ஆதியாகமம் 19:1-14

ஆதியாகமம் 19:1-14 TAERV

அன்று மாலையில் இரண்டு தேவ தூதர்கள் சோதோம் நகரத்திற்கு வந்தனர். நகர வாசலில் இருந்துகொண்டு லோத்து தேவதூதர்களைப் பார்த்தான். அவர்கள் நகரத்துக்குப் போகும் பயணிகள் என்று நினைத்தான். அவன் எழுந்து அவர்களிடம் சென்று தரையில் குனிந்து வணங்கினான். லோத்து அவர்களிடம், “ஐயா, எனது வீட்டிற்கு வாருங்கள். நான் உங்களுக்குச் சேவை செய்வேன். உங்கள் பாதங்களைக் கழுவிக்கொண்டு இரவில் அங்கே தங்கி, நாளை உங்கள் பயணத்தைத் தொடரலாம்” என்றான். அதற்கு தேவதூதர்கள், “இல்லை, நாங்கள் இரவில் வெட்டவெளியில் தங்குவோம்” என்றனர். ஆனால் லோத்து தொடர்ந்து தன் வீட்டிற்கு வருமாறு அவர்களை வற்புறுத்தினான். அவர்களும் ஒப்புக்கொண்டு அவனது வீட்டிற்குப் போனார்கள். அவர்களுக்காக அவன் ஆயத்தம் செய்த ரொட்டியை அவர்கள் சாப்பிட்டார்கள். அன்று மாலை தூங்குவதற்கு முன்னால், லோத்தின் வீட்டிற்கு நகரின் பலபாகங்களில் இருந்தும் இளைஞர், முதியோர்கள் எனப் பலரும் கூடிவந்து வீட்டைச் சுற்றிலும் நின்றுகொண்டு அவனை அழைத்தனர். அவர்கள், “இன்று இரவு உன் வீட்டிற்கு வந்த இருவரும் எங்கே? அவர்களை வெளியே அழைத்து வா, நாங்கள் அவர்களோடு பாலின உறவு கொள்ள வேண்டும்” என்றனர். லோத்து வெளியே வந்து வீட்டின் கதவை அடைத்துக்கொண்டான். லோத்து அவர்களிடம், “நண்பர்களே வேண்டாம். உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கெட்டச் செயல்களைச் செய்ய வேண்டாம். எனக்கு இரண்டு குமாரத்திகள் இருக்கிறார்கள். அவர்கள் இதுவரை எந்த ஆணையும் அறியாதவர்கள். நான் அவர்களை உங்களுக்குத் தருகிறேன். நீங்கள் அவர்களோடு என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். ஆனால் இந்த மனிதர்களை எதுவும் செய்து விடாதீர்கள். இவர்கள் என் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். நான் அவர்களைப் பாதுகாக்க வேண்டும்” என்றான். வீட்டைச் சுற்றி நின்றவர்கள், “எங்கள் வழியில் குறுக்கிடாதே” என்று சத்தமிட்டார்கள். பிறகு அவர்கள் தங்களுக்குள்ளேயே, “லோத்து நமது நகரத்திற்கு விருந்தாளியாக வந்தான். இப்போது நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று நமக்கே கூறுகிறான்” என்றனர். பிறகு அவர்கள் லோத்திடம், “நாங்கள் அந்த மனிதர்களை விட உனக்கே அதிகக் கொடுமையைச் செய்வோம்” என்று கூறி லோத்தை நெருங்கி வந்து, கதவை உடைப்பதற்கு முயன்றனர். ஆனால் லோத்தின் வீட்டிற்குள் இருந்த இருவரும் கதவைத் திறந்து லோத்தை வீட்டிற்குள் இழுத்து கதவை மூடிக்கொண்டனர். பிறகு அவர்கள் கதவுக்கு வெளியே இருந்த இளைஞர்களும் முதியவர்களும் தங்கள் பார்வையை இழக்கும்படி செய்தனர். எனவே, அவர்களால் கதவு இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த இருவரும் லோத்திடம், “உன் குடும்பத்திலுள்ளவர்களில் யாராவது இந்த நகரத்தில் இருக்கிறார்களா? உனக்கு மருமகன்களோ, குமாரர்களோ, குமாரத்திகளோ அல்லது வேறு யாராவது இந்நகரத்தில் இருந்தால் அவர்களை உடனே இந்நகரத்தைவிட்டு விலகச் சொல்ல வேண்டும். நாங்கள் இந்த நகரத்தை அழிக்கப் போகிறோம். இந்த நகரம் எவ்வளவு மோசமானது என்பதைப்பற்றி கர்த்தர் அறிந்தபடியால் இதனை அழிக்க எங்களை அனுப்பினார்” என்றார்கள். ஆகவே, லோத்து வெளியே போய், தனது குமாரத்திகளை மணந்துகொள்வதாயிருந்த மருமகன்களிடம், “வேகமாக இந்த நகரத்தை விட்டு வெளியேறுங்கள். விரைவில் கர்த்தர் இந்த நகரத்தை அழிக்கப் போகிறார்” என்றான். அவர்களோ அவன் வேடிக்கையாகப் பேசுவதாய் எண்ணினார்கள்.