YouVersion Logo
Search Icon

2 நாளா 15

15
அத்தியாயம் 15
ஆசாவின் சீர்திருத்தம்
1அப்பொழுது தேவனுடைய ஆவி ஓதேதின் மகனாகிய அசரியாவின்மேல் இறங்கினதால், 2அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனிதரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடு இருந்தால், அவர் உங்களோடு இருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை நீங்கள் விட்டுவிட்டால், அவர் உங்களை விட்டுவிடுவார். 3இஸ்ரவேலிலே அநேக நாட்களாக உண்மையான தேவனும் இல்லை, உபதேசிக்கிற ஆசாரியனும் இல்லை, வேதமும் இல்லை. 4தங்கள் நெருக்கத்திலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்பி, அவரைத் தேடினபோது, அவர் அவர்களுக்கு வெளிப்பட்டார். 5அக்காலங்களிலே வெளியே போகிறவர்களுக்கும் உள்ளே வருகிறவர்களுக்கும் சமாதானம் இல்லை; தேசங்களின் குடிமக்கள் எல்லோருக்குள்ளும் பெரும் குழப்பம் உண்டாயிருந்து, 6தேசம் தேசத்தையும், பட்டணம் பட்டணத்தையும் நொறுக்கினது; தேவன் அவர்களைச் சகலவித துன்பத்தினாலும் கலங்கச்செய்தார். 7நீங்களோ உங்கள் கைகளைத் தளரவிடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் செயல்களுக்குப் பலன் உண்டு என்றான். 8ஆசா இந்த வார்த்தைகளையும் தீர்க்கதரிசியாகிய ஓதேதின் தீர்க்கதரிசனத்தையும் கேட்டபோது, அவன் தைரியம் கொண்டு, அருவருப்புகளை யூதா பென்யமீன் தேசம் அனைத்திலும், எப்பிராயீமின் மலைத்தேசத்தில் தான் பிடித்த பட்டணங்களிலுமிருந்து அகற்றி, யெகோவாவுடைய மண்டபத்தின் முன்னிருந்த யெகோவாவுடைய பலிபீடத்தைப் புதுப்பித்து, 9அவன் யூதா பென்யமீன் மக்களையும், அவர்களோடுகூட எப்பிராயீமிலும் மனாசேயிலும் சிமியோனிலுமிருந்து வந்து அவர்களோடு வசித்தவர்களையும் கூட்டினான்; அவனுடைய தேவனாகிய யெகோவா அவனோடு இருக்கிறதைக் கண்டு, இஸ்ரவேலிலிருந்து திரளான மக்கள் அவனுடன் சேர்ந்தார்கள். 10ஆசா அரசாண்ட பதினைந்தாம் வருடம் மூன்றாம் மாதத்திலே அவர்கள் எருசலேமிலே கூடி, 11தாங்கள் கொள்ளையிட்டு ஓட்டிக்கொண்டு வந்தவைகளில் அந்நாளிலே எழுநூறு மாடுகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் யெகோவாவுக்கு பலியிட்டு, 12தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவை தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் தேடுவோம் என்றும்; 13சிறியோர் பெரியோர் ஆண் பெண் எல்லோரிலும், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை தேடாதவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும் என்ற ஒரு உடன்படிக்கை செய்து, 14மகா சத்தத்தோடும் கெம்பீரத்தோடும் பூரிகைகளோடும் எக்காளங்களோடும் யெகோவாவுக்கு முன்பாக ஆணையிட்டார்கள். 15இந்த ஆணைக்காக யூதா மக்கள் அனைவரும் சந்தோஷப்பட்டார்கள்; தங்கள் முழு இருதயத்தோடும் ஆணையிட்டு, தங்கள் முழுமனதோடும் அவரைத் தேடினார்கள்; யெகோவா அவர்களுக்கு வெளிப்பட்டு, சுற்றுப்புறத்தாரிடமிருந்து போர் எதுவும் இல்லாமல் அவர்களை இளைப்பாறச்செய்தார். 16தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை உண்டாக்கிய ராஜாவாகிய ஆசாவின் தாயான மாகாளையும் ராஜாத்தியாக இராமல் ஆசா விலக்கிப்போட்டு, அவளுடைய விக்கிரகத்தையும் முற்றிலும் அழித்து, கீதரோன் ஆற்றினருகில் சுட்டெரித்துப்போட்டான். 17மேடைகளோ இஸ்ரவேலிலிருந்து தகர்க்கப்படவில்லை; ஆனாலும், ஆசாவின் இருதயம் அவன் நாட்களிலெல்லாம் உத்தமமாயிருந்தது. 18தன் தகப்பனும் தானும் பரிசுத்தம்செய்ய பொருத்தனை செய்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவன் தேவனுடைய ஆலயத்திலே கொண்டுவந்தான். 19ஆசா அரசாண்ட முப்பத்தைந்தாம் வருடம்வரை போர் இல்லாதிருந்தது.

Currently Selected:

2 நாளா 15: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in