ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 7:1-13

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 7:1-13 TAERV

சகோதர சகோதரிகளே! நீங்கள் அனைவரும் மோசேயின் சட்டவிதியைத் தெரிந்திருக்கிறீர்கள். ஒருவன் உயிரோடு இருக்கும்வரைதான் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகின்றது. நான் உங்களுக்கு ஒரு உதாரணத்தைச் சொல்லுகிறேன். ஒரு மணமான பெண் தன் கணவன் உயிரோடு இருக்கும்வரைதான் தன் கணவனோடு வாழ சட்டத்தால் கட்டுப்பட்டுள்ளாள். ஆனால் அவன் இறந்து போனால், அவள் திருமண விதிகளிலிருந்து விடுவிக்கப்படுகிறாள். தன் கணவன் உயிரோடு இருக்கும்போதே ஒரு பெண் இன்னொருவனை மணந்துகொண்டால் அவள் விபசாரம் என்னும் குற்றத்துக்கு ஆளாகிறாள் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் அவளது கணவன் இறந்தபின் எல்லா திருமண விதிகளில் இருந்தும் அவள் சுதந்தரமாகிறாள். அப்போது அவள் இன்னொருவனை மணக்க விரும்பினால் அது விபசாரம் எனும் குற்றத்துக்கு ஆளாக்காது. சகோதர சகோதரிகளே! இதே வழியில், உங்கள் பழைய வாழ்வு இறந்து கிறிஸ்துவின் சரீரம் மூலம் சட்டத்திலிருந்து விடுதலை ஆனீர்கள். இப்போது நீங்கள் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த மற்றவர்களோடு சேர்க்கப்படுகிறீர்கள். அதனால் தேவனுக்கு சேவைசெய்ய நாம் பயன்படமுடியும். முன்பு, நாம் நமது மாமிசத்தால் ஆளப்பட்டிருந்தோம். சட்டத்தால் பாவ இச்சைகள் நம்மிடம் தோன்றின. அவை நமது சரீர உறுப்புகள் மீது ஆட்சி செலுத்தியது. அது நமக்கு மரணத்தைக் கொடுத்தது. கடந்த காலத்தின் சட்டவிதிகள் நம்மைச் சிறைக் கைதிகளைப்போன்று வைத்திருந்தன. ஆனால் அந்தப் பழையவிதிகள் மறைந்துபோனது. நாமும் விதிகளினின்றும் விடுவிக்கப்பட்டோம். எனவே இப்போது புதிய வழியில் தேவனுக்கு சேவை செய்கிறோம். பழைய வழியில் சட்டவிதிக்குக் கட்டுப்பட்டு இருக்கவில்லை. இப்போது பரிசுத்த ஆவியானவரோடும் இருக்கிறோம். சட்டவிதியையும் பாவத்தையும் நான் ஒரே விதமாக நினைப்பதாக நீங்கள் எண்ணக் கூடும். அது உண்மையல்ல. ஆனால் சட்ட விதியின் மூலமாகவே நான் பாவமென்றால் என்னவென்று புரிந்துகொண்டேன். “பிறர் பொருள் மேல் ஆசைப்படாமல் இருங்கள்” என்று சட்டவிதி சொல்லாமல் இருந்தால் அது பாவம் என்று எனக்கு தெரியாமல் போயிருக்கும். சகலவிதமான தவறான ஆசைகளையும் நான் விரும்புமாறு கட்டளையை உபயோகப்படுத்தும் ஒரு வழியை பாவம் கண்டுபிடித்தது. அக்கட்டளையின் மூலமாகவே பாவம் வந்து சேர்ந்தது. சட்டவிதி இல்லாவிட்டால் பாவத்துக்கு வல்லமை இல்லாமல் போகும். முன்பு சட்டங்கள் இல்லாதவனாய் இருந்தபோது நான் உயிர் உள்ளவனாய் இருந்தேன். சட்டவிதி வந்த பிறகு பாவம் உயிர் கொண்டது. பாவத்தால் நான் உள்ளத்தைப் பொருத்தமட்டில் மரித்தவன் ஆனேன். உயிர் கொடுப்பதற்காக வந்த சட்டவிதி எனக்கு மரணமுண்டாகக் காரணமானது. பாவமானது அந்த கட்டளையினாலே நேரம் பார்த்து என்னை வஞ்சித்து, அதன் மூலம் என்னைக் கொன்றது. சட்டவிதி தூய்மையானதுதான். கட்டளையும் கூட தூய்மையாகவும் சரியாகவும் நன்மையாகவும் இருக்கின்றன. அதனால் நன்மையானது எனக்கு இறப்புக்குரியதாயிற்றா? இல்லை. ஆனால் பாவமானது அந்நன்மையையும் தீமையாக்கி எனக்கு மரணத்தைக் கொண்டு வந்துவிட்டது. இதனால் பாவத்தின் இயல்பை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. பாவம் மிக மிகக் கொடுமையானதாகக் காட்டப்பட்டது. இதற்குப் பிரமாணமே பயன்பட்டது.

Video for ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 7:1-13