நீதிமொழி 15:13-33

நீதிமொழி 15:13-33 TCV

மகிழ்ச்சியுள்ள இருதயம் முகத்தை மலர்ச்சியுடையதாக்கும்; ஆனால் இருதயத்தின் வேதனையோ ஆவியை நொறுங்கச்செய்யும். பகுத்தறியும் இருதயம் அறிவைத் தேடுகிறது, ஆனால் மூடரின் வாயோ மூடத்தனத்திலேயே மேய்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்நாட்கள் எல்லாம் அவலமானவை, ஆனால் மகிழ்ச்சியான இருதயத்திற்கு எல்லா நாளும் விருந்து. அதிக செல்வமும் அதனோடு கலக்கமும் இருப்பதைவிட, சிறிதளவு செல்வமும் அதனோடு யெகோவாவுக்குப் பயந்து நடத்தலும் இருப்பது சிறந்தது. பகையோடு பரிமாறப்படும் நல்ல இறைச்சி உணவைவிட, அன்போடு கிடைக்கும் காய்கறி உணவே சிறந்தது. முற்கோபிகள் சண்டையைத் தூண்டிவிடுகிறார்கள்; ஆனால் பொறுமையுள்ளவர்கள் வாக்குவாதத்தை நிறுத்துகிறார்கள். சோம்பேறியின் வழி முள்வேலியினால் தடைசெய்யப்பட்டிருக்கிறது; ஆனால் நீதிமான்களின் வழி நன்கு கட்டமைக்கப்பட்ட சாலையாயிருக்கிறது. ஞானமுள்ள பிள்ளைகள் தங்கள் தகப்பனுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறார்கள், மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியம்பண்ணுகிறான். புத்தியற்றவர்களுக்கு மூடத்தனம் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது, ஆனால் புரிந்துகொள்ளுதல் உள்ளவர்கள் நேர்வழியில் செல்கிறார்கள். ஆலோசனை குறைவுபடுவதால் திட்டங்கள் தோல்வியடையும், அநேகர் ஆலோசித்து செயல்பட்டால் அவை வெற்றிபெறும். தகுந்த பதில் சொல்வதில் மகிழ்ச்சி கிடைக்கிறது; காலத்திற்கு ஏற்ற வார்த்தை எவ்வளவு நலமானது! வாழ்வின் பாதை ஞானமுள்ளவர்களை உன்னதத்திற்கு வழிநடத்துகிறது, அது பாதாளத்திற்குப் போகாதபடி அவர்களைக் காத்துக்கொள்ளும். பெருமையுள்ளவரின் வீட்டை யெகோவா இடித்துப்போடுகிறார், ஆனால் விதவையின் எல்லைகளையோ அவர் பாதுகாக்கிறார். கொடியவர்களின் சிந்தனைகளை யெகோவா அருவருக்கிறார், ஆனால் கருணைமிக்க வார்த்தைகள் அவருடைய பார்வையில் தூய்மையானவை. பேராசைக்காரர் தன் குடும்பத்திற்குத் தொல்லையைக் கொண்டுவருகிறார்கள், ஆனால் இலஞ்சத்தை வெறுப்பவர்கள் நல்வாழ்வடைவார்கள். நீதிமான்களின் இருதயம் பதில் சொல்லுமுன் கவனமாக சிந்திக்கிறது, ஆனால் கொடியவர்களின் வாய் தீமையைக் கக்குகிறது. யெகோவா கொடியவர்களுக்குத் தூரமாய் இருக்கிறார், ஆனால் அவர் நீதிமான்களின் ஜெபத்தைக் கேட்கிறார். மகிழ்ச்சியான பார்வை இருதயத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது; நற்செய்தி எலும்புகளுக்குச் சுகத்தைக் கொடுக்கிறது. வாழ்வு கொடுக்கும் திருத்துதலைக் கவனமாகக் கேட்கிறவர்கள் ஞானிகளோடு குடியிருப்பார்கள். அறிவுரையை உதாசீனம் செய்கிறவர்கள் தங்களையே வெறுக்கிறார்கள்; ஆனால் கண்டித்துத் திருத்துதலை ஏற்றுக்கொள்பவர்கள் புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்கிறார்கள். யெகோவாவுக்குப் பயந்து நடப்பது ஞானத்தைப் போதிக்கிறது, கனத்திற்கு முன்பு தாழ்மை.

நீதிமொழி 15:13-33 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்