தானி 4:19-33

தானி 4:19-33 IRVTAM

அப்பொழுது பெல்தெஷாத்சாரென்னும் பெயருள்ள தானியேல் சற்றுநேரம் திகைத்துச் சிந்தித்துக் கலங்கினான். ராஜா அவனை நோக்கி: பெல்தெஷாத்சாரே, கனவும் அதின் அர்த்தமும் உன்னைக் கலங்கச்செய்யவேண்டியதில்லை என்றான்; அப்பொழுது பெல்தெஷாத்சார் மறுமொழியாக: என் எஜமானனே, அந்தச் கனவு உம்முடைய பகைவர்களிடத்திலும், அதின் அர்த்தம் உம்முடைய எதிரிகளிடத்திலும் பலிக்கக்கடவது. நீர் கண்ட மரம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லைவரை காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானம்வரை எட்டினது. அதின் இலைகள் அழகாகவும், அதின் பழங்கள் அதிகமாகவும் இருந்தது; எல்லா உயிரினங்களுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின் கீழ் காட்டுமிருகங்கள் தங்கினது, அதின் கிளைகளில் ஆகாயத்துப் பறவைகள் வசித்தது. அது பெரியவரும் பலத்தவருமாயிருக்கிற ராஜாவாகிய நீர்தாமே; உமது மகத்துவம் பெருகி வானம்வரைக்கும், உமது ராஜரீகம் பூமியின் எல்லைவரைக்கும் எட்டியிருக்கிறது. இந்த மரத்தை வெட்டி, இதை அழித்துப்போடுங்கள்; ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டும் என்றும், இரும்பும் வெண்கலமுமான விலங்கு போடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியில் நனைவதாக; ஏழு வருடங்கள் அவன்மேல் கடந்துபோகும்வரை மிருகங்களோடே அவனுடைய பங்கு இருக்கவேண்டும் என்றும், வானத்திலிருந்து இறங்கிவந்து சொன்ன பரிசுத்த காவலாளனை ராஜாவாகிய நீர் கண்டீரே. ராஜாவே, அதின் அர்த்தமும் ராஜாவாகிய என் ஆண்டவன்மேல் வந்த உன்னதமான தேவனுடைய தீர்மானமும் என்னவென்றால்: மனிதர்களிலிருந்து நீர் தள்ளிவிடப்படுவீர்; வெளியின் மிருகங்களுடன் வசிப்பீர்; மாடுகளைப்போலப் புல்லைமேய்ந்து, ஆகாயத்துப் பனியிலே நனைவீர். உன்னதமான தேவன் மனிதர்களுடைய ராஜ்ஜியத்தில் ஆளுகைசெய்து, தமக்கு விருப்பமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்துகொள்ளும்வரை ஏழு வருடங்கள் உம்முடைய வாழ்நாளில் கடந்துபோகவேண்டும். ஆனாலும் மரத்தின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டும் என்று சொல்லப்பட்டது என்னவென்றால்: நீர் தேவனின் அதிகாரத்தை அறிந்தபின், ராஜ்ஜியம் உமக்கு நிலைநிற்கும். ஆகையால் ராஜாவே, நான் சொல்லும் ஆலோசனையை நீர் அங்கீகரித்துக்கொண்டு நீதியைச் செய்து உமது பாவங்களையும், சிறுமையானவர்களுக்கு மனமிரங்கி, உமது அக்கிரமங்களையும் அகற்றிவிடும்; அப்பொழுது உம்முடைய வாழ்வு நீடித்திருக்கலாம் என்றான். இதெல்லாம் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின்மேல் வந்தது. பன்னிரண்டு மாதம் சென்ற பின்பு, ராஜா பாபிலோன் ராஜ்ஜியத்தின் அரண்மனைமேல் உலாவிக்கொண்டிருக்கும்போது: இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் புகழ்ச்சியின் பிரஸ்தாபத்திற்கென்று, ராஜ்ஜியத்திற்கு அரண்மனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான். இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ஆட்சி உன்னைவிட்டு நீங்கியது. மனிதர்களிலிருந்து தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களுடன் வசிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமான தேவன் மனிதர்களுடைய ராஜ்ஜியத்தில் ஆளுகை செய்து, தமக்கு விருப்பமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளும்வரை ஏழு வருடங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது என்று சொன்னது. அந்நேரமே இந்த வார்த்தை நேபுகாத்நேச்சாரிடத்தில் நிறைவேறியது; அவன் மனிதர்களிலிருந்து தள்ளப்பட்டு, மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான்; அவனுடைய தலைமுடி கழுகுகளுடைய இறகுகளைப்போலவும், அவனுடைய நகங்கள் பறவைகளுடைய நகங்களைப்போலவும் வளரும்வரை அவன் உடல் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.