ஏசாயா 58:3-9

ஏசாயா 58:3-9 TCV

‘நாங்கள் உபவாசித்தோம், என்று அவர்கள் கேட்கிறார்கள். நீர் அதைக் காணவில்லையா? நாங்கள் ஏன் எங்களைத் தாழ்த்தினோம்; நீர் அதைக் கவனிக்கவில்லையா?’ “நீங்கள் உபவாசிக்கும் நாளில் நீங்கள் விரும்பியதையே செய்து, உங்கள் வேலைக்காரரையும் கடுமையாய் நடத்துகிறீர்கள். உங்கள் உபவாசம் வாக்குவாதத்திலும், சண்டையிலும், கொடுமையான கைகளினால் ஒருவரையொருவர் அடித்துக்கொள்வதிலுமே முடிகிறது. நீங்கள் இன்று உபவாசம் செய்வதுபோல் உபவாசித்தால், உங்கள் குரல் பரலோகத்திற்கு எட்டுமென எதிர்பார்க்க முடியாதே. இப்படியான உபவாசத்தையா நான் தெரிந்துகொண்டேன்? அது ஒருவன் தன்னைத் தாழ்த்திக்கொள்ளுவதற்கான நாள் மட்டுமோ? உபவாசம் என்பது துக்கவுடையில், சாம்பலில் கிடந்து நாணல் புல்லைப்போல் தலைகுனிவது மட்டுமா? இதையா யெகோவா ஏற்றுக்கொள்ளும் உபவாசம் என்றும் அவருக்கு ஏற்ற நாள் என்றும் சொல்கிறீர்கள். “நான் தெரிந்துகொண்ட உபவாசம் என்பது: அநீதியின் சங்கிலிகளைத் தளர்த்துவதும், நுகத்தின் கயிறுகளை அவிழ்ப்பதும், ஒடுக்கப்பட்டோரை விடுதலையாக்குவதும், ஒவ்வொரு நுகத்தையும் உடைத்துப் போடுவதும் அல்லவோ? பசியுற்றோருடன் உங்கள் உணவைப் பகிர்ந்துகொள்வதும், வீடற்ற ஏழைகளுக்கு இருப்பிடம் கொடுப்பதும், உடையில்லாதவனைக் கண்டால் அவனுக்கு உடை கொடுப்பதும், உன் சொந்த உறவினர்களிடமிருந்து உன் முகத்தைத் திருப்பிக்கொள்ளாதிருப்பதும் அல்லவோ? அப்பொழுது உனது வெளிச்சம் விடியற்காலை வெளிச்சத்தைப்போல் பிரகாசிக்கும்; நீ விரைவில் சுகவாழ்வு துளிர்க்கும். உங்கள் நீதி உங்கள்முன் செல்லும், யெகோவாவின் மகிமை உங்களைப் பின்னாலே காக்கும். அப்பொழுது நீ கூப்பிடுவாய், யெகோவா பதிலளிப்பார்; நீ உதவிகேட்டு அழுவாய், ‘நான் இங்கே இருக்கிறேன்’ என்று அவர் சொல்வார்.