YouVersion Logo
Search Icon

சங்கீதம் 36

36
சங்கீதம் 36
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட யெகோவாவினுடைய ஊழியனாகிய தாவீதின் சங்கீதம்.
1இறைவனிடமிருந்து என் உள்ளத்திற்கு வந்த செய்தி:
கொடியவர்களின் பாவம் அவர்களுடைய இருதயங்களில் நிலைத்திருக்கிறது;
அவர்களுடைய கண்களில்
இறைவனைப்பற்றிய பயம் இல்லை.
2அவர்கள் பார்வையில் தங்களைப் பெருமையாக காணுவதால்,
அவர்கள் தங்களுடைய பாவத்தை உணர்வதும் இல்லை; அதை வெறுப்பதுமில்லை.
3அவர்களுடைய வாயின் வார்த்தைகள் கொடுமையும் வஞ்சகமுமாய் இருக்கின்றன;
அவர்கள் ஞானமாய் நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் நிறுத்திவிட்டார்கள்.
4அவர்கள் தனது படுக்கையிலும் தீமையைச் சிந்திக்கிறார்கள்;
பாவவழிக்கு அவர்கள் தங்களை ஒப்புவிக்கிறார்கள்;
தீமையானதை விடாதிருக்கிறார்கள்.
5யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பு வானங்களையும்
உமது உண்மை மேகங்களையும் எட்டுகிறது.
6உமது நீதி விசாலமான மலைகளைப் போன்றது,
உமது நியாயம் மகா ஆழத்தைப் போன்றது.
யெகோவாவே, நீரே மனிதனையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.
7இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பு எவ்வளவு அருமையானது!
மனிதர்கள் உமது சிறகின் நிழலிலே தஞ்சம் அடைகிறார்கள்.
8உமது வீட்டின் செழிப்பினால் அவர்கள் நிறைவு பெருகிறார்கள்;
நீர் உமது மகிழ்ச்சியின் நதியிலிருந்து அவர்களுக்குக் குடிக்கக் கொடுக்கிறீர்.
9ஏனெனில், வாழ்வின் ஊற்று உம்மிடத்திலேயே இருக்கிறது;
உமது ஒளியில் நாங்கள் வெளிச்சம் காண்கிறோம்.
10உம்மை அறிந்தவர்களுக்கு உமது உடன்படிக்கையின் அன்பையும்
இருதயத்தில் நீதிமான்களுக்கு உமது நியாயத்தையும் வழங்கும்.
11அகந்தை உள்ளவர்களின் கால் எனக்கு விரோதமாய் வராதிருப்பதாக;
கொடியவர்களின் கை என்னைத் துரத்தி விடாதிருப்பதாக.
12தீமை செய்கிறவர்கள் எப்படி விழுந்து கிடக்கிறார்கள் என்று பாரும்!
அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி, வீசி எறியப்பட்டுக் கிடக்கிறார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in