1 கொரிந்தியர் 7:25-40

1 கொரிந்தியர் 7:25-40 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அன்றியும் கன்னிகைகளைக்குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆகிலும் நான் உண்மையுள்ளவனாயிருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம்பெற்று, என் அபிப்பிராயத்தைத் தெரியப்படுத்துகிறேன். அதென்னவெனில், இப்பொழுது உண்டாயிருக்கிற துன்பத்தினிமித்தம் விவாகமில்லாமலிருக்கிறது மனுஷனுக்கு நலமாயிருக்குமென்று எண்ணுகிறேன். நீ மனைவியோடே கட்டப்பட்டிருந்தால், அவிழ்க்கப்பட வகைதேடாதே; நீ மனைவி இல்லாதவனாயிருந்தால் மனைவியைத் தேடாதே. நீ விவாகம்பண்ணினாலும் பாவமல்ல; கன்னிகை விவாகம்பண்ணினாலும் பாவமல்ல. ஆகிலும் அப்படிப்பட்டவர்கள் சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள்; அதற்கு நீங்கள் தப்பவேண்டுமென்றிருக்கிறேன். மேலும், சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள்போலவும், அழுகிறவர்கள் அழாதவர்கள்போலவும், சந்தோஷப்படுகிறவர்கள் சந்தோஷப்படாதவர்கள்போலவும், கொள்ளுகிறவர்கள் கொள்ளாதவர்கள்போலவும், இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள்போலவும் இருக்கவேண்டும்; இவ்வுலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே. நீங்கள் கவலையற்றவர்களாயிருக்க விரும்புகிறேன். விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்கு ரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். விவாகம்பண்ணினவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். அதுபோல, மனைவியானவளுக்கும், கன்னிகைக்கும் வித்தியாசமுண்டு. விவாகமில்லாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாயிருக்கும்படி, கர்த்தருக்கு ரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்; விவாகம்பண்ணினவள் தன் புருஷனுக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள். இதை நான் உங்களைக் கண்ணியில் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாயிருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்தரைப் பற்றிக்கொண்டிருக்கவேண்டுமென்றும், உங்கள் சுயபிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன். ஆகிலும் ஒருவன் தன் புத்திரியின் கன்னிகைப்பருவம் கடந்துபோனதினாலே, அவள் விவாகம் பண்ணாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் விவாகம்பண்ணுவது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யக்கடவன்; அது பாவமல்ல, விவாகம்பண்ணட்டும். ஆயினும் அதற்கு அவசியத்தைக் காணாமல், தன் இருதயத்திலே உறுதியுள்ளவனாயும், சுயசித்தத்தின்படி செய்ய அதிகாரமுள்ளவனாயுமிருந்து, தன் புத்திரியின் கன்னிகைப் பருவத்தைக் காக்கவேண்டுமென்று தன் இருதயத்தில் தீர்மானிக்கிறவன் நன்மைசெய்கிறான். இப்படியிருக்க, அவளை விவாகம்பண்ணிக் கொடுக்கிறவனும் நன்மைசெய்கிறான்; கொடாமலிருக்கிறவனும் அதிக நன்மைசெய்கிறான். மனைவியானவள் தன் புருஷன் உயிரோடிருக்குங்காலமளவும் பிரமாணத்தினால் கட்டப்பட்டிருக்கிறாள்; தன் புருஷன் மரித்தபின்பு தனக்கு இஷ்டமானவனாயும் கர்த்தருக்கு ட்பட்டவனாயுமிருக்கிற எவனையாகிலும் விவாகம்பண்ணிக்கொள்ள விடுதலையாயிருக்கிறாள். ஆகிலும் என்னுடைய அபிப்பிராயத்தின்படி அவள் அப்படியே இருந்துவிட்டால் பாக்கியவதியாயிருப்பாள். என்னிடத்திலும் தேவனுடைய ஆவி உண்டென்று எண்ணுகிறேன்.

1 கொரிந்தியர் 7:25-40 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

கன்னிகைகளைக் குறித்தோ: நான் கர்த்தரிடமிருந்து கட்டளை எதையும் பெறவில்லை. ஆனால் கர்த்தருடைய இரக்கத்தினாலே, உங்கள் நம்பிக்கைக்குரியவனாகிய நான், எனது அபிப்பிராயத்தைத் தெரிவிக்கிறேன். தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் இருக்கிறபடியே இருப்பதுதான் நல்லது என நான் எண்ணுகிறேன். நீ திருமணம் செய்திருந்தால், விவாகரத்தை நாடவேண்டாம். திருமணம் செய்யாதிருந்தால், ஒரு மனைவியைப் பெற முயற்சிக்க வேண்டாம். நீ திருமணம் செய்தால், நீ பாவம் செய்யவில்லை; ஒரு கன்னிகை திருமணம் செய்தால், அவளும் பாவம் செய்யவில்லை. ஆனால் திருமணம் செய்கிறவர்கள் இந்த வாழ்க்கையில் அநேக பாடுகளை அனுபவிக்கவேண்டி நேரிடும். இந்தப் பாடுகளை நீங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றே நான் விரும்புகிறேன். ஆனால் பிரியமானவர்களே, நான் சொல்கிறதென்னவெனில், காலமோ குறுகினதாயிருக்கிறது. ஆகவே, இப்பொழுதிருந்தே மனைவிகளை உடையவர்கள் மனைவிகள் இல்லாதவர்கள்போல் வாழவேண்டும்; துக்கமுள்ளவர்கள், துக்கமில்லாதவர்கள்போல் இருக்கவேண்டும்; சந்தோஷப்படுகிறவர்கள், சந்தோஷமில்லாதவர்கள்போல் இருக்கவேண்டும்; எதையேனும் வாங்குகிறவர்கள், அது தங்களுக்குச் சொந்தமில்லையென்பதுபோல் இருக்கவேண்டும்; உலக காரியங்களில் ஈடுபடுகிறவர்கள், அவைகளில் முழுவதும் மூழ்கிப் போகாதபடி கவனமாய் இருக்கவேண்டும். ஏனெனில், இவ்வுலகத்தின் தற்போதைய நிலை கடந்துபோகிறதே. கவலைகளிலிருந்து நீங்கள் விலகியிருக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன். திருமணமாகாத ஒருவன், கர்த்தருடைய காரியங்களைக்குறித்தே அக்கறை உள்ளவனாயிருக்கிறான். கர்த்தரை எவ்வாறு பிரியப்படுத்தலாம் என எண்ணுகிறான். ஆனால் திருமணம் செய்தவனோ, இவ்வுலகக் காரியங்களைக்குறித்தே அக்கறை உள்ளவனாயிருக்கிறான். தன் மனைவியை எவ்வாறு பிரியப்படுத்தலாம் என எண்ணுகிறான். அவனுடைய நாட்டங்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. திருமணமாகாத ஒரு பெண் அல்லது ஒரு கன்னிகை கர்த்தருடைய காரியங்களைக்குறித்தே அக்கறையாயிருக்கிறாள்: உடலிலும் ஆவியிலும் தன்னைக் கர்த்தருக்கு அர்ப்பணிப்பதே அவளுடைய நோக்கமாய் இருக்கிறது. ஆனால் திருமணம் செய்த ஒரு பெண்ணோ இவ்வுலகக் காரியங்களைக்குறித்தே அக்கறையாயிருக்கிறாள். தன் கணவனை எவ்வாறு பிரியப்படுத்துவது என எண்ணுகிறாள். உங்கள் சொந்த நன்மைக்காகவே நான் இதைச் சொல்கிறேன். உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல. நீங்களோ கர்த்தருக்கு முழுமையான அர்ப்பணிப்புடன் சரியான வழியில் வாழவேண்டும். யாராவது தனக்கென நியமிக்கப்பட்ட கன்னிகையுடன் தான் தவறாக நடக்கக்கூடும் என்று பயந்தாலும், அவளுக்கு வயது போய்க்கொண்டிருக்கிறது என்பதனாலும், தான் விரும்புகிறபடி அவன் அவளைத் திருமணம் செய்துகொள்ளலாம். அது பாவமில்லை. அவர்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும். ஆனால், யாராவது இந்த விஷயத்தில் தன் மனதில் திருமணம் அவசியமில்லை என்ற உறுதியான தீர்மானத்தோடு, தன் ஆசைகளைக் கட்டுப்படுத்துகிறவனாக இருந்து, கன்னிகையை இப்போதைக்குத் திருமணம் செய்வதில்லை எனத் தீர்மானித்தால், அவனும் சரியானதையே செய்கிறான். ஆகவே கன்னிகையைத் திருமணம் செய்கிறவன் சரியானதையே செய்கிறான். ஆனால் அவளைத் திருமணம் செய்யாதவன் அதையும்விட அதிக நலமானதைச் செய்கிறான். தன் கணவன் உயிரோடிருக்கும் காலம்வரைக்கும், ஒரு பெண் தன் கணவனுக்குக் கட்டுப்பட்டவளாகவே இருக்கிறாள். ஆனால் அவளுடைய கணவன் இறந்துபோனால், தான் விரும்பும் யாரையாவது திருமணம் செய்வதற்கு அவளுக்குச் சுதந்திரம் உண்டு. ஆனால் அவள் திருமணம் செய்துகொள்பவன் கர்த்தருக்குச் சொந்தமானவனாக இருக்கவேண்டும். ஆனால் எனது அபிப்பிராயத்தின்படி, அவள் அப்படியே திருமணம் செய்யாதவளாய் இருந்தால், மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பாள். நானும் இறைவனுடைய ஆவியானவரைப் பெற்றிருக்கிறேன் என்ற எண்ணத்திலேயே இந்த யோசனையைக் கொடுக்கிறேன்.

1 கொரிந்தியர் 7:25-40 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அன்றியும் கன்னிகைகளைக்குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆனாலும் நான் உண்மையுள்ளவனாக இருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம் பெற்று, என் கருத்தைத் தெரியப்படுத்துகிறேன். அது என்னவென்றால், இப்பொழுது உண்டாயிருக்கிற துன்பத்தினிமித்தம் திருமணம் இல்லாமலிருக்கிறது மனிதனுக்கு நலமாக இருக்குமென்று நினைக்கிறேன். நீ மனைவியோடு இணைக்கப்பட்டிருந்தால், பிரிந்துபோக வகைதேடாதே; நீ மனைவி இல்லாதவனாக இருந்தால். மனைவியைத் தேடாதே. நீ திருமணம் செய்தாலும் பாவமல்ல; கன்னிகை திருமணம் செய்தாலும் பாவமல்ல. ஆனாலும் அப்படிப்பட்டவர்கள் சரீரத்திலே துன்பப்படுவார்கள்; அதற்கு நீங்கள் தப்பவேண்டும் என்று விரும்புகிறேன். மேலும், சகோதரர்களே, நான் சொல்லுகிறது என்னவென்றால், இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகள் இல்லாதவர்கள்போலவும், அழுகிறவர்கள் அழாதவர்கள்போலவும், சந்தோஷப்படுகிறவர்கள் சந்தோஷப்படாதவர்கள்போலவும், வாங்குகிறவர்கள் வாங்காதவர்கள்போலவும், இந்த உலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாக அனுபவிக்காதவர்கள்போலவும் இருக்கவேண்டும்; இந்த உலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே. நீங்கள் கவலை இல்லாதவர்களாக இருக்கவிரும்புகிறேன். திருமணமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாக இருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். திருமணம் செய்தவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாக இருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். அதுபோல, மனைவியானவளுக்கும், கன்னிப்பெண்ணுக்கும் வித்தியாசமுண்டு. திருமணம் செய்யாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாக இருக்கும்படி, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்; திருமணம் செய்தவள் தன் கணவனுக்கு எப்படிப் பிரியமாக இருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள். இதை நான் உங்களைக் கட்டுப்பாட்டுக்குள் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாக இருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்த்தரைச் சார்ந்துகொண்டிருக்கவேண்டுமென்றும், உங்களுடைய சொந்த பிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன். ஆனாலும் ஒருவன் தன் மகளின் கன்னிப்பருவம் கடந்துபோனதினாலே, அவள் திருமணம் செய்யாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் திருமணம் செய்வது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யவேண்டும்; அது பாவமல்ல, திருமணம் செய்யட்டும். ஆனாலும் அதற்கு அவசியத்தைப் பார்க்காமல், தன் இருதயத்திலே உறுதியுள்ளவனாகவும், சொந்த விருப்பத்தின்படிசெய்ய அதிகாரம் உள்ளவனாகவும் இருந்து, தன் மகளின் கன்னிப்பருவத்தைக் காக்கவேண்டுமென்று தன் இருதயத்தில் முடிவுசெய்கிறவன் நன்மை செய்கிறான். இப்படியிருக்க, அவளைத் திருமணம்செய்துகொடுக்கிறவனும் நன்மை செய்கிறான்; கொடுக்காமலிருக்கிறவனும் அதிக நன்மை செய்கிறான். மனைவியானவள் தன் கணவன் உயிரோடிருக்கும் காலம்வரை திருமண உடன்பாட்டினால் இணைக்கப்பட்டிருக்கிறாள்; தன் கணவன் இறந்தபின்பு தனக்கு விருப்பமானவனாகவும் கர்த்தருக்கு உட்பட்டவனாகவும் இருக்கிற யாரையாவது திருமணம் செய்துகொள்ள விடுதலையாக இருக்கிறாள். ஆனாலும் என்னுடைய கருத்தின்படி அவள் அப்படியே இருந்துவிட்டால் பாக்கியவதியாக இருப்பாள். என்னிடத்திலும் தேவனுடைய ஆவியானவர் உண்டு என்று நினைக்கிறேன்.

1 கொரிந்தியர் 7:25-40 பரிசுத்த பைபிள் (TAERV)

திருமணம் செய்துகொள்ளாதவர்களைப் பற்றி இப்போது எழுதுகின்றேன். கர்த்தரிடமிருந்து இது பற்றிய கட்டளை எதுவும் எனக்கு வரவில்லை. ஆனால், என் கருத்தைச் சொல்கிறேன். கர்த்தர் என்னிடம் இரக்கம் காட்டுவதால் என்னை நீங்கள் நம்பலாம். இது சச்சரவுகளின் காலம். எனவே நீங்கள் இருக்கிறபடியே வாழ்வது உங்களுக்கு நல்லது என நினைக்கிறேன். உங்களுக்கு மனைவி இருந்தால் அவளை விலக்கி வைக்க முற்படாதீர்கள். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால் ஒரு மனைவியைத் தேட முயலாதீர்கள். ஆனால் நீங்கள் திருமணம் செய்ய முடிவுசெய்தால், அது பாவமல்ல திருமணமாகாத ஒரு பெண் திருமணம் செய்துகொள்வதும் பாவமல்ல. ஆனால் திருமணம் செய்துகொள்பவர்களுக்கோ இந்த வாழ்க்கையில் ஏராளமான தொல்லைகள். நீங்கள் அத்தொல்லைகளிலிருந்து விடுபட்டவர்களாய் இருக்க வேண்டுமென விரும்புகிறேன். சகோதர சகோதரிகளே, நான் கருதுவது இதுதான். நமக்கு அதிக காலம் தரப்படவில்லை. இப்போதிருந்தே மனைவியுள்ளவர்கள் மனைவி இல்லாதவர்களைப்போல தங்கள் நேரத்தை கர்த்தரின் சேவைக்காகப் பயன்படுத்துதல் வேண்டும். துக்கம் உடையவர்கள் துக்கமில்லாதவர்களைப்போல வாழ்தல் வேண்டும். சந்தோஷம் உடையவர்கள் சந்தோஷம் அற்றவர்களைப் போல வாழவேண்டும். பொருள்களை வாங்கும் மனிதர்கள் ஏதுமற்றவர்கள்போல இருக்கவேண்டும். இந்த உலகப் பொருள்களைப் பயன்படுத்துபவர்கள், அந்தப் பொருட்கள் முக்கியமானவை அல்ல என்பது போன்று வாழவேண்டும். இந்த உலகமும் இந்த உலகத்தின் வழிகளும் மறைந்துபோகும். எனவே, நீங்கள் இவ்வாறு வாழ வேண்டும். நீங்கள் கவலையினின்று விடுபட வேண்டுமென நான் விரும்புகிறேன். திருமணம் ஆகாதவன் கர்த்தரின் வேலையில் மும்முரமாய் ஈடுபடுகிறான். அவன் கர்த்தரை மகிழ்ச்சிப்படுத்த முயற்சி செய்கிறான். ஆனால், திருமணமானவனோ உலகத்துப் பொருள்கள் தொடர்பான வேலைகளில் மும்முரமாய் ஈடுபடுகிறான். அவன் மனைவியை மகிழ்ச்சிப்படுத்த முயற்சிக்கிறான். அவன் இரண்டு காரியங்களை நினைவில் கொள்ள வேண்டும். மனைவியை மகிழ்ச்சிப்படுத்துவதும், கர்த்தரை மகிழ்ச்சிப்படுத்துவதும் ஆகியவை அவை. திருமணம் ஆகாத பெண்ணோ, ஒரு இளம்பெண்ணோ கர்த்தரின் வேலையில் முனைவாள். கர்த்தருக்கு சரீரத்தையும் ஆன்மாவையும் முழுக்க அர்ப்பணிக்க விரும்புகிறாள். ஆனால், திருமணமான பெண்ணோ உலகக் காரியங்களில் தீவிரமாக ஈடுபடுகிறாள். அவள் கணவனை மகிழ்ச்சிப்படுத்த முயற்சி செய்கிறாள். உங்களுக்கு உதவிசெய்வதற்காகவே இவற்றைச் சொல்கிறேன். உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல. ஆனால் நீங்கள் தக்க வழியில் நடக்க வேண்டுமென விரும்புகிறேன். உங்கள் நேரத்தைப் பிற பொருள்களுக்காகச் செலவிடாமல் உங்களை முழுக்க தேவனுக்குக் கொடுக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். ஒருவனின் குமாரத்தி திருமணமாகும் வயதைக் கடந்துவிட்டபட்சத்தில், அப்பெண்ணின் தந்தை அவளுக்குச் செய்யவேண்டியதைச் செய்யவில்லை என நினைக்கலாம். திருமணம் என்பது முக்கியமானது என அவன் நினைக்கலாம். தனக்கு விருப்பமானதைச் செய்யவேண்டும். திருமணம் செய்துகொள்ள அவளை அனுமதிக்க வேண்டும். அது பாவமல்ல. ஆனால் இன்னொரு மனிதன் மனதில் திடமானவனாக இருக்கக்கூடும். அங்கு திருமணத்துக்குத் தேவையிராது. அவன் விருப்பப்படியே செய்ய அவனுக்கு உரிமையுண்டு. தனது கன்னிப் பெண்ணுக்குத் திருமணம் முடித்துவைக்க அவன் விரும்பாவிட்டால் அப்போது அவன் சரியான செயலையே செய்கிறான். தனது கன்னிப் பெண்ணாகிய குமாரத்தியைத் திருமணம் முடித்து வைப்பவனும் சரியான செயலைச் செய்கிறான். தனது கன்னிப் பெண்ணாகிய குமாரத்தியைத் திருமணம் முடித்து வைக்காதவன் அதைக் காட்டிலும் சிறப்பான செயலைச் செய்கிறான். எவ்வளவு காலம் கணவன் உயிரோடு இருக்கிறானோ அதுவரைக்கும் ஒரு பெண் அவனோடு சேர்ந்து வாழ்தல் வேண்டும். ஆனால் அவள் கணவன் இறந்தால், அப்பெண் தான் விரும்புகிற யாரையேனும் மணந்துகொள்ளும் உரிமை பெறுகின்றாள். ஆனால், கர்த்தருக்குள் அவள் திருமணம் செய்துகொள்ள வேண்டும். பெண் மீண்டும் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சந்தோஷமாய் இருக்கிறாள். இது எனது கருத்து. தேவனுடைய ஆவி எனக்குள் இருப்பதாக நான் நம்புகிறேன்.