YouVersion Logo
Search Icon

பிரச 7

7
அத்தியாயம் 7
ஞானம்
1விலையுயர்ந்த நறுமண தைலத்தைவிட நற்புகழும்,
ஒருவனுடைய பிறந்தநாளைவிட இறந்த நாளும் நல்லது.
2விருந்து வீட்டிற்குப் போவதைவிட துக்கவீட்டிற்குப் போவது நலம்;
இதிலே எல்லா மனிதர்களின் முடிவும் காணப்படும்;
உயிரோடு இருக்கிறவன் இதைத் தன்னுடைய மனதிலே சிந்திப்பான்.
3சிரிப்பைவிட துக்கிப்பு நலம்; முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும்.
4ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்;
மூடரின் இருதயம் விருந்து வீட்டிலே இருக்கும்.
5ஒருவன் மூடர்களின் பாடலை கேட்பதிலும்,
ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம்.
6மூடனின் சிரிப்பு பானையின்கீழ் எரிகிற முட்களின் படபடப்பைப்போல இருக்கும்;
இதுவும் மாயையே.
7இடுக்கண் ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்;
லஞ்சம் இருதயத்தைக் கெடுக்கும்.
8ஒரு காரியத்தின் ஆரம்பத்தைவிட அதின் முடிவு நல்லது;
பெருமையுள்ளவனைவிட பொறுமையுள்ளவன் உத்தமன்.
9உன்னுடைய மனதில் சீக்கிரமாகக் கோபம் கொள்ளாதே;
மூடர்களின் இருதயத்திலே கோபம் குடிகொள்ளும்.
10இந்த நாட்களைவிட முன்னான நாட்கள் நலமாக இருந்தது என்று சொல்லாதே;
நீ இதைக்குறித்துக் கேட்பது ஞானமல்ல.
11பூமியில் வசிப்பவர்களுக்கு சுதந்தரத்தோடு ஞானம் நல்லது;
# 7:11 சூரியனைக் காண்கிறவர்களுக்கு இதினாலே பலனுமுண்டு.
12ஞானம் கேடகம், செல்வமும் கேடகம்;
ஞானம் தன்னை உடையவர்களுக்கு வாழ்வு தரும்;
இதுவே அறிவின் மேன்மை.
13தேவனுடைய செயலைக் கவனித்துப்பார்;
அவர் கோணலாக்கினதை நேராக்கக்கூடியவன் யார்?
14வாழ்வுகாலத்தில் நன்மையை அனுபவித்திரு,
தாழ்ந்து இருக்கும் காலத்தில் சிந்தனைசெய்;
மனிதன் தனக்குப்பின்பு வருவது ஒன்றையும் கண்டுபிடிக்கமுடியாதபடி
தேவன் இந்த இரண்டையும் ஒன்றுக்கொன்று எதிராக வைத்திருக்கிறார்.
15இவை எல்லாவற்றையும் என்னுடைய மாயையின் நாட்களில் கண்டேன்;
தன்னுடைய நீதியிலே கெட்டுப்போகிற நீதிமானும் உண்டு,
தன்னுடைய பாவத்திலே நீடித்திருக்கிற பாவியும் உண்டு.
16மிஞ்சின நீதிமானாக இருக்காதே, உன்னை அதிக ஞானியுமாகவும் ஆக்காதே; உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்? 17மிஞ்சின துன்மார்க்கனாக இருக்காதே, அதிக பேதையுமாக இருக்காதே; உன்னுடைய காலத்திற்கு முன்பே நீ ஏன் சாகவேண்டும்? 18நீ இதைப் பற்றிக்கொள்வதும் அதைக் கைவிடாமல் இருப்பதும் நலம்; தேவனுக்குப் பயப்படுகிறவன் இவைகள் எல்லாவற்றிலிருந்தும் காக்கப்படுவான். 19நகரத்திலுள்ள பத்து அதிபதிகளைவிட, ஞானம் ஞானியை அதிக பெலவானாக்கும். 20ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யக்கூடிய நீதிமான் பூமியில் இல்லை. 21சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனிக்காதே; கவனித்தால் உன்னுடைய வேலைக்காரன் உன்னை சபிப்பதைக் கேள்விப்படவேண்டியதாகும். 22அநேகமுறை நீயும் பிறரைச் சபித்தாயென்று, உன்னுடைய மனதிற்குத் தெரியுமே. 23இவை எல்லாவற்றையும் ஞானத்தினால் சோதித்துப்பார்த்தேன்; நான் ஞானவானாவேன் என்றேன், அது எனக்குத் தூரமானது. 24தூரமும் மகா ஆழமுமாக இருக்கிறதைக் கண்டடைகிறவன் யார்? 25ஞானத்தையும், காரணகாரியத்தையும் விசாரித்து ஆராய்ந்து அறியவும், மதிகேட்டின் தீமையையும் புத்திமயக்கத்தின் பைத்தியத்தையும் அறியவும் என்னுடைய மனதைச் செலுத்தினேன். 26கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுமுடைய பெண்ணானவள், சாவிலும் அதிக கசப்புள்ளவளென்று கண்டேன்; தேவனுக்கு முன்பாக நீதிமானாக இருக்கிறவன் அவளுக்குத் தப்புவான்; பாவியோ அவளால் பிடிபடுவான். 27காரியத்தை அறியும்படி ஒவ்வொன்றாக விசாரணைசெய்து, இதோ, இதைக் கண்டுபிடித்தேன் என்று பிரசங்கி சொல்லுகிறான்: 28என்னுடைய மனம் இன்னும் ஒன்றைத் தேடுகிறது, அதை நான் கண்டுபிடிக்கவில்லை; ஆயிரம் பேருக்குள்ளே ஒரு மனிதனைக் கண்டேன்; இவர்கள் எல்லோருக்குள்ளும் ஒரு பெண்ணை நான் காணவில்லை. 29இதோ, தேவன் மனிதனை நேர்மை உள்ளவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக காரியங்களைத் தேடிக்கொண்டார்கள்; இதைமட்டும் கண்டேன்.

Currently Selected:

பிரச 7: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in