1 கொரிந்தியர் 7:1-5

1 கொரிந்தியர் 7:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நீங்கள் முன்பு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறதாவது: “ஒருவன் பாலுறவுரீதியாக ஒரு பெண்ணைத் தொடாமலிருக்கிறது நல்லது.” ஆனால் பாலியல் முறைகேடுகள் இவ்வளவு அதிகமாக இருப்பதால், ஒவ்வொரு மனிதனும் தன் சொந்த மனைவியை உடையவனாய் இருக்கவேண்டும். ஒவ்வொரு பெண்ணும், தன் சொந்தக் கணவனை உடையவளாய் இருக்கவேண்டும். கணவன் தன் மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும். அதுபோலவே, மனைவியும் தன் கணவனுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும். மனைவியின் உடல் அவளுக்கு மட்டும் சொந்தமானதல்ல, அவளுடைய கணவனுக்கும் சொந்தமானது. அதுபோலவே, கணவனின் உடல் அவனுக்கு மட்டுமே சொந்தமானதல்ல, அவனுடைய மனைவிக்கும் சொந்தமானது. நீங்கள் ஜெபத்தில் ஈடுபடுவதற்காக, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் இருவரும் உடன்பட்டு, ஒன்றிணையாதிருக்கலாம். அதற்குப் பின்பு, மீண்டும் ஒன்றுசேர்ந்துகொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் சுயக்கட்டுப்பாடு குறைவின் காரணமாக, சாத்தான் உங்களைச் சோதனைக்கு உட்படுத்தமாட்டான்.

1 கொரிந்தியர் 7:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறது என்னவென்றால், பெண்ணைத் தொடாமலிருக்கிறது மனிதனுக்கு நல்லது. ஆனாலும் வேசித்தனம் இல்லாதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்த கணவனையும் உடையவர்களாக இருக்கவேண்டும். கணவன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யவேண்டும்; அப்படியே மனைவியும் தன் கணவனுக்குச் செய்யவேண்டும். மனைவியானவள் தன் சொந்த சரீரத்திற்கு அதிகாரியல்ல, கணவனே அதற்கு அதிகாரி; அப்படியே கணவனும் தன் சொந்த சரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி. உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையில்லாதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாமல் இருங்கள்; உங்களுக்கு சுயக்கட்டுப்பாடு இல்லாததினால் சாத்தான் உங்களை சோதிக்காதபடிக்கு, மறுபடியும் இணைந்துவாழுங்கள்.

1 கொரிந்தியர் 7:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)

இப்போது, நீங்கள் எனக்கு எழுதிய விஷயங்களைக் குறித்து விவாதிப்பேன். ஒரு மனிதன் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது நல்லது. ஆனால் பாலுறவினால் ஏற்படும் பாவம் எப்போதும் ஆபத்துக்குரியதென்பதால் ஒவ்வொரு ஆணும் தன் சொந்த மனைவியோடு வாழ்தல் வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் அவளது சொந்தக் கணவனோடு இருத்தல் வேண்டும். ஒரு மனைவி என்கிற அளவில் எவற்றையெல்லாம் கணவனிடமிருந்து பெறக்கூடுமோ, அவை அனைத்தையும் கணவன் அவனது மனைவிக்கு வழங்கவேண்டும். அவ்வாறே ஒரு கணவன் என்கிற அளவில் எவற்றையெல்லாம் மனைவியிடமிருந்து பெறக் கூடுமோ அவை அனைத்தையும் மனைவி தன் கணவனுக்கு வழங்குதல் வேண்டும். மனைவிக்கு அவளது சரீரத்தின் மீது சொந்தம் பாராட்டும் அதிகாரம் கிடையாது. அவள் சரீரத்தின் மீது அவளது கணவனுக்கே அதிகாரம் உண்டு. கணவனுக்கு அவன் சரீரத்தின் மீது எந்த அதிகாரமும் கிடையாது. அவன் மனைவிக்கே அவனது சரீரத்தின்மீது அதிகாரம் உண்டு. கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் சரீரத்தைப் பகிர்ந்துகொள்ள மறுப்பு தெரிவிக்காதீர்கள். ஆனால் விதிவிலக்காக சில காலத்திற்குப் பாலுறவில் ஈடுபடாமல் இருப்பதென்றால் நீங்கள் இருவருமாக ஒப்பந்தத்திற்கு வரவேண்டும். பிரார்த்தனையில் ஈடுபடுவதற்காக இதை நீங்கள் செய்யலாம். பின்னர் இருவரும் ஒருமித்து வாழ்தல் வேண்டும். இது எதற்காக எனில், பலவீனமான தருணங்களில் உங்களை சாத்தான் கவர்ந்திழுத்துவிடாமல் இருப்பதற்காகும்.

1 கொரிந்தியர் 7:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறதென்னவென்றால், ஸ்திரீயைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது. ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும். புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள். மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி. உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடிவாழுங்கள்.