டது; இப்போதும் தானியேல் அழைக்கப்படட்டும், அவன் அர்த்தத்தை சொல்வான் என்றாள். அப்பொழுது தானியேல் ராஜாவின்முன் உள்ளே அழைத்துவரப்பட்டான்; ராஜா தானியேலைப் பார்த்து: நீ என் தகப்பனாகிய ராஜா யூதாவிலிருந்து சிறைபிடித்துவந்த யூதர்களில் ஒருவனாகிய தானியேல் அல்லவா? உனக்குள்ளே தேவர்களின் ஆவி உண்டென்றும், தெளிவும், புத்தியும், விசேஷித்த ஞானமும் உன்னிடத்தில் காணப்பட்டதென்றும் உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன். இப்போதும் இந்த எழுத்தை வாசிக்கிறதற்கும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கிறதற்கும் ஞானிகளும் சோதிடர்களும் எனக்கு முன்பாக அழைத்துவரப்பட்டார்கள்; ஆனாலும் இந்த வாக்கியத்தின் அர்த்தத்தை வெளிப்படுத்த அவர்களால் முடியாமற்போனது. பொருளை வெளிப்படுத்தவும், கடினமானவைகளைத் தெளிவிக்கவும் உன்னாலே முடியுமென்று உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்போதும் நீ இந்த எழுத்தை வாசிக்கவும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கவும் உன்னாலே முடியுமானால், நீ இரத்தாம்பரமும் கழுத்திலே தங்கச்சங்கிலியும் அணிவிக்கப்பட்டு, ராஜ்ஜியத்திலே மூன்றாம் அதிபதியாக இருப்பாய் என்றான். அப்பொழுது தானியேல் ராஜசமுகத்தில் மறுமொழியாக: உம்முடைய வெகுமதிகள் உம்மிடத்திலேயே இருக்கட்டும்; உம்முடைய பரிசுகளை வேறொருவனுக்குக் கொடும்; இந்த எழுத்தை நான் வாசித்து, இதின் அர்த்தத்தை ராஜாவிற்குத் தெரிவிப்பேன். ராஜாவே, உன்னதமான தேவன் உம்முடைய தகப்பனாகிய நேபுகாத்நேச்சாருக்கு ராஜ்ஜியத்தையும் மகத்துவத்தையும் கனத்தையும் மகிமையையும் கொடுத்தார். அவருக்குக் கொடுக்கப்பட்ட மகத்துவத்தினாலே சகல மக்களும் தேசத்தார்களும் பல மொழிகளைப் பேசுகிறவர்களும் அவருக்கு முன்பாக நடுங்கிப் பயந்திருந்தார்கள்; அவர் தமக்கு விருப்பமானவனைக் கொன்றுபோடுவார், தமக்கு விருப்பமானவனை உயிரோடே வைப்பார்; தமக்கு விருப்பமானவனை உயர்த்துவார், தமக்கு விருப்பமானவனைத் தாழ்த்துவார். அவருடைய இருதயம் பெருமைகொண்டு, அவருடைய ஆவி கர்வத்தினாலே கடினப்பட்டபோது, அவர் தமது சிங்காசனத்திலிருந்து தள்ளப்பட்டார்; அவருடைய மகிமை அவரைவிட்டு அகன்றுபோனது. அவர் மனிதர்களிலிருந்து தள்ளப்பட்டார்; அவருடைய இருதயம் மிருகங்களுடைய இருதயம் போலானது; காட்டுக்கழுதைகளோடே வசித்தார்; உன்னதமான தேவன் மனிதர்களின் ராஜ்ஜியத்தில் ஆளுகை செய்து, தமக்கு விருப்பமானவனை அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று அவர் உணர்ந்துகொள்ளும்வரை மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தார்; அவருடைய உடல் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது. அவருடைய மகனாகிய பெல்ஷாத்சார் என்னும் நீரோவென்றால், இதையெல்லாம் அறிந்திருந்தும், உமது இருதயத்தைத் தாழ்த்தாமல், பரலோகத்தின் ஆண்டவருக்கு விரோதமாக உம்மை உயர்த்தினீர்; அவருடைய ஆலயத்தின் பாத்திரங்களை உமக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்; நீரும், உம்முடைய பிரபுக்களும், உம்முடைய மனைவிகளும், உம்முடைய வைப்பாட்டிகளும் அவைகளில் திராட்சைரசம் குடித்தீர்கள்; இதுவுமன்றி தம்முடைய கையில் தமது சுவாசத்தை வைத்திருக்கிறவரும், உமது வழிகளுக்கு எல்லாம் அதிகாரியுமாகிய தேவனை நீர் மகிமைப்படுத்தாமல், பார்க்கவோ, கேட்கவோ, உணரவோ முடியாமலிருக்கிற வெள்ளியும், பொன்னும், வெண்கலமும், இரும்பும், மரமும், கல்லுமாகிய தெய்வங்களைப் புகழ்ந்தீர். அப்பொழுது அந்தக் கை அவரால் அனுப்பப்பட்டு, இந்த எழுத்து எழுதப்பட்டது. எழுதப்பட்ட எழுத்து என்னவென்றால்: மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின் என்பதே. இந்த வசனத்தின் அர்த்தமாவது: மெனே என்பதற்கு, தேவன் உன் ராஜ்ஜியத்தைக் கணக்கிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினார் என்றும், தெக்கேல் என்பதற்கு, நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறைவுள்ளதாகக் காணப்பட்டாய் என்றும், பெரேஸ் என்பதற்கு, உன் ராஜ்ஜியம் பிரிக்கப்பட்டு, மேதியர்களுக்கும் பெர்சியர்களுக்கும் கொடுக்கப்பட்டது என்றும் அர்த்தம் என்றான்.

தானியேல் 5:6-28 பரிசுத்த பைபிள் (TAERV)

ராஜாவாகிய பெல்ஷாத்சார் மிகவும் பயந்தான். அவனது முகம் பயத்தால் வெளிறிற்று. அவனது முழங்கால்கள் நடுங்கி இடித்துக்கொண்டன. அவனால் எழுந்து நிற்க முடியவில்லை. ஏனென்றால் அவனது கால்கள் அவ்வளவு பலவீனமாக இருந்தன. ராஜா ஜோசியர்களையும், கல்தேயர்களையும் தன்னிடம் வருமாறு அழைத்தான். அவன் அந்த ஞானிகளிடம், “இந்த எழுத்தை வாசித்து இதன் பொருளை எனக்கு விளக்கும் எவருக்கும் நான் பரிசளிப்பேன். அவனுக்கு இரத்தாம்பர ஆடை அணிவித்து, அவன் கழுத்தில் பொன்மாலை அணிவிப்பேன். நான் அவனை எனது இராஜ்யத்தில் மூன்றாவது நிலையில் உள்ள ஆளுநராக ஆக்குவேன்” என்றான். எனவே, ராஜாவின் எல்லா ஞானிகளும் உள்ளே வந்தனர். அவர்களால் அந்த எழுத்துக்களை வாசிக்கமுடியவில்லை. பெல்ஷாத்சாரின் அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர். அதோடு ராஜா மேலும் பயந்து கவலைப்பட்டான். அவனது முகம் அச்சத்தால் வெளிறியது. பிறகு ராஜாவின் தாய் விருந்து நடைபெற்ற அந்த இடத்திற்கு வந்தாள். அவள் ராஜா மற்றும் அவனது அதிகாரிகளின் குரல்களைக் கேட்டபின்: “ஓ ராஜாவே நீர் என்றென்றும் வாழ்க. நீர் பயப்பட வேண்டாம். உனது முகம் பயத்தால் வெளிறவேண்டாம். உனது இராஜ்யத்தில் ஒருவன் இருக்கிறான். அவனிடம் பரிசுத்தமான தேவர்களின் ஆவி உள்ளது. உன் தந்தையின் நாட்களில் அவனால் பல இரகசியங்களைச் சொல்லமுடிந்தது. அவன் தன்னைச் சுறுசுறுப்பும் ஞானமும் உள்ளவனாகக் காட்டினான். அவன் இவ்விஷயங்களில் தேவர்களைப் போன்றிருந்தான். உன் தந்தையான நேபுகாத்நேச்சார் அந்த மனிதனை ஞானிகளுக்கெல்லாம் பொறுப்பதிகாரியாக வைத்திருந்தார். அவன் ஜோசியர்களையும், கல்தேயர்களையும் ஆண்டான். நான் சொல்லிக்கொண்டிருக்கிற அவனுடைய பெயர் தானியேல். ராஜா அவனுக்கு பெல்தெஷாத்சார் என்று பெயரிட்டார். பெல்தெஷாத்சார் மிக சுறுசுறுப்புடையவன். அவனுக்குப் பல செய்திகள் தெரியும். அவனால் கனவின் பலன்களும், இரகசியங்களின் விளக்கமும், கடினமான விஷயங்களுக்குத் தீர்வுகளும் தெரியும். தானியேலைக் கூப்பிடு, அவனால் சுவர் மேல் எழுதியுள்ளவற்றுக்கு விளக்கம் சொல்லமுடியும்” என்றாள். எனவே அவர்கள் தானியேலை ராஜாவிடம் அழைத்துவந்தனர். ராஜா தானியேலிடம் உனது பெயர் தானியேல்தானா? யூதாவிலிருந்து என் தந்தையால் சிறை பிடிக்கப்பட்டு கொண்டுவரப்பட்டவர்களில் நீ ஒருவனா? தேவர்களின் ஆவி உன்னிடம் இருப்பதாக நான் அறிந்தேன். அதோடு நீ இரகசியங்களைப் புரிந்துகொள்ளக் கூடியவன், வெளிச்சமும், புத்தியும், ஞானமும் கொண்டவன் என்றும் உன்னைப்பற்றி நான் கேள்விப்பட்டேன். ஞானிகளும், சோதிடர்களும் என்னிடம் அழைத்துவரப்பட்டு சுவரில் எழுதப்பட்டவற்றை வாசிக்கச் சொன்னேன். இந்த எழுத்துக்களின் பொருள் என்னவென்று அம்மனிதர்கள் சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவர்களால் சுவரில் எழுதப்பட்டுள்ளவற்றுக்கான விளக்கத்தை எனக்குச் சொல்ல முடியவில்லை. ஒவ்வொரு பொருளின் அர்த்தத்தையும் உன்னால் விளக்க முடியும் என்றும் மிகச் கடினமான பிரச்சனைகளுக்கும் உன்னால் பதில் சொல்ல முடியும் என்றும் நான் உன்னைப்பற்றிக் கேள்விப்பட்டேன். உன்னால் இச்சுவரில் எழுதப்பட்டுள்ளவற்றை வாசித்து அதன் பொருளை எனக்கு விளக்க முடியுமானால் நான் உனக்கு இரத்தாம்பர ஆடையைக் கொடுப்பேன். நான் உனது கழுத்தில் பொன் மாலையை அணிவிப்பேன். பிறகு நீ இந்த இராஜ்யத்தின் மூன்றாவது உயர் ஆளுநராக ஆகலாம் என்றான். தானியேல் ராஜாவிடம், “பெல்ஷாத்சார் ராஜாவே, உமது அன்பளிப்புகளை நீர் உம்மிடமே வைத்துக்கொள்ளும். அல்லது நீர் உமது பரிசுகளை வேறு யாருக்காவது கொடும். ஆனால் நான் உமக்காகச் சுவரில் எழுதப்பட்டுள்ளவற்றை வாசிப்பேன். நான் அதன் பொருள் என்னவென்றும் உமக்கு விளக்குவேன். “ராஜாவே, உன்னதமான தேவன், உமது தந்தையான நேபுகாத்நேச்சாரை சிறப்பும், வல்லமையும் கொண்ட ராஜாவாக ஆக்கினார். தேவன் அவரை மிக முக்கியமானவராக ஆக்கினார். பல நாடுகளில் உள்ள ஜனங்களும், பலமொழி பேசும் ஜனங்களும் நேபுகாத்நேச்சாருக்கு அஞ்சினார்கள். ஏனென்றால் உன்னதமான தேவன் அவரை மிக முக்கியமான ராஜாவாக்கினார். நேபுகாத்நேச்சார் ஒருவன் மரிக்கவேண்டும் என்று விரும்பினால் உடனே அவனைக் கொன்றுவிடுவார். அவர் ஒருவன் வாழவேண்டும் என்று விரும்பினால், அவனை வாழவிடுவார். அவர் ஜனங்களை முக்கியப்படுத்த வேண்டும் என்று விரும்பினால் அவர்களை முக்கியப்படுத்துவார். அவர் ஜனங்களை முக்கியமற்றவர்களாக்க வேண்டும் என்று விரும்பினால் அவர்களை முக்கியமற்றவர்களாக்குவார். “ஆனால் நேபுகாத்நேச்சார் அகந்தையும் கடின மனமும் கொண்டவரானர். எனவே, அவரது வல்லமை அவரிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. அவரது இராஜ சிங்காசனம் பறிக்கப்பட்டது. அவருடைய மகிமை அகற்றப்பட்டது. பிறகு நேபுகாத்நேச்சார் ஜனங்களைவிட்டு வெளியேறும்படி வற்புறுத்தப்பட்டார். அவருடைய மனது மிருகத்தின் மனது போலாயிற்று. அவர் காட்டுக் கழுதைகளோடு வாழ்ந்து பசுவைப்போன்று புல்லைத் தின்றார். அவர் பனியில் நனைந்தார். அவர் தனது பாடத்தைக் கற்றுக்கொள்ளும்வரை இவை நிகழ்ந்தன. பின்னர் அவர் உன்னதமான தேவன் மனிதர்களின் இராஜ்யங்களை ஆளுகிறார். அதோடு உன்னதமான தேவன் தான் விரும்புகிற எவரையும் இராஜ்யத்தை ஆளவைப்பார் என்பதைக் கற்றுக்கொண்டார். “ஆனால் பெல்ஷாத்சாரே, உமக்கு ஏற்கெனவே இவை தெரியும். நீர் நேபுகாத்நேச்சாரின் குமாரன். ஆனாலும் நீர் உம்மை இன்னும் பணிவுள்ளவராக்கிக்கொள்ளவில்லை. இல்லை, நீர் பணிவுள்ளவராகவில்லை. அதற்குப் பதிலாக பரலோகத்தின் கர்த்தருக்கு எதிராகத் திரும்பினீர். கர்த்தருடைய ஆலயத்திலுள்ள கிண்ணங்களைக் குடிப்பதற்குக் கொண்டுவரும்படிக் கட்டளையிட்டீர். நீரும், உமது அரசு அதிகாரிகளும், உமது மனைவியரும், அடிமைப்பெண்களும், அக்கிண்ணங்களில் திராட்சைரசத்தைக் குடித்தீர்கள். நீர் பொன்னாலும், வெள்ளியாலும், வெண்கலத்தாலும், இரும்பாலும், மரத்தாலும், கல்லாலும் ஆன தெய்வங்களைப் போற்றினீர். அவை உண்மையில் தெய்வங்கள் அல்ல. அவற்றால் பார்க்கவோ, கேட்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது. ஆனால் உமது வாழ்க்கை மீதும், உமது செயல்கள் மீதும் அதிகாரம் படைத்த தேவனை நீர் மகிமைப்படுத்தவில்லை. அதனால், தேவன் சுவர்மேல் எழுதுகிற கையை அனுப்பினார். சுவரில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகள் இவைதான்: மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின். “இதுதான் அவ்வார்த்தைகளின் பொருள்: மெனே : உன் ஆளுகை முடியும் நாட்களைத் தேவன் எண்ணி வைத்திருக்கிறார். தெக்கேல் : நீ தராசிலே நிறுக்கப்பட்டுக் குறைவாய் காணப்பட்டாய். உப்பார்சின் : உன் ஆளுகை உன்னிடமிருந்து எடுக்கப்பட்டு, அது மேதியருக்கும் பெர்சியருக்கும் பங்கிட்டுக் கொடுக்கப்படும்” என்றான்.

தானியேல் 5:6-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது ராஜாவின் முகம் வேறுபட்டது; அவனுடைய நினைவுகள் அவனைக் கலங்கப்பண்ணினது; அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டது. ராஜா உரத்த சத்தமிட்டு; ஜோசியரையும் கல்தேயரையும் குறிசொல்லுகிறவர்களையும் உள்ளே அழைத்துவரும்படி சொன்னான். ராஜா பாபிலோன் ஞானிகளை நோக்கி: இந்த எழுத்தை வாசித்து, இதின் அர்த்தத்தை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ, அவன் இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு, ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பான் என்று சொன்னான். அப்பொழுது ராஜாவின் ஞானிகளெல்லாரும் வந்துசேர்ந்தார்கள்; ஆனாலும் அவர்கள் அந்த எழுத்தை வாசிக்கவும், அதின் அர்த்தத்தை ராஜாவுக்குத் தெரிவிக்கவும் கூடாதிருந்தது. அப்பொழுது ராஜாவாகிய பெல்ஷாத்சார் மிகவும் கலங்கினான்; அவனுடைய முகம் வேறுபட்டது; அவனுடைய பிரபுக்கள் திகைத்தார்கள். ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் சொன்னவைகளை ராஜாத்தி கேள்விப்பட்டு விருந்துசாலைக்குள் பிரவேசித்தாள். அப்பொழுது ராஜாத்தி: ராஜாவே, நீர் என்றும் வாழ்க; உமது நினைவுகள் உம்மைக் கலங்கப்பண்ணவும், உமது முகம் வேறுபடவும் வேண்டியதில்லை. உம்முடைய ராஜ்யத்திலே ஒரு புருஷன் இருக்கிறான், அவனுக்குள் பரிசுத்த தேவர்களுடைய ஆவி இருக்கிறது; உம்முடைய பிதாவின் நாட்களில் வெளிச்சமும் விவேகமும் தேவர்களின் ஞானத்துக்கு ஒத்த ஞானமும் அவனிடத்தில் காணப்பட்டது; ஆகையால் உம்முடைய பிதாவாகிய நேபுகாத்நேச்சாரென்னும் ராஜாவானவர் அவனைச் சாஸ்திரிகளுக்கும் ஜோசியருக்கும் கல்தேயருக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் அதிபதியாக வைத்தார். ராஜாவினால் பெல்தெஷாத்சாரென்னும் பெயரிடப்பட்ட அந்த தானியேலுக்குள் சொப்பனங்களை வியார்த்திபண்ணுகிறதும், புதை பொருள்களை வெளிப்படுத்துகிறதும், கருகலானவைகளைத் தெளிவிக்கிறதுமான அறிவும் புத்தியும் விசேஷித்த ஆவியும் உண்டென்று காணப்பட்டது; இப்போதும் தானியேல் அழைக்கப்படட்டும், அவன் அர்த்தத்தை வெளிப்படுத்துவான் என்றாள். அப்பொழுது தானியேல் ராஜாவின்முன் உள்ளே அழைத்துவந்துவிடப்பட்டான்; ராஜா தானியேலைப் பார்த்து: நீ என் பிதாவாகிய ராஜா யூதாவிலிருந்து சிறைபிடித்துவந்த யூதரில் ஒருவனாகிய தானியேல் அல்லவா? உனக்குள்ளே தேவர்களின் ஆவி உண்டென்றும், வெளிச்சமும் புத்தியும் விசேஷித்த ஞானமும் உன்னிடத்தில் காணப்பட்டதென்றும் உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன். இப்போதும் இந்த எழுத்தை வாசிக்கிறதற்கும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கிறதற்கும் சாஸ்திரிகளும் ஜோசியரும் எனக்கு முன்பாக அழைத்துக்கொண்டுவரப்பட்டார்கள்; ஆனாலும் இந்த வசனத்தின் அர்த்தத்தை வெளிப்படுத்த அவர்களால் கூடாமற்போயிற்று. பொருளை வெளிப்படுத்தவும், கருகலானவைகளைத் தெளிவிக்கவும் உன்னாலே கூடுமென்று உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்போதும் நீ இந்த எழுத்தை வாசிக்கவும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கவும் உன்னாலே கூடுமானால், நீ இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு, ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பாய் என்றான். அப்பொழுது தானியேல் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: உம்முடைய வெகுமானங்கள் உம்மிடத்திலேயே இருக்கட்டும்; உம்முடைய பரிசுகளை வேறொருவனுக்குக் கொடும்; இந்த எழுத்தை நான் ராஜாவுக்கு வாசித்து, இதின் அர்த்தத்தைத் தெரிவிப்பேன். ராஜாவே, உன்னதமான தேவன் உம்முடைய பிதாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு ராஜ்யத்தையும் மகத்துவத்தையும் கனத்தையும் மகிமையையும் கொடுத்தார். அவருக்குக் கொடுக்கப்பட்ட மகத்துவத்தினாலே சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவருக்கு முன்பாக நடுங்கிப் பயந்திருந்தார்கள்; அவர் தமக்குச் சித்தமானவனைக் கொன்றுபோடுவார், தமக்குச் சித்தமானவனை உயிரோடே வைப்பார்; தமக்குச் சித்தமானவனை உயர்த்துவார், தமக்குச் சித்தமானவனைத் தாழ்த்துவார். அவருடைய இருதயம் மேட்டிமையாகி, அவருடைய ஆவி கர்வத்தினாலே கடினப்பட்டபோது, அவர் தமது சிங்காசனத்திலிருந்து தள்ளப்பட்டார்; அவருடைய மகிமை அவரைவிட்டு அகன்றுபோயிற்று. அவர் மனுஷரினின்று தள்ளப்பட்டார்; அவருடைய இருதயம் மிருகங்களுடைய இருதயம் போலாயிற்று; காட்டுக்கழுதைகளோடே சஞ்சரித்தார்; உன்னதமான தேவன் மனுஷரின் ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமானவனை அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று அவர் உணர்ந்துகொள்ளுமட்டும் மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தார்; அவருடைய சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது. அவருடைய குமாரனாகிய பெல்ஷாத்சார் என்னும் நீரோவென்றால், இதையெல்லாம் அறிந்திருந்தும், உமது இருதயத்தைத் தாழ்த்தாமல், பரலோகத்தின் ஆண்டவருக்கு விரோதமாக உம்மை உயர்த்தினீர்; அவருடைய ஆலயத்தின் பாத்திரங்களை உமக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்; நீரும், உம்முடைய பிரபுக்களும், உம்முடைய மனைவிகளும், உம்முடைய வைப்பாட்டிகளும் அவைகளில் திராட்சரசம் குடித்தீர்கள்; இதுவுமன்றி தம்முடைய கையில் தமது சுவாசத்தை வைத்திருக்கிறவரும், உமது வழிகளுக்கு எல்லாம் அதிகாரியுமாகிய தேவனை நீர் மகிமைப்படுத்தாமல் காணாமலும், கேளாமலும், உணராமலும், இருக்கிற வெள்ளியும் பொன்னும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தீர். அப்பொழுது அந்தக் கையுறுப்பு அவரால் அனுப்பப்பட்டு, இந்த எழுத்து எழுதப்பட்டது. எழுதப்பட்ட எழுத்து என்னவென்றால்: மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின் என்பதே. இந்த வசனத்தின் அர்த்தமாவது: மெனே என்பதற்கு, தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினார் என்றும், தெக்கேல் என்பதற்கு, நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய் என்றும், பெரேஸ் என்பதற்கு, உன் ராஜ்யம் பிரிக்கப்பட்டு, மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது என்றும் அர்த்தமாம் என்றான்.