YouVersion Logo
Search Icon

லேவி 9

9
அத்தியாயம் 9
ஆசாரிய ஊழியத்தின் துவக்கம்
1எட்டாம் நாளிலே மோசே, ஆரோனையும் அவனுடைய மகன்களையும் இஸ்ரவேலின் மூப்பர்களையும் அழைத்து, 2ஆரோனை நோக்கி: “நீ பாவநிவாரணபலியாக பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், சர்வாங்க தகனபலியாக பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும் தெரிந்துகொண்டு, யெகோவாவுடைய சந்நிதியில் பலியிடக்கடவாய். 3மேலும் இஸ்ரவேல் மக்களை நோக்கி: யெகோவாவுடைய சந்நிதியில் பலியிடும்படி, நீங்கள் பாவநிவாரணபலியாக பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவையும், சர்வாங்க தகனபலியாக ஒருவயதுடைய பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், ஒரு ஆட்டுக்குட்டியையும், 4சமாதானபலிகளாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், எண்ணெயிலே பிசைந்த உணவுபலியையும் கொண்டுவாருங்கள்; இன்று யெகோவா உங்களுக்குக் காட்சியளிப்பார் என்று சொல்” என்றான். 5மோசே கட்டளையிட்டவைகளை அவர்கள் ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். சபையார் எல்லோரும் சேர்ந்து, யெகோவாவுடைய சந்நிதியில் நின்றார்கள். 6அப்பொழுது மோசே: “யெகோவா கட்டளையிட்ட இந்தக் காரியத்தைச் செய்யுங்கள்; யெகோவாவுடைய மகிமை உங்களுக்குக் காணப்படும்” என்றான். 7மோசே ஆரோனை நோக்கி: “நீ பலிபீடத்தின் அருகில் வந்து, யெகோவா கட்டளையிட்டபடியே, உன் பாவநிவாரணபலியையும் உன் சர்வாங்க தகனபலியையும் செலுத்தி, உனக்காகவும் மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, மக்களுடைய பலியையும் செலுத்தி, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்” என்றான். 8அப்பொழுது ஆரோன் பலிபீடத்தின் அருகில் வந்து, தன் பாவநிவாரணபலியாகிய கன்றுக்குட்டியைக் கொன்றான். 9ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் தன் விரலை அந்த இரத்தத்தில் நனைத்து, பலிபீடத்தின் கொம்புகளின் மேல் பூசி, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி, 10பாவநிவாரணபலியின் கொழுப்பையும், சிறுநீரகங்களையும், கல்லீரலில் எடுத்த ஜவ்வையும், யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, பலிபீடத்தின்மேல் எரித்து, 11மாம்சத்தையும் தோலையும் முகாமிற்கு வெளியே நெருப்பிலே சுட்டெரித்தான். 12பின்பு சர்வாங்கதகனபலியையும் கொன்றான்; ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அதை அவன் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான். 13சர்வாங்கதகனபலியின் துண்டுகளையும் தலையையும் அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அவைகளைப் பலிபீடத்தின்மேல் எரித்து, 14குடல்களையும் தொடைகளையும் கழுவி, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியின்மேல் எரித்தான். 15பின்பு அவன் மக்களின் பலியைக்கொண்டுவந்து, மக்களின் பாவநிவிர்த்திக்குரிய வெள்ளாட்டுக்கடாவைக் கொன்று, முந்தினதைப் பலியிட்டதுபோல, அதைப் பாவநிவாரணபலியாக்கி, 16சர்வாங்கதகனபலியையும் கொண்டுவந்து, முறைப்படி அதைப் பலியிட்டு, 17உணவுபலியையும் கொண்டுவந்து, அதில் கைநிறைய எடுத்து, அதைக் காலையில் செலுத்தும் சர்வாங்கதகனபலியுடனே பலிபீடத்தின்மேல் எரித்தான். 18பின்பு மக்களின் சமாதானபலிகளாகிய காளையையும் ஆட்டுக்கடாவையும் கொன்றான்; ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து, 19காளையிலும் ஆட்டுக்கடாவிலும் எடுத்த கொழுப்பையும், வாலையும், குடல்களை மூடிய ஜவ்வையும், சிறுநீரகங்களையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும் கொண்டுவந்து, 20கொழுப்பை மார்புப்பகுதிகளின்மேல் வைத்தார்கள்; அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் எரித்தான். 21மார்புப்பகுதிகளையும் வலது முன்னந்தொடையையும், மோசே கட்டளையிட்டபடியே, ஆரோன் யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான். 22பின்பு ஆரோன் மக்களுக்கு நேராகத் தன் கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்து, தான் பாவநிவாரணபலியையும், சர்வாங்கதகனபலியையும், சமாதானபலிகளையும் செலுத்தின இடத்திலிருந்து இறங்கினான். 23பின்பு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழைந்து, வெளியே வந்து, மக்களை ஆசீர்வதித்தார்கள்; அப்பொழுது யெகோவாவுடைய மகிமை சகல மக்களுக்கும் காணப்பட்டது. 24அன்றியும் யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து நெருப்பு புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்துவிட்டது; மக்களெல்லோரும் அதைக் கண்டபோது ஆர்ப்பரித்து, முகங்குப்புற விழுந்து யெகோவாவைப் பணிந்துகொண்டனர்.

Currently Selected:

லேவி 9: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in