YouVersion Logo
Search Icon

ஆதி 41

41
அத்தியாயம் 41
பார்வோன் கண்ட கனவுகள்
1இரண்டு வருடங்கள் சென்றபின்பு, பார்வோன் ஒரு கனவு கண்டான்; அது என்னவென்றால், அவன் நைல் நதியருகில் நின்றுகொண்டிருந்தான். 2அப்பொழுது அழகும் கொழுத்ததுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல் மேய்ந்தன. 3அவைகளுக்குப்பின்பு அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து, நதி ஓரத்தில் மற்ற பசுக்களுடன் நின்றன. 4அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் அழகும் கொழுத்ததுமான ஏழு பசுக்களையும் விழுங்கிப்போட்டது; இப்படிப் பார்வோன் கண்டு விழித்துக்கொண்டான். 5மறுபடியும் அவன் தூங்கியபோது, இரண்டாம் முறை ஒரு கனவு கண்டான்; நல்ல செழுமையான ஏழு கதிர்கள் ஒரே செடியிலிருந்து ஓங்கி வளர்ந்தது. 6பின்பு, மெலிந்ததும் கீழ்காற்றினால் வறண்டதுமான ஏழு கதிர்கள் முளைத்தது. 7மெலிந்த கதிர்கள் செழுமையும் நிறை மேனியுமான அந்த ஏழு கதிர்களையும் விழுங்கிப்போட்டது; அப்பொழுது பார்வோன் விழித்துக்கொண்டு, அது கனவு என்று அறிந்தான். 8காலையிலேயே பார்வோனுடைய மனம் கலக்கம் கொண்டிருந்தது; அப்பொழுது அவன் எகிப்திலுள்ள அனைத்து மந்திரவாதிகளையும் அனைத்து அறிஞர்களையும் அழைப்பித்து, அவர்களுக்குத் தன் கனவைச் சொன்னான்; ஒருவராலும் அதின் அர்த்தத்தைப் பார்வோனுக்குச் சொல்ல முடியாமல் போனது. 9அப்பொழுது பானபாத்திரக்காரர்களின் தலைவன் பார்வோனை நோக்கி: “நான் செய்த குற்றம் இன்றுதான் என் ஞாபகத்தில் வந்தது. 10பார்வோன் தம்முடைய வேலைக்காரர்கள்மேல் கடுங்கோபங்கொண்டு, என்னையும் அப்பம் சுடுகிறவர்களின் தலைவனையும் காவலாளிகளின் அதிபதியின் வீடாகிய சிறைச்சாலையிலே வைத்திருந்த காலத்தில், 11நானும் அவனும் ஒரே இரவிலே வெவ்வேறு அர்த்தம்கொண்ட கனவு கண்டோம். 12அப்பொழுது காவலாளிகளின் அதிபதிக்கு வேலைக்காரனாகிய எபிரெய வாலிபன் ஒருவன் அங்கே எங்களோடு இருந்தான்; அவனிடத்தில் அவைகளைச் சொன்னோம், அவன் நாங்கள் கண்ட கனவுகளுக்குரிய வெவ்வேறு அர்த்தத்தின்படியே எங்கள் கனவுகளின் அர்த்தத்தைச் சொன்னான். 13அவன் எங்களுக்குச் சொல்லிய அர்த்தத்தின்படியே நடந்தது; என்னைத் திரும்ப என் நிலையிலே நிறுத்தி, அவனைத் தூக்கில் போட்டுவிட்டார்” என்றான். 14அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனை அவசரமாகச் சிறைச்சாலையிலிருந்து அழைத்துவந்தார்கள். அவன் சவரம் செய்துகொண்டு, வேறு உடை அணிந்து, பார்வோனிடத்தில் வந்தான். 15பார்வோன் யோசேப்பை நோக்கி: “ஒரு கனவு கண்டேன்; அதின் அர்த்தத்தைச் சொல்ல ஒருவரும் இல்லை; நீ ஒரு கனவைக் கேட்டால், அதின் அர்த்தத்தைச் சொல்லுவாய் என்று உன்னைக்குறித்து நான் கேள்விப்பட்டேன்” என்றான். 16அப்பொழுது யோசேப்பு பார்வோனுக்கு மறுமொழியாக: “நான் அல்ல, தேவனே பார்வோனுக்கு மங்களமான உத்திரவு அருளிச்செய்வார்” என்றான். 17பார்வோன் யோசேப்பை நோக்கி: “என் கனவிலே, நான் நதியின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தேன். 18அழகும் கொழுத்ததுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல் மேய்ந்தன. 19அவைகளுக்குப்பின்பு இளைத்ததும் மகா அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் ஏறிவந்தன; இவைகளைப்போல அவலட்சணமான பசுக்களை எகிப்து தேசமெங்கும் நான் கண்டதில்லை. 20கேவலமும் அவலட்சணமுமான பசுக்கள், கொழுத்திருந்த முந்தின ஏழு பசுக்களையும் விழுங்கிப்போட்டன. 21அவைகள் இவைகளின் வயிற்றுக்குள் போனபோதிலும், வயிற்றுக்குள் போயிற்றென்று தோன்றாமல், முன்பு இருந்தது போலவே அவலட்சணமாக இருந்தன; இப்படிக் கண்டு விழித்துக்கொண்டேன். 22பின்னும் நான் என் கனவிலே, நிறை மேனியுள்ள ஏழு நல்ல கதிர்கள் ஒரே செடியிலிருந்து ஓங்கி வளரக்கண்டேன். 23பின்பு மெலிந்தவைகளும் கீழ்காற்றினால் உலர்ந்து பதரானவைகளுமான ஏழு கதிர்கள் முளைத்தன. 24மெலிந்த கதிர்கள் அந்த ஏழு நல்ல கதிர்களையும் விழுங்கிப்போட்டன”. இதை மந்திரவாதிகளிடத்தில் சொன்னேன்; இதின் அர்த்தத்தை எனக்கு சொல்லுகிறவன் ஒருவனும் இல்லை என்றான். 25அப்பொழுது யோசேப்பு பார்வோனை நோக்கி: “பார்வோனின் கனவு ஒன்று தான்; தேவன் தாம் செய்யப்போகிறது இன்னதென்று பார்வோனுக்கு தெரிவித்திருக்கிறார். 26அந்த ஏழு நல்ல பசுக்களும் ஏழு வருடங்களாம்; அந்த ஏழு நல்ல கதிர்களும் ஏழு வருடங்களாம்; கனவு ஒன்றே. 27அவைகளுக்குப்பின்பு ஏறிவந்த கேவலமும் அவலட்சணமுமான ஏழு பசுக்களும் ஏழு வருடங்களாம்; கீழ்காற்றினால் தீய்ந்து உலர்ந்ததுமான ஏழு கதிர்களும் ஏழு வருடங்களாம்; இவைகள் பஞ்சமுள்ள ஏழு வருடங்களாம். 28பார்வோனுக்கு நான் சொல்லவேண்டிய காரியம் இதுவே; தேவன் தாம் செய்யப்போகிறதைப் பார்வோனுக்குக் காண்பித்திருக்கிறார். 29எகிப்து தேசமெங்கும் பரிபூரணமான விளைச்சல் உண்டாயிருக்கும் ஏழு வருடங்கள் வரும். 30அதன்பின்பு பஞ்சமுண்டாயிருக்கும் ஏழு வருடங்கள் வரும்; அப்பொழுது எகிப்துதேசத்தில் அந்தப் பரிபூரணமெல்லாம் மறக்கப்பட்டுப்போகும்; அந்தப் பஞ்சம் தேசத்தைப் பாழாக்கும். 31வரப்போகிற மகா கொடுமையான பஞ்சத்தால் தேசத்தில் முன்னிருந்த பரிபூரணமெல்லாம் ஒழிந்துபோகும். 32இந்தக் காரியம் தேவனால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், தேவன் இதைச் சீக்கிரத்தில் செய்வார் என்பதையும் குறிப்பதற்காக, இந்தக் கனவு பார்வோனுக்கு மீண்டும் வந்தது. 33ஆகையால், விவேகமும் ஞானமுமுள்ள ஒரு மனிதனைத் தேடி, அவனை எகிப்துதேசத்திற்கு அதிகாரியாகப் பார்வோன் ஏற்படுத்துவாராக. 34இப்படிப் பார்வோன் செய்து, தேசத்தின்மேல் விசாரணைக்காரரை வைத்து, பரிபூரணமுள்ள ஏழு வருடங்களில் எகிப்துதேசத்திலே விளையும் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கை வாங்கும்படிச் செய்வாராக. 35அவர்கள் வரப்போகிற நல்ல வருடங்களில் விளையும் தானியங்களையெல்லாம் சேர்த்து, பட்டணங்களில் ஆகாரம் உண்டாயிருப்பதற்கு, பார்வோனுடைய அதிகாரத்திற்குள்ளாகத் தானியங்களைப் பத்திரப்படுத்தி சேமித்துவைப்பார்களாக. 36தேசம் பஞ்சத்தினால் அழிந்துபோகாமலிருக்க, அந்தத் தானியம் இனி எகிப்துதேசத்தில் உண்டாகும் பஞ்சமுள்ள ஏழு வருடங்களுக்காக தேசத்திற்கு ஒரு வைப்பாயிருப்பதாக” என்றான். 37இந்த வார்த்தை பார்வோனுடைய பார்வைக்கும் அவனுடைய வேலைக்காரர்கள் எல்லோருடைய பார்வைக்கும் நன்றாகத் தோன்றியது.
யோசேப்பு எகிப்து தேசத்திற்கு அதிகாரியாக நியமிக்கப்படுதல்
38அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: “தேவ ஆவியைப் பெற்ற இந்த மனிதனைப்போல வேறொருவன் உண்டோ” என்றான். 39பின்பு, பார்வோன் யோசேப்பை நோக்கி: “தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறதினால், உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை. 40நீ என் அரண்மனைக்கு அதிகாரியாயிருப்பாய்; உன் வார்த்தைக்கு என் மக்கள் எல்லோரும் அடங்கி நடக்கக்கடவர்கள்; சிங்காசனத்தில் மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாக இருப்பேன்” என்றான். 41பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: “பார், முழு எகிப்துதேசத்திற்கும் உன்னை அதிகாரியாக்கினேன்” என்று சொல்லி, 42பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய ஆடைகளை அவனுக்கு அணிவித்து, தங்கச் சங்கிலியை அவனுடைய கழுத்திலே அணிவித்து, 43தன்னுடைய இரண்டாம் இரதத்தின்மேல் அவனை ஏற்றி, குனிந்து பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, முழு எகிப்துதேசத்திற்கும் அவனை அதிகாரியாக்கினான்; 44பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: “நான் பார்வோன்; ஆனாலும் எகிப்துதேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்திரவில்லாமல் தன் கையையாவது தன் காலையாவது அசைக்கக்கூடாது” என்றான். 45மேலும், பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்கிற பெயரையிட்டு; ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் மகளாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்துதேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படிப் புறப்பட்டான். 46யோசேப்பு எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்பாக நிற்கும்போது முப்பது வயதாயிருந்தான்; யோசேப்பு பார்வோனுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, எகிப்துதேசம் எங்கும் போய்ச் சுற்றிப்பார்த்தான். 47பரிபூரணமுள்ள ஏழு வருடங்களிலும் பூமி மிகுதியான பலனைக் கொடுத்தது. 48அந்த ஏழு வருடங்களில் எகிப்துதேசத்தில் விளைந்த தானியங்களையெல்லாம் அவன் சேகரித்து, அந்தத் தானியங்களைப் பட்டணங்களில் சேமித்துவைத்தான்; அந்தந்தப் பட்டணத்தில் அதினதின் சுற்றுப்புறத்து தானியங்களைச் சேமித்துவைத்தான். 49இப்படி யோசேப்பு அளக்கமுடியாத அளவிற்குக் கடற்கரை மணலைப்போல மிகுதியாகத் தானியத்தைச் சேர்த்துவைத்தான்; அது அளவுக்கு அடங்காததாயிருந்தது. 50பஞ்சமுள்ள வருடங்கள் வருவதற்கு முன்னே யோசேப்புக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் மகளாகிய ஆஸ்நாத்து அவனுக்குப் பெற்றெடுத்தாள். 51யோசேப்பு: என் வருத்தம் அனைத்தையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் செய்தார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பெயரிட்டான். 52நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகச்செய்தார் என்று சொல்லி, இளையவனுக்கு எப்பிராயீம் என்று பெயரிட்டான். 53எகிப்துதேசத்தில் வந்த பரிபூரணமுள்ள ஏழு வருடங்களும் முடிந்தபின், 54யோசேப்பு சொல்லியிருந்தபடி ஏழுவருட பஞ்சம் தொடங்கினது; அனைத்துதேசங்களிலும் பஞ்சம் உண்டானது; ஆனாலும் எகிப்துதேசமெங்கும் ஆகாரம் இருந்தது. 55எகிப்துதேசமெங்கும் பஞ்சம் உண்டானபோது, மக்கள் உணவுக்காகப் பார்வோனை நோக்கி முறையிட்டார்கள்; அதற்கு பார்வோன்: “நீங்கள் யோசேப்பிடம் போய், அவன் உங்களுக்குச் சொல்லுகிறபடி செய்யுங்கள்” என்று எகிப்தியர்கள் எல்லோருக்கும் சொன்னான். 56தேசமெங்கும் பஞ்சம் உண்டானதால், யோசேப்பு களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு விற்றான்; பஞ்சம் எகிப்துதேசத்தில் வரவர அதிகமானது. 57அனைத்து தேசங்களிலும் பஞ்சம் அதிகமாக இருந்ததால், அனைத்து தேசத்தார்களும் யோசேப்பிடம் தானியம் வாங்க எகிப்திற்கு வந்தார்கள்.

Currently Selected:

ஆதி 41: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy