எண்ணாகமம் 7:12-89

எண்ணாகமம் 7:12-89 TAERV

பன்னிரெண்டு தலைவர்களில் ஒவ்வொரு வரும் தங்கள் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தனர். அவை பின்வருமாறு: ஒவ்வொரு தலைவனும் மூன்றேகால் பவுண்டு எடையுள்ள ஒவ்வொரு வெள்ளித் தட்டுக்களையும், ஒன்றே முக்கால் பவுண்டு எடையுள்ள ஒவ்வொரு வெள்ளிக் கோப்பைகளையும் கொண்டு வந்தனர். இவ்விரண்டு காணிக்கைகளும் அதிகாரப்பூர்வமான அளவால் நிறுக்கப்பட்டன. வட்டமான கிண்ணங்களும், தட்டுகளும் எண்ணெயில் கலக்கப்பட்ட மெல்லிய மாவால் நிரப்பப்பட்டு இருந்தன. இது தானியக் காணிக்கைக்குப் பயன்படுவதாக இருந்தது. ஒவ்வொரு தலைவனும் பெரிய தங்கக் கரண்டியையும் கொண்டு வந்தனர். அது 4 அவுன்ஸ் எடையுள்ளதாய் இருந்தது. இக்கரண்டி நறுமணப் பொருட்களால் நிரப்பப்பட்டிருந்தது. ஒவ்வொரு தலைவனும் ஒரு இளம் காளையைக் கொண்டு வந்தனர். அதோடு ஒரு ஆட்டுக் கடா, ஒரு வயதான ஒரு ஆண் ஆட்டுக்குட்டி ஆகியவற்றையும் கொண்டு வந்தனர். இம்மிருகங்கள் தகன பலிக்கு உரியவை. ஒவ்வொரு தலைவனும் பாவ பரிகார பலிக்குரியதாக ஒரு ஆட்டுக்கடாவைக் கொண்டு வந்தனர். அதோடு அவர்கள் 2 பசுக்களையும் 5 ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான 5 வெள்ளாட்டுக் கடாக்களையும், 5 ஆண் ஆட்டுக் குட்டிகளையும் கொண்டு வந்தனர். இவை அனைத்தும் சமாதான பலிக்காகக் கொல்லப்பட்டன. முதல் நாளில், யூதா கோத்திரத்தின் தலைவனான அம்மினதாபின் குமாரனான நகசோன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான். இரண்டாம் நாளில், இசக்கார் குழுவின் தலைவனான சூவாரின் குமாரன் நெதனெயேல் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான். மூன்றாம் நாளில், செபுலோன் கோத்திரத்தின் தலைவனான ஏலோனின் குமாரன் எலியாப் தன் அன்பளிப்புகளைச் கொண்டு வந்தான். நான்காம் நாளில், ரூபன் கோத்திரத்தின் தலைவனான சேதேயூரின் குமாரனான எலிசூர் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான். ஐந்தாம் நாளில், சிமியோன் கோத்திரத்தின் தலைவனான சூரிஷதாயின் குமாரன் செலுமியேல் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான். ஆறாம் நாளில், காத் கோத்திரத்தின் தலைவனான தேகுவேலின் குமாரன் எலியாசாப் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான். ஏழாம் நாளில், எப்பிராயீம் கோத்திரத்தின் தலைவனான அம்மியூதின் குமாரன் எலிஷாமா தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான். எட்டாம் நாளில், மனாசே கோத்திரத்தின் தலைவனான பெதாசூரின் குமாரன் கமாலியேல் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான். ஒன்பதாம் நாளில், பென்யமீன் கோத்திரத்தின் தலைவனான கீதெயோனின் குமாரன் அபீதான் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான். பத்தாம் நாளில், தாண் கோத்திரத்தின் தலைவனான அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான். பதினோறாம் நாளில், ஆசேர் கோத்திரத்தின் தலைவனான ஓகிரானின் குமாரன் பாகியேல் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான். பன்னிரெண்டாம் நாளில், நப்தலி கோத்திரத்தின் தலைவனான ஏனானின் குமாரன் அகீரா தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான். இஸ்ரவேலின் ஜனங்களின் தலைவர்களிடமிருந்து இவ்வாறு பல்வேறு அன்பளிப்புகள் வந்து சேர்ந்தன. அவர்கள் இவற்றை மோசே பலிபீடத்தை அபிஷேகம் செய்து அர்ப்பணித்த நாட்களில் கொண்டு வந்தனர். அவர்கள் 12 வெள்ளிக் தட்டுகளையும், 12 வெள்ளிக் கோப்பைகளையும், 12 தங்கக் கரண்டிகளையும் கொண்டு வந்தனர். ஒவ்வொரு வெள்ளித்தட்டும் முன்றே கால் பவுண்டு எடையுள்ளதாய் இருந்தது. ஒவ்வொரு வெள்ளிக் கோப்பையும் ஒன்றே முக்கால் பவுண்டு எடையுள்ளதாய் இருந்தது. ஆக மொத்தம் தட்டுகளும் கோப்பைகளும் சேர்ந்து 60 பவுண்டு அதிகாரப்பூர்வமான அளவு எடையுள்ள வெள்ளியாய் இருந்தது. நறுமணப் பொருட்கள் நிறைந்த 12 தங்கக் கரண்டிகளும், ஒவ்வொன்றும் 4 அவுன்ஸ் உடையதாக இருந்தது. அந்த 12 தங்கக் கரண்டிகளும் சேர்ந்து 3 பவுண்டு அதிகாரப் பூர்வமான அளவு எடையுள்ளதாக இருந்தன. ஆக மொத்தம் தகனபலிக்கான 12 காளைகளும் 12 ஆட்டுக்கடாக்களும், 12 ஒரு வயதான ஆண் ஆட்டுக்குட்டிகளும் கொண்டு வரப்பட்டன. அவற்றோடு தானிய காணிக்கையும் கொடுக்கப்பட்டன. கர்த்தருக்கு பாவப்பரிகாரப் பலியாக 12 ஆண் வெள்ளாடுகளும் கொண்டு வரப்பட்டன. சமாதானப் பலிக்குப் பயன்படுத்துவதற்காகத் தலைவர்கள் மிருகங்களைக் கொண்டு வந்தனர். அவற்றின் எண்ணிக்கையானது 24 காளைகள், 60 ஆட்டுக் கடாக்கள், 60 வெள்ளாட்டுக் கடாக்கள், 60 ஒரு வயதான ஆண் ஆட்டுக்குட்டிகள் என இருந்தன. இவ்வாறு மோசே பலிபீடத்தை அபிஷேகம் செய்த பிறகு, அவர்கள் அதனை அர்ப்பணம் செய்தனர். கர்த்தரோடு பேசுவதற்காக மோசே ஆசரிப்புக் கூடாரத்தின் உள்ளே சென்றான். அப்போது கர்த்தரின் குரல் அவனோடு பேசுவதைக் கேட்டான். அந்தக் குரலானது உடன்படிக்கைப் பெட்டியின் மேலுள்ள கிருபாசனமான இரு கேருபீன்களின் நடுவில் இருந்து உண்டாயிற்று. தேவன் மோசேயோடு பேசிய முறை இதுதான்.