யோசு 19

19
அத்தியாயம் 19
சிமியோன் கோத்திரத்தார்களின் பங்கு
1இரண்டாம் சீட்டு சிமியோனுக்கு விழுந்தது; சிமியோன் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பங்கு, யூதா கோத்திரத்தார்களுடைய பங்குகளின் நடுவே இருக்கிறது. 2அவர்களுக்குச் சொந்தமாகக் கிடைத்த பட்டணங்களாவன: பெயெர்செபா, சேபா, மொலாதா, 3ஆசார்சூவால், பாலா, ஏத்சேம், 4எல்தோலாத், பெத்தூல், ஓர்மா, 5சிக்லாக், பெத்மார்காபோத், ஆத்சார்சூசா, 6பெத்லெபாவோத், சருகேன் பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் உட்பட பதிமூன்று. 7மேலும் ஆயீன், ரிம்மோன். ஏத்தேர், ஆசான் என்னும் நான்கு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே. 8இந்தப் பட்டணங்களைச் சுற்றிலும் பாலாத்பெயேர்மட்டும், தெற்கே இருக்கிற ராமாத்வரை இருக்கிற எல்லாக் கிராமங்களுமே; இவை சிமியோன் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த பங்கு. 9சிமியோன் கோத்திரத்தார்களுடைய பங்கு யூதா கோத்திரத்தார்களின் பங்குவீதத்திற்குள் இருக்கிறது; யூதா கோத்திரத்தார்களின் பங்கு அவர்களுக்கு மிகுதியாக இருந்தபடியால், சிமியோன் கோத்திரத்தார் அவர்களுடைய பங்குகளின் நடுவிலே பங்குகளைப் பெற்றார்கள்.
செபுலோன் கோத்திரத்தார்களின் பங்கு
10மூன்றாம் சீட்டு செபுலோன் கோத்திரத்தார்களுக்கு விழுந்தது; அவர்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த சொந்தமான பங்குவீதம் சாரீத் வரை உள்ளது. 11அவர்களுடைய எல்லை மேற்கே மாராலாவுக்கு ஏறி, தாபசேத்திற்கு வந்து, யொக்னியாமுக்கு எதிரான ஆற்றுக்குப் போகும். 12சாரீதிலிருந்து அது கிழக்கே சூரியன் உதிக்கும் முனையாய்க் கிஸ்லோத்தாபோரின் எல்லையினிடத்திற்குத் திரும்பி, தாபராத்திற்குச் சென்று, யப்பியாவுக்கு ஏறி, 13அங்கேயிருந்து கிழக்குப்புறத்திலே காத்தேப்பேரையும் இத்தாகாத்சீனையும் கடந்து, ரிம்மோன்மெத்தோவாருக்கும் நேயாவுக்கும் போகும். 14அப்புறம் அந்த எல்லை வடக்கே அன்னத்தோனுக்குத் திரும்பி, இப்தாவேலின் பள்ளத்தாக்கிலே முடியும். 15காத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் முதலான பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும், 16செபுலோன் கோத்திரத்தார்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி, கிடைத்த பங்குகள் ஆகும்.
இசக்கார் கோத்திரத்தார்களின் பங்கு
17நாலாம் சீட்டு இசக்காருக்கு விழுந்தது. 18இசக்கார் கோத்திரத்தார்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, யெஸ்ரயேல், கெசுல்லோத், சூனேம், 19அப்பிராயீம், சீகோன் அனாகராத், 20ராப்பித், கிஷியோன், அபெத்ஸ், 21ரெமேத், என்கன்னீம், என்காதா, பெத்பாத்செஸ் இவைகளே. 22அப்புறம் அந்த எல்லை தாபோருக்கும், சகசீமாவுக்கும், பெத்ஷிமேசுக்கும் வந்து யோர்தானிலே முடியும்; அதற்குள் பதினாறு பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உண்டு. 23இந்தப் பட்டணங்களும் இவைகளைச்சேர்ந்த கிராமங்களும் இசக்கார் கோத்திரத்திற்கு, அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பங்கு ஆகும்.
ஆசேர் கோத்திரத்தார்களின் பங்கு
24ஐந்தாம் சீட்டு ஆசேர் கோத்திரத்தார்களுக்கு விழுந்தது. 25அவர்களுடைய வம்சங்களின்படி அவர்களுக்குக் கிடைத்த எல்லை, எல்காத், ஆலி, பேதேன், அக்சாப், 26அலம்மேலெக், ஆமாத், மிஷயால் இவைகளே; பின்பு அது மேற்கே கர்மேலுக்கும் சீகோர்லிப்னாத்திற்கும் சென்று, 27கிழக்கே பெத்தாகோனுக்குத் திரும்பி, செபுலோனுக்கு வடக்கே இருக்கிற இப்தாவேலின் பள்ளத்தாக்கிற்கும் பெத்தேமேக்கிற்கும் நேகியெலிற்கும் வந்து, இடதுபுறமான காபூலிற்கும், 28எபிரோனிற்கும், ரேகோபிற்கும், அம்மோனிற்கும், கானாவிற்கும், பெரிய சீதோன்வரைக்கும் போகும். 29அப்புறம் அந்த எல்லை ராமாவிற்கும் தீரு என்னும் பாதுகாப்பான பட்டணம்வரைத் திரும்பும்; பின்பு அந்த எல்லை ஓசாவிற்குத் திரும்பி, அக்சீபின் எல்லை ஓரத்தில் உள்ள மத்திய தரைக் கடலிலே முடியும். 30உம்மாவும், ஆப்பெக்கும், ரேகோபும் அதற்கு அடுத்திருக்கிறது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் இருபத்திரண்டு. 31இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ஆசேர் கோத்திரத்திற்கு, அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பங்குகள் ஆகும்.
நப்தலி கோத்திரத்தார்களின் பங்கு
32ஆறாம் சீட்டு நப்தலி கோத்திரத்தார்களுக்கு விழுந்தது. 33நப்தலி கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த எல்லை, ஏலேப்பிலும், சானானிமிலுள்ள அல்லோனிலுமிருந்து வந்து, ஆதமி, நெக்கேபின் மேலும் யாப்னியேலின்மேலும், லக்கூம்வரைக்கும் போய், யோர்தானில் முடியும். 34அப்புறம் அந்த எல்லை மேற்கே அஸ்னோத்தாபோருக்குத் திரும்பி, அங்கேயிருந்து உக்கோகக்கிற்குச் சென்று, தெற்கே செபுலோனையும், மேற்கே ஆசேரையும் சூரியோதயப்புறத்திலே யோர்தானிலே யூதாவையும் சேர்ந்து வரும். 35பாதுகாப்பான பட்டணங்களாவன: சீத்திம், சேர், அம்மாத், ரக்காத், கின்னரேத், 36ஆதமா, ராமா, ஆத்சோர், 37கேதேஸ், எத்ரேயி, என்ஆத்சோர், 38ஈரோன், மிக்தாலேல், ஓரேம், பெத்தானாத் பெத்ஷிமேஸ் முதலானவைகளே; பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் உட்பட பத்தொன்பது. 39இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் நப்தலி கோத்திரத்தார்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குகள் ஆகும்.
தாண் கோத்திரத்தார்களின் பங்கு
40ஏழாம் சீட்டு தாண் கோத்திரத்தார்களுக்கு விழுந்தது. 41அவர்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பங்கின் எல்லையாவது, சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ், 42சாலாபீன், ஆயலோன், யெத்லா, 43ஏலோன், திம்னாதா, எக்ரோன், 44எல்தெக்கே, கிபெத்தோன், பாலாத், 45யேகூத், பெனபெராக், காத்ரிம்மோன், 46மேயார்கோன், ராக்கோன் என்னும் பட்டணங்களும், யோப்பாவுக்கு எதிரான எல்லையுமே. 47தாண் கோத்திரத்தார்களின் எல்லை அவர்களுக்கு ஒடுக்கமாக இருந்தபடியால், அவர்கள் புறப்பட்டுப்போய், லேசேமின்மேல் யுத்தம்செய்து, அதைப் பிடித்து, பட்டயத்தினால் அழித்து, அதைச் சொந்தமாக்கிக்கொண்டு, அதிலே குடியிருந்து, லேசேமுக்குத் தங்களுடைய முற்பிதாவாகிய தாணுடைய பெயரின்படியே தாண் என்று பேரிட்டார்கள். 48இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் தாண் கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குகள் ஆகும்.
யோசுவாவின் பங்கு
49தேசத்தை அதின் எல்லைகளின்படி சொந்தமாகப் பங்கிட்டு முடித்தபோது, இஸ்ரவேல் மக்கள் நூனின் மகனாகிய யோசுவாவிற்குத் தங்கள் நடுவிலே ஒரு பங்கைக் கொடுத்தார்கள். 50எப்பிராயீமின் மலைத்தேசத்தில் இருக்கிற திம்னாத் சேரா என்னும் அவன் கேட்ட பட்டணத்தை அவனுக்குக் யெகோவாவுடைய கட்டளையின்படியே கொடுத்தார்கள்; அந்தப் பட்டணத்தை அவன் கட்டி, அதிலே குடியிருந்தான். 51ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் மகனாகிய யோசுவாவும், கோத்திரப் பிதாக்களுடைய தலைவரும் சீலோவிலே ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் இஸ்ரவேல் மக்களின் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுக் கொடுத்த பங்குகள் இவைகளே; இவ்விதமாக அவர்கள் தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

யோசு 19: IRVTam

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்