1 சாமுவேல் 13:8-14

1 சாமுவேல் 13:8-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவன் தனக்குச் சாமுவேல் குறித்தகாலத்தின்படி ஏழுநாள்மட்டும் காத்திருந்தான்; சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை, ஜனங்கள் அவனை விட்டுச் சிதறிப்போனார்கள். அப்பொழுது சவுல்: சர்வாங்கதகனபலியையும் சமாதானபலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று சொல்லி, சர்வாங்கதகனபலியைச் செலுத்தினான். அவன் சர்வாங்கதகனபலியிட்டு முடிகிறபோது, இதோ, சாமுவேல் வந்தான்; சவுல் அவனைச் சந்தித்து வந்தனஞ்செய்ய அவனுக்கு எதிர்கொண்டு போனான். நீர் செய்தது என்ன என்று சாமுவேல் கேட்டதற்கு, சவுல்: ஜனங்கள் என்னைவிட்டுச் சிதறிப்போகிறதையும், குறித்த நாட்களின் திட்டத்திலே நீர் வராததையும், பெலிஸ்தர் மிக்மாசிலே கூடிவந்திருக்கிறதையும், நான் கண்டபடியினாலே, கில்காலில் பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் வந்துவிடுவார்கள் என்றும், நான் இன்னும் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி விண்ணப்பம்பண்ணவில்லை என்றும், எண்ணித் துணிந்து, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினேன் என்றான். சாமுவேல் சவுலைப் பார்த்து: புத்தியீனமாய்ச் செய்தீர்; உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்; மற்றபடி கர்த்தர் இஸ்ரவேலின்மேல் உம்முடைய ராஜ்யபாரத்தை என்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது; கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்கள்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார்; கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான்.

1 சாமுவேல் 13:8-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சாமுயேல் குறிப்பிட்ட காலமான அந்த ஏழுநாள்வரை சாமுயேலுக்காக சவுல் காத்திருந்தான். சாமுயேலோ கில்காலுக்கு வரவில்லை, சவுலின் மனிதர் சிதறுண்டு போகத் தொடங்கினார்கள். எனவே சவுல், “தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றான். சவுல் தகன காணிக்கையைச் செலுத்தினான். அவன் தகன காணிக்கையைச் செலுத்தி முடியும்வேளையில் சாமுயேல் அங்கே வந்துசேர்ந்தான். அப்பொழுது சவுல் அவனை வாழ்த்துவதற்காக வெளியே போனான். அப்பொழுது சாமுயேல் சவுலிடம், “நீ என்ன செய்துவிட்டாய்!” என்று கேட்டான். அதற்கு சவுல், “மனிதர் என்னை விட்டுச் சிதறிப்போனதையும், நீர் குறிப்பிட்ட நாளில் இங்கு வராததையும், பெலிஸ்தியர் மிக்மாசிலே கூடிவந்திருப்பதையும் நான் கண்டேன். அப்போது, ‘பெலிஸ்தியர் எனக்கு எதிராகக் கில்காலுக்கு வரப்போகிறார்களே. நானோ இன்னும் யெகோவாவினுடைய தயவைத் தேடவில்லை’ என்று எண்ணியே தகன காணிக்கையைச் செலுத்தத் துணிந்தேன்” என்றான். அதற்குச் சாமுயேல், “நீ புத்தியீனமாய் நடந்துவிட்டாயே! உன் இறைவனாகிய யெகோவா உனக்குக் கொடுத்த கட்டளையை நீ கைக்கொள்ளவில்லை. நீ அப்படிக் கைக்கொண்டிருந்தால் யெகோவா உன் அரசாட்சியை இஸ்ரயேலின்மேல் என்றென்றும் உறுதிப்படுத்தியிருப்பார். ஆனால் இப்பொழுது உன்னுடைய அரசாட்சியோ நிலைநிற்காது. யெகோவாவினுடைய கட்டளையை நீ கைக்கொள்ளாது மீறியதால், யெகோவா தன் இருதயத்திற்கு உகந்த மனிதனைத் தெரிந்து அவனைத் தன் மக்களுக்குத் தலைவனாக நியமித்திருக்கிறார்” என்றான்.

1 சாமுவேல் 13:8-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவன் தனக்குச் சாமுவேல் குறித்தகாலத்தின்படி ஏழுநாள்வரை காத்திருந்தான்; சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை, மக்கள் அவனை விட்டுச் சிதறிப்போனார்கள். அப்பொழுது சவுல்: சர்வாங்கதகனபலியையும் சமாதானபலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று சொல்லி, சர்வாங்கதகனபலியைச் செலுத்தினான். அவன் சர்வாங்கதகனபலியிட்டு முடிக்கிறபோது, இதோ, சாமுவேல் வந்தான்; சவுல் அவனைச் சந்தித்து வரவேற்க அவனுக்கு எதிராக போனான். நீர் செய்தது என்ன என்று சாமுவேல் கேட்டதற்கு, சவுல்: மக்கள் என்னைவிட்டுச் சிதறிப்போகிறதையும், குறித்த நாளில் நீர் வராததையும், பெலிஸ்தர்கள் மிக்மாசிலே கூடிவந்திருக்கிறதையும், நான் பார்த்ததினால், கில்காலில் பெலிஸ்தர்கள் எனக்கு விரோதமாக வந்துவிடுவார்கள் என்றும், நான் இன்னும் யெகோவாவுடைய இரக்கத்தைத் தேடவில்லை என்றும் நினைத்துத் துணிந்து, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினேன் என்றான். சாமுவேல் சவுலைப் பார்த்து: முட்டாள் தனமாக செய்தீர்; உம்முடைய தேவனாகிய யெகோவா உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்; கைக்கொண்டிருந்தால் யெகோவா இஸ்ரவேலின்மேல் உம்முடைய ராஜ்ஜியத்தை என்றென்றும் உறுதிப்படுத்துவார். இப்போதோ உம்முடைய ஆட்சி நிலைநிற்காது; யெகோவா தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனிதனைத் தமக்குத் தேடி, அவனைக் யெகோவா தம்முடைய மக்கள்மேல் தலைவனாக இருக்கக் கட்டளையிட்டார்; யெகோவா உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான்.

1 சாமுவேல் 13:8-14 பரிசுத்த பைபிள் (TAERV)

சாமுவேல் சவுலை கில்காலில் சந்திப்பதாகக் கூறியிருந்தான். சவுல் 7 நாட்கள் காத்திருந்தான். ஆனால், சாமுவேல் இன்னும் கில்காலுக்கு வரவில்லை, வீரர்கள் சவுலை விட்டு விலக ஆரம்பித்தனர். ஆகையால் சவுல், “தகன பலிகளையும் சமாதான பலிகளையும் கொண்டு வாருங்கள்” என்று கூறி தகன பலிகளைச் செலுத்தினான். அதைச் செய்து முடிக்கும் தருவாயில் சாமுவேல் வந்தான். சவுல் அவனை சந்திக்க முன் சென்றான். சாமுவேல் “என்ன செய்து கொண்டிருந்தாய்?” என்று கேட்டான். அதற்கு சவுல் “வீரர்கள் என்னை விட்டு விலகுவதைப் பார்த்தேன். நீங்களும் சரியான நேரத்தில் வரவில்லை. பெலிஸ்தர்கள் மிக்மாசில் கூடிக்கொண்டிருந்தனர். நான், ‘அவர்கள் வந்து கில்காலில் என்னைத் தாக்குவார்கள்’ என எண்ணினேன். நான் இதுவரை கர்த்தரிடம் உதவி கேட்கவில்லை! எனவே தகனபலி செலுத்த என்னை நானே கட்டாயப்படுத்திக் கொண்டேன்” என்றான். சாமுவேலோ, “நீ முட்டாள்தனமாக இதைச் செய்தாய்! நீ உனது தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை. நீ தேவ கட்டளைக்குக் கீழ்ப்படிந்திருந்தால், அவர் உன் குடும்பத்தை என்றென்றைக்கும் இஸ்ரவேலை ஆளச் செய்திருப்பார். இப்போது உனது அரசு தொடராது. கர்த்தர் தனக்குக் கீழ்ப்படிகிறவனையே தேடிக்கொண்டிருக்கிறார்! எனவே கர்த்தர் அந்த மனிதனைத் தெரிந்துக்கொண்டார். கர்த்தர் தம் ஜனங்களுக்காக அவனை தேர்ந்தெடுப்பார். கர்த்தருடைய கட்டளைகளுக்கு நீ கீழ்ப்படியவில்லை. எனவே புதிய தலைவரை தேர்ந்தெடுத்தார்” என்றான்.