யோவான் 14:15-30

யோவான் 14:15-30 TCV

“நீங்கள் என்னில் அன்பாயிருந்தால், நான் கொடுக்கும் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். நான் உங்களுக்காகப் பிதாவினிடத்தில் வேண்டிக்கொள்வேன். அப்பொழுது அவர் காலமெல்லாம் உங்களுடன் இருக்கும்படி மற்றொரு உதவியாளரை உங்களுக்குக் கொடுப்பார். அவரே சத்திய ஆவியானவர். இந்த உலகத்தினரால் அவரை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் அவர்கள் அவரைக் காணாமலும், அறியாமலும் இருக்கிறார்கள். ஆனால் நீங்களோ அவரை அறிந்திருக்கிறீர்கள். அவர் உங்களுடனேகூட இருக்கிறார்; மேலும் உங்களுக்குள்ளும் இருப்பார். நான் உங்களை திக்கற்றோராய் விடமாட்டேன்; நான் உங்களிடத்தில் மீண்டும் வருவேன். இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது. ஆனால் நீங்களோ என்னைக் காண்பீர்கள். நான் வாழ்கிறேன், நீங்களும் வாழ்வீர்கள். அந்த நாள் வரும்போது, நான் பிதாவில் இருப்பதையும், நீங்கள் என்னில் இருப்பதையும், நான் உங்களில் இருப்பதையும் நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள். என்னுடைய கட்டளைகளை ஏற்று, அவைகளுக்குக் கீழ்ப்படிகிறவன் எவனோ, அவனே என்னில் அன்பாயிருக்கிறவன். என்னில் அன்பாயிருக்கிறவன் பிதாவினால் அன்பு செலுத்தப்படுவான். நானும் அவனில் அன்பாயிருந்து, என்னை அவனுக்கு வெளிப்படுத்துவேன்.” அப்பொழுது யூதாஸ் ஸ்காரியோத் அல்லாத மற்ற யூதா அவரிடம், “ஆண்டவரே உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப் போகிறீரே, அது ஏன்?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “யாராவது என்னில் அன்பாயிருந்தால், அவர்கள் என்னுடைய போதனைக்குக் கீழ்ப்படிவார்கள். என்னுடைய பிதா அவர்களில் அன்பாயிருப்பார். நாங்கள் அவனிடத்தில் வந்து, அவனுடன் குடியிருப்போம். என்னில் அன்பாயிராதவன் என்னுடைய போதனைக்குக் கீழ்ப்படியமாட்டான். நீங்கள் கேட்கிற இந்த வார்த்தைகள் என்னுடைய வார்த்தைகள் அல்ல; அவை என்னை அனுப்பிய பிதாவுக்குரிய வார்த்தைகள். “நான் உங்களோடு இருக்கும்போதே இவைகளையெல்லாம் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். ஆனால், என்னுடைய பெயரிலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியானவரான உதவியாளர், உங்களுக்கு எல்லாவற்றையும் போதிப்பார். அவர் நான் உங்களுக்குச் சொன்ன ஒவ்வொன்றையும் உங்களுக்கு நினைவு படுத்துவார். சமாதானத்தை உங்களுக்கு கொடுத்துவிட்டுப் போகிறேன். என்னுடைய சமாதனத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் கொடுக்கிற இந்த சமாதானமோ உலகம் கொடுக்கும் சமாதானத்தைப் போன்றது அல்ல, ஆகையால் உங்கள் உள்ளம் கலங்கவேண்டாம்; பயப்படவும் வேண்டாம். “ ‘நான் உங்களைவிட்டுப் போகப்போகிறேன்’ என்றும், ‘உங்களிடத்தில் திரும்பிவருவேன்’ என்றும் நான் சொன்னதைக் கேட்டீர்கள். நீங்கள் என்னில் அன்பாயிருந்தால், நான் பிதாவினிடத்தில் போகிறதைக் குறித்து மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் பிதா, என்னிலும் பெரியவராயிருக்கிறார். அது நிகழும் முன்னதாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். அதனால் அது நிகழும்போது நீங்கள் என்னை விசுவாசிப்பீர்கள். இன்னும் நான் உங்களுடன் மிகுதியாக பேசப்போவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்குரியது என்னிடத்தில் ஒன்றுமில்லை.