1 பேதுரு 2:21-25

1 பேதுரு 2:21-25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார். அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை; அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார். நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள்.

1 பேதுரு 2:21-25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இதற்காகவே நீங்கள் அழைக்கப்பட்டீர்கள். ஏனெனில் கிறிஸ்து உங்களுக்காக பாடுகளை அனுபவித்து, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றியே நடக்கவேண்டுமென்று, உங்களுக்கான ஒரு முன்மாதிரியை விட்டுச்சென்றுள்ளார். “அவர் ஒரு பாவமும் செய்யவில்லை. அவருடைய வாயில் வஞ்சனை காணப்படவும் இல்லை.” அவர்கள் அவரை ஏளனம் செய்தபோதும், அவர் பழிவாங்கவில்லை; அவர் வேதனைகளை அனுபவித்தபோது, அவர் பயமுறுத்தவில்லை. அவரோ நீதியாய் நியாயத்தீர்ப்புச் செய்கிற இறைவனுக்கே தம்மை ஒப்புக்கொடுத்தார். நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்கு வாழும்படி, அவர்தாமே தமது உடலில் நமது பாவங்களை ஏற்றுக்கொண்டு, அவற்றைச் சிலுவை மரத்தின்மேல் சுமந்தார். “அவருடைய காயங்களால் நீங்கள் சுகமடைந்திருக்கிறீர்கள்.” ஏனெனில், “நீங்கள் செம்மறியாடுகளைப்போல் வழிவிலகிச் சென்று கொண்டிருந்தீர்கள்.” ஆனால் இப்பொழுதோ, உங்கள் ஆத்துமாக்களின் மேய்ப்பரும், மேற்பார்வையாளருமாக இருக்கிற கிறிஸ்துவிடம் திரும்பிவந்திருக்கிறீர்கள்.

1 பேதுரு 2:21-25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இதற்காகத்தான் நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; ஏனென்றால், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுகள்பட்டு, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி வருவதற்காக உங்களுக்கு முன்மாதிரியை வைத்துப்போனார். அவர் பாவம் செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனையும் காணப்படவில்லை; அவர் தூஷிக்கப்படும்போது பதிலுக்குத் தூஷிக்காமலும், பாடுகள்பட்டபோது திரும்ப பயமுறுத்தாமலும், நியாயமாக நியாயத்தீர்ப்புச் செய்கிறவருக்கு தம்மையே ஒப்புவித்தார். நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கத்தக்கதாக, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையிலே சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். சிதறிப்போன ஆடுகளைப்போல இருந்தீர்கள்; இப்பொழுதோ உங்களுடைய ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவிடம் திரும்பிவந்திருக்கிறீர்கள்.

1 பேதுரு 2:21-25 பரிசுத்த பைபிள் (TAERV)

அதைச் செய்வதற்காகவே நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் பின்பற்றும்படியாக கிறிஸ்து ஓர் எடுத்துக்காட்டை உங்களுக்குத் தந்தார். அவர் செய்ததைப் போலவே நீங்களும் செய்யவேண்டும். கிறிஸ்து உங்களுக்காகத் துன்புற்றதால் நீங்கள் துன்பப்படும்போது பொறுமையாக இருக்கவேண்டும். “அவர் பாவமேதும் செய்யவில்லை. அவரது வாயில் எந்தப் பொய்யும் வெளிவரவில்லை.” மக்கள் கிறிஸ்துவிடம் தீயவற்றைப் பேசினார்கள். ஆனால் அவர் அவர்களுக்கு எந்தத் தீய பதிலையும் தரவில்லை. கிறிஸ்து துன்புற்றார். ஆனால் அவர் மக்களுக்கு எதிராகப் பேசவில்லை. இல்லை! தேவன் தன்னைக் கவனித்துக்கொள்ளுமாறு கிறிஸ்து விட்டு விட்டார். தேவன் சரியான முறையில் நியாயந்தீர்க்கிறார். சிலுவையின் மேல் கிறிஸ்து தம் சரீரத்தில் நம் பாவங்களையும் சுமந்தார். நாம் பாவங்களுக்காக வாழ்வதை நிறுத்தி, நேர்மையாக வாழ்வதற்காக அவர் இதைச் செய்தார். அவரது காயங்களினால் நீங்கள் குணமாக்கப்பட்டீர்கள். தவறான வழியில் சென்ற ஆடுகளைப்போல நீங்கள் இருக்கிறீர்கள். இப்போது நீங்கள் மேய்ப்பனாகிய ஆன்மாவைக் காக்கிறவரிடம் வந்துவிட்டீர்கள்.