யோபு 24
24
அத்தியாயம் 24
1சர்வவல்லமையுள்ள தேவனுக்குக் காலங்கள் மறைக்கப்படாதிருக்க,
அவரை அறிந்தவர்கள் அவர் நியமித்த நாட்களை அறியாதிருக்கிறதென்ன?
2சிலர் எல்லைக்குறிப்புகளை மாற்றி,
மந்தைகளைப் பலாத்காரமாகக் கொண்டுபோய் தங்கள் மந்தையில் சேர்க்கிறார்கள்.
3தாய்தகப்பன் இல்லாதவர்களின் கழுதையை ஓட்டிக்கொண்டுபோய்,
விதவையின் மாட்டை ஈடாக எடுத்துக்கொள்ளுகிறார்கள்.
4தேசத்தில் சிறுமைப்பட்டவர்கள் எல்லோரும் ஒளித்துக்கொள்ளுமளவுக்கு,
எளிமையானவர்களை வழியை விட்டு விலக்குகிறார்கள்.
5இதோ, அவர்கள் காட்டுக்கழுதைகளைப்போல இரைதேட அதிகாலமே தங்கள் வேலைக்குப் புறப்படுகிறார்கள்;
வனாந்திரப் பகுதிதான் அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் ஆகாரம் கொடுக்கவேண்டும்.
6துன்மார்க்கருடைய வயலில் அவர்கள் அவனுக்காக அறுவடைசெய்து,
அவனுடைய திராட்சைத்தோட்டத்தின் பழங்களைச் சேர்க்கிறார்கள்.
7குளிரிலே போர்த்துக்கொள்ளுகிறதற்கு ஒன்றும் இல்லாததினால்,
உடையில்லாமல் இரவுதங்கி,
8மலைகளிலிருந்துவரும் மழையில் நனைந்து, ஒதுங்க இடமில்லாததினால் கன்மலையிலே ஒதுங்கிக்கொள்ளுகிறார்கள்.
9அவர்களோ தகப்பனில்லாத பிள்ளையை முலையைவிட்டுப்பறித்து,
தரித்திரன் போர்த்துக்கொண்டிருக்கிறதை அடகு வாங்குகிறார்கள்.
10அவனை உடையில்லாமல் நடக்கவும்,
பட்டினியாக அரிக்கட்டுகளைச் சுமக்கவும்,
11தங்கள் மதில்களுக்குள்ளே செக்காட்டவும்,
தாகமுள்ளவர்களாக ஆலையாட்டவும் செய்கிறார்கள்.
12ஊரில் மனிதர் தவிக்கிறார்கள்,
குற்றுயிராய்க்கிடக்கிறவர்களின் ஆத்துமா கூப்பிடுகிறது;
என்றாலும், தேவன் அவர்கள் விண்ணப்பத்தைக் கவனிக்கிறதில்லை.
13அவர்கள் வெளிச்சத்திற்கு விரோதமாக நடக்கிறவர்களின் கூட்டத்தார்;
அவர்கள் அவருடைய வழிகளை அறியாமலும்,
அவருடைய பாதைகளில் தங்காமலும் இருக்கிறார்கள்.
14கொலைபாதகன் பொழுது விடிகிறபோது எழுந்து,
ஏழையையும் தேவையுள்ளவனைக் கொன்று,
இரவுநேரத்திலே திருடனைப்போல் திரிகிறான்.
15விபசாரனுடைய கண் மாலை மயங்குகிற நேரத்திற்குக் காத்திருந்து:
என்னை ஒருவரும் பார்க்கமாட்டார்கள் என்று முகத்தை மூடிக்கொள்ளுகிறான்.
16அவர்கள் பகலில் அடையாளம் பார்த்த வீடுகளை இரவிலே கன்னமிடுகிறார்கள்;
அவர்கள் வெளிச்சத்தை அறியமாட்டார்கள்.
17விடியுங்காலமும் அவர்களுக்கு மரண இருள்போல் இருக்கிறது;
அப்படிப்பட்டவன் மரண இருளின் பயங்கரத்துடன் பழகியிருக்கிறான்.
18நீரோட்டத்தைப்போல வேகமாகப் போவான்;
தேசத்தில் அவனுடைய பங்கு சபிக்கப்பட்டுப் போகிறதினால்,
அவனுடைய திராட்சைத்தோட்டங்களின் வழியை இனிக்காண்பதில்லை.
19வறட்சியும் வெப்பமும் உறைந்த மழையை எரிக்கும்;
அப்படியே பாதாளமானது பாவிகளை எரிக்கும்.
20அவனைப் பெற்ற கர்ப்பம் அவனை மறக்கும்;
புழு திருப்தியாக அவனைத் தின்னும்;
அவன் அதன்பின்பு நினைக்கப்படுவதில்லை;
அக்கிரமமானது பட்டமரத்தைப்போல முறிந்துவிழும்.
21பிள்ளைபெறாத மலடியின் செல்வத்தை அழித்துவிட்டு,
விதவைக்கு நன்மை செய்யாமல்போகிறான்.
22தன் பலத்தினாலே வல்லவர்களைத் தன் பலமாக்குகிறான்;
அவன் எழும்புகிறபோது ஒருவனுக்கும் உயிரைப்பற்றி நிச்சயமில்லை.
23தேவன் அவனுக்குச் சுகவாழ்வைக் கட்டளையிட்டால்,
அதின்மேல் உறுதியாக நம்பிக்கை வைக்கிறான்;
ஆனாலும் அவருடைய கண்கள் அப்படிப்பட்டவர்களின் வழிகளுக்கு விரோதமாயிருக்கிறது.
24அவர்கள் கொஞ்சக்காலம் உயர்ந்திருந்து,
பார்க்காமற்போய், தாழ்த்தப்பட்டு,
மற்ற எல்லோரைப்போலும் அடக்கப்படுகிறார்கள்;
கதிர்களின் நுனியைப்போல அறுக்கப்படுகிறார்கள்.
25அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி,
என் வார்த்தைகளைப் பொய்யாக்கக்கூடியவன் யார்” என்றான்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
யோபு 24: IRVTam
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.