YouVersion Logo
Search Icon

கலா 6

6
அத்தியாயம் 6
சாந்தமுள்ள ஆவியோடு சகோதரர்களைச் சீர்படுத்துதல்
1சகோதரர்களே, ஒருவன் எந்தவொரு குற்றத்தில் அகப்பட்டாலும், ஆவியானவருக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடு அப்படிப்பட்டவனைச் சீர்ப்படுத்துங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடி உன்னைக்குறித்து எச்சரிக்கையாக இரு. 2ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய கட்டளையை நிறைவேற்றுங்கள். 3ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று நினைத்தால், தன்னைத்தானே ஏமாற்றுகிறவன் ஆவான். 4அவனவன் தன்தன் சுயசெய்கைகளைச் சோதித்துப்பார்க்கவேண்டும்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்பொழுது அல்ல, தன்னையே பார்க்கும்பொழுது பெருமைபாராட்ட அவனுக்கு இடம் உண்டாகும். 5அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே. 6மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்கு எல்லா நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கவேண்டும். 7ஏமார்ந்துபோகாமல் இருங்கள், தேவன் தம்மைப் பரிகாசம்பண்ண விடமாட்டார்; மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். 8தன் சரீரத்திற்கென்று விதைக்கிறவன் சரீரத்தினால் அழிவை அறுப்பான்; ஆவியானவருக்கென்று விதைக்கிறவன் ஆவியானவராலே நித்தியஜீவனை அறுப்பான். 9நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாமல் இருந்தால் சரியான நேரத்தில் அறுப்போம். 10ஆகவே, நமக்குக் கிடைக்கும் வாய்ப்பின்படி, எல்லோருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும் நன்மைசெய்வோம்.
விருத்தசேதனமல்ல, புதிய படைப்பே
11என் கையெழுத்தாக எவ்வளவு எழுதினேன் என்று பாருங்கள். 12சரீரத்தின்படி நல்லவர்களைப்போலக் காணப்படவிரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கு உங்களை விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளக் கட்டாயப்படுத்துகிறார்கள். 13விருத்தசேதனம்பண்ணியிருக்கிற அவர்களும் நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிக்காமல் இருக்கிறார்கள்; அப்படியிருந்தும், அவர்கள் உங்களுடைய சரீரத்தைக்குறித்துப் பெருமைப்பாராட்டும்படி நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறார்கள். 14நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக்குறித்தே அல்லாமல் வேறொன்றையும்குறித்துப் பெருமைபாராட்டாமல் இருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது, நானும் உலகத்திற்காகச் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். 15கிறிஸ்து இயேசுவிற்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனம் இல்லாததும் ஒன்றுமில்லை; புதிய படைப்பே முக்கியம். 16இந்தக் கட்டளையின்படி நடந்துவருகிறவர்கள் எவர்களோ, அவர்களுக்கும், தேவனுடைய இஸ்ரவேலருக்கும், சமாதானமும், இரக்கமும் உண்டாயிருப்பதாக. 17இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காமல் இருப்பானாக; கர்த்தராகிய இயேசுவினுடைய அடையாளங்களை நான் என் சரீரத்திலே அணிந்துகொண்டிருக்கிறேன். 18சகோதரர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியோடு இருப்பதாக. ஆமென்.

Currently Selected:

கலா 6: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in