YouVersion Logo
Search Icon

மத் 21

21
அத்தியாயம் 21
இயேசுவின் எருசலேம் பயணம்
1அவர்கள் எருசலேமுக்கு அருகாமையில் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து: 2உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள். 3ஒருவன் உங்களுக்கு ஏதாவது சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.
4இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராக,
கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு,
உன்னிடத்தில் வருகிறார் என்று
சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள்” என்று,
5தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. 6சீடர்கள்போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து, 7கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்களுடைய ஆடைகளைப் போட்டு, அவரை ஏற்றினார்கள். 8திரளான மக்கள் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்; வேறுசிலர் மரக்கிளைகளை வெட்டி வழியிலே பரப்பினார்கள். 9முன்னே நடப்பவர்களும் பின்னே நடப்பவர்களுமாகிய திரளான மக்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் போற்றப்படத்தக்கவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். 10அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கும்போது, நகரத்தார் அனைவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள். 11அதற்கு மக்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.
தேவாலயத்தில் இயேசு
12இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் வாங்குகிறவர்களுமாகிய அனைவரையும் வெளியே துரத்தி, காசுக்காரர்களுடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்து: 13என்னுடைய வீடு ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் திருடர்களுடைய குகையாக்கினீர்கள் என்றார். 14அப்பொழுது, குருடர்களும் முடவர்களும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களை குணமாக்கினார். 15அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் பார்த்து, கோபமடைந்து, 16அவரைப் பார்த்து: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் சிறுவர்களுடைய வாயினாலும் துதி உண்டாகும்படிச் செய்தீர் என்பதை நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா என்றார். 17அவர்களைவிட்டு நகரத்திலிருந்து புறப்பட்டு, பெத்தானியாவிற்குப்போய், அங்கே இரவில் தங்கினார்.
பட்டுப்போன அத்திமரம்
18காலையிலே அவர் நகரத்திற்குத் திரும்பிவரும்போது, அவருக்குப் பசியுண்டானது. 19அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைப் பார்த்து, அதினிடத்திற்குப்போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருபோதும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போனது. 20சீடர்கள் அதைப் பார்த்து: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாகப் பட்டுப்போனது! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள். 21இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாக இருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து கடலிலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 22மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாக ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.
இயேசுவின் அதிகாரத்தைப்பற்றிய கேள்வி
23அவர் தேவாலயத்தில் வந்து, உபதேசம்பண்ணும்போது, பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள். 24இயேசு மறுமொழியாக: நானும் உங்களிடம் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுவீர்களானால், நானும் எந்த அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன். 25யோவான் கொடுத்த ஞானஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனிதர்களால் உண்டாயிற்றோ? யாரால் உண்டானது? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னே ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்; 26மனிதர்களால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், மக்களுக்குப் பயப்படுகிறோம், எல்லோரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று, தங்களுக்குள்ளே ஆலோசனைசெய்து, 27இயேசுவிற்கு மறுமொழியாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது, அவர்: நானும் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்வதில்லை என்றார்.
இரண்டு குமாரர்கள்பற்றிய உவமை
28 ஆனாலும், உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சைத்தோட்டத்தில் வேலைசெய் என்றான். 29அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆனாலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப்போனான். 30இளையவனிடத்திலும் அவன் வந்து, அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை. 31இவ்விருவரில் எவன் தகப்பனுடைய விருப்பத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன்தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: வரி வசூலிப்பவர்களும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 32ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாக உங்களிடம் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; வரி வசூலிப்பவர்களும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாவது மனஸ்தாபப்படவில்லை என்றார்.
தோட்டக்காரர்கள் பற்றிய உவமை
33வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனிதன் இருந்தான், அவன் ஒரு திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை உருவாக்கி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரர்களுக்கு அதைக் குத்தகைக்கு விட்டு, வெளிதேசத்திற்குச் சென்றிருந்தான். 34அறுவடைக்காலம் நெருங்கியபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் வேலைக்காரர்களைத் தோட்டக்காரர்களிடத்தில் அனுப்பினான். 35தோட்டக்காரர்கள் அந்த வேலைக்காரர்களைப்பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள். 36பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறு வேலைக்காரர்களை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள். 37அவன்: என் குமாரனுக்கு பயப்படுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான். 38தோட்டக்காரர்கள் குமாரனைக் கண்டபோது: இவனே வாரிசு; இவனைக் கொன்று, இவனுடைய சொத்தை எடுத்துக்கொள்ளுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு; 39அவனைப் பிடித்துத் திராட்சைத்தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொலைசெய்தார்கள். 40அப்படியிருக்க, திராட்சைத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரர்களை என்ன செய்வான் என்று கேட்டார். 41அதற்கு அவர்கள்: அந்தக் கொடியவர்களைக் கொடுமையாக அழித்து, ஏற்றக் காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கக்கூடிய வேறு தோட்டக்காரர்களிடத்தில் திராட்சைத்தோட்டத்தைக் குத்தகைக்குக் கொடுப்பான் என்றார்கள். 42இயேசு அவர்களைப் பார்த்து:
வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே
மூலைக்குத் தலைக்கல்லானது,
அது கர்த்தராலே ஆனது,
அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று
நீங்கள் வேதத்தில் ஒருபோதும் வாசிக்கவில்லையா?
43 ஆகவே, தேவனுடைய ராஜ்யம் உங்களிடமிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகின்ற மக்களுக்குக் கொடுக்கப்படும். 44இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 45பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் அவருடைய உவமைகளைக் கேட்டு, தங்களைக்குறித்துச் சொல்லுகிறார் என்று அறிந்து, 46அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் மக்கள் அவரைத் தீர்க்கதரிசியென்று நினைத்தபடியினால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள்.

Currently Selected:

மத் 21: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in