லூக்கா 15:11-19

லூக்கா 15:11-19 TCV

இயேசு தொடர்ந்து சொன்னதாவது: “ஒருவனுக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தனது தகப்பனிடம், ‘அப்பா, சொத்தில் எனக்குரிய பங்கைத் தாரும்’ என்று கேட்டான். எனவே தகப்பன், தனது சொத்தை இரண்டுபேர்களுக்கும் இடையில் பிரித்துக்கொடுத்தான். “சில நாட்களுக்குள்ளாகவே, இளையமகன் தன்னிடம் உள்ள எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரமாயுள்ள ஒரு நாட்டிற்குப் போனான். அவன் அங்கே, துன்மார்க்கமான வாழ்க்கையை வாழ்ந்து, தனது செல்வத்தையெல்லாம் வீணாக செலவுசெய்து அழித்துப்போட்டான். அவன் எல்லாவற்றையும் செலவுசெய்து முடித்தபின், அந்த நாடு முழுவதிலும் ஒரு கொடிய பஞ்சம் ஏற்பட்டது; அதனால், அவனுக்கு வறுமை ஏற்படத் தொடங்கியது. எனவே, அவன் அந்த நாட்டைச் சேர்ந்த ஒருவனிடம் போய், கூலிக்கு அமர்ந்தான். அங்கு அவன், பன்றிகளை மேய்க்கும்படி வயலுக்கு அனுப்பப்பட்டான். அப்பொழுது அவன், பன்றிகள் தின்கின்ற தவிட்டினாலேயே தனது வயிற்றை நிரப்ப ஆசைப்பட்டான். ஆனால், ஒருவரும் அவனுக்கு அதையும் கொடுக்கவில்லை. “அவனது புத்தி தெளிவடைந்தபோது, ‘எனது தகப்பனிடம் இருக்கும் கூலிக்காரர்களில் எத்தனையோ பேர், உணவைத் தாராளமாய்ப் பெற்றுக்கொள்கிறார்கள். நானோ, இங்கே பட்டினியில் சாகிறேன். நான் புறப்பட்டு என் தகப்பனிடத்திற்குத் திரும்பிப்போய், அவரிடம்: அப்பா, நான் பரலோகத்திற்கு எதிராகவும், உமக்கு எதிராகவும் பாவம் செய்துவிட்டேன். நான் இனிமேலும் உம்முடைய மகன் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியுடையவன் அல்ல; என்னை உமது கூலிக்காரர்களில் ஒருவனாக வைத்துக்கொள்ளும் எனச் சொல்வேன்’ என்று சொல்லிக்கொண்டான்.