2 கொரிந்தியர் 13:5-8

2 கொரிந்தியர் 13:5-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நீங்கள் விசுவாசத்தில் இருக்கிறீர்களா என்று உங்களையே ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் உங்களையே சோதித்துப் பாருங்கள். கிறிஸ்து இயேசு உங்களில் குடியிருக்கிறார் என்ற உணர்வு உங்களுக்கு இல்லையா? அந்த உணர்வு உங்களில் இல்லாவிட்டால், நீங்கள் சோதனையில் தோற்றுப்போய்விட்டீர்கள் என்றே அர்த்தமாகும். நாங்களோ சோதனையில் தோல்வியடையவில்லை என்பது உங்களுக்கு வெளிப்படும் என்றே நம்புகிறேன். நீங்கள் தீமையேதும் செய்யாதிருக்கும்படியாக நாங்கள் இறைவனிடம் மன்றாடுகிறோம். நாங்கள் இப்படி மன்றாடுவது, நாங்கள் சோதனையில் வெற்றியடைந்தோம் என்று மக்கள் காணவேண்டும் என்பதற்காக அல்ல. நாங்கள் தோல்வியடைந்தது போலக் காணப்பட்டாலும், நீங்கள் நன்மையானதையே செய்யவேண்டும் என்றே, நாங்கள் மன்றாடுகிறோம். ஏனெனில், சத்தியத்திற்கு எதிராக நாங்கள் எதையும் செய்யமுடியாது. சத்தியத்திற்காக மட்டுமே எல்லாவற்றையும் செய்கிறோம்.

2 கொரிந்தியர் 13:5-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நீங்கள் விசுவாசம் உள்ளவர்களோ என்று உங்களை நீங்களே சோதித்துப்பாருங்கள்; உங்களை நீங்களே பரீட்சை செய்துபாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் பரீட்சைக்கு நிற்காதவர்களாக இருந்தால் தெரியாது. நாங்களோ பரீட்சைக்கு நிற்காதவர்கள் அல்ல என்பதைத் தெரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். மேலும் நீங்கள் ஒரு பொல்லாங்கும் செய்யாமல் இருக்கும்படியாக, தேவனை நோக்கி வேண்டுதல்செய்கிறேன். நாங்கள் பரீட்சைக்கு நின்றவர்கள் என்று தெரிவதற்காக இல்லை, நாங்கள் பரீட்சைக்கு நிற்காதவர்கள்போல இருந்தாலும், நீங்கள் நலமானதைச் செய்யும்படியே வேண்டுதல்செய்கிறேன். சத்தியத்திற்கு எதிராக நாங்கள் ஒன்றும் செய்யமுடியாமல், சத்தியத்திற்கு சாதகமாகவே செய்யமுடியும்.

2 கொரிந்தியர் 13:5-8 பரிசுத்த பைபிள் (TAERV)

நீங்கள் உங்களையே பாருங்கள். விசுவாசத்தில் வாழ்கிறீர்களா என உங்களை நீங்களே சோதித்துப் பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரா, இல்லையா என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் சோதனையில் தோற்றுவிட்டால் கிறிஸ்து உங்களோடு இல்லை. நாங்கள் சோதனையில் தோற்றவர்கள் இல்லை என்பதை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் தவறாக எதுவும் செய்யக் கூடாது என்பதே தேவனிடம் எங்கள் பிரார்த்தனை. நாங்கள் சோதனையில் வெற்றி பெற்றோமா இல்லையா என்பது முக்கியமல்ல. நாங்கள் சோதனையில் தோற்றவர்கள் என மக்கள் நினைக்க நேர்ந்தாலும் கூட நீங்கள் நேர்மையானதைச் செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியம். உண்மைக்கு எதிரானவற்றை எங்களால் செய்ய முடியாது. எங்களால் உண்மைக்குரியதை மட்டுமே செய்ய முடியும்.

2 கொரிந்தியர் 13:5-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப்பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள். நாங்களோ பரீட்சைக்கு நில்லாதவர்களல்லவென்பதை அறிவீர்களென்று நம்புகிறேன். மேலும் நீங்கள் ஒரு பொல்லாங்கும் செய்யாதிருக்கும்படியாக, தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணுகிறேன். நாங்கள் பரீட்சைக்கு நின்றவர்களென்று காணப்படும்பொருட்டல்ல, நாங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்கள் போலிருந்தாலும், நீங்கள் நலமானதைச் செய்யும்பொருட்டே விண்ணப்பம் பண்ணுகிறேன். சத்தியத்திற்கு விரோதமாக நாங்கள் ஒன்றுஞ்செய்யக்கூடாமல், சத்தியத்திற்கு அநுகூலமாகவே செய்யக்கூடும்.