ஆதி 37:18-30

ஆதி 37:18-30 IRVTAM

அவன் தூரத்தில் வருவதை அவர்கள் கண்டு, அவன் தங்களுக்கு அருகில் வருவதற்குமுன்னே, அவனைக் கொலைசெய்யும்படி சதியோசனைசெய்து, ஒருவரை ஒருவர் நோக்கி: “இதோ, கனவுகாண்கிறவன் வருகிறான், நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே அவனைப் போட்டு, ஒரு கொடியமிருகம் அவனைக் கொன்றது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய கனவுகள் எப்படி நிறைவேறுமென்று பார்ப்போம்” என்றார்கள். ரூபன் அதைக்கேட்டு, அவனை அவர்களுடைய கைக்குத் தப்புவித்து, அவனை அவனுடைய தகப்பனிடத்திற்குத் திரும்பவும் கொண்டுபோக மனதுள்ளவனாகி, அவர்களை நோக்கி: “அவனைக் கொல்லவேண்டாம், நீங்கள் இரத்தம் சிந்தக்கூடாது; நீங்கள் அவன்மேல் கைகளை வைக்காமல், அவனை வனாந்திரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள்” என்று சொல்லி, இந்த விதமாக ரூபன் அவனை அவர்களிடமிருந்து தப்புவித்தான். யோசேப்பு தன் சகோதரர்களிடத்தில் சேர்ந்தபோது யோசேப்பு அணிந்துகொண்டிருந்த பலவர்ண அங்கியை அவர்கள் கழற்றி, அவனைத் தூக்கி, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது. பின்பு, அவர்கள் சாப்பிடுவதற்காக உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்திற்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின்தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள். அப்பொழுது யூதா தன் சகோதரர்களை நோக்கி: “நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று, அவனுடைய இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன? அவனை இந்த இஸ்மவேலருக்கு விற்றுப்போடுவோம் வாருங்கள்; நமது கை அவன்மேல் படாமலிருப்பதாக; அவன் நம்முடைய சகோதரனும் நம்முடைய சரீரமாக இருக்கிறானே” என்றான். அவனுடைய சகோதரர்கள் அவன் சொல்லுக்கு சம்மதித்தார்கள். அந்த வியாபாரிகளான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள். பின்பு, ரூபன் அந்தக் குழியினிடத்திற்குத் திரும்பிப்போனபோது, யோசேப்பு குழியில் இல்லையென்று கண்டு, தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, தன் சகோதரரிடத்திற்குத் திரும்பி வந்து: “இளைஞன் இல்லையே, ஐயோ, நான் எங்கே போவேன் என்றான்.